நவம்பர் 26, 27 முன்னிறுத்தி புலிகள் பிரபாகரனின் பிறந்த தினத்தையும், புலிகளின் மாவீரர் நாளையும் நினைவுகொள்வதை எதிர்த்து, புலியெதிர்ப்புப் புராணங்கள் பாடப்படுகின்றது.
புலிகள் செய்த மனிதவிரோதக் குற்றங்களையும், அது ஏற்படுத்திய சமுதாயப் பின்னடைவுகளையும் காட்டி, ஒடுக்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்த போலியான பொது விம்பத்தைக் கட்டமைத்துவிட முனைகின்றனர். இதன் மூலம் தமக்கு ஒளிவட்டம் போடுவதன் மூலம், சமூகத்தை தவறாக வழிநடத்த முனைகின்றனர்.
இப்படி செய்வதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் தேச மற்றும் தேசிய உணர்வை மழுங்கடிக்கவும், அதேநேரம் ஒடுக்கும் பேரினவாதத்தை பாதுகாக்கவும் முனைகின்றனர். இப்படிப்பட்ட புலியெதிர்ப்பு அரசியல் என்பது சாராம்சத்தில் பேரினவாதத்தை ஆதரிப்பதுடன், புதிதாக பேரினவாத ஆட்சிக்கு தலைமை தாங்கும் கோத்தபாயவை முன்னிறுத்துவதும் நடந்தேறுகின்றது.
இந்த பின்னணியில் முன்பு புலம்பெயர் நாடுகளில் ஜனநாயகத்தை முன்வைத்து, ஒடுக்கும் பேரினவாத அரசுக்கு ஆதரவான புலியெதிர்ப்பாக சீரழிந்தவர்களைக் காண முடியும். இவர்களுடன் புலிப் புராணம் பாடி அண்டிப் பிழைத்தவர்களும், இன்று புலியெதிர்ப்பு புராணம் பாடுகின்றனர். இன்று இவர்கள் ஆளும் தரப்புகளுடன் கூடிப் குலாவுவதன் மூலம் பிழைக்கும் புலியெதிர்ப்பாகும்.