2 ம் உலகப்போரில் லட்சக்கணக்கான இந்திய,அரேபிய,ஆப்பிரிக்க வீரர்களின் உதவியின்றி, பிரிட்டனும், பிரான்சும் போரில் வென்றிருக்க முடியாது. ஆனால் அவர்கள் இராணுவத்திற்குள் இனவாத பாகுபாட்டுக்கு உள்ளாகினர். வெற்றி கிடைத்தவுடன் வெகு விரைவில் புறக்கணிக்கப்பட்டனர். வெற்றிவிழா அணிவகுப்பில் "கறுப்பு வீரர்கள்" தவிர்க்கப்பட்டனர். ஊடக ஒளிப்படக்கருவிகள் வெள்ளையின வீரர்களை மட்டுமே படம் பிடித்தன. போர் முடிந்தவுடன், காலனிய நாடுகளின் வீரர்கள் அவரவர் தாயகங்களுக்கு திருப்பியனுப்பப்பட்டனர். முன்னாள் படையினருக்கான ஓய்வூதியப்பணம் கொடுக்கப்படவில்லை, அல்லது வெள்ளை வீரருக்கு கொடுப்பதின் 70 வீதம் மட்டுமே வழங்கப்பட்டது.
2 ம் உலகயுத்தத்தில், பிரிட்டிஷ் கொடியின் கீழ் போரிட்ட 11 மில்லியன் படைவீரர்களில், அரைவாசிப்பேர் இந்திய உபகண்டத்தை சேர்ந்த சிப்பாய்கள். குறிப்பாக வட ஆப்பிரிக்காவில் இவர்களது உதவியினால் தான் நாஸி- ஜெர்மன் படைகளை விரட்ட முடிந்தது. அல்லாவிட்டால் அன்று ஜெர்மனி எண்ணைவள வளைகுடா நாடுகளை கைப்பற்றியிருப்பதுடன், யுத்தம் வேறுவிதமாக முடிந்திருக்கும். ஆரம்பத்தில் இந்தியப்படையினரை பயன்படுத்த, அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் விரும்பவில்லை. என்ன இருந்தாலும், "இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் என்பதால் வெறுப்பதாக" கூறியவர் ஆயிற்றே, எப்படி விரும்புவார். பிரான்சாவது தனது படையில் பணிபுரிந்த அரேபியர்களுக்கும், ஆப்பிரிக்கர்களுக்கும் இன்றுவரை ஓய்வூதியமாவது (70 வீதமாகிலும்) வழங்கி வருகின்றது. பிரிட்டன் பெரும்பாலும் எதுவுமே கொடுக்கவில்லை. காயமடைந்தவர்களுக்கு 10 பவுன் (அதுவும் ஒரு முறை) மாத்திரம் கொடுத்தது !
படைநகர்த்தல்களில் எடுக்கப்பட்ட உயர்மட்ட முடிவுகள் பல இனவாத அடிப்படையில் இருந்தன. பிரித்தானியாவை பாதுகாக்க வந்த அமெரிக்க படைகளில் கறுப்பு வீரர்களை அனுப்ப வேண்டாம் என்று, பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்டுக்கொண்டது. இத்தாலியின் பல பகுதிகளை முசோலினியின் பாசிச படையினரிடமிருந்து மீட்டெடுத்த, மொரோக்கோ வீரர்களை கொண்டிருந்த பிரெஞ்சு படைப்பிரிவு, ரோமை நோக்கி முன்னேறாதவாறு தடுக்கப்பட்டது. பின்னர் வெள்ளையின வீரர்களை கொண்ட பிரெஞ்சுபடை மட்டுமே ரோம் நகரவீதிகளில் வெற்றி உலா வந்தது. காரணம், கத்தோலிக்க தலைநகரான ரோமை முஸ்லிம்கள் விடுவித்ததாக சரித்திரத்தில் எழுதப்பட்டுவிடக் கூடாது என்பதாம்.
2 ம் உலகயுத்தத்தில் போரிட்ட பிரெஞ்சு இராணுவத்தில், 23 வெவ்வேறு தேசியங்களை சேர்ந்த வீரர்கள் அனைவரும் அப்போதிருந்த பிரெஞ்சு காலனிகளை சேர்ந்தவர்கள். போர்க்களத்தில் அவர்கள் தான், பெரும்பாலும் பீரங்கிக்கு இரையாகினர். பிரெஞ்சு இராணுவத்தில் சேர்ந்து, ஐரோப்பாவில் நடந்த யுத்தத்திற்கு போக அவர்களுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. பலருக்கு வறுமை காரணமாக இருந்தது, அல்லது பிரெஞ்சு ஆட்சியாளர்களின் வற்புறுத்தல் காரணமாக இருந்தது. அதேநேரம் கணிசமான தொகையினர், குறிப்பாக அல்ஜீரியர்கள், பிரான்சுக்கு உதவி செய்வதன் மூலம் தமது தாயகத்தின் விடுதலையும் பெற்றுக் கொள்ளலாம் என்று நம்பினர். ஆனால் போர் முடிந்த உடனேயே அவர்களின் நம்பிக்கையில் மண் விழுந்தது. 1945 ம் ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டத்தின் போது, அல்ஜியர்ஸ் நகரில் அல்ஜீரிய தேசியக்கொடிகளை பறக்கவிட்டதன் காரணமாக, ஆயிரக்கணக்கான அல்ஜீரியர்களை பிரெஞ்சு இராணுவம் கொன்று குவித்தது. அதன் பின்னர் தொடர்ந்த நீண்ட ஆயுதப்போராட்டம் மூலமே அல்ஜீரியர்கள் தமது விடுதலையை பெற்றுக்கொண்டனர்.
போருக்குப் பின்னரான காலகட்டத்தில் வந்த திரைப்படங்கள் யாவும் வெள்ளையின வீரர்களையே பெரும்பாலும் காட்டுகின்றன. அண்மையில் கூட அமெரிக்க தயாரிப்பாளர் ஈஸ்ட்வூட் "Letters from Iwo Jima" என்ற தலைப்பில், ஜப்பான் தீவொன்றை அமெரிக்கவீரர்கள் கைப்பற்றிய சம்பவத்தை வைத்து எடுத்த படத்தில், கறுப்பு முகங்களை காணாததை பற்றி கண்டனக்குரல்கள் எழுந்தன. ஏனெனில் அந்த தீவை கைப்பற்றிய அமெரிக்க கடற்படைபிரிவில் 90 வீதமானவர்கள் கறுப்பின வீரர்கள்.
2006 ம் ஆண்டு, பிரான்சில் வெளியிட்ட "Indigénes" என்ற திரைப்படம், அந்நாட்டில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. முதன்முதலாக ஒரு திரைப்படம், 2 ம் உலகயுத்தத்தில் பங்குபற்றிய அல்ஜீரிய, மொரோக்கோ வீரர்களைப் பற்றி எடுக்கப்பட்டுள்ளது. அதுவரையில் அவர்களின் பங்களிப்பை கண்டுகொள்ளாது விட்ட பிரெஞ்சு அரசாங்கம், புத்திஜீவிகள், ஊடகங்கள் என்பன அதற்கு பின்னர் உண்மையை பகிரங்கமாக ஒத்துக்கொள்ள நேர்ந்தது. இந்த திரைப்படம் வந்ததன் விளைவாக, முன்னாள் காலனிய வீரர்களின் ஓய்வூதியம் பிரெஞ்சு(வெள்ளையின) வீரர்களின் அளவு சமமாக்கப்பட்டது.