உலகளாவில் வேகமாக பரவுகின்ற கொரோனா வைரஸ், அரசுகளின் பொறுப்பற்ற - செயற்பாடற்ற மக்கள்விரோத சந்து பொந்துகளில் புகுந்து, பலமடங்காக வேகம் பெற்று பரவி வருகின்றது. பாரிய உயிரிழப்புகளை நோக்கி பயணிக்கும் கோவிட் 19 வைரஸ் தாக்குதலை, தாராளமய தனியார்மயம் தடுத்து நிறுத்த எதையும் செய்யவில்லை. தாராளமய தனியார்மயத்திற்கு பணத்தை கறக்கவும் - திருடவுமே தெரியும்.
அரசுதுறை மருத்துவத்தால் மட்டும்தான் மக்களுக்கு மருத்துவம் செய்ய முடியும் என்ற உண்மை, உலகெங்குமான நிகழ்ச்சிநிரலாகி வருகின்றது. அரசுதுறை என்றால் செயலற்றது, இலஞ்சம் நிறைந்தது, சமூகப் பொறுப்பற்றது, ஊழல் நிறைந்தது என்று, தனியார்மய ஆதாரவாளர்கள் கூறுகின்ற சில உண்மைகளால் மூடிய பொய்யை, அரசுதுறை தவிடுபொடியாக்கி வருகின்றது. தாராளவாத தனியார்மயமாக்க அரசு தான் திட்டமிட்டு இலஞ்சத்தையும், ஊழலையும் அரசுதுறையில் அனுமதித்து, அதை செயலற்றதாக்குகின்ற சதிகளையும், தனியார்மயத்தில் ஊழல், இலஞ்சம் கிடையாது என்று கூறி, அரசுதுறையை திட்டமிட்டு தனியார் மயமாக்குகின்ற உண்மையையும், அரசுதுறை தனது செயலாற்றல் மூலம் மெய்ப்பித்து வருகின்றது.