![](/images/000-4.jpg)
ஈழப் போராட்டத்தில் இணைந்து கொண்ட முதல் பெண் போராளிகளில் ஒருவரின் வாக்குமூலம் இது. உண்மைக்கான தேடல் (புளக்ஸ்பொட்) இணையத்தில் பிரசுரமான இந்த வாக்குமூலம், இதனை எழுதிய சிவகாமியின் (புனை பெயர்) அனுமதியுடன் பிரசுரம் செய்யப்படுகின்றது.
சிவகாமிக்கு தான் பிறந்த தன் குக்கிராமத்தைப் பற்றி நிறையவே பெருமை தான். இயற்கையானவளின் அற்புதப் படைத்தலின் கைவண்ணம் அந்தக் கிராமத்தில் நிறையவே உண்டு. அடிப்படை வசதிகள் மிக மிக குறைந்த ஓர் கிராமம் அது. மரங்கள், வயல்கள், காடுகள், தென்னம் தோப்புகள், தோட்டங்கள் ஆறுகள், சிறிய குளங்கள், கடல் என்று அந்தக் கிராமத்தை சுற்றி அண்டையில் காணப்படும் இயற்கை தந்த கொடை.
அதே போல் அங்கு வாழ்ந்த மக்களும் எந்தக் கள்ளம் கபடமுமின்றி தாமும் தம்பாடும் உண்டு என்று வாழ்ந்தார்கள். எந்த நவீன நாகரீக வாழ்க்கையும் தீண்டாத தூய்மையான இயற்கையாகவிருந்தது அக்கிராமம். கிராமத்தில் ஆரம்ப பாடசாலைகள் இரண்டும் உயர் வகுப்புக்குரிய பாடசாலை ஒன்றுமிருந்தது. மிக முக்கியமாக அங்கு ஆங்கில மொழியின் வாசனை சிறிதாக கூட இல்லையெனலாம். அப்படி இருந்த பாடசாலையில் தான் அம்மக்கள் தம் பிள்ளைகளை அனுப்பி வைத்தார்கள். பிள்ளைகளும் கள்ளமில்லா கல்வியையும் தம் மக்களின் வாழ்வாதாரத்தை ஒட்டிய வாழ்க்கையையும் பின்பற்றி வாழ்ந்தார்கள். பாடசாலை செல்வது மாலைநேரங்களில், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பெற்றோருக்கு உதவியாக தோட்டங்களிலும் வயல்களிலும் உதவியாக இருப்பது போன்ற வற்றில் ஈடுபட்டதால் வாழ்வின் போக்கையும் அதன் தாற்பரியங்களையும் உணர்ந்தவர்களாயிருந்தார்கள் அந்தப் பிள்ளைகள்.