"சிக்கலான ஒன்றின் வளர்ச்சிப் போக்கில் பல முரண்பாடுகளைக் காணலாம். இவற்றில் ஒன்று கட்டாயம் முதன்மை முரண்பாடாகவே உள்ளது. இதன் வாழ்வும் வளர்ச்சியும் இதர முரண்பாடுகளின் வாழ்வையும்; வளர்ச்சியையும் தீர்மானிக்கின்றது அல்லது அவைகளின் மீது செல்வாக்குச் செலுத்துகிற முதன்மை முரண்பாடாகவே உள்ளது." முரண்பாடு பற்றி மாவோவின் கூற்று இது.
இதை மறுப்பது மார்க்சியமல்ல. ஆம், இது சர்வதேசியத்துக்கு எதிரானது. மீனவர் படுகொலையை முன்னிறுத்தி, மற்றைய முரண்பாடுகள் வாழமுற்படுவதையும், தீர்வு காண முற்படுவதையும் மூடிமறைப்பது சந்தர்ப்பவாதமாகும்.
இந்திய மீனவர்கள் படுகொலைக்கு எதிராக போராடுவதை இலங்கை மீனவர்களோ, இலங்கை மார்க்சியவாதிகளோ என்றும் எதிர்த்ததில்லை. அதை ஆதரிக்கின்றனர், தம்மாலான எல்லையில், அதற்காக குரல் கொடுக்கின்றனர், போராடுகின்றனர். மீனவர் படுகொலையில் இலங்கை மீனவர்கள் தான் முதலில் கொல்லப்பட்டனர். இப்படியிருக்க இதை மட்டும் நாம் எப்படி வேறுபடுத்தி அணுகியிருக்கமுடியும்! சொல்லுங்கள். ம.க.இ.க இலங்கை மார்க்சியவாதிகளைக் பார்த்துக் கூறுகின்றது "நடந்த அநீதி, கொடூரம் குறித்து பாராமுகமாக இருப்பதினால் வந்து விடும் என்று நினைத்தால் அது பேதமை, கண்டித்தக்கத்து" என்கின்றனர். இப்படி கூறி இதை திசைதிருப்புவது தான், இங்கு கண்டிக்கத்தக்கது.
இலங்கை மார்க்சியவாதிகள் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை ஆதரிப்பதாக காட்டுகின்ற குறுகிய இட்டுக்கட்டிய தர்க்கத்தைக் கொண்டு, சந்தர்ப்பவாத அரசியல் ம.க.இ.க நடத்த முனைகின்றது. வினவு பின்னோட்டங்களில் இலங்கை மார்க்சியவாதிகள், தாங்கள் இந்தப் படுகொலைகளைக் கண்டிப்பதாக அடிக்கடி கூறிக்கொண்டு தான், அவர்களுக்கு விளக்க முற்படுகின்றனர். இப்படி சர்வதேசிய அரசியலோ, கேவலமாக்கப்பட்டு இருக்கின்றது. ஏதோ ம.க.இ.க மட்டும் தான் இந்தப் படுகொலைகளை எதிர்த்துப் போராடுவதாகவும், இலங்கை மார்க்சியவாதிகள் கொலையை ஆதரிப்பதாகவும் இட்டுக்கட்ட முனைகின்றனர். இது இலங்கை மார்க்சியவாதிகள் மேலான, பேதமையுடன் கூடிய அவதூறாகும்.