சாதி குறித்த விவாதங்கள், போராட்டங்கள் மேலெழுந்துள்ள நிலையில், கடந்தகால போராட்டங்கள் குறித்து தவறாக வியாக்கியானப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக விடுதலைப் புலிகள், மற்றும் ஜே.வி.பியின் சாதிய அணுகுமுறைகள் குறித்து தவறான கருத்துக்கள், இடதுசாரியத்தின் பெயரில் முன்வைக்கப்பட்டு இருக்கின்றது. அதேநேரம் ஆயுதப் போராட்டம் குறித்தும், இடதுசாரியம் குறித்தும், சாதியம் குறித்தும், போராட்டங்களை அழித்த அரசின் நோக்கம் குறித்தும் தவறான அரசியல் தர்க்கம், சமூக விஞ்ஞான கண்ணோட்டத்துக்கு முரணாக முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
நடந்த ஆயுதப் போராட்டமானது, தேர்தலில் வாய்ப்பு கிடைக்காததாலா நடந்தது?
விடுதலைப் புலிகளும், ஜே.வி.பியும் "நடைமுறையில் உள்ள தேர்தல் அரசியலில் தமக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காது என்று தெரிந்து ஆயுதப் போராட்ட வழியை பின்பற்றினார்கள்." என்று முன்வைக்கப்படும் கருத்து, நடந்த ஆயுதப் போராட்டம் குறித்து தவறான அரசியல் கண்ணோட்டமாகும். தேர்தல் அரசியலில் வாய்ப்பு கிடைக்காததாலேயே, ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என்று கூறுவதன் மூலம் இனவொடுக்குமுறை, வர்க்க ஒடுக்குமுறையை மறுதலிக்கின்ற அரசியல் உள்ளடக்கத்தை இது கொண்டு இருக்கின்றது. அதேநேரம் இந்த முரண்பாடுகளை தேர்தல் அரசியல் மூலம் தீர்வு காணமுடியும் என்ற கருத்தையும், ஆயுதப் போராட்டம் என்பது தவறானது என்ற பார்வையையும் முன்வைக்கின்றது.
மக்களை இனரீதியாக பிரித்தாளும் ஆளும் வர்க்க அரசியல் இனவொடுக்குமுறை செய்த பொதுப் பின்னணியிலும், தெற்கில் இனரீதியான வன்முறைகளை அரசு முன்னின்று நடத்திய வரலாற்று வளர்ச்சியிலேயே, இனரீதியான ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் ஒடுக்கப்பட்ட சூழலிலும், பாராளுமன்றம் மூலமான தீர்வுகள் தோற்கடிக்கப்பட்ட பின்னணியிலும், "தமிமீழத்துக்கான" ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது. புலிகள் மட்டுமல்ல 32 இயக்கங்கள் தோன்றியதுடன், "இடதுசாரிய" இயக்கங்களும் உருவானது. இங்கு "தேர்தல் மூலம் வாய்ப்பு கிடைக்காததால்" இவை தோன்றியது என்று கூறுவது, எவ்வளவு முட்டாள்தனமான அரசியல் அபத்தமாகும்.
இங்கு விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில், கூட்டணியின் ஆயுதப்படையாகவே தோற்றம் பெற்றது. 1970 க்கு பிந்தைய 1980 வரையான காலகட்ட ஆயுத வன்முறைகளின் பின்னணியில், தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணியின் வழிகாட்டல் இருந்ததுடன், அவர்கள் யாரைக் கொல்ல விரும்பினார்களோ அவர்களை திட்டமிட்டே புலிகள் கொன்றனர். இது தான் வரலாறு. அமிர்தலிங்கம் - பிரபாகரன் அடிக்கடி சந்தித்து வந்ததும், உலகறிந்த உண்மை. ஆயுதப் போராட்டம் என்பது, தமிழனை அடக்கியாளும் சொந்த ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் கூட்டணியின் அரசியலின் ஒரு அங்கமாகத் தோன்றியது. இங்கு அரசியல் ரீதியாக அமிர்தலிங்கம் - பிரபாகரன் இடையில், எந்த வித்தியாசமும் கிடையாது.
ஜே.வி.பியின் ஆயுதப் போராட்டம் என்பது, வரலாற்று ரீதியான இடதுசாரிய அரசியல் வழிமுறையில் இருந்து தோன்றியது. ஆயுதப் போராட்டம் குறித்து சீனப் புரட்சி மற்றும் காலனிய நாடுகளின் ஆயுதப் போராட்ட அனுபவங்களில் இருந்து தோற்றம் பெற்றது. இக் காலத்தில் உலகில் பல நாடுகளில் ஆயுதப் போராட்டங்கள் நடந்து வந்தது. ஜே.வி.பி பாராளுமன்றம் மூலம் வெற்றி பெற முடியாது என்பதால், ஆயுதப் போராட்டத்தை நடத்தியது என்பது வர்க்கப் போராட்டம் குறித்த தவறான புரிதலும், கண்ணோட்டமுமாகும்.