கவுசல்யாவையும் பாலியல் அவதூறு செய்யும் அருச்சுனாவின் ஆணாதிக்கம்
ஆணாதிக்கத்தை தங்கள் சிந்தனைமுறையாகக் கொண்டவர்கள், பெண்களை பாலியல் ரீதியாகவே அணுகுவார்கள். இந்த ஆணாதிக்கவாதிகளின் கலாச்சாரமென்பது பெண்ணின் பாலியல் சுதந்திரத்தை மறுக்கும். குறிப்பாக புலித்தேசியமும் - புலியெதிர்ப்பு அரசியலும், தத்தமது எதிரிகளுடன் உள்ள பெண்களை இலக்கு வைக்கின்றது. இந்த வகையில் அருச்சுனாவின் செயற்பாடானது, மறுபக்கத்தில் அர்ச்சுனாவுடன் சம்மந்தப்பட்ட கவுசல்யாவையும் விட்டுவைக்கவில்லை.
பெண்ணை பாலியல்ரீதியாக அவதூறு செய்வதும், பெண்ணை நிர்வாணமாக்கிக் காட்டுவதும், பாலியல் நடத்தை பற்றி அவதூறு செய்வதும், வன்னி ஊழல் ஒழிப்பு அர்ச்சுனா கும்பலின் அரசியல் மட்டுமல்ல - அர்ச்சுனாவுக்கு எதிரான மற்றொரு தரப்பின் அரசியலும் கூட. இதையே தங்கள் அரசியலாக அர்ச்சுனா தரப்பு மாற்றியதுடன், சர்வசாதாரணமாக்கி இருக்கின்றது.
இதன் மூலம் பெண்கள் அரசியலுக்கு வந்தால், இதுதான் கதி என்று மிரட்டுகின்றது. இதற்கு அர்ச்சுனா கும்பல் "தமிழன் - தலைவரின்" பெயரில் தலைமை தாங்குகின்றது. இந்த வக்கிரத்துக்கு பாராளுமன்றத்தில் தமிழனுக்கு அநீதி என்று, தமிழன் பெயரில் சிறிதரன் வக்காலத்து வாங்குகின்றார். தலைவர், தமிழன் என்ற பெயரில் பெண்களைத் தமது பிழைப்புவாத அரசியலுக்காக விற்றுப் பிழைக்கின்றனர்.
