மார்க்சிய சொற்தொடர் மூலமான மூடிமறைத்த சந்தர்ப்பவாதம்
மார்க்சியம் முன்னேறிய பிரிவைக் கடந்து நடைமுறை இயக்கமாக மாறாத இலங்கைச் சூழலை பயன்படுத்திக் கொண்டு, பலர் மார்க்சியத்தின் பெயரில் பலவிதமாக பிழைக்கின்றனர். தங்கள் அறிவுசார்ந்த மேலாண்மையைக் கொண்டு, இந்த அரசியல் பொதுவில் அரங்கேறுகின்றது. புலிக்கு பிந்தைய திடீர் இடதுசாரிகளின் ஒரு பிரிவினர் மார்க்சிய சொற்றொடர் மூலமான மூடிமறைத்த சந்தர்ப்பவாதத்தைக் கொண்டு, சர்வதேச புரட்சியாளர்களை ஏமாற்றி மோசடி செய்கின்றனர்.
இப்படி மூடிமறைத்த அபாயகரமான எதிர்ப்புரட்சி பற்றி லெனின் கூறும் போது "உழைக்கும் மக்களுக்கு உடனடியாக வெறுப்பூட்டும், அப்பட்டமான சந்தர்ப்பவாதம் மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதத்தைப் போன்று அபாயகரமானதும் ஊறு விளைவிக்கக் கூடியதும் அல்ல. மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் தனது சந்தர்ப்பவாத நடைமுறைக்கு உரிய தருணம் வரவில்லை என்றும் இன்ன பிறவாகும் நிரூபிக்க அடுக்கடுக்காக மார்க்சிய சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறது" என்றார்.