Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த 20 வருடங்களாக உழைக்கும் மக்களின் எதிரிகளுக்கு எதிரான கருத்துத்தளத்தில் போராடி வந்தவர்கள் இன்று நடைமுறையில் செயற்படத் தொடங்கியுள்ளார்கள். புலிகள் இருந்த போது பல்வேறு வகையில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் எல்லாம் காட்டிக் கொடுப்புக்கள், குழிபறிப்புகளால் சிதைந்தது தான் வரலாறு. இன்று நடைமுறைரீதியாக செயற்படும் போது வர்க்க எதிரிகள் எதிர்ப்பிரச்சாரங்களை அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாது வெறும் அவதூறுகளை அள்ளிவீசுகின்றார்கள்.

இவர்கள் மக்களிடம் கருத்துக்கள் சென்றடைவதை தடுக்கின்ற வேளையில், மனிதர்களின் உயிருடனும் விளையாடுகின்றார்கள். ஒடுக்குமுறைக்கு எதிராக இலங்கையில் இருந்து போராடுபவர்களுக்கு உயிராபத்து ஏற்படுத்துகின்றார்கள்.

அவதூறுகளும், வெறும் சோடிப்புக்களும், ஒடுக்குமுறையும் (இலங்கையில்) மேற்கொள்கின்றார்கள் என்றால் நாம் சரியான பாதையில் செல்கின்றோம் என்றுதான் பொருள். அரசியல் பாதையை எதிர்க்கின்ற மேட்டுக்குடி தமிழ் தேசியவாதிகளுக்கும், குறுந்தேசியவாதிகளுக்கும், தனிநபர்களுக்குமான இருப்பானது, நாம் செல்லும் பாதையினால் அச்சுறுத்தலாகி இருக்கின்றதை மறுபுறத்தே கருதிக் கொள்ளவும் முடிகின்றது.

நிதி பற்றி:

எமக்கு அன்னிய சக்திகளிடம் இருந்து நிதி கிடைப்பதாகவும், அன்னிய கைக்கூலிகள் என்றும் மேட்டுக்குடி தமிழ்த்தேசியவாதிகளும், குறுந்தேசியவாதிகளும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். நிதி பற்றிக் கூறும் போது அளவுகடந்த கற்பனைகள் தான் மிதமிஞ்சிக் கிடக்கின்றது.

இவர்கள் எழுதுகின்றார்கள்

"அதை விடவும் முக்கியமானது... இந்தப் பாட்டாளி மக்களது கட்சி? புலம்பெயர் நாடுகள் எங்கும் கூட்டங்கள் போடவும், கொடி பிடிக்கவும், கும்பல் சேர்க்கவும், பயணங்கள் செய்யவும், அலுவலகம் அமைக்கவும் குறைவின்றிக் கிடைக்கும் நிதிக்கான நதி மூலங்களும் ஆச்சரியமானதே. "

உண்மையில் இவை எந்த ஆதாரமும் அற்றது என்பது எழுதுபவர்களுக்கே தெரியும். அரசியல்ரீதியாக எதிர்க்கொள்ள முடியாத அவர்களின் கையாலாகாத நிலை தான் இவ்வாறு அவர்களை எழுதத் தூண்டுகின்றது.

இன்றும் தலைவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கையில் கொடுக்கும் பணத்தை ஏப்பம் விடுபவர்கள் புலம்பெயர் புலிகள்தான். இப்பொழுதும் முத்துக்குமாரின் தியாகத்தை வைத்து விலை பேசுபவர்களும் நீங்கள் தான்.

அமைப்புக்கு அலுவலகம் இருப்பதாக வேறு கட்டுக்கதையை கிளப்பி விட்டுள்ளார்கள்.

புலிகளின் குழுக்கள்:

அன்று பிரபாகரன் தலைமையிலான புலிகள் இருந்தபோது ஏகப்பிரதிநிதிகள் என்று கருத்தியல் மேலாதிக்கம் கொண்டிருந்தனர். அவ்வேளையில் பல சுயநலச் சக்திகள் அவர்களை ஆதரிப்பதாக கூறி பாசாங்கு செய்தனர். இந்தச் சக்திகள் அன்னிய நாடுகளின் உளவு நிறுவனங்களுக்கு செய்திகளை கொடுத்தும், ஆலோசனைகள் (உள்வீட்டு விடயங்களை விபரமாக அறிவித்தும்.) வழங்கியும் இருந்தனர். இவர்களின் உதவியுடன் அன்னிய தேசங்களில், மக்களை பலியிட்டால் தமிழீழம் கிடைத்து விடும் என ஆலோசனை கூறி முள்ளிவாய்க்கால் அழிவிற்கு வித்திட்டவர்கள். இவர்கள் இன்று இரு பெரும் பிரிவாகப் பிரிந்துள்ள நிலையில் மக்களையும், தேசபக்தர்களையும் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சக்திகள் இனத்தை அழித்தவர்களின் தயவில் தான் இன்று அரசியல் நடத்துகின்றார்கள். இது வெளிப்படையான உண்மை இதற்கு எந்த சாட்சியங்களும் அவசியமற்றவை.

1. இந்திய உளவு நிறுவனத்தின் தயவில் அரசியல் நடத்துபவர்கள்

2. மேற்கு தேசங்கள், இலங்கை அரசு

இவை இரண்டுக்கும் இடையில் மக்களும் தேசபக்தர்களும் சிக்கித் தவிக்கின்றார்கள்.

இந்திய அரசின் நிகழ்ச்சிநிரலுக்கு கட்டுண்டவர்கள் முள்ளிவாய்க்காலின் பின்னர் சுதந்திரமாக தமது காட்டிக் கொடுப்புக்களை மறைத்துக் கொண்டு செயற்படுகின்றார்கள். இந்தியக் கைக்கூலிகள் பல குழுக்களாக உடைந்த போதிலும் ஒரு பலமான அமைப்பாக இயங்குகின்றார்கள்.

இந்திய ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்களும், இந்திய உளவு நிறுவனத்தின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இந்தப் பிரிவுகள் என்பன நாட்டிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் இயங்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

இந்திய ஆதரவுச் சக்திகளே அனைத்துலகச் செயலகத்தை இயக்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. புலிகளின் பழைய பிரமுகர்கள் விசா எடுத்துச் செல்லவும், திரைப்படம் எடுக்கவும் முடிகின்றதையும் அவதானித்துக் கொள்ளல் வேண்டும். அனைத்துலகச் செயலகம் என்பது இந்திய ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர்களை இலங்கையில் முக்கியத்துவம் கொடுப்பதும் அவதானிக்க முடிகின்றது.

இவர்களே இப்போது தீபம் தொலைக்காட்சியை வாங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தீபத்தினை வாங்குவதன் ஊடாக, இருந்த ஒரேயொரு ஐரோப்பிய முதலாளிய தமிழ் ஊடகம் ஒரு அமைப்பின் கட்டுப்பாட்டினுள் வந்திருக்கின்றது.

தமிழ் குறுந்தேசிய அவதூறு:

தமிழ் குறுந்தேசிய இணையத்தளம்

''இங்கே வில்லனால் குறி வைக்கப்பட்ட தமிழர்கள் மீது கத்தியைச் சொருகுவதோ, துப்பாக்கியால் சுடுவதோ முடியாத காரியம் என்பதால், தமிழர்களுக்குக் காயடிக்கும் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது அண்மைக் காலமாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்ற பெயருடன் புலம்பெயர் நாடுகளில் களமிறங்கியிருக்கும் ஜே.வி.பி.யின் ஒரு அணியின் செயற்பாடுகள் இதனையே உறுதி செய்கின்றது.''' என எழுதுகின்றது.

தமிழர்களின் போராட்டத்தை முள்ளிவாய்க்காலுக்கு முன்னரும் சரி பின்னரும் சரி சிதைக்கத் எவரும் தேவையில்லை. தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தினை சிதைத்தவர்களே பிரபாகரனும், புலம்பெயர் புலித்தலைமைகளுமாகும். இன்றும் சொத்துச் சண்டையில் ஈடுபட்டிருப்பவர்களும், கனவான் அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் புலி விசுவாசிகளுமே போதும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தினை சிதைப்பதற்கு, ஏகாதிபத்தியத்தை ஆதரித்துக் கொண்டும், தமது கனவான் அரசியலை மறைத்துக் கொண்டும் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

''சிங்கள இனவாதத்திற்கு எதிரான மேற்குலகின் அழுத்தங்களையும், ஐ.நா.வின் தற்போதைய நிலைப்பாட்டையும் கடுமையாக விமர்சனம் செய்யும் இந்தக் குழு, சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒன்றாக இணைந்து இனவாதத்திற்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்தியல் கத்தியைத் தமிழ் மக்களின் நெஞ்சில் சொருக முற்படுகின்றது."

மேற்குலக அழுத்தத்தினை சமவுரிமை இயக்க வேலையோ அல்லது புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் வேலைமுறையோ சிதைக்கப்போவதில்லை. இது அரசியல் வறுமை கொண்ட ஞான சூனியங்களுக்கு தெரியப்போவதில்லை.

"அதாவது, கடந்த அறுபத்தைந்து வருடங்களாகத் தமிழ் மக்களது அரசியல், சமூக, பொருளாதார இருப்பிற்கான போராட்ட நியாயங்களைப் புரிந்து கொள்ளாத சிங்கள மக்களை அணுகி, அவர்களுடன் உறவாடி, அவர்களுக்குப் புரியும் வகையில் தமிழ் மக்கள் தங்களது பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தி, அவர்களைத் தம்முடன் இணைத்துக்கொண்டு, அதன் பின்னரான நாட்களில் இரு இனத்தின் பாட்டாளி வர்க்கமும் ஒன்றிணைந்து புரட்சி செய்து, சிங்கள இனவாதத்தைத் தோற்கடித்து, அந்த வெற்றிக்குப் பின்னர் இரு இனமும் இணைந்து சிறிலங்காவில் வாழ்வது...

அது சரி இரண்டு இனங்கள் மாத்திரம் அல்ல, இலங்கையில் இருக்கும் அனைத்து தேசிய இனங்களும் பொதுவெதிரிக்கு எதிராக போராடுவதில் என்ற தவறு? 1970இல் இருந்து நடைபெற்ற அனைத்து போராட்டங்களும் இனங்களின் ஐக்கியத்துடன் நடைபெறவில்லை.

ஒரு போராட்டம் ஒடுக்கப்படுவது ஒன்றும் புதிதில்லை. ஆனால் தோல்வி மனப்பான்மைக்கு உட்பட்டு, தளத்தில் போராட்டத்தை சிதைத்துக் கொண்டிருப்பவர்களே புலம்பெயர் தேசத்தில் உள்ள சொத்துக்களை பாதுகாக்கும் புலிக்கூட்டமாகும்.

இலங்கையில் 1971 மற்றும் 1987-9 களில் நடைபெற்ற ஆயுதப் போராட்டமே தோல்வியில் இருந்து மீளவும் கட்டமைக்கப்பட்டது. விழ விழ எழுந்தார்கள். தோல்விகளில் இருந்து பாடம் கற்றார்கள். இன்றும் முன்னிலை சோசலிசக் கட்சி கடந்து வந்த பாதையில் இருந்து தவறைக் கற்றுக்கொண்டு மக்களிடம் செல்லும் பாதையை முனவைக்கின்றது. மக்களிடம் அணுகுவது பற்றி புலிகளுக்கு அனுபவம் இல்லைத் தான். ஆனால் தம்மை முற்போக்கு, இடதுசாரிகள் என்று கூறுகின்றவர்களும் எதிர்ப்பது வர்க்க பாசமாகும்.

புலம்பெயர் தமிழர்கள் தமது தோல்வி மனப்பான்மையை இலங்கையிலிருக்கும் தமிழர்களுக்கும் பரப்புகின்றார்கள். இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் தமது சொந்தக் காலில் இருந்து போராடத் தேவையில்லை. புலம்பெயர் தமிழர்களிடம் தான் போராட்டக்களம் மாறியிருப்பதாக கூறிக் கொள்வதன் ஊடாக ஒரு போராட்டச்சக்தி சொந்த மண்ணில் சொந்தக் காலில் நிற்கத் தேவையில்லை என பிரச்சாரம் செய்கின்றார்கள். இவைகள் தான் அரசியல் மோசடி, அன்னியச் சக்திகளை நம்பி பிழைக்கும் அரசியல் அயோக்கியத்தனம்.