முன்னைய மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த மஹிந்தாநந்த அளுத்கமகே, 2011ம் ஆண்டு டிசம்பர் 10ம் திகதியன்று காணாமல் போன இந்த இருவரும் கொலை செய்யப்பட்டதாக கடந்த 2ஆம் திகதியன்று சிரச தொலைக்காட்டசியில் நடைபெற்ற சடன விவாத நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். இந்த விவாத நிகழ்வில் முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலளர் புபுது ஜெயக்கொட அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் போராட்ட இயக்கத்தின் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் இருவரும் யாழ்ப்பாணத்தில் வைத்து அரச படையினரால் 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் திகதி கடத்திச் செல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் சர்வதேச மனித உரிமைகள் தினமான அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இறுதி யுத்தத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி, சரணடைந்தவர்களின் குடும்பத்தினருடன் போராட்டம் ஒன்றினை ஒழுங்கமைத்து போராட்டம் நிகழ்ந்த இடமான யாழ் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த போதே அரச படையினரால் கடத்திச் செல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் காணாமல் ஆக்கப்பட்டு 4 வருடங்கள் கழிந்து விட்டன. இன்னமும் ஆக்கபூர்வமான எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. பொலிசார் தமக்கு போதிய தடையங்கள் கிடைக்கவில்லை எனவும் பல தடைகள் காரணமாக விசாரணைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் தடைகள் இருக்கின்றன எனவும் தெரிவித்திருந்தனர்.
மகிந்த ஆட்சியில் அமைச்சரவை பேச்சாளராக இருந்த கெல ரம்புக்வெல; லலித் - குகன் இருவரும் பொலிஸ் விசாரணையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள், அவர்கள் கடத்தப்படவில்லை என பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருந்தார். இது குறித்து முன்னிலை சோசலிச கட்சியினர் யாழ் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தனர். யாழ் நீதிமன்ற நீதிபதி, கெல ரம்புக்வெல அவர்களை நீதிமன்றில் சமூகமளித்து விள்க்கம் அளிக்கும் படி உத்தரவிட்டிருந்தமை தெரிந்ததே. கெல ரம்புக்வெல இதனை தமது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தவிர்த்து வந்தார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் கடந்த வருடம்நவம்பர் 13ம் திகதி மீள வழக்கு விசாரணைக்கு வந்த போது, கெல ரம்புகடவெல அவர்கள் தொடர்ந்து நீதிமன்றத்தை தவிர்த்து வந்தமைக்காக அவர் மீது பிடிவிறாந்து பிறப்பித்து கைது செய்யும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏறத்தாள ஒன்றரை மாதங்களாகியும் பொலிசார் எந்த நடவடிக்கையிலும் இறங்காது நீதிமன்ற உத்தரவினை அவமதிப்பது தொடர்கின்றது.
இந்நிலையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே, லலித்-குகன் இருவரும் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் என தெரிவித்ததுள்ளமை பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் வைத்து காணாமல் போகச் செய்யப்பட்ட மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளர்களான லலித்குமார் வீர்ராஜ் மற்றும் குகன் முருகானந்தன்; ஆகியோர் தொடர்பில் அரசாங்கம் துரித விசாரணையை முன்னெடுத்து, மஹிந்தானந்தவின் கூற்று தொடர்பில் பொலிஸ் தனியான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னிலை சோசலிஸக்கட்சி கோரியுள்ளது.