Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

PJ_2008_1.jpg

இன உணர்வுத் திருவிழா ஒன்றை சென்னையில் நடத்தப் போவதாக கி.வீரமணியின் திராவிடர் கழகம் அறிவித்தவுடனே, பரவாயில்லையே; தொய்வாகிக் கிடந்த பெரியாரின் தொண்டர்கள் பார்ப்பன மதவெறிக்கு எதிராகக் கிளம்பி எழப்போகிறார்கள் போலும்! அதைப் பார்க்காமல் விட்டுவிட்டால் நாளைய வரலாறு நம்மைப் பழித்துவிடுமே எனும் அச்சத்தில்"இன உணர்வைத் தட்டி எழுப்பும்' டிசம்பர் 2ஆம் தேதியன்று பெரியார் திடலுக்குள் எட்டிப் பார்த்தோம்.

 

சென்னை மாநகரம் முழுக்க பளபளக்கும் டிஜிட்டல் பேனர்களில் "ஓய்வறியாதவராகவும்', "அசுரர் குலத்தலைவராகவும்',"தமிழர் தலைவராகவும்' எழுந்தருளியிருந்த வீரமணியாரின் 75 ஆவது பிறந்த நாளைத்தான் கருஞ்சட்டைப் படையினர் "இன உணர்வுத் திருவிழா'வாக இரண்டு நாட்களாகக் கொண்டாடும் விசயம் நமக்குப் புரி பட்டது. இருக்கட்டும். பிறந்த நாளை முன்வைத்து பெரியாரின் சுயமரியாதைக்கு புதுப்பாணியில் தெம்பூட்டப்போகிறார்கள் போலும் என்று எண்ணிக்கொண்டோம்.

 

பிறந்தநாள் விழாவுக்கு அச்சிட்ட அழைப்பிதழைப் பார்த்தவுடன் நமக்கு ஒன்றும் புரியவில்லை. சினிமா பட "பூஜை' ஏதும் நடத்தப் போகிறார்களோ எனும் ஐயம் ஏற்பட்டது. அழைப்பிதழ் செலவு மட்டுமே 100 ரூபாய்க்கு மேல் இருக்கும். வழக்கமாக கோடம்பாக்கத்தில்தான் இப்படி வக்கிரக் கூத்துகள் நடக்கும். "தமிழர் தலைவராகி' பெரியாரை பன்னாட்டு நிறுவனமாக்கி ஜோராக வியாபாரம் செய்பவர், இதைக் கூட செய்யாவிட்டால் எப்படி?

 

உள்ளே கல்வியாளர் அரங்கம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. பவள விழா நாயகரை ஒரு பல்கலைக்கழக துணைவேந்தர் ""சாக்ரடீசுக்கு கிடைத்த மாணவர் பிளாட்டோ போல பெரியாருக்கு ஒரு தமிழர் தலைவர்'' என்று முழங்கிக் கொண்டிருந்தார். இரண்டு மணிநேரம் வரை இந்தக் கூட்டம் நடக்கும் என்பதனாலும் அக்கூட்டத்தில் வீரமணி அடுத்தடுத்து மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ, சேகுவேரா என பல அவதாரங்களை எடுக்கும் பேராபத்து இருந்ததாலும் அங்கிருந்து தப்பித்து எங்காவது சுயமரியாதையை ஒளித்து வைத்திருப்பார்களோ எனத் தேடிக்கொண்டிருக்கும்போது, ஆம்பூர் ஆட்டுக்கறிப் பிரியாணியை 5000 பேருக்கு வழங்கிக் கொண்டிருந்தார்கள். தலைவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்பவர்கள் 75 ரூபாய் கொடுத்து படத்தை வாங்கிக் கொண்டு வீரமணியின் பிரியாணிப் பொட்டலத்தில் பகுத்தறிவைக் கிளறிக் கொண்டிருந்தார்கள். சுயமரியாதைப் பிரியாணி தொண்டைக்குள் விக்காமல் இருக்க அனைவருக்கும் 15 ரூபாய் தண்ணீர் பாட்டிலை இலவசமாக வழங்கினார்கள்.

 

கல்வியாளர்கள் பாராட்டு மழையை ஒருபக்கம் பொழிந்தால், அரசியல் கட்சிப் பிரமுகர்களும் தி.க. பொறுப்பாளர்களும் ""பெரியார் 95 வயது வரை வாழ்ந்தார். தலைவர் இன்னும் கூடுதலாக வாழவேண்டும்'' என்று வாழ்த்தினார்கள். பெரியாரின் தொண்டர்களை எண்ணிப் பார்த்து பரிதாபப்பட்டுக் கொண்டோம். தி.க.வின் ஒவ்வொரு விழாவிற்கும் 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் வரை ஆயிரம், இரண்டாயிரம் எனக் கட்டாய நன்கொடையாக தங்கள் சம்பளத்தில் பறிகொடுக்கும் வல்லம், திருச்சி பெரியார் கல்வி நிறுவன ஊழியர்களோ ""இன்னும் 20 ஆண்டுகளா'' எனப் பதறியதைக் காண முடிந்தது.

 

பெரியார் உயிருடன் இருந்த காலத்தில் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு சுயமரியாதைப் பிரச்சாரக் கூட்டங்களும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அதேபோன்று பிரச்சாரம் ஏதாவது ஒன்றை இவர்கள் செய்யக்கூடும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஒரு ஆடியோ சி.டி. வெளியிட்டார்கள். தொழில்முறைக் கலைஞர்களை வைத்து தயாரிக்கப்பட்ட அந்த சிடியோ "தமிழர் தலைவரின்' புகழை மட்டும் பாடிக் கொண்டிருந்தது. தி.க.தொண்டர் ஒருவர் வீரமணியின் முழு வாழ்க்கை வரலாற்றைப் பல தொகுதிகளாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறாராம். அதில் அவர் பிறந்ததில் இருந்து முதல் 20 வருடங்களின் "வரலாற்றினை'க் கூறும் முதல் தொகுதியினை விலைக்கு வைத்திருந்தார். விலை ரூ.1500 என்றார்கள்.

 

தலைவரின் பிறந்தநாளுக்காக பத்து லட்சம் ரூபாயை அமெரிக்க நண்பர்கள் கொடுத்தார்கள். வீரமணியின் இடுப்பு உயரத்திற்கு ஒரு உண்டியல் வைக்கப்பட்டு மொய் வசூல் ஜோராகப் போய்க் கொண்டிருந்தது. ""விடுதலை'' பத்திரிகைக்கு சந்தாவாக 50 இலட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டிருந்தது. திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 75 தங்கக் காசுகளை மாலையாக்கி அணிவித்தார்கள். ரூபாய் நோட்டு மாலையுடன் "வசூல்ராஜா வீரமணி எம்.ஏ., பி.எல்.,' தி.க. பக்தர்களுக்கு காட்சி அளித்து மகிழ்ந்தார்.

 

வீரமணியின் கொத்தடிமைகளாலும் பல காக்கைகளாலும் தயாரிக்கப்பட்ட வீரமணியாரின் பிறந்தநாள் மலரை ரூ.100க்கு விற்பனைக்கு வைத்திருந்தார்கள். ஒரு கோடிக்கும் அதிகமாய் செலவு செய்து கொண்டாடப்பட்டுள்ள "இன உணர்வுத் திருவிழா'வை ""விடுதலை'' நாளிதழ் ஒரு வாரமாகக் கொண்டாடியது. இக்கொண்டாட்டத்திற்கு மட்டும் 3 தலையங்கங்களை எழுதித் தள்ளியது. ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு மட்டும் தலையங்கம் எழுதியது பத்திரிக்கை உலகில் நிச்சயமாக ""சாதனை கல்'' தான்.

 

கொண்டாட்டத்தின் இறுதிக்காட்சியாக கருணாநிதி தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் ஒரு விழா. அங்கே வீரமணி நடத்திவரும் கல்வி நிறுவனத்தில் பயிலும் பெண்கள் வீரமணியின் அருமை பெருமைகளைப் பாடி ஆடி விளக்கினர். சினிமாக் கலை இயக்குநர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மேடையில் "வேந்தர்' வீரமணி டாக்டர் பட்ட கவுனுடன் கட் அவுட்டாகி இருந்தார். வள்ளுவர் கோட்ட மேடையில் பேசுபவர்கள் கருணாநிதியையும் வீரமணியையும் பாகுபாடின்றிப் புகழ வேண்டிய சிரமத்தால் தத்தளித்துக் கொண்டிருக்கையில் ""தாங்கள் சுட்டு விரலை நீட்டினால் எதிரிகளை நிர்மூலமாக்கக் காத்துக் கிடக்கிறது கருஞ்சட்டைப் பட்டாளம்'' என்று துரை.சந்திரசேகரன் எனும் கருஞ்சட்டை சீரியசாகப் பேசியது. வீரமணி என்றைக்கும் சுட்டு விரலை நீட்டப்போவதில்லை என்பதை அறியாமலா பேசி இருப்பார்? பாம்பறியும் பாம்பின் கால் அல்லவா?

 

அனைவரும் ஒரே மாதிரி ""பெரியார், ஓரிரண்டு நிறுவனங்களைத்தான் தொடங்கினார். அவற்றின் எண்ணிக்கையை 50 வரை உயர்த்திய உயர்ந்த உள்ளம்'' என்று வீரமணியின் வியாபார விரிவாக்கத்தை மட்டுமே புகழ்ந்து கொண்டிருந்தபோது, கருணாநிதி ஒரு குட்டிக்கதை சொல்லி வைத்தார். பெரியாரிடம் வீரமணி பேச்சாளராக வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் ஒருநாள் வீரமணியை, தான் வளர்க்கும் நாய்க்குட்டிக்குப் பால் வாங்கிவரச் சொன்னாராம் பெரியார். கடைக்குப் போன வீரமணி வெறும் செம்புடன் திரும்பி விட்டாராம். ""பிராமணாள் கபே'' மட்டும் திறந்திருந்ததால், அக்கடையில் பாலை வாங்காமல் வந்துவிட்டதாக வீரமணி சொன்னாராம். நமக்கெல்லாம் சுயமரியாதை ஊட்ட பெரியார் ""பிராமணாள் கபே''யைப் புறக்கணிக்கச் சொல்லி இருந்தபோதிலும், அக்கொள்கையை நாய்க்குட்டி விசயத்திலும் கடைப்பிடித்த கொள்கைக் குன்று நமது இளவல் என்று கருணாநிதி சொன்னதும் பலத்த கைதட்டல். ஆனால் இக்கதை எதற்காக சொல்லப்பட்டது என்பதை வீரமணி நிச்சயம் உணர்ந்திருப்பார். அப்பேற்பட்ட "கொள்கைக் குன்று' போயஸ் தோட்டத்துப் பாப்பாத்தியின் நாய்க்குட்டியாகக் குரைக்கப் போனதை உள்ளுறையாக உணர்த்துவதுதான் அக்கதை என்பது தெரியாதவரா வீரமணி?

 

பெரியார் திடலில் இருந்து வள்ளுவர் கோட்டம் வரை தேடித்தேடிப் பார்த்தும் இவ்விழாவில் பெரியார் கொள்கைகள் பேசப்படவே இல்லை. முழுக்க முழுக்க துதிப்பாடல்கள். தன்னைப் பெரியாரின் நம்பிக்கைக்குரிய தொண்டன் என்று சொல்லிக்கொள்ளும் வீரமணி, தனது பிறந்தநாளைக் கொண்டாடி தன்னை அனைவரையும் புகழ வைத்துக் கொண்ட அழகைப் பார்க்கையில் நம்மையும் அறியாமல் திருவாரூர் நீதிக்கட்சி மாநாடு நினைவுக்கு வருகிறது.

 

1940இல் நடந்த அம்மாநாட்டில் பெரியாரைத் தலைமை தாங்கச் சொல்லி டாக்டர் தர்மாம்பாள், சவுந்திரபாண்டியன், சோமசுந்தரபாரதியார் உட்பட 15 பேர் உரையாற்றி முடித்த பிறகு பெரியார் பேசினார். ""என்னை நீங்கள் மக்களுக்காக அதிகம் கஷ்டப்பட்டதாக எடுத்துக் கூறி 15 பேரும் பேசினீர்கள். எனக்கு கஷ்டம் என்று படக்கூடிய காரியம் எதையும் நான் செய்தது கிடையாது. ஆனால், ஏதாவது கஷ்டப்பட்டேன் என்று சொல்ல வேண்டுமானால், என்னை பிரேரேபித்த (முன்மொழிந்த) 15 பேருடைய பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்தேனே; அதுதான் உண்மையில் பெரிய கஷ்டமாக இருந்தது'' என்றார். ஆனால் இரண்டுநாள் பஜனையை பெரியாரின் "உண்மைச் சீடர்' வீரமணியோ மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு அமர்ந்திருந்தார்.

 

விழா முடிவில் கருணாநிதியிடம் அரசு சார்பாக சென்னையில் 95 அடி உயர பெரியார் சிலை அமைக்க வீரமணி கேட்டுக் கொண்டார். முதல்வரும் ஏற்றுக் கொண்டார். பெரியார் பொறியியற் கல்லூரி, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் போன்று 46 நிறுவனங்களைப் பெரியார் பேரில் வளர்த்த வீரமணி, பெரியார் சிலையை அரசின் பொறுப்பில் விட்டுவிட்டார். வருவாய் ஏதும் தந்து விடாத பெரியார் சிலையை விட, நன்கொடை தரும் நிறுவனங்களில் அல்லவா முதலீடு செய்யவேண்டும் என்பதுதான் இந்த "மானமிகு'வின் தந்திரம் போலும்.

 

எதற்காக வீரமணியின் பவளவிழாவை இவ்வளவு ஆடம்பரமாகக் கொண்டாடினார்கள்? அதற்கு ""நடைபெற்றது தனிநபருக்கான விழா அல்ல; ஓர் இயக்கத்தின் உயிரோட்டத்துக்கான உரைகல்'' என்று வீரமணியின் விடுதலை ஏடு விளக்கம் தருகிறது.

 

ஓர் இயக்கம் செத்துப் போகாமல் மூச்சு இருக்கிறதா எனப் பார்க்க ஒரு கோடி ரூபாயைக் கரியாக்கி மகிழ்ந்த இயக்கம், அநேகமாக உலகிலேயே வேறு எங்கும் இருக்க முடியாது. உரசிப் பார்க்கத்தான் எதிரி சென்ற ஆண்டு சிறீங்கம் பெரியார் சிலையை உடைத்து பைசா செலவில்லாமலே ஒரு நல்ல வாய்ப்பை வழங்கி இருந்தானே! அப்போது தி.க. என்ன செய்தது? கருணாநிதியின் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்று சாக்குப் போக்கு சொல்லி பெரியார் சிலை உடைப்பை அறிக்கை அக்கப்போரிலேயே முடக்கி வைத்தது. ம.க.இ.க. தோழர்கள் சிலை உடைப்பை மையப்படுத்தி தமிழ்நாடெங்கும் பார்ப்பன பயங்கரவாதத்தைத் திரைகிழித்தபோதும் கூட தி.க. மவுனமாகிக் ""கோமா''வில் கிடந்ததே! அதற்கு உயிரூட்டி எழுப்பிட ஒரு கோடி செலவு. எழுந்து உட்கார்ந்த இயக்கமோ தனது முதலாளிக்கு முதுகு சொறிந்து விட்டு மறுபடியும் நீளõதுயிலுக்குச் சென்றிருக்கிறது.

 

ஊதாரித்தனமான பிறந்தநாள் கொண்டாட்டத்தின் மத்தியில் வீரமணி பகிரங்கமாக ஒன்றை சொல்லி இருக்கிறார். ""நாம் களத்திலே நின்று கொண்டிருக்கிறோம். அப்படிப் போராடிக் கொண்டிருக்கின்றபோது அதனுடைய கருவிகளை மாற்றவேண்டும். காலத்துக்கேற்ப கருவிகளை மாற்றிக் கொள்ளும்போது கருத்துக்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.'' இந்த ஒப்புதல் வாக்குமூலத்திற்காக வீரமணியை நாம் பாராட்டியே தீரவேண்டும்.

 

ஆம். வீரமணியின் கருத்து இன்றைக்கு மாறி இருக்கிறது. அவரிடம் முன்னர் இருந்த பார்ப்பன எதிர்ப்பும், நாத்திகமும் மறைந்து விட்டன. நிறுவனங்களை விரிவுபடுத்தி, பெரியாரின் சொத்துக்களைப் பன்மடங்காக்கி ஆதாயம் அடைந்து கொண்டிருக்கும் "தமிழர் தலைவர்' இன்று பார்ப்பனியத்தையும், கருத்துமுதல்வாதத்தையும் (ஆன்மீகம்) ஆதரித்து "வாழ்வியல் சிந்தனை'களாக எழுதிப் பிரச்சாரம் செய்து வருவதைத்தான் அவரே ""கருத்துக்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும்'' என்று முடிவாகச் சொல்லி பெரியாரின் சிந்தனைகளைச் சவப்பெட்டியில் ஏற்றி இறுதி ஆணியை அறைந்திருக்கிறார்.

 

இன்னமும் பல பெரியார் தொண்டர்கள், வீரமணியின் அனைத்துப் பித்தலாட்டங்களையும் சகித்துக்கொண்டு, பெரியார் ஆரம்பித்த இயக்கம் என்கிற ஒரே காரணத்துக்காக தி.க.வில் இருக்கிறார்கள். பாட்டன் வெட்டிய கேணியே என்றாலும், அதில் ஊறுவது உப்புத்தண்ணீர் என்றால், அதனைக் குடித்துக் கொண்டா இருப்பது? பெரியாரியலுக்கு மூடுவிழா நடத்திவிட்ட வீரமணியின் தலைமையைத் துறந்து, பெரியாரின் கொள்கைகளை வீச்சோடு எடுத்துச் சென்று பார்ப்பனிய பயங்கரவாதத்தை எதிர்த்து களத்தில் நிற்கும் புரட்சிகர அமைப்புகளில் பகுத்தறிவாளர்கள் இணைவதைத் தவிர இனி வேறென்ன வழி இருக்கிறது?


· இளம்பிறை

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது