தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண மகிந்த தலைமையில் முகமாற்ற ஆட்சி வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் கூறியிருக்;கின்றார். சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பிலுள்ள அதிருப்தியாளர்களும், கூட்டமைப்பில் இடம் கிடைக்காதவர்களும், தமிழ் அரசியல் விமர்சகர்களும் "மாற்றுத் தலைமை" வேண்டும் என்கின்றனர். நவதாராளவாத நாணயத்தின் இருபக்கங்கள் இவை.
முகமாற்ற ஆட்சிமாற்றம் மூலம் அதிகாரத்துக்கு வந்த நவதாராளவாத "நல்லாட்சி" அரசு, மக்களுக்காக எதையும் முன்வைக்க முடியாது அம்பலமாகி வருகின்றது. "நல்லாட்சி" அரசுடன் கூடிக் குலாவி தேன்நிலவை நடத்திய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் முன் கோவணத்துடன் காட்சியளிக்கின்றனர். நல்லூரில் கோவணத்தை தரிசிக்க திரளும் பக்தர்களால், கூட்டமைப்பின் கோவணத்தை துதிபாட முடியாதளவுக்கு நாறுகின்றது.
மூன்று வருடங்களுக்கு முன்பு அமெரிக்க ஆதரவு "நல்லாட்சி" மூலம் தமிழர்களின் துன்ப துயரங்களுக்கு தீர்வு காணமுடியும் என்று கூறியே, மைத்திரி-ரணிலை முகமாற்ற ஆட்சியை கொண்டு வந்தவர்கள் கூட்டமைப்பு. இதன் மூலம் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நவதாராளவாதத்தை இலங்கையில் பலப்படுத்தும் "மாமா" வேலையை கூட்டமைப்புச் செய்தது. கூட்டமைப்பு இனத்தில் பெயரில் இனவாத வாக்குகளை பெற்றதன் மூலம், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களைக் காட்டிக் கொடுத்தே அரசுடன் உறவாடினர். தங்கள் மூன்றாண்டு கால இந்த தேன்நிலவைத் தொடர முடியாத அளவுக்கு, "மாற்றுத் தலைமை" என்ற பிசாசு தலைவிரி கோலமாக தமிழ்மக்கள் மத்தியில் உலாவுகின்றது.