Language Selection

கடவுள்கடவுள் என்றெதற்கும்
கதறுகின்ற மனிதர்காள்!
கடவுள்என்ற நாமதேயம்
கழறிடாத நாளிலும்
உடைமையாவும் பொதுமையாக
உலகுநன்று வாழ்ந்ததாம்;
"கடையர்ரு"செல்வர்" என்றதொல்லை
கடவுள்பேர் இழைத்ததே!

உடைசுமந்த கழுதைகொண்
டுழைத்ததோர் நிலைமையும்
உடைமைமுற்றும் படையைஏவி
அடையும்மன்னர் நிலைமையும்
கடவுளாணை யாயின்,அந்த
உடைவெளுக்கும் தோழரைக்
கடவுள்தான்முன் னேற்றுமோ?தன்
கழுதைதான் முன்னேற்றுமோ?

ஊரிலேனும் நாட்டிலேனும்
உலகிலேனும் எண்ணினால்
நீர்நிறைந்த கடலையொக்கும்
நேர்உழைப் பவர்தொகை!
நீர்மிதந்த ஓடமொக்கும்
நிறைமுதல்கொள் வோர்தொகை!
நேரிற்சூறை மோதுமாயின்
தோணிஓட்டம் மேவுமோ?

தொழிலறிந்த ஏழைமக்கள்
தொழில்புரிந்து செல்வர்பால்
அழிவிலாமு தல்கொடுக்க
அம்முதற் பணத்தினால்
பழிமிகுந்த அரசமைத்துப்
படைகள்தம்மை ஏவியே
தொழில்புரிந்த ஏழைமக்கள்
சோற்றிலே மண்போடுவார்!

நடவுசெய்த தோழர்கூலி
நாலணாவை ஏற்பதும்
உடலுழைப்பி லாதசெல்வர்
உலகைஆண் டுலாவலும்
கடவுளாணை என்றுரைத்த
கயவர்கூட்ட மீதிலே
கடவுளென்ற கட்டறுத்துத்
தொழிலுளாரை ஏவுவோம்.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt145