முன்னிலை சோசலிசக் கட்சியின் யாழ் அலுவலகத்தை 30.06.2015 காலை 10 மணிக்கு யாழ் ஸ்ரான்லி வீதியில் 413 இலக்கத்தில், மகிந்த ஆட்சியில் அரச படையால் கடத்தப்பட்டு காணமல் போன குகனின் மகள் சாரங்கா திறந்து வைத்தார். அண்ணளவாக 50 பேர் வரை இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். முன்னாள் இடதுசாரிகளும், காணமல் போனவர்களின் குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன், இடதுசாரியத்தின் மீள்வருகையை புதிய உற்சாகத்துடன் பலரும் வரவேற்றனர். இந்த நிகழ்வையொட்டி யாழ் குடா எங்கும் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து சுவரொட்டிகள் ஓட்டப்பட்டு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.
அன்று மாலை 3 மணிக்கு "இடதுசாரிய நடவடிக்கை" நூல் வெளியீடு யாழ் பொது நூலக உணவக மண்டபத்தில் நடைபெற்றது. அண்ணளவாக 75 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வு, மீள வடக்கில் இடதுசாரியத்தை கட்டமைக்கும் சவால் மிக்க பணிக்கான அறைகூவலை விடுத்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவர் "1970 களின் நினைவுகளை இக் கூட்டம் ஏற்படுத்தியதாக" குறிப்பிடுமளவுக்கு, இக் கூட்டம் இடதுசாரியத்தை அறைகூவியது.
நேற்றும், இன்றும் (யூலை, 1ம் 2ம் திகதி) யாழ் குடா நாட்டின் வீதிகள் தோறும் ஒலிபெருக்கி மூலம் இடதுசாரிய பிரச்சாரம் முன்னெக்கப்பட்ட அதே வேளை, துண்டுப்பிரசுர விநியோகமும், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டும் விரிவான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.