பெரும் போர் முடிந்து அழிவுகளால் அலங்கரிக்கப் பட்டிருந்த முள்ளிவாய்க்கால் இன்று மெல்ல மெல்ல நிசப்தத்திலிருந்து மீளத்தொடங்கியிருக்கிறது. பரந்தன் சந்தியிலிருந்து முல்லைத்தீவு செல்லும் ஏ35 வீதி புழுதியால் நிறைந்து கிடக்கிறது. இடைவிடாமல் செல்லும் கனரக வாகனங்கள் ஒருபுறம், தென்பகுதியிலிருந்து முள்ளி வாய்க்காலைப் பார்க்கச் செல்வோர் ஒருபுறம், புதுக்குடியிருப்புச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சிக் கூடத்தைப் பார்க்கச் செல்வோரென ஏ35 வீதி தினமும் பரபரப்பாக இருக்கிறது.
ஆளரவமற்று உடைந்து சிதைந்து கிடக்கும் வீடுகள், எரித்தும் வெட்டப்பட்டும் தலையற்றுக் கிடக்கும்பனை மரங்கள், இடிபாடுகளைச் சுமந்து நிற்கும் சந்தை மற்றும் பாடசாலைக் கட்டிடங்கள், எரித்தும் நொறுக்கியும் குவிக்கப்பட்டு குவியல்களாய்க் கிடக்கும் பல்வேறு வகைப்பட்ட வாகனங்கள், தகர்ந்தும் எரிந்தும் தூர்ந்துபோய்க்கிடக்கும் பங்கர்கள், பத்து மீற்றர் இடைவெளியில் நிற்கும் படையினர் என மரணங்களால் மலிந்த நிலம் மனிதப்பேரவலத்தின் நினைவுகளை தற்பொழுதும் நினைவூட்டியவாறு காட்சியளிக்கிறது.