இழுவைப் படகுகளின் பாதிப்புகள்
பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல இனவெறிப்போரின் கொடுமையிலிருந்து தப்பிய என் மாமன் குடும்பம் போல பல ஆயிரம் குடும்பங்கள் இன்று இந்திய இழுவைப்படகுகளின் கடற்கொள்ளையால் அன்றாடம் சோற்றுக்கு தவிக்கும் நிலையில் உள்ளனர்.
இழுவைப்படகு மீன்பிடி என்பது படத்தில் காண்பது போன்று இயந்திரப்படகின் கடையால் பகுதியில் பாரிய பை போன்ற வலையை இணைத்து இயந்திர உதவியுடன் கடல் அடித்தளத்தை வடிகட்டுவதாகும். இந்த வகை மீன்பிடி முறையானது பின்வரும் கடல்வள அழிவையும், இயற்கை மாசடைதலையும் ஏற்படுதுகிறது.
அவையாவன :
1. மீனின் வகை, தொகை, நிறை, அளவு போன்ற எதையும் கணக்கில் கொள்ளாமல் மீன்பிடித்தல்
2. கடலடித்தள தாவரங்களை அழிப்பதன் மூலம் தாவரவியலில் மாற்றமேற்படுத்துவது
3. கடலடித்தள பவளப்பாறைகள் – முருகைகளை அழித்தல்
4 மீன் இனத்தின் முட்டைகளையும் குஞ்சுகளையும் அழிப்பதன் மூலம் மீன் உற்பத்தியை தடைப்படுத்துதல்
5. இயற்கையின் சமநிலையைக் காக்கும் கடலடித்தள சிறு நுண்ணுயிர்களையும் உணவுக்கு உதவாத மீன்வகைகளையும் அழிப்பதன் மூலம் இயற்கை அழிவை ஏற்படுத்தல்.
6. பலமணி நேரம் தொடர்ச்சியாக இழுவைப்படகு இயங்குவதன் மூலம் பல நூறு லீட்டர் எரிபொருள் மூலம் சூழல் மாசடைதல்.