மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கும் வைபவத்தில் சிறுபான்மையினங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மத வழிபாடுகள் இடம்பெறவில்லை.
மதவழிபாடுகளில் பௌத்த வழிபாடுகள் மட்டுமே இடம்பெற்றன. அத்துடன் அந்த நிகழ்ச்சி நிரலிலும்அவை தொடர்பிலும் குறிப்பிடப்பட்டிருக்கவும் இல்லை.
இதேவேளை, ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களின் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்ட நான்கு பேரும் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள், சாதாரண பிரமுகர்கள் ஆசனத்தில் ஒதுக்குப்புறமாக அமர்த்தப்பட்டிருந்தனர். பௌத்த மத தேரர்கள் அமரும் வரிசையில் ஏனைய மதத்தலைவர்கள் அமரவைக்கப்படவில்லை.
கடந்த 3வருடங்களாக அரசின் தேசிய வைபவங்களில் 4மத நிகழ்வுகளும் ஆசிர்வாதமும் நடைபெற்றுவந்தன. முதன் முறையாக இவ் வைபவத்தில் மட்டும் பௌத்த மத நிகழ்வும் ஆசிர்வாதமும் நடைபெற்றன.இதற்காக 500க்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் அழைக்கப்பட்டு விசேட மேடையில் அவர்கள் அமர்த்தப்பட்டு இருந்தனர்.
வீதி அதி வேக பாதை திறக்கும் வைபவத்தில் சகல மத நிகழ்வுகளும் நடைபெற்று பௌத்த மதத் தலைவர்கள் அமரும் வரிசையில் ஏனைய ஆசனங்களும் ஒதுக்கப்பட்டதோடு ஐனாதிபதியை ஏனைய மதத்தலைவர்களும் ஆசீர்வதித்து பொண்ணாடை போற்றி கௌரவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நாடு பௌத்த நாடாகும். தேரர்கள் வரிசையில் ஒரே மேடையில் ஏனைய மதங்களின் ஹிந்து மத குருக்களோ, மௌலவிகளோ, கிறிஸ்தவ மத பாதிரியார்களோ அமரக் கூடாது.
இந்த நாட்டில் நடக்கும் தேசிய வைபவங்களில் பௌத்த மத நிகழ்வுகள் மட்டுமே இடம்பெற வேண்டும் என பொது பல சேனவின் செயலாளர் ஞானதேரர் ஊடக மாநாட்டில் ஒன்றில் கடந்த வாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.