Language Selection

புதிய ஜனநாயகம் 2010

தென்கொரியாவின் தேசங்கடந்த தொழிற்கழகமான போஸ்கோ, ஒரிசா மாநிலத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ள இரும்பு உருக்காலைக்கு எதிராக கடந்த ஐந்தாண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது.  ஒரிசா மாநில அரசு பல்வேறு விதமான அடக்குமுறைகளை ஏவிவிட்ட பின்னும், அப்போராட்டம் பின்னடைவுக்கு உள்ளாகவில்லை.  போஸ்கோவின் திட்டங்களுக்கு உறுதுணையாய் நிற்பதாக நவின் பட்நாயக்கிற்கு உறுதியளித்திருக்கிறார், பிரதமர் மன்மோகன் சிங்.  இப்படிபட்ட நிலையில் இப்பிரச்சினையில் மைய அரசு திடீர் உத்தமர் வேடம் போடக் கிளம்பியிருக்கிறது.

பல நூறு இந்தியச் சிப்பாய்களைப் பலிகொண்ட கார்கில் போர் மக்களுக்கு இலவசமாக வழங்கியது வெறும் தேசபக்தியை மட்டும்தான். ஆனால் இப்போர் வீரர்களுக்குக் காலணிகள் வாங்கியதிலும், செத்துப்போன வீரர்களுக்குச் சவப்பெட்டி வாங்கியதிலும், பல கோடிகளை சுருட்டிக்கொள்ள  ஆளும் கட்சிக்குப் பயன்பட்டது. எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத ஊழல்களை அரங்கேற்ற இன்னும் அப்போர் பயன்படுகிறது என்பதற்கு இன்னொரு ஆதாரம் ஆதர்ஷ் ஊழல்.

விருதை மினரல்ஸ் என்ற நிறுவனம் விருத்தாச்சலம் நகரிலுள்ள ஆலடி ரோடு, எம்.ஆர்.கே. நகர் குடியிருப்புப் பகுதியில் ஆழ்குழாய் கிணறு தோண்டி தண்ணீர் எடுத்து விற்கும் வியாபாரத்தை 2008-ஆம் ஆண்டு தொடங்கியது.

நச்சுப் பொருட்களின் கிடங்கு உப்புக் கழிவு:

2003 – செப்டம்பரில், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் குஜராத் மாநிலம் மித்னாபூர் சோடா உப்பு ஆலையில் கழிவு நீர்க் கசிவு ஒன்று ஏற்பட்டது. கட்ச் வளைகுடாவில் உள்ள தேசியக் கடற்பூங்காவில் 150 ஏக்கருக்கு மேலான கடற்பகுதிக்கு அது பரவியது. மாந்தோப்புகள், பவளப்பாறைகள், களிமண் வாழ் உயிரினங்கள், திமிங்கலம், சுறா போன்றவைகளைக் கொண்ட மிகவும் பல்வகை உயிரினங்களுக்காக இந்தக் கடற்பூங்கா அமைந்துள்ளது. இங்கு டாடா கெமிக்கல்ஸ் ஆலையின் கழிவுகளால் படிந்த திடப் பொருட்கள் காரணமாக 10 கிலோமீட்டர் தூரத்துக்கு கடல் வாழினங்கள் பாதுகாக்கப்படும் பகுதி மாசுபட்டும் சீரழிந்தும் போவிட்டதென்று தேசியக் கடலியல் ஆய்வு நிறுவனம் கூறுகிறது. மித்னாபூர் பகுதியில் உள்ள டாடா கெமிக்கல்சின் உப்பளங்கள் அங்குள்ள நிலத்தடி நீரைப் பெருமளவு உப்பு நீராக்கிவிட்டன. டாடா கம்பெனியின் உப்புக் கழிவு நீரைக் கொட்டி வைக்கும் திறந்தவெளிக் கிடங்குகளுக்காக பல கிராமங்கள் விவசாய நிலங்களை இழந்துவிட் டிருக்கின்றன.

மக்கள் தொடர்பு அதிகாரி, லயசன் ஆபீசர் என்றெல்லாம் குறிப்பிடப்படும் அதிகாரத் தரகர்கள்,  அரசாங்கத்தில் எந்தக் காரியமானாலும் செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்கள்; அதிகாரத் தரகர்கள் மூலமாகப் போனால்தான் அரசாங்கத்தின் நெடிய கதவுகள் திறக்கும். பெருமுதலாளிகள் ஒரு ஒப்பந்தத்தை முடிக்கவோ, போட்டியாளர்களைக் கழுத்தறுக்கவோ, விதிமுறைகளை மீறி ஒரு புதிய தொழில் உரிமம் பெறவோ, தங்களுக்குச் சாதகமாக அரசின் கொள்கைகளை மாற்றவோ அதிகாரத் தரகர்களை அமர்த்திக் கொள்கிறார்கள். அதிகாரத் தரகு வேலைக்கான செலவுகளை பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் “அபிவிருத்தி வேலைகளுக்கான செலவுகள்” என்று குறிப்பிடுகின்றன. முதலாளித்துவ அரசியலமைப்பு முறையின் பிரிக்க முடியாத அங்கம்தான் இந்த அதிகாரத் தரகர்கள். இத்தகைய அதிகாரத் தரகர்களில் ஒருவர்தான் நீரா ராடியா. குறிப்பாக ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி நிறுவனங்களுக்கு உரிமங்கள், ஒப்பந்தங்கள் முதலானவற்றை அதிகார வர்க்கத்துடன் பேசி முடித்துத் தரும் வேலைகளை இவர் செய்துள்ளார். இப்போது நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விவகாரமாகியுள்ளது.

நாட்டையே அதிரவைத்து எல்லோரையும் மிரள வைத்திருக்கிறது, இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களில் இதுவே மிகப் பெரியது என்று சித்தரிக்கப்படும் அலைக்கற்றை ஊழல். இந்த ஊழலால் அரசுக்கு ரூ. 1,76,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக் கோரி நடத்தி வரும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம், கடந்த நவம்பர் 4-ஆம் தேதியன்று பத்தாவது ஆண்டைக் கடந்துவிட்டது.

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கமிட்டி என்ற அமைப்பு காஷ்மீர் பிரச்சினை குறித்து, “விடுதலை: ஒரே வழி” என்ற கருத்தரங்கை கடந்த அக்டோபர் 21 அன்று டெல்லியில் நடத்தியது.  இக்கருத்தரங்கில் காஷ்மீரைச் சேர்ந்த ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான சையத் அலி ஷா கீலானி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நக்சல்பாரி புரட்சியாளரான தோழர் வரவர ராவ், எழுத்தாளர் அருந்ததி ராய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த அக்.13ஆம் தேதியன்று ஆசிரியர் ஒருவர் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவனைத் தரக்குறைவாகப் பேசி அடித்ததும், இப்பள்ளியில் பு.மா.இ.மு. அமைப்பில் இணைந்துள்ள மாணவர்கள் இது பற்றி அந்த ஆசிரியரிடம் விளக்கம் கேட்டபோது, அவர் மீண்டும் திமிராகப் பேசவே, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மன்னிப்பு கேட்டு இனி இதுபோல் நடவாதிருக்க உறுதி தரவேண்டும் என்ற கோரிக்கையுடன் பள்ளியின் அனைத்து மாணவர்களும் தலைமையாசிரியரை முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து தலைமையாசிரியர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மன்னிப்புக் கேட்டு பிரச்சினை முடிவடையும் நேரத்தில், திடீரென அங்கு தனது அடியாட்களுடன் வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவின் மாநிலத் தலைவரும் இப்பகுதியின் ரவுடியுமான டி.பி.ஜோசுவா, மாணவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கி விரட்டத் தொடங்கினான்; தடுக்க வந்த ஆசிரியர்களுக்கும் அடி விழுந்தது.

 

கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தில் பள்ளி மாணவர் பாரத் ஐப் படுகொலை செய்தவர்களைக் கைது செய்து தண்டிக்கக் கோரி கடந்த செப்டம்பர் 20ஆம் தேதியன்று பெண்ணாடத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்ட ம் நடத்தியது. (புதிய ஜனநாயம் அக்.2010 இதழ்) அதன் பின்னரும் பெண்ணாடம் போலீசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மாவட்ட போலீசு கண்காணிப்பாளரைச் சந்தித்து முறையிடுவதெனத் தீர்மானித்து, பெண்ணாடத்திலிருந்து மாவட்டத் தலைநகரான கடலூருக்கு அக். 9,10,11 ஆகிய தேதிகளில் நடைபயணம் மேற்கொள்ளப் போவதாக வி.வி.மு. அறிவித்தது. இதனால் போலீசின் முகத்திரை மக்கள் மத்தியில் கிழிந்து கந்தலாகிவிடும் என்று அஞ்சிய கடலூர் மாவட்ட போலீசு, இந்நடைபயணத்திற்குத் தடைவிதித்தும், மீறி வந்தால் கைது செய்வோம் என்று எச்சரித்தும், பெண்ணாடத்தில் ஏராளமான போலீசைக் குவித்துப் பீதியூட்டியது.

 

எமது அக்டோபர் இதழ், பக்கம் 17இல், மணமேல் குடியைச் சேர்ந்த அலாவுதீனுக்கும் சப்னா ஆஸ்மிக்கும் சீர்திருத்த முறையில் நடந்த திருமணத்தைப் பற்றி வெளியிட்டிருந்த பெட்டிச்செய்தியில், மணமகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் துணைத் தலைவரின் மகள் எனக் குறிப்பிட்டிருந்தோம். அவ்விதழ் வெளிவந்தவுடனேயே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் சிலர் எம்மைக் கைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு மணமகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் மாநிலத் துணைத் தலைவரின் மகள் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது பிழையானது எனச் சுட்டிக் காட்டினர்.

 

பிளாரன்ஸ் மேரி என்ற கன்னியாஸ்திரியை மிரட்டி கடந்த நான்காண்டுகளாகப் பாலியல் வன்முறையை ஏவி வந்த,  திருச்சி ஜோசப் கல்லூரி முதல்வராகவும் பாதிரியாராகவும் உள்ள ராஜரத்தினத்தின் பாலியல் அட்டூழியம் அண்மையில் வெளிவந்து தமிழகமெங்கும் நாறத் தொடங்கியுள்ளது.

மகத்தான மக்கள் மருத்துவர் துவாரகாநாத் சாந்தாராம் கோட்னிஸ் நூற்றாண்டு விழா !

பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடித்த போராளி டாக்டர் கோட்னிஸ் புகழ் நீடுழி வாழ்க !!

மருத்துவ வரலாறு எத்தனையோ தலைசிறந்த மருத்துவர்களைக் கண்டிருக்கிறது. ஆனால், வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவே தங்களையும் தங்கள் மருத்துவ அறிவையும் அர்ப்பணித்த மருத்துவர்கள் அரிதினும் அரிதே. அத்தகைய அரிய மருத்துவர்களில் ஒருவர்தான் டாக்டர் துவாரகாநாத் சாந்தாராம் கோட்னிஸ்.

போதிய அளவுக்கு மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், செவிலியர்கள் இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. பறவைக் காச்சல், பன்றிக் காச்சல், சிக்குன்குனியா மற்றும் இன்னும் பெயர் தெரியாத பல புதிய நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பல அரசு மருத்துவமனைகளில் மருந்துகளும் இல்லை; குடிநீர், மின்சாரம், இரத்த வங்கி, எக்ஸ்ரே, ஈ.சி.ஜி., அவசர சிகிச்சைப் பிரிவு, ஆம்புலன்ஸ் முதலான வசதிகள் இல்லாமலும், அறுவை சிகிச்சை, தண்ணீர் சிகிச்சை, இதயநோய் சிகிச்சை, தோல்நோய் சிகிச்சை, குழந்தை நலம், எலும்பு முறிவு முதலானவற்றுக்கு மருத்துவர் இல்லாமலும், தண்ணீர் இல்லை, போதிய இடவசதி இல்லை என்று பல்வேறு காரணங்களைக் கூறியும் நோயாளிகளை விரட்டும் அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் தொடர்ந்து பல ஏழைகளின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசு மருத்துவமனையா - மரண வாசலா

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வழியில்லாமல், தங்களது சிறு உடமைகளை விற்றும் கந்துவட்டிக்குக் கடன் வாங்கியும் ஏழை நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லுமாறு நிர்பந்திக்கப்படுகின்றனர். இவற்றைக் கண்டித்து பலமுறை மனு கொடுத்தும் மருத்துவமனை நிர்வாகமோ, அரசோ அசைந்து கொடுப்பதில்லை. மறுபுறம், கலைஞர் காப்பீடு திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகள் கொழுப்பதற்காகப் பலநூறு கோடிகளை அரசு ஒதுக்குகிறது.

அரசின் அலட்சியத்தை எதிர்த்தும், அரசு மருத்துவமனையைப் போர்க்கால அடிப்படையில் மேம்படுத்தி மக்களின் உயிரைக் காக்கக் கோரியும் நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் இயங்கிவரும் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம், 11.10.2010 அன்று வாகனப் பேரணியையும், கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது. கோத்தகிரி டானிங்டன் பகுதியிலிருந்து காமராஜர் சதுக்கம் வழியாக மார்க்கெட் திடலை இப்பேரணி வந்தடைந்ததும், அங்கு சங்கத்தின் தலைவர் தோழர் செல்வம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவமனை சீர்கேட்டை அம்பலப்படுத்தியும், அரசு மருத்துவமனைகளைப் புறக்கணித்துத் தனியார் மருத்துவமனைகளை ஊட்டிவளர்க்கும் கலைஞர் காப்பீடு திட்டத்தை எதிர்த்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உள்ள அரசு மருத்துவமனை சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து, கடந்த 2009-ஆம் ஆண்டின் இறுதியில் மாவட்டத் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், தலைமை மருத்துவமனை என்ற பெயர்ப்பலகை மட்டும்தான் இங்கு இருக்கிறதே தவிர, இங்கு போதிய மருத்துவர்களோ மருந்துகளோ இல்லை. மக்களின் அடிப்படைத் தேவைகளை அறவே புறக்கணித்துவரும் அரசை எதிர்த்தும், மருத்துவம் பெறுவது நமது அடிப்படை உரிமை, அதைச் செய்துதர வேண்டியது அரசின் கடமை என்பதை உணர்த்தியும் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட பென்னாகரம் வட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி, அதன் தொடர்ச்சியாக 11.10.2010 அன்று பென்னாகரம் அரசு மருத்துவமனை முன்பாக தோழர் சிவா தலைமையில் விண்ணதிரும் முழக்கங்களுடன் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

அரசு மருத்துவமனைகளைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் தமிழக அரசை எதிர்த்தும், தனியார் மருத்துவமனைகளின் கொள்ளையை எதிர்த்தும் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்கள், போராடாமல் அடிப்படை உரிமைகளை நாம் பெறமுடியாது என்பதை உழைக்கும் மக்களுக்கு உணர்த்து வதாக அமைந்தன.


மாவோயிஸ்டுகள் சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள காங்கேர் மாவட்டத்தில் ஆகஸ்டு 29, 2010 அன்று நடத்திய திடீர்த் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று சிப்பாய்களும் இரண்டு போலீசாரும் கொல்லப்பட்டனர்.  இத்தாக்குதல் நடந்து ஏறத்தாழ ஒரு வாரம் கழித்து, இத்தாக்குதலை நடத்திய 17 மாவோயிஸ்டுகளைப் பிடித்துவிட்டதாக காங்கேர் மாவட்ட போலீசார் அறிவித்தனர்.  காங்கேர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தியபொழுது, இம்மாவோயிஸ்டுகளைக் கைது செய்ததாகவும் போலீசார் அறிவித்தனர்.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த நான்கைந்து மாதங்களுக்குள் 108 பேரைச் சுட்டுக் கொன்ற பிறகு, நூற்றுக்கும் மேற்பட்டோரை – இவர்களுள் மாணவர்களும் சிறுவர்களும் அடக்கம் – பொது அமைதிச் சட்டம் என்ற கருப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறைக்குள் தள்ளிய பிறகு, தனது ஜனநாயக முகமூடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எட்டு அம்சங்கள் அடங்கிய சலுகைத் திட்டமொன்றை அறிவித்திருக்கிறது, மைய அரசு.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளுள் ஒன்று ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதாகும். காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமின்றி, கடந்த ஆறாண்டுகளுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்திலும் இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இச்சட்டத்தைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு அம்மாநிலத்தில் இந்திய இராணுவம் நடத்திவரும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தாய்மார்கள் ஜூலை 15, 2004 அன்று நடத்திய நிர்வாணப் போராட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா என்ற பெண் இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி கடந்த பத்தாண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

மத்திய அமெரிக்காவின் வறுமைமிக்க ஹெய்தி நாட்டில், கடந்த ஜனவரியில் தலைநகரில் ஏற்பட்ட நிலநடுக்கப் பேரழிவுக்குப் பின்னர் ஏறத்தாழ 8 லட்சம் மக்கள் கிராமப்புறங்களில் அகதிகளாகக் குவிந்தனர். அவர்களுக்கு உணவளிக்க விதைச் சோளத்தை எடுத்துப் பயன்படுத்தியதால், கிராம மக்களிடம் சோள விதை பற்றாக்குறை ஏற்பட்டது. அவலத்தில் சிக்கியுள்ள ஹெதி நாட்டுக்கு உதவுவது என்ற பெயரில், கொலைகார மான்சாண்டோ நிறுவனம் தனது விதைகளைக் கொண்டு இப்போது ஆதிக்கம் செய்யக் கிளம்பியுள்ளது.

வறண்ட பூமியாக உள்ள ராஜஸ்தான் மாநிலம் விரைவில் நச்சுப் பாலைவனமாக மாறிப்போகும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மான்சாண்டோ நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து, தண்ணீரை வரைமுறையின்றி உறிஞ்சும் பாசனத்தைச் செயல்படுத்திப் பேரழிவை விதைக்கக் கிளம்பியுள்ளது, அம்மாநில அரசு .

பி.டி. பருத்தியின் மூலம் விவசாயிகளைத் தற்கொலைப் பாதைக்குத் தள்ளிய அமெரிக்கக் கொலைகார மான்சாண்டோ விதை நிறுவனத்துடன் ராஜஸ்தான் மாநில அரசு கடந்த ஜூலையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. உலகின் ஏகபோக விதை நிறுவனமான மான்சாண்டோவுடன் கூட்டுச் சேர்ந்து, இரண்டாவது பசுமைப் புரட்சி என்ற பெயரில் வீரியரக சோளம், பருத்தி, மிளகு, தக்காளி, முட்டைக்கோசு, வெள்ளரி, காலிபிளவர், தர்ப்பூசணி முதலானவற்றுக்கான விதைச் சந்தையை விரிவுபடுத்த அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது. அரசின் விவசாயத்துறை, தோட்டக் கலைத் துறை, சுவாமி கேசவானந்த் விவசாயப் பல்கலைக்கழகம், மகாராணா பிரதாப் விவசாயத் தொழில்நுட்பக் கழகம், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பாக அம்மாநில அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இரகசியமாகப் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி விவரம் கேட்டதன் வாயிலாக இப்போது மெதுவாகக் கசிந்துள்ளது.

பி.டி. பருத்தியின் மூலம் விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளிய அமெரிக்கக் கொலைகார மான்சாண்டோ நிறுவனத்தினால் ராஜஸ்தான் நச்சுப் பாலைவனமாக மாறிப்போகும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது

இந்த ஒப்பந்தப்படி, மான்சாண்டோ நிறுவனம் விதை உற்பத்தி மற்றும் விநியோகத்தை மேற்பார்வையிட்டு நடத்தும். இதன் தொடர்ச்சியாக வீரியரக விதைகளைக் கொண்டு விவசாயம் செய்து, அவற்றைப் பெருக்கிப் பரவலாக்கவும் செய்யும். உதாரணமாக பருத்தியை எடுத்துக் கொண்டால், பருத்தி பயிரிடுவது, உரமிடுவது, பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பது, அறுவடை இயந்திரத்தைப் பயன்படுத்துவது, விதைகளைச் சேகரிப்பது முதலான அனைத்தும் மான்சாண்டோவின் மேற்பார்வையில்தான் நடக்கும்.

மான்சாண்டோவின் வீரியரக விதைகள் கொடிய இரசாயனங்களால் பாடம் செய்யப்பட்டவை; பயன்படுத்துவதற்கே அபாயகரமானவை. அதிக மகசூல் தரும் வழக்கமான விதைகளை விட, மான்சாண்டோவின் வீரியரக விதைகள் ஒன்றரை மடங்கு அதிகமாகத் தண்ணீரை உறிஞ்சக்கூடியவை. மேலும், இந்த விதைகள் கூடுதலாக உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டையும் அதிகரிக்கக்கூடியவை. இதனால் மண்வளமும் நீர்வளமும் குறைந்து ராஜஸ்தான் மாநிலம் விரைவில் மனித இனம் வாழ முடியாத நச்சுப் பாலைவனமாகிப் போகும் என்று விவசாய ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த ஒப்பந்தப்படி, மாநில அரசின் விவசாய மற்றும் கால்நடை பல்கலைக்கழகங்கள் வாயிலாக விவசாய ஆராய்ச்சிகளை மட்டுமின்றி, மரபணு ஆராய்ச்சி செய்து கொள்ளவும் மான்சாண்டோ நிறுவனத்துக்குத் தாராள அனுமதி தரப்பட்டுள்ளது. இத்தகைய ஆராய்ச்சிகளில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு மாநில அரசுதான் ஊதியம் கொடுக்கப் போகிறது. இத்தகைய அடிக்கட்டுமான வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு மான்சாண்டோ தனது லாபத்தைப் பெருக்கிக் கொள்ளப் போகிறது. மொத்தத்தில், ராஜஸ்தானின் விவசாய ஆராய்ச்சி முழுவதையுமே மான்சாண்டோ கட்டுப்படுத்துவதாகவும் விவசாயப் பல்கலைக்கழகங்கள் மான்சாண்டோவுக்கு அடிபணிந்து வேலை செய்வதாகவும் மாற்றப்பட்டுள்ளன.

பிரபல அறிவியலாளரான பி.எம்.பார்கவா உள்ளிட்டுப் பல்வேறு அறிவியலாளர்களும் சுற்றுச்சூழலாளர்களும் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் நிறுவப்பட்டுள்ள இத்தகைய பல்கலைக்கழகங்களையும் ஆய்வுக்கூடங்களையும் இப்படியொரு ஏகாதிபத்திய நிறுவனத்துக்குச் சேவை செய்யுமாறு மாற்றுவது எந்த வகையில் நியாயமாகும் என்று கேட்கின்றனர். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களையும் விதைகளையும் சட்ட விரோதமான முறையில் அங்கீகரித்து, இந்திய அரசின் பல்வேறு துறைகள் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்குச் சேவை செய்கின்றன என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றர்.

ராஜஸ்தான் மட்டுமின்றி குஜராத், கர்நாடகா, இமாச்சல பிரதேசம், ஒரிசா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் இதேபோன்று சோளம், பருத்தி மற்றும் காய்கறிகளுக்கு வீரிய ரக விதைகளை மான்சாண்டோ அளிக்கப் போகிறது. 2012-13-க்குள் மரபீணி மாற்றப்பட்ட சோளம் மற்றும் பருத்தியைப் பயிரிடவும், களப்பரிசோதனைகள் செய்யவும், நாடு முழுவதும் ஒரு லட்சம் விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளவும், இந்திய அரசின் 450 விஞ்ஞானிகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் விதைகளையும் விவசாயத்தையும் ஒட்டுமொத்தமாகக் கட்டுப்படுத்துவதாக மாண்சாண்டோ மாறிவிடும். இனி இந்தியா என்பதற்குப் பதிலாக, மாண்சாண்டோலாந்து என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

________________________________

- புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
_____________________________

டாடா குழுமம், ஒரு குடும்பத்துக்குச் சொந்தமான தேசங்கடந்த தொழிற்கழகம். 2005-ஆம் ஆண்டு கணக்குப்படி 76,500 கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்டது. நாட்டில் அக்குழுமத்துக்கு அநியாயத்துக்கு ஒரு நல்ல பெயர் உள்ளது. ஜார்கண்டிலும் ஒரிசாவிலும் பெரும் அளவிலான பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டதன் மூலமும், ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமும் கிழக்கிந்தியக் கம்பெனியுடனும் சந்தர்ப்பவாத – சமரசத் தொழில் கூட்டுக்கள் போட்டுக் கொண்டதன் மூலமும் டாடா குழுமத்தின் தலைமைக் கம்பெனியான டாடா எஃகு நிறுவனம் செல்வங்களைக் குவித்தது.