Language Selection

புதிய ஜனநாயகம் 2010

.""இந்த பட்ஜெட் விவசாயிகள், தொழில் முனைவோர், முதலீட்டாளர்களுக்கு உரியது'' என 2010 11ஆம் ஆண்டுக்கான மைய அரசின் வரவுசெலவு அறிக்கைபற்றி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். இதில் ஒரு பாதி உண்மை இன்னொரு பாதியோ திரித்துக் கூறப்பட்டிருக்கிறது.

போபால் யூனியன் கார்பைடு ஆலை ""விபத்தை'' இந்திய மக்களும், உக்ரைனின் செர்னோபில் அணுஉலை விபத்தை உலக மக்களும் மறந்துவிடக் கூடாதவை. ஒவ்வொன்றும் ஜந்தாயிரம் மக்களைக் கொன்றதோடு, பல ஆயிரம் பேரை ஊனமுற்றோராக்கி, பிறக்கும் குழந்தைகளையும் தலைமுறை தலைமுறையாக ஊனமுறச் செய்து விட்டன. செர்னோபில் விபத்துக்கு அப்போது அங்கு இல்லாத கம்யூனிச அரசைக் காரணமாக்கிய அமெரிக்க ஏகாதிபத்திய ஏகபோகங்கள், போபால் பேரழிவுக்கு நட்ட ஈடும் கிரிமினல் குற்றத்துக்குத் தண்டனையும் இல்லாமல், பாசிச காங்கிரசு இராஜீவ் கும்பலின் உடந்தையோடு நழுவிக்கொண்டன. இதிலிருந்து பாடங்கற்றுக் கொண்டு இந்த நாட்டு மக்களின் உயிருக்கும் உடமைக்கும் உத்திரவாதம் செய்யும் நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதில், முழுக்க முழுக்க இலாபவெறியோடு அலையும் அமெரிக்க அணுசக்தி கம்பெனிகளுக்கு ஊழியஞ் செய்யும் வகையில் இந்திய அரசு செயல்படுகிறது.

நாமெல்லோரும் இந்துக்கள் என்று கூறிக்கொண்டு இந்துவெறி பயங்கரவாத ஆட்சியை நிறுவியுள்ள மோடியின் அரசுக்கு எதிராக, இப்போது குஜராத்தின் ‘இந்துக்களே’ போராடத் தொடங்கியுள்ளனர். இந்துவெறி பயங்கரவாத மோடியின் கட்சியைச் சேர்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் பா.ஜ.க. அமைச்சர்களும், மோடி அரசுக்கு எதிராக உழைக்கும் மக்களுடன் இணைந்து போராட்டக் களத்தில் நிற்கின்றனர்.

சிவமுராத் திவேதி, தில்லியைச் சேர்ந்த பிரபலமான விபச்சாரத்தரகன். இணையதளத்தின் மூலம் விபச்சாரத் தொழில் செய்து கொடிகட்டிப் பறந்தவன். அவனது தொழிலுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பாக உதவியது காவியுடைதான். பகல் முழுவதும் யோகம், தியானம், ஆன்மீகச் சொற்பொழிவு என ""இச்சாதாரிபாபா''வாக வேடம் போட்ட இந்தக் காவியுடைச் சாமியார், இரவானால் விபச்சார "மாமா'வாகச் செயல்பட்டுள்ளான். இந்த இச்சாதாரி "மாமா' அம்பலமாகி வட இந்தியாவைக் கலக்கிக் கொண்டிருந்த அதே சமயத்தில், காற்று வரும் என நினைத்து கதவைத் திறந்து வைத்து கல்லாக் கட்டிக் கொண்டிருந்த கயவாளி நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் கொஞ்சிக் குலாவிய படுக்கையறைக் காட்சிகள் வெளியாகி தமிழகத்தை அதிர வைத்தன.

இலங்கையில் அதிபர் மகிந்த ராஜபக்சேவால் தனிச்சிறப்பான முறையில் கட்டியமைக்கப்பட்டிருக்கும் இராணுவம், போலீசு, உளவுப்படை, ""வெள்ளைவேன்'' கொலைப்படை, பேரினவாதச் செய்தி ஊடகம் ஆகிய கட்டுமான அமைப்பு முழுவதும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற "பயங்கரவாதி'களை ஒழிப்பதற்கும், நாட்டின் ஒருமையைக் காப்பதற்கும் அவசியமானதுதான் என்று சிங்கள சமூகம் நம்பிக் கொண்டிருந்தது.

விவசாயம் போண்டியாகி, பெரும்பாலான கிராமங்கள் காலியாகிக் கொண்டிருக்கும் வேளையில், கிராமப்புற மக்களுக்கு மருத்துவ வசதி அளிப்பதற்காகப் புதிய திட்டமொன்றை அறிவித்திருக்கிறது, மைய அரசு. இதன்படி, கிராமப்புறங்களில் நிலவும் மருத்துவர்களின் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காகவே ""கிராமப்புறநலவாழ்வு பட்டப் படிப்பு'' (Bachelor of Rural Heath) என்ற பெயரில் புதிய அலோபதி (ஆங்கில) மருத்துவக் கல்வித் திட்டத்தை நாடெங்கும் தொடங்கத் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

 

கொலை, பாலியல் வன்புணரச்சி போன்ற கிரிமினல் குற்றங்களில் ஈடுபடும் போலீசுக்காரனைத் தண்டிப்பதற்கு நீண்ட நெடிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்பது இன்று  ருச்சிகா வழக்கு பிரபலமான பிறகு  மெத்தப் படித்த அறிவுஜீவிகளுக்கும் புரிந்திருக்கும். அப்படிப்பட்ட போலீசுக்காரனோ, இராணுவச்சிப்பாயோ தீவிரவாதிகளை எதிர்த்துப் "போராடும்' அதிரடிப் படைப் பிரிவைச் சேர்ந்தவனாக இருந்துவிட்டால், அவனது கிரிமினல் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் கேள்விக்கு இடமில்லாதது ஆகிவிடும்.

 

அமெரிக்காவின் அமைதிப் புறா, பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்காவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையும் கடைத்தேற்ற வந்த "மாற்றத்தின்நாயகன்" , என்றெல்லாம் சித்தரிக்கப்பட்ட பாரக் ஒபாமா, அமெரிக்க அதிபராகப் பதவியேற்று ஓராண்டு முடிந்து விட்டது. அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட போதும், தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகப் பதவியேற்றபோதும் அமெரிக்க ஊடகங்கள் அவரைத் தலையில் வைத்துக் கொண்டாடின.

நக்சல் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் அரசு நடத்திவரும் காட்டுவேட்டை (ஆபரேஷன் கிரீன்ஹண்ட்)என்பது, நாட்டு மக்கள் மீது மறுகாலனியாக்கத்தை துப்பாக்கி முனையில் திணிக்கும் ஒரு பாசிசப் போர். அதை அம்பலப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும், அரசு அவர்களைச் சகித்துக் கொள்ளாது. மனித உரிமைப் போராளி டாக்டர் பினாயக் சென்னும், காந்தியவாதி ஹிமான்ஷ குமாரும் மட்டுமல்ல் வேட்டை தீவிரமாவதைத் தொடர்ந்து இன்னும் பல முற்போக்கு  புரட்சிகர பத்திரிகையாளர்களும் மனித உரிமை இயக்கத்தினரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வதைக்கப்பட்டு வருகின்றனர்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் திருச்சி மாவட்டக்கிளை உறுப்பினராகச் செயல்பட்டு வந்த தோழர் கண்ணன், கடந்த 16.2.2010 அன்று காலை திடீர் மாரடைப்பினால் மரணமடைந்து விட்டார். படிப்பறிவு குறைந்தவராக இருந்தபோதிலும், வர்க்க உணர்வும் போர்க்குணமும் நிறைந்த தோழர் கண்ணன், தன்னைப் புரட்சிகர அரசியலின் பிரச்சாரகனாகக் கருதி உணர்வோடு செயல்பட்டவர். உதிரித் தொழிலாளியான அவர், நாள் முழுவதும் உடலுழைப்பில் ஈடுபட்டுவிட்டு, இரவு நேரங்களில் அமைப்பின் பிரச்சாரப் பணிகளில் சோர்வின்றிப் பணியாற்றினார். கொள்கையின் மீது பற்றுறுதியும், அது வெற்றிபெற வேண்டும் என்ற துடிப்பும் அவரது பேச்சிலும் செயலிலும் எப்போதும் வெளிப்படும். புரட்சிகர அமைப்பையும் தோழர்களையும் இழிவாக அவதூறு செய்த காலிகளை தன் பாதச் செருப்பால் பதம்பார்த்தவர்தான் இந்த உணர்வுமிக்கத் தோழர். எளிய வாழ்வும் கடினஉழைப்பும் புரட்சியின் மீது மாளாக்காதலும் கொண்ட 45 வயதான அத்தோழரின் திடீர் மரணம், ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

 

தோழரின் மரணச் செய்தி அறிந்து திருச்சி மாவட்டம் முழுவதிலுமிருந்து திரண்ட அமைப்புத்தோழர்களும் நண்பர்களும் உறவினர்களும், ம.க.இ.க. அலுவலகத்தில் செங்கொடி போர்த்தப்பட்டிருந்த அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி, அன்று மாலை நடந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று, இடுகாட்டில் இரங்கல் கூட்டம் நடத்தினர். கண்ணீர் மல்க உரையாற்றிய அனைவரும் தோழரின் உயரிய கம்யூனிசப் பண்புகளை வழுவாமல் பின்பற்றவும், அவரது புரட்சிகர கனவை நிறைவேற்றப் பாடுபடவும் உறுதியேற்று அஞ்சலி செலுத்தினர்.

 

தோழர் கண்ணனின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!


மக்கள் கலை இலக்கியக் கழகம்,திருச்சி.
18 புதிய ஜனநாயகம் மார்ச் 2010

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுகுணா பவுல்ட்ரி ஃபார்ம் என்ற நிறுவனம் கால்நடைத் தீவனம் மற்றும் கறிக்கோழிகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், தமிழகமெங்கும் கறிக் கோழிகளையும் தீவனங்களையும் உரிய காலத்திற்குள் கொண்டு சென்று இரவு பகலாகப் பாடுபட்டு வந்தபோதிலும், எவ்விதச் சட்டபூர்வ உரிமைகளுமின்றிக் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டுவந்தனர்.

மத்திய அமெரிக்காவில் கியூபாவிற்கு அருகில் அமைந்துள்ள ஹெய்தி தீவைச் சேர்ந்த சாதாரண குடிமகன் தொடங்கி அத்தீவின் முன்னாள் இராணுவஅமைச்சர் உள்ளிட்டுப் பலரும் இவ்வார்த்தைகளைத்தான் இப்பொழுது கூறிக் கொண்டிருக்கிறார்கள். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டிற்கு நிவாரணம் வழங்குவது என்ற போர்வையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திவரும் அரசியல் சதிராட்டத்தைத் தோலுரித்துக் காட்டும் வார்த்தைகள் இவை.

தினந்தோறும் உயிரைப் பணயம் வைத்து, ஆழ்கடலில் நெடுந்தொலைவு சென்று நம் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களால்தான், இந்தியாவின் புரதத்தேவையில் பாதியளவு நிறைவு செய்யப்படுகிறது. இம்மீனவர்களின் வாழ்வுரிமையையும் அன்றாடச் செயல்பாடுகளையும், இந்திய அரசு நடைமுறைப்படுத்தவுள்ள ""மீன்பிடித்துறை ஒழுங்குமுறை மசோதா''முடக்கிப் போடப் போகின்றது.

""ஒரு ஹீரோவாக நீங்கள் மாறவேண்டுமானால் முதலில் தேவை ஒரு வில்லன். அல்லது, சில வில்லன்கள். ராமருக்கு ராவணன், எம்.ஜி.ஆருக்கு நம்பியார். இதிகாசத்திலும், திரைப்படத்திலும் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் வில்லன்களும் ஹீரோக்களும் இருக்கிறார்கள். குறிப்பாக மார்க்கெட்டிங்கில்'' என்கிறார், நிர்வாகம் மற்றும் விற்பனைத் துறைகளுக்கான பயிற்சிவகுப்புகள் நடத்தும் எஸ்.எல்.வி.மூர்த்தி.

போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்கத்தின் சிங்கூரில் பாலாய் சாபுய், திவாகர் கோலே ஆகியோர் அண்டை வீட்டுக்காரர்கள். 1970களில் பீடி சுற்றும் தொழிலாளிகளாக இவர்கள் வறுமையில் வாடினர். பாலாய் சாபுய், சி.பி.எம். கட்சியில் சேர்ந்து ஹ_க்ளி மாவட்ட விவசாய சங்கத் தலைவராக உயர்ந்தார். அவர் அரசு போக்குவரத்துத் துறையின் மாவட்டச் செயலாளராகவும் பதவி வகித்தார். இம்மாவட்டத்தின் அனைத்து வாகனங்களுக்கும் உரிமம்  பர்மிட் வழங்கும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சிங்கூரில் அரசின் நிலக் கையகப்படுத்தல் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். இன்று அவருக்கு சிங்கூரில் இரண்டு அடுக்கு மாடி வீடு உள்ளது. போலேரோ ஜீப்பில் வலம்வரும் அவர் இன்று இப்பகுதியில் முக்கியத் தலைவராவார்.

மே.வங்கம், ஒரிசா, ஜார்கந்து, சட்டிஸ்கர், பீகார் மாநில முதல்வர்களுடன் சேர்ந்து காட்டுவேட்டை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது பற்றி கலந்தாலோசனை செய்ய, கடந்த பிப்ரவரி 9ஆம் தேதியன்று கொலைகார உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கொல்கத்தா வந்தபோது, ""வேதாந்தாவின் கொலைகார அடியாள் ப.சிதம்பரமே திரும்பிப்போ!, டாடாவின் எடுபிடி புத்ததேவ் பட்டாச்சார்யாவே வெளியேறு!'', ""காட்டுவேட்டை என்ற பெயரில் தொடரும் நாட்டு மக்கள் மீதான போரை முறியடிப்போம்!'' என்ற முழக்கங்கள் கொல்கத்தா நகரெங்கும் எதிரொலித்தன.

இந்திய ஆட்சியாளர்கள் பழங்குடி மக்கள் மீது நடத்திவரும் கொலைவெறியாட்டப் போரை திட்டமிட்டு மூடிமறைத்து, நக்சல்பாரி புரட்சியாளர்களைப் பயங்கரவாதிகளாகவும் கொலைகாரர்களாகவும் இழிவுபடுத்தி தமிழக செய்தி ஊடகங்கள் அவதூறு செய்துவரும் நிலையில், ஆளும் கும்பல் நடத்திவரும் நக்சல் வேட்டையின் உள்நோக்கத்தையும், மறுகாலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை விளக்கியும், ""பழங்குடியினர் மீனவர்கள் விவசாயிகள் மீதான போர்தான், அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!'' என்ற முழக்கத்துடன், பல்வேறு வடிவங்களில் நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் கடந்த இரு மாதங்களாகத் தொடர்ந்து சூறாவளிப் பிரச்சார இயக்கத்தை நடத்திவருகின்றன.

இந்தியாவின் மிகப் பெரிய அந்நிய முதலீட்டுத்திட்டமான தென்கொரியாவின் போஸ்கோ எஃகு ஆலைத் திட்டத்துக்கு எதிராக, போஸ்கோ பிரதிரோத் சங்கராம் சமிதி (பி.பி.எஸ்.எஸ்) என்ற அமைப்பின் தலைமையில் ஒரிசாவின் ஜெகத்சிங்புர் மாவட்டத்தின் விவசாயிகள் கடந்த ஜந்தாண்டுகளாகப் போராடிவருகின்றனர். கடந்த ஜனவரி 26 முதலாக போஸ்கோ திட்டத்திற்கு எதிராக காலவரையற்ற தர்ணா போராட்டத்தை அவர்கள் நடத்தி வருகின்றனர்.

 

தென்கொரிய அதிபர் லீ மையூங் பாக், டெல்லியில் கடந்த ஜனவரி 26 அன்று நடந்த "குடியரசு' தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் வருகைக்கு முன்னதாக 3566 ஏக்கர் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எஞ்சிய நிலங்களை விரைவில் கையகப்படுத்தி திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாகவும் அரசு அறிவித்துள்ளது. அதாவது, 2006ஆம் ஆண்டில் கலிங்கா நகரில் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 14பேரைக் கொன்றதைப் போல, மிகக் கொடிய தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடத் துடிக்கிறது.

 

ஏறத்தாழ 52,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போஸ்கோ திட்டத்தினால் 30,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழ்விழக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரிசாவின் உயர்தரமான இரும்புக் கனிமத்தில் 60 கோடிடன் அளவுக்கு அள்ளிச் செல்வதோடு, ஆண்டுக்கு 12கோடி டன் எஃகு உற்பத்தி செய்யும் உருக்காலையும் மின்நிலையமும் தனியார் துறைமுகமும் கொண்ட இத்திட்டம், கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது. இத்திட்டத்தால் 11 கிராமங்களிலுள்ள 5000 குடும்பங்கள்  ஏறத்தாழ 30,000 பேர் வெளியேற்றப்படவுள்ளனர். இதுதவிர, ஜடாதாரி ஆற்றையும் அது கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியையும் போஸ்கோ நிறுவனம் ஆக்கிரமிக்கப் போவதால், 52,000 மீனவர்களின் எதிர்கால வாழ்வும் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

எஃகு உருக்காலை மற்றும் மின்நிலையத்துக்கு 4004ஏக்கர் நிலம் தேவை. இதில் 3566 ஏக்கர் புறம்போக்கு மற்றும் காட்டுப்பகுதிகள் அரசால் இந்நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. காட்டு நிலங்களையும் காட்டின் விளைபொருட்களையும் பயன்படுத்தி வந்த மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 438 ஏக்கர் நிலம் உள்ளூர் சிறு விவசாயிகளுடையது. இவற்றில் வெற்றிலை, முந்திரி சாகுபடியும் முக்கியமாக, நெல் சாகுபடியும் செய்து வருகின்றனர். இந்த நிலங்களைப் பறிப்பதை எதிர்த்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை ஒடுக்க 25 பிளாட்டூன் துணை இராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் மூலம் கிராமப் பஞ்சாயத்துகளில் ஒப்புதல் பெறுவதற்கான கூட்டங்கள் நடத்தப்பட்டபோது, தங்கள் வாழ்வுரிமையைப் பறிக்கும் போஸ்கோ திட்டத்தை எதிர்த்து அனைத்து விவசாயிகளும் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஆனால் அரசோ, 15 நாட்களுக்குள் நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ளாவிட்டால், பின்னர் எவ்வித நிவாரணமும் தரப்பட மாட்டாது என்று கடந்த பிப்ரவரி முதல் நாளன்று அறிவித்து, நிலங்களைப் பறிக்கக் கிளம்பியுள்ளது. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கான மறுகுடியமர்த்தல் மற்றும் நிவாரணத்திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ""இந்தியாவில் இதுதான் மிகச் சிறந்த நிவாரணத் திட்டம்'' என்கிறார் போஸ்கோ இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளரான மொகந்தி. ஆனாலும் இன்றுவரை எந்த விவசாயியும் நிவாரணத் தொகையை வாங்கவில்லை.

 

ஜெகத்சிங்புர் மாவட்டத்தின் பட்னா, கோவிந்த்புர், தின்கியா ஆகிய கிராமங்கள் போராட்டத்தின் முன்னணியில் நிற்கின்றன. விவசாயிகள் போஸ்கோ திட்டம் அமையவுள்ள 4004 ஏக்கர் நிலத்தைச் சுற்றிவளைத்து 17இடங்களில் மட்டும் நுழைவாயில்களை அமைத்துள்ளனர். அவர்களின் அனுமதி இல்லாமல் அந்த மூங்கில் தடுப்பரண்களைத் திறக்க முடியாது. அரசு அதிகாரிகளோ போஸ்கோ நிறுவனத்தினரோ இன்னமும் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியவில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் மூங்கில் வேலி போடப்பட்டு அந்நியர்கள் எவரும் நுழைய முடியாதபடி தடுத்துக் கண்காணித்துவருகின்றனர்.

 

""ஏற்கெனவே பாரதீப் துறைமுகப் பகுதியில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இதேபோல விளைநிலங்களைப் பறித்துக் கொண்டு மறுவாழ்வு நிவாரணத் திட்டங்களை அறிவித்தது. அதை அன்று விவசாயிகள் நம்பினர். அந்த இடத்தை இன்று யார் வேண்டுமானாலும் நேரில் சென்று பார்க்கட்டும். வெறும் கான்கிரீட் தூண்கள்தான் நிற்கின்றன. அதற்குமேல் நிவாரணத் திட்டம் நகரவேயில்லை. அரசாங்கமே எங்களை வஞ்சித்துவிட்ட நிலையில், அந்நியத்தனியார் ஏகபோக நிறுவனமான போஸ்கோ, நிவாரணத்திட்டத்தை நிறைவேற்றும் என்று நம்புவதற்கு நாங்கள் முட்டாள்கள் இல்லை'' என்கிறார், தின்கியா கிராமப்பஞ்சாயத்துத் தலைவரான சிசிரா மகாபத்ரா.

 

நருசிங்க பெஹரா மற்றும் தேவேந்திர சுவாசூன் ஆகியோர் ""போஸ்கோவுக்கு மக்களின் எதிர்ப்பு'' எனும் ஏழுநிமிடக் காணொளியைத் தயாரித்து, அதை நாட்டு மக்கள் அனைவரும் காணுமாறும், விவசாயிகளின் நியாயமான இப்போராட்டத்தை ஆதரிக்குமாறும் கோரியுள்ளனர். ((http://www.youtube.com/watch?v=cizn7zJmyUc)

 

போஸ்கோவை எதிர்த்து வலது கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் விவசாயிகளோடு இணைந்து போராடி வருகின்றன. தர்ணா போராட்டம் நடத்தியவர்கள் மீது போஸ்கோ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள குண்டர்படையினர் தாக்குதல் நடத்தியதோடு, குண்டுகளையும் வீசியுள்ளனர். இதில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது தவிர போலீசு பலமுறை தடியடித்தாக்குதல் நடத்தி இப்போராட்டத்தை நசுக்க முயற்சிக்கிறது. இத்துணை அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு ஒரிசா மக்களின் போஸ்கோ எதிர்ப்புப்போராட்டம் பற்றிப் படர்ந்து வருகிறது. ஒரிசா மக்களின் போஸ்கோ எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிப்பதும், அதை மறுகாலனியாக்கத்திற்கு எதிரான போராட்டமாக வளர்த்தெடுப்பதும் புரட்சிகரஜனநாயக சக்திகளின் உடனடிக் கடமை; நம் கடமை.


• குணசேகரன்

பழங்குடியினர் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்பும் மாவட்டத்தின் ஜாடுகுடா, யுரேனியவளம் மிக்க பகுதியாகும். இங்கு இந்திய யுரேனியக் கழகம் எனும் அரசுத்துறை நிறுவனத்துக்குச் சொந்தமாகப் பல சுரங்கங்கள் உள்ளன. இந்நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரிக்க எடுத்து வரும் நடவடிக்கைகளை எதிர்த்து, அப்பகுதி மக்கள் நடத்திவரும் போராட்டங்களால் ஜாடுகுடா வட்டாரமே கொதித்துக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

நுண்கடன் என்ற பெயரில் பத்தாயிரம் ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை கடன் கொடுக்கும் நிதிநிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் வகை தொகையின்றிப் பெருக ஆரம்பித்துள்ளன. பொருளாதார மந்தம் உலகைப் பிடித்தாட்டும் இன்றைய சூழலில், முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்க இவர்கள் வெளிநாடுகளில் செய்யும் விளம்பரங்களில்,""பத்தாயிரம் ரூபாய் உங்களுக்கு ஒரு பொருட்டாக இல்லாமல் போகலாம்; ஆனால் அதனை நுண்கடனாகக் கொடுப்பதன் மூலம் நீங்கள் இந்தியாவின் பின்தங்கிய பகுதியில் இருக்கும் ஒரு குடும்பத்தைக் கரை சேர்க்கமுடியும். உங்கள் பணம், நிச்சயமாக உங்களிடமே திரும்ப வரும்  அதுவும், அதற்கு உண்டான வட்டியுடன்!'' என விளக்கி இந்தியாவின் வறுமையையே இவர்கள் மூலதனமாக மாற்றுகின்றனர்.