கொரோனாவிலிருந்து மீள்வது குறித்து .. முதலாளித்துவ அறம்
செல்வந்தர்களை உருவாக்கும் உற்பத்தி நின்று போவதென்பது, முதலாளித்துவத்தின் இதயமே நின்று போவதற்குச் சமமானது. உழைப்பு முடக்கமானது, உழைப்பிலான கூலியை நம்பி வாழும் மனிதர்கள் சந்திக்கின்ற பொது நெருக்கடியை விட, உழைப்பைச் சுரண்டி வாழும் முதலாளித்துவத்தின் நெருக்கடிதான் - அரசுகளின் முடிவுகளாக இருக்;கின்றது.
உழைப்பினால் குவிந்த செல்வத்தை (உபரியை) பறிமுதல் செய்தோ அல்லது அதை அரச உடமையாக்கியோ, கூலியை நம்பி வாழும் மனிதர்களுக்கு பகிரவில்லை. உபரியை (குவிந்த செல்வத்தை)பறிமுதல் செய்யுமாறு பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை முன்வைத்து, பாட்டாளி வர்க்கம் உலகெங்கும் அதை அரசியலாக்கவுமில்லை. முதலாளித்துவம் எந்த வர்க்க அரசியல் நெருக்கடியுமின்றி இருக்க, அரசுகள் மனித உழைப்பினால் செல்வந்தர்களிடம் குவிந்துவிட்ட செல்வத்தின் ஒருபகுதியை வட்டிக்கு எடுத்து, அதையே நிவாரணமாக வழங்கியது. மறுபக்கம் அதையும் கொடுக்கவில்லை. உலக முதலாளித்துவம் ஏற்றத்தாழ்வான இரு பொது வழிமுறைகளை கையாண்டது.
அதாவது அரசுகளின் உத்தரவுக்கு ஒடுங்கி வாழ்தல் காலத்தில் ஏற்படும் பொருளாதாரத் தேவைகளை சில அரசுகள் பூர்த்தி செய்யும் வழிமுறைகளை முன்வைக்க - வேறு சில நாடுகள் பொருளாதார ரீதியாக மக்களுக்கு கைகொடுப்பதை மறுதளித்தது. உலக மக்களின் பொருளாதாரத் தேவைகளை கையாளும் அரசு வடிவங்கள் வேறுபட்டு, ஒருபுறம் பள்ளத்தை தோண்ட மறுபக்கமோ மலையாகக் காட்சியளிக்கின்றது.
இதனால் முதலாளித்துவம் கொந்தளிப்பற்ற வர்க்க அமைதியைப் பெற்ற போதும், செல்வத்தை தொடர்ந்து குவிக்க முடியாத முதலாளித்துவ சுய நெருக்கடியை எதிர் கொள்கின்றது. இதில் இருந்து மீள, நோயும் - மரணம் தொடர்கின்ற சூழலில் - மீண்டும் செல்வத்தை குவிக்கும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பக் கோருகின்றது.