அம்மா பசிக்குது பசிக்குது என்ற குழந்தைகளின், அழுகுரலை இனிமேலும் தாங்கமுடியாது. அது இதுவெண்டு சொல்லி இனியும் சமாளிக்கவும் முடியாது, கடைசியாக மிஞ்சியிருந்த இந்த தோட்டையாவது விற்று சமைக்க வேண்டும்.
குழந்தைகள் இரண்டையும் பக்கத்து வீட்டு சரஸ்வதியாச்சியோடு விட்டிட்டு கிளிநொச்சி நகருக்குள் வந்து சேர்ந்த போது எல்லாமே அவளுக்கு புதிதாகவும் சூனியமாகவும் இருந்தது.
புதிதாக புனரமைக்கப்பட்ட நெடுவீதிகளும் ஆங்காங்கே எழுந்து நிற்கும் புத்தம்புதிய கட்டிடங்களும் புதிபுதிதாய் முளைத்திருக்கும் கடைகளும் அதன் அலங்காரங்களும் பீறேமாவை ஒரு கணம் திக்குமுக்காடச் செய்தது.