Language Selection

ஒரு கடைந்தெடுத்த வலதுசாரிய பாசிச புலிகளுக்கும் சிங்கள பேரினவாத போர்வெறியர்களுக்கும் இந்திய பிராந்திய மேலாதிக்க வல்லரசுக்கும் இரத்தப்பலியாகிக் கொண்டிருக்கும் தமிழ்மக்கள் மேலான எல்லா அடக்குமுறைகளும் கொன்றழிப்புகளும் இன்றல்ல நேற்றல்ல ஆரம்பம்.

இதுவே நாங்கள் வாழ்ந்த வாழும் சூழல்.

 

இந்திய இராணுவ நடவடிக்கையின் போது :

- சிதறிக்கிடந்த அப்பாவி பொதுமக்களின் பிணங்களை தெருநாய்கள் குதறுவதிலிருந்து மீட்டெடுத்த வேளை.

 

- புலிகளுக்கு எதிரான (தமிழ்மக்களுக்கு) கண்மண் தெரியாத எறிகணைத்தாக்குதலில் குற்றுயிரும் குலையுயிருமாய் சதைக் குன்றுகளாய் கை கால் அவயவங்கள் சிதைக்கப்பட்டு ஊனப்பட்டு எழுந்து நகரமுடியாதபடி இரத்தக் காயங்களுடன் புழுதியில் அழுந்திக் கிடந்த குழந்தைகளை பெண்களை முதியவர்களை இளைஞர்களை மழையாய் பொழிந்த துப்பாக்கிச் சன்னங்களுக்கிடையில் அப்புறப்படுத்திய பின்னாலும் தகுந்த மருத்துவ வசதியின்றி அவர்களை காப்பாற்ற முடியாத கையறு நிலையிலிருந்த வேளை.

 

- மீட்கப்பட்டவர்கள் உயிர் ஊசலாடியபடி கண்முன்னே அவர்கள் கிடந்து மரணித்துப் போனவேளை அவர்களின் கைகளை வெறுமனே பற்றிக் கொண்டு உடனிருப்பதைப் தவிர காப்பாற்றும் மார்க்கங்கள் யாவும் அடைபட்டிருந்த வேளை.

 

-திலீபன் என்ற உண்ணாநிலைப் போராளி இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கெதிராய் உயிர்ப்பலியான வேளை.

 

-ஒரு அந்திய இராணுவமாய் இந்திய “அமைதிப்படை” வந்து அழிக்கும் படையாய் தமிழ் மக்கள் மேல் ஏவி விடப்பட்ட போது, வீடுவீடாய் உருவாக்கிய இழவுகளும் செய்த அட்டூழியங்களும் பாலியல் கொடுமைகளும் கட்டுக்கடங்காது போன வேளை.

 

கருணா பிளவின் போது கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கொத்துக் கொத்தாய் தங்களிடமிருந்து பிரிந்து சென்ற முன்னைநாள் போராளிகளை கொடுமையிலும் கொடுமையாய் கொன்றழித்த புலிகள் பாசிட்டுக்களாய் கோரத் தாண்டவமாடிய வேளை.

 

முத்துக்குமரன்களுக்கு முன்னமேயே ஈழத்துத் தெருக்களில் மாற்று இயக்கப் போராளிகள் உயிரோடு தீயில் வெந்து சாம்பலாகும் கோரத்தை நடாத்தி யாருக்காக போராடுவதாக கூறினார்களோ அந்த மக்களின் மனங்களில் அச்சத்தை உறைய வைக்கும் நோக்குடன் தம்மை எதிர்ப்பவர்களுக்கு தண்டனை எவ்வாறமையும் என்று கற்பிப்பதற்காக சொந்தமக்களையே எச்சரிப்பதற்காகவே இவ்வாறு தெருவோரங்களில் நாம் இவர்களை தீயிலிட்டு அழிக்கின்றோம் என்ற நியாய குதர்க்கம் கூறிக்கொண்டே நரபலி வேட்டையாடிய கொடிய பாசிட்டுக்கள் தெருவெங்கும் கோலோச்சிய வேளை.

 

யாழ்குடாநாட்டிலிருந்து முஸ்லீம் மக்கள் இரவோடிரவாக வெளியேற்றப்பட்டு போக்கிடம் இன்றி உடமைகள் எதுவுமின்றி துரத்தியடிக்கப்பட்ட அவலம் நடந்தேறிய வேளை.

 

உள்ளியக்கத்தினுள் எழுந்த முரண்பாடுகளால் ஜரோப்பிய நாடுகள் வரை தேடியழிக்கப்பட்ட கொலைகள் பல போராளிகளின் உயிர்களை காவு கொண்ட வேளை.

 

சிங்கள கிராமங்களில் பொதுமக்கள் மேல் குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் என்ற எதுவித பாகுபாடுமின்றி வெட்டியும் குத்தியும் கொலைக்கரங்களை ஏவிவிட்டு போராட்டத்தின் மீதான நியாயப்பாட்டை சிங்களப்பாட்டாளி மக்கள் புரியாத வண்ணம் களங்கப்படுத்திய வேளை.

 

முஸ்லீம்களின் வணக்கத்தலங்களில் (புத்தளம், காத்தான்குடி பள்ளிவாசல்கள்) தொழுகைநேரத்தில் புகுந்து “விடுதலைப் போராளிகள்” இரத்த ஆற்றில் அவர்களை மிதக்கவிட்டு உயிர்ப்பலி கொண்ட வேளை.

 

இந்திய கைக்கூலிகளாய் அநுராதபுரப்படுகொலையை நிகழ்த்தி “விடுதலைப் போராளிகள்” கூலிப்படைகளாய் விலைபோன வேளை.

 

சிங்கள கடற்படை நெடுந்தீவு குமுதினிப்படகுப் பயணிகளை இடைமறித்து வெட்டிச்சாய்த்து இனவெறிக் கொடுங்கரங்களால் கொன்றழித்த வேளை.

 

தமிழ்மக்கள் மேல் இனவெறிப்போர் தொடுத்து இராணுவ அடக்குமுறைகளை நாளும் பொழுதுமாய் பேரினவாதிகள் ஏவிவிட்டு கொக்கரித்து நின்று இன்றுவரைக்கும் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை தனது காலில் போட்டு மிதித்து இனத்துவம்சம் செய்யும் பேரினவாதிகள் ” மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிக்கும் ” இராணுவ நடவடிக்கையாய் தமது இனத்துவம்சப் போரை பிரச்சாரம் செய்யும் “தார்மீகத்தை” அவர்கள் பக்கம் தள்ளிவிட்ட தவறுகளை தமது பாசிசக்கரங்களால் தாமே மக்கள் மேல் குந்தியிருந்து உருவாக்கிய வேளை.

 

தமிழ் சிங்கள பாட்டாளி வர்க்க கூட்டை தேசிய இனப்பிரச்சனையில் அப்புறப்படுத்தும் வகையில், சிங்களப்பேரினவாதம் ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரலுக்கேற்ப நடாத்தும் இனவெறிக்கூச்சலுக்கு உரம் சேர்க்கும் ஒரு இனக்கலவரம் ஒன்றை மீண்டும் உருவாக்கி பெரும்பான்மை மக்கள் பகுதிகளில் பெருமளவிலான பொதுமக்களின் உயிரிழப்பை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ்மக்கள் மேலான கலவரம் ஒன்றை ஏவிவிட்டு அவர்களின் உயிரிழப்பின் மேல் இறந்த உடலங்களின் மேல் மூன்றாம் தரமான கேவலமான பிரச்சாரமேடை ஒன்றை அமைக்க போராளிகளை குண்டுதாரிகளாள வெடித்துச் சிதறச் செய்த வேளை.

 

ஒப்பபாரும் மிக்காருமின்றிய புலித்தலைமை இடதுசாரிகளும் முற்போக்கான அணிகளும் தலையெடுக்காத வண்ணம் ஏகாதிபத்திய கள்ளக்கூட்டுடன் இனவெறி ஆட்சியாளர்களுடன் கைகோர்த்து சமாதான காலத்தில் அழித்தொழித்த வேளை.

 

போராட்டம் ஆரம்பமான நாளிலிருந்தே ஊடகங்களை மிரட்டிப் பணிய வைத்து தங்களின் தாழ்பணிந்த ஊதுகுழலாய் மாற்றிய புலிகளிடமிருந்தே பேரினவாதம் ஊடகங்களின் குரல்வளையை நெரிப்பது எவ்வாறு என பாடம் கற்றுக்கொண்டது. புலிகளால் உயிருக்கு அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் மவுனிகளாக்கப்பட்ட வேளை. ( யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்)

 

யாழ் பல்கலைக்கழகத்தில் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காய் போராடிய மாணவப் போராளிகளுக்கு மரணதண்டனை பரிசளிக்கப்பட்ட வேளை.

 

பல்கலைக்கழக மாணவர்கள் (விஜிதரன், செல்வநிதி தியாகராஜா, தர்மசீலன் ) கடத்தப்பட்டு காணாமல் போன வேளை.

 

மனித உடற்கூற்று விரிவுரையாளர் திருமதி ரஜனி திரணகமவை பல்கலைக்கழக வாசலிலேயே துப்பாக்கிதாரிகள் கொன்றழித்த வேளை.

 

அன்றைய ஈழ மக்கள் புரட்சிகர முன்னணிப் (EPRLF)போராளிகள் சிறைப்பிடிக்கப்பட்டு சிறைக்குள்ளேயே (கந்தன் கருணை) கைக்குண்டுகளால் கூண்டோடு கொலைசெய்யப்பட்ட வேளை.

 

யாழ் பல்கலைக்கழக போராட்டத்தில் முன்னணி போராளியாய் இருந்த காரணத்துக்காகவும் மாற்று இயக்க உறுப்பினர் என்ற காரணத்திற்காகவும் இராயகரன் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு உயிரைப்பணயம் வைத்து கூரையைப் பிரித்து குதித்து தப்பி வந்த பின் மரணத்தின் நிழல்களால் பின்தொடரப்பட்டு சொந்தப் பிரதேசம் பாதுகாப்பற்றதாக மாற பேரினவாத இடர்கள் இருந்தும் கொழும்பு நகரம் ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக உணரப்பட்ட வேளை.

 

அதே பாதுகாப்பின்மை மற்றும் புலிகளால் கண்காணிக்கப்படும் காரணங்களால் தங்கள் சொந்தப்பிரதேசங்களை விட்டு தலைநகர் கொழும்பிற்கு வந்ததன் பின்னாலேயே மூச்சுவிடும் நிலைமைகள் சற்றேனும் கிடைத்ததென ” சரிநிகர்” பத்திரிகை வெளியிட்ட குழுவினர் தமக்கிருந்த மட்டுப்படுத்தப்பட்ட இயல்பு வாழ்வுக்குள்ளும் சிங்கத்தின் குகைக்குள் சிறுமுயலாய் இனவாத அரசின் குகைக்குள்ளேயே பேரினவாத அரசுக்கு எதிரான குரலாய் தம்மை வெளீப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார்கள். புலிகளால் மறுக்கப்பட்ட அவர்களது நடமாட்டங்கள் கொழும்புத் தெருக்களில் “உரிமையாய்” அவர்கள் அநுபவித்தபோது விடுதலைப் பிரதேசங்கள் சிறைவாழ்வாய் படிப்படியாய் மக்களுக்கு அந்நியமாகிக் கொண்டிருந்த வேளை.

 

வெறும் சுத்த இராணுவக் கண்ணோட்டத்தினையும் குவியத் தத்துவத்தினையும் வழிமுறையாய் கொண்டு ஆயுதங்களை வணங்கிய துப்பாக்கி மனிதர்களிடம் எமது போராட்டத்தின் கடிவாளம் ஏகாதிபத்தியங்களால் பறித்துக் கொடுக்கப்பட்டதன் பின்னால் தமிழ் தேசியப் போராட்டம் இனவெறிப்பாதைக்கு இழுத்துச்செல்லப்பட்ட தருணங்களில் எல்லாம் இன்றைய முடிபுகளை அன்றே முன்னெதிர்வு கூறிய விமர்சனங்கள் ஓற்றை வரிகளில் இனத் துரோகிகள் என்று ஒதுக்கி அழிக்கப்பட்ட வேளைகளில்

 

மூதூரிலிருந்து முஸ்லீம் மக்கள் விரட்டப்பட்டு துரத்தியடிக்கப்பட்ட வேளைகளில்

 

இன்றிந்த வேளை நடக்கும் மக்களை மாய்விக்கும் போரின் ஆரம்பம் கிழக்கிலங்கையில் தான் தொடங்கியது. பிரதேச இழப்புகள், மக்கள் இடம் பெயர்ந்த மனித அவலங்கள் அன்றே ஆரம்பித்து விட்டது. அன்று அந்த மக்களின் அவலங்கள் புலம் பெயர் தழிழர்களால் புறக்கணிக்கப்பட்ட வேiளை

 

இந்திய மண்ணிலேயே கொன்றழிக்கப்பட்ட பத்மநாபா குழுவினரின் குருதியின் மேல் தமிழ்மக்கள் போராட்டத்தை தடம் புரளச் செய்ய சத்தியப்பிரமாணம் ஏற்றுக்கொண்ட புலிகள் தலைதெறித்து ஆடிய வேளைகளில்

 

இந்த இந்த வேளைகளில் எல்லாம் வேதனை, வலி கொள்ளாத இந்திய தமிழின உணர்வாளர்கள் மற்றும் திரையில் நடித்தது போதாதென்று இந்திய பாட்டாளி மக்களின் விடுதலைக்கே வேட்டுவைக்க புறப்பட்டிருக்கும் கட்சித்தலைவர்களாயிருக்கும் நடிகர்களின் கூக்குரல்கள் என்றுமே புலிகளை எதிர்நிறுத்தி எழாது என்பது தெரிந்ததே.

 

இன்று வன்னிமக்களை கேடயமாக்கி அந்த மக்களின் இறப்புகளை பிரச்சாரமாக்கி தப்பிப்பிழைக்க முனையும் புலியின் மூன்றாம்தர வலதுசாரி பாசிச அரசியலை இவர்கள் யாருமே அம்பலப்படுத்தப் போவதில்லை. அது இந்த இன உணர்வாளர்கள் குணாம்சம். அவர்களும் தங்கள் அரசியலை அவ்வாறே அறுவடை செய்து கொள்வார்கள்.

 

தேசம் இனம் கடந்த உணர்வுகளின் மேலால் நிறுவப்படும் சர்வதேச பாட்டாளி வர்க்க ஓருமைப்பாடு முத்துக்குமரனின் தற்கொலையோடு இனவுணர்வுடன் இழுபட்டு சென்று தமிழ் சிங்களப் பாட்டாளி வர்க்கத்தின் கால்களை வாரிவிட முனையக் கூடாது.

 

இலங்கை பேரினவாத அரசுக்கும் இந்திய வல்லாதிக்க அரசுக்கும் தமிழ்மக்கள் துரும்பும் தூசும் தான். புலிகளுக்கும் அவர்கள் சொந்தமக்கள் அவ்வாறே தான் என்பதுவும் அவர்கள் நடாத்துவது தேசிய விடுதலைப் போராட்டமல்ல என்பதுவும் ஏகாதிபத்தியங்களினால் அவர்களது கள்ள உறவில் பிறந்த குழந்தை இன்று தோழர் மருதையன் மிகச் சரியாகவே குறிப்பிட்டபடி இந்திய டாட்டா அம்பானிகளுக்கு ஒதுங்கி வழிவிட வேண்டியிருப்பதால் கைவிடப்படுகிறார்கள் என்பதுவும் தான் யதார்த்தம். இவர்கள் தேசிய போராட்டசக்திகள் இல்லையென புரட்சிகர அணிகளுக்கு இனம் காட்டப்படுவதை விடுத்து அவர்களோடு வளைந்து செல்வது அணிகளை தவறாக வழிகாட்டும் என்ற விமர்சனத்தை நாம் முன்வைக்கின்றோம்.

 

எதிர்ப்புக் கோசங்களை தெளிவாக இந்திய இலங்கை அரசுகளுக்கெதிராகவும் எதிர்த்தரப்பில் புலிகளை வர்க்க அடிப்படையில் இனம் காட்டியும் மக்களின் இன்றைய அவலங்களுக்கு அவர்களும் பொறுப்பாளிகளே என்பதை தெளிவாக இனம் காட்டியும் உங்கள் போராட்டங்கள் அமையட்டும்.

 

சிறி

01.02.09


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ