தமிழ் மக்களிற்கான கருமம் ஆற்றுவதாக காலம் காலமாக வீரவசனம் பேசிய கூட்டமைப்பு, மக்கள் பேரழிவின் போது ராஜதந்திர நகர்வுக்கு அவலம் களம் திறக்கப்போவதாய் வாய் மூடிக்கிடந்தவர்கள், புலிகளின் ஏகப்பிரதிநிதிகளாக மக்களின் அரச எதிர்ப்புணர்வை, பாராளுமன்ற இருப்புக்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்கள்.
தமது சந்தர்ப்பவாத திகுதாளங்களை தமிழ் மக்கள் உணரத்தொடங்குகிறார்கள் என்றதும், நம்புங்கள் தமிழீழத்தை நந்திக்கடலில் கரைத்து விட்டு, இன்று நம்புங்கள் கூட்டமைப்பு காரியமாற்றுகிறது என கொழும்பு வாசல்தலத்தில் இருந்து--- "தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது நம்பிக்கையை பேணுமாறு எமது மக்களை கேட்டுக்கொள்ளுகிறோம்" என அறிக்கை விடுவது அடுத்த தேர்தலிற்கான வாக்குப்பிச்சை கேட்கும் தந்திரம் என்பதை மக்கள் இன்னமும் புரிந்து கொள்ள முடியாதவர்களென நம்புவதில் தான் கூட்டமைப்பின் இருப்பே தங்கியுள்ளது.
போராட்டத்தில் பேரிழப்பினூடாக அனுபவப்பட்ட இளைய தலைமுறை, அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு மக்கள் எழுச்சியாக பயணிக்கப்போவதை பேரினவாத கட்சிகளும் குறுந்தேசியவாத கட்சிளும் சரி தடுத்து நிறுத்த முடியாததென்பதே இலங்கை மக்களின் அடுத்த வரலாறாய் இருக்கப்போகிறது.
-முரளி 02/03/2012