கல்வி குறித்த அரசின் கொள்கைகளைக் கொண்டாடுவதன் பொது வெளிப்பாடுதான், பரீட்சை முடிவுகள் குறித்த பொதுக் கண்ணோட்டமாகும்;. பரீட்சை முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட தனிநபர் கல்விக்கொள்கையானது, அனைவருக்குமான சம கல்வி வாய்ப்பையும் - பொது சமூக அறிவையும் மறுதளிக்கின்றது. அதேநேரம் பரீட்சையில் சித்தி பெறுவதற்கான வியாபாரத்தையே கல்வியாக்கி வருகின்றது. பரீட்சைச் சித்தியை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் பிரிதாளப்படுவது நடந்தேறுகின்றது. பரீட்சையில் தோற்றவர்களை புறக்கணிப்பதும் - இழிவுபடுத்துவதும், பொதுவான சமூக நடத்தையாகின்றது. சமூக உணர்வுள்ளதாகக் கருதப்படும் பழைய மாணவ சங்கங்கள் கூட, இதற்கு விதிவிலக்கில்லை.
இந்த சமூகப் பின்னணியில் பரீட்சையில் "அதி உயர்" சித்தி பெற்ற மாணவர்களை முன்னிறுத்தி, கொண்டாட்டங்களை நடத்துகின்றனர். அதிபர்கள் முதற் கொண்டு பரீட்சையில் வென்றவர்களுடன் சேர்ந்து போட்டோக்;களை எடுப்பதும், அதை பாடசாலை வாசல்களில் விளம்பரப்படுத்துவதும் நடந்தேறுகின்றது. பழைய மாணவர் சங்கங்கள் இதைக் காட்டி தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்வதும் - பரிசில்களை வழங்குவதும் நடந்தேறுகின்றது. தனியார் (ரியூசன் சென்றர்கள்) கல்வி நிறுவனங்கள்; போட்டி போட்டுக் கொண்டு, தங்கள் கல்வி வியாபாரத்துக்கு ஏற்ப இதை விளம்பரப்படுத்துகின்றனர். பரீட்சையில் வெற்றி பெறும் கல்வி வியாபாரத்தை முன்னெடுக்கும் புத்தகக் கடைகள் தொடங்கி பரீட்சைக் கேள்விகளை முன்கூட்டியே ஊகித்து அதை மாணவர்களுக்கு கொடுக்கும் வியாபாரிகள் பரீட்சைமுறை மூலம் கொழுக்கின்றனர். தன் இன, மத, சாதி, பிரதேச, ஊர்.. பெருமைகளைப் பீற்றிக் கொள்ளும் தங்கள் குறுகிய அடிப்படைவாதங்களுக்கு ஏற்ப, பரீட்சை முடிவுகளைக் காட்டி பெருமைப்படுகின்றனர்.
வியாபாரமும் அதற்கு ஏற்ப விளம்பரங்களும், பரீட்சை முடிவுகளைத் தொடர்ந்து நடந்தேறுகின்றது. இதை முதன்மையாக்கிக் கொள்ளும் தனிமனித செயற்பாடே, சமூக உணர்வாகி விடுகின்றது.