இலங்கையின் தேசிய-இன-மத முரண்பாடுகளுக்கு தீர்வு காணுகின்றோம் என்ற பெயரில் முன்வைக்கப்பட்டிருக்கும் புதிய அரசியல் அமைப்புச் சட்டமூலங்கள், இன-மத அரச ஒடுக்குமுறைகளை சட்ட வடிவமாக்குகின்றது. அதேநேரம் இலங்கை மக்கள் சட்டரீதியாக நாட்டின் மீது கொண்டிருந்த இறைமையை இல்லாதாக்கி, அதை மூலதனத்திற்கு தாரை வார்க்கின்றது. இதைத்தான் இந்தப் புதிய சட்ட மூலம் பொதுவாக கொண்டிருக்கின்றது.
புதிய சட்ட மூலம் தொடர்பாக தமிழ் மொழி பேசும் தமிழ் - முஸ்லீம் தரப்புகள், தம்மின மக்களை அடக்கியொடுக்கும் தங்கள் அரசியல் அதிகாரம் என்ன என்ற குறுகிய அர்த்தத்தில், புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை விவாதப் பொருளாக்குகின்றனர். அதேநேரம் சிங்கள தரப்புகள் தமிழ் மொழி பேசும் மக்களை அடக்கியொடுக்கும் உரிமை தங்களுடைய அதிகாரத்துக்கு உட்பட்டது என்ற அடிப்படையில், அரசியல் அமைப்புச் சட்டத்தை விவாதத்துக்குள்ளாக்குகின்றனர். இந்த இரு எல்லைக்குள் நின்று சட்ட மூலம் குறித்து நடக்கின்ற விவாதங்கள், தேர்தல் வருவதால் இனவாதமாக கூர்மையடைகின்றது. ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களை, பதிய சட்ட மூலத்தைக் கொண்டு ஒடுக்குவது எப்படி என்பதே இன்று அரசியலாகி வருகின்றது. இந்தப் பின்னணியில் இந்த அரசியல் அமைப்பு சட்ட மூலத்தை குறிப்பாகவும், சுருக்கமாகவும் பார்ப்போம்.
நாட்டின் மீதான மக்களின் இறைமையை மறுக்கும் புதிய சட்ட மூலம்
இனப்பிரச்சனையைத் தீர்ப்பதாகக் கூறி, நாட்டின் மீதான மக்கள் இறைமையை மறுப்பது தான் இந்தச் சட்டமூலத்தின் நோக்கமும், உள்ளடக்கமுமாகும். புதிய அரசியல் அமைப்பு முன்மொழிந்துள்ள உறுப்புரிமை மூன்று, இலங்கையின் இறைமை குறித்துப் பேசுகின்றது. அது கூறுகின்றது "இலங்கையின் இறைமை மக்களுக்குரியதல்ல" என்கின்றது. அதாவது இலங்கையின் இறைமை இனி மக்களுக்குரியதல்ல என்கின்றது. அப்படியாயின் நாட்டின் இறைமை யாருக்கு உரியாது!?
மக்களின் இறைமையிலான "ஆட்சித் தத்துவங்களும், அடிப்படை உரிமைகளும், வாக்குரிமைகளும்;" இனி மக்களுக்குரியதல்ல என்கின்றது புதிய சட்ட மூலம். அதாவது இவை எதுவும் மக்களைச் சார்ந்து இருக்காது. மனிதனின் அடிப்படை உரிமைகள் முதல் வாக்கு மூலம் தெரிவும் ஆட்சிக் கோட்பாடுகளும் ஆட்சிமுறையும் மக்களைச் சார்ந்து இருக்காது. அப்படியானால் இது யாருக்;கானது!?
நாட்டின் மீதான இறைமை நவதாராளவாத முதலாளித்துவ நலன்களுக்கு உட்பட்டதாக இருக்குமென புதிய சட்டமூலம் தெளிவாக முன்வைக்கின்றது. மக்களின் இறைமையை மறுப்பதை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் - சிங்கள - முஸ்லீம் - மலையக இனவாதிகள் முரண் இன்றி ஏற்கின்றனர். ஒட்டுமொத்த இலங்கை மக்களின் இறைமையை மறுத்து, ஆளும் வர்க்கத்தின் இறைமையாக்கும் புதிய சட்டமூலத்தை முன்னிறுத்தவே, இனவாதம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதான் இந்த சட்டமூலத்தின் பின்னுள்ள சூக்குமம்.
நாட்டின் மீதான மக்களின் இறைமையை மறுக்கும் உறுப்புரிமை மூன்று, அது யாருக்கானது என்பதை உறுப்புரிமை நாலு மூலம் விளக்குகின்றது. அதாவது "சட்டமாக்கல், ஆட்சித்துறை, நீதி .." அனைத்தும், உறுப்புரிமை மூன்று குறிப்பிடும் அடிப்படையில் இறைமையற்ற மக்களுக்கானதல்ல என்கின்றது. உறுப்புரிமை ஐந்து நாட்டின் இறைமை என்பது "சர்வதேச சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டவாறு இருக்குமாறு" வரையறுக்கின்றது. இந்த வகையில் "மனித வளங்கள், புவியல் வளங்கள், பயன்பாடுகள்" அனைத்தும் சர்வதேச நவதாரளவாத இறைமைக்கு உட்பட்டதாக புதிய சட்ட மூரம் வரையறுக்கின்றது. இதை ஓட்டுமொத்த நாடும், மாகனசபையும் மீற முடியாது என்கிறது. இதையெல்லாம் மக்கள் கண்டு கொள்ளாது திசை திருப்பவே "பிரிவினைவாதம்" என்ற பூச்சாண்டியை இந்த சட்ட மூலம் முன்னிறுத்தி நவதாரளவாத சட்ட மூலத்தை சட்டமாக்க முனைகின்றது.