போராடினால் உலகையே புரட்ட முடியும். இதுதான் மக்கள் சக்தியின் வலிமை. நவதாராளவாத தனியார்மயம் பெத்துப் போட்ட சைட்டத்தை, மாணவர்களும் - மக்களும் ஒன்றுகூடி தூக்கில் போட்டு இருக்கின்றனர்.
நவம்பர் புரட்சியின் 100வது வருடம் கொண்டாடப்படும் நாட்களிலே, அதை மாணவர்களும் - மக்களும் நடைமுறையில் சாதித்துக் காட்டி இருக்கின்றனர். ஆம் 1917 நவம்பர் புரட்சி அனுபவங்களை, மீளவும் செயல் வடிவமாக்கி இருக்கின்றனர். கடந்த 8 வருடங்களாக, வீரமிக்க, எழுச்சிகரமான, விட்டுக்கொடுப்பற்ற தொடர் போராட்டங்களை நடத்தி, இன்று வென்று இருக்கின்றனர்.
மர்மக் கொலை, கொலை மிரட்டல்கள், வன்முறைகள், ஊடக அவதூறுகள்.. என்று எதற்கும் அஞ்சாது, 100 வருடங்களுக்கு முன் போல்சவிக்குகள் போராடியது போல் வரலாற்றை மீள எழுதிக் காட்டி இருக்கின்றனர். காலில் இருந்த செருப்புகளை கூட விட்டுவிடாத அளவுக்கு, அரச பயங்கரவாத வன்முறை தொடர்ந்து தலைவிரித்தாடிய சூழலில், இந்தப் போராட்டம் ரணகளமாகியுள்ளது. போராடியவர்கள் ஏழை எளிய பெற்றோர்களின் குழந்தைகளே. அரைப் பட்டினியாக வகுப்பறைக் கல்வியைத் துறந்து, சமூகமாகக் கூடி வாழ்வதற்கான வாழ்வியல் கல்வியை போராட்டக்களங்களில் சுயமாகக் கற்றுக் கொண்டார்கள். எதிர்கால தலைமுறைக்கு சமூகமாகக் கூடி வாழ்வது எப்படி என்ற புரட்சிகர நடைமுறையைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், சமூகத்தின் வழிகாட்டியாக - முன்னோடிகளாக தங்களை முன்னிறுத்திக் கொண்டிருக்கின்றனர்.