Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

PJ_2008_1.jpg

கோதுமைக்குத் தரப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை, ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1,000/ என உயர்த்தி நிர்ணயித்திருக்கும் மைய அரசு, நெல் விலையை நிர்ணயிப்பதில் மாற்றந்தாய் மனப்போக்குடன் நடந்து கொண்டுள்ளது. 199495 ஆண்டு வரை, நெல்லுக்கும் கோதுமைக்குமான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதில் எவ்வித வேறுபாடும் இருந்தது கிடையாது. அதன்பிறகு, அவற்றின் ஆதரவு விலைகளை நிர்ணயிப்பதில் வேறுபாடு காட்டப்படுவது தொடங்கி, இன்று இந்த விலை வேறுபாடு ரூ. 255/ ஆக அதிகரித்து விட்டது.

 

இந்த ஆண்டு ஒரு குவிண்டால் சன்னரக நெல்லுக்கான ஆதரவு விலை ரூ. 675/; மோட்டாரக நெல்லுக்கான ஆதரவு விலை ரூ. 645/ என்றுதான் மைய அரசால் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு மேல் ஊக்கத் தொகை வழங்கவும் மறுத்துவிட்டது, மைய அரசு. தமிழக விவசாயிகள் ஒரு குவிண்டால் நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 1,000/ தர வேண்டும் எனக் கோரி வருவது தி.மு.க.வுக்குத் தெரிந்திருந்தும் கூட, மைய அமைச்சரவை நெல்லுக்கு மிகவும் குறைவாக ஆதரவு விலையை நிர்ணயித்ததை அக்கட்சி எதிர்த்துப் பேசவில்லை.

 

தமிழக விவசாயிகள் மைய அரசின் இந்த முடிவை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கிய பிறகு, தமிழக முதல்வர் மு.க., மைய அரசுக்குக் கடிதம் எழுத, அதனைத் தொடர்ந்து, மைய அரசு ஏதோ பிச்சை போடுவது போல, இரண்டு தவணைகளில் ஆதரவு விலையை ரூ. 100/ உயர்த்தி, சன்னரக நெல்லுக்கு ரூ.775/ மோட்டா ரக நெல்லுக்கு ரூ.745/ என விலை நிர்ணயம் செய்தது.

 

இதற்கு மேல் மைய அரசிடமிருந்து ஒரு பைசாகூடப் பெயராது எனத் தெரிந்து கொண்ட மு.க., தமிழக நெல் விவசாயிகளின் அதிருப்தியைப் போக்குவதற்காக, கூடுதல் ஊக்கத் தொகையாக ஐம்பது ரூபாய் தமிழக அரசின் சார்பில் அளிக்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

 

ஒரு குவிண்டால் நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 1,000/ தர வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை, அநியாயமானதோ, தான்தோன்றித்தனமானதோ அல்ல. விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் பற்றி ஆராய்வதற்காக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் மைய அரசினால் அமைக்கப்பட்ட தேசிய கமிசன் ஒரு குவிண்டால் நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ. 1,400/ தரப்பட வேண்டும் எனப் பரிந்துரை செய்திருக்கிறது. கோதுமை உற்பத்திக்கு ஆகும் செலவைவிட, நெல் உற்பத்திக்கு ஆகும் செலவு அதிகமானது என்பதை மைய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்குப் பிறகும், மைய அரசு நெல் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கத் துணிகிறது என்றால், மன்மோகன் சிங் கும்பலை எதைக் கொண்டு அடிப்பது?

 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த வே.துரைமாணிக்கம் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையின் படியும்; தமிழக வேளாண்மைத் துறையின் கணக்கீட்டின்படியும் ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் உற்பத்தி செய்வதற்கு ஆகும் சராசரி செலவு ரூ. 14,689/ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் நன்றாக இருந்தால் ஒரு ஏக்கர் நிலத்தில் அதிகபட்சமாக 1,800 கிலோ மகசூல் கிடைக்கும். இம்மகசூல் அனைத்தையும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விற்றால் கூட ரூ.14,300/ லிருந்து ரூ.15,000/ வரைதான் கிடைக்கும். நெல்லை விற்றுக் கிடைக்கும் வரவு, உற்பத்திச் செலவை ஈடுகட்டக்கூடப் போதாது என்றால், விவசாயிகள் நெல் விவசாயம் பார்ப்பதைவிட, நிலத்தைத் தரிசாகவே போட்டு விடலாம்.

 

இந்தியாவில் 4.4 கோடி ஹெக்டேர் பரப்பளவில் விளையும் நெல் மகசூல் அனைத்தையும் மைய அரசே கொள்முதல் செய்வது கிடையாது. தமிழகத்தில் விளையும் நெல்லில் காணப்படும் ஈரப்பதத்தைக் காட்டியே, தமிழக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது, மைய அரசு. எனவே, நெல் விவசாயிகளுக்குத் தங்களின் விளைச்சலைத் தனியாரிடம் விற்பதைத் தவிர வேறுவழியில்லாமல் போய் விடுகிறது. விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் தனியார் கமிசன் ஏஜெண்டுகள், குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுத்து வாங்குவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. எனவே, நடைமுறையில் நெல் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய நட்டம், புத்தக மதிப்பீட்டைவிட அதிகமாகவே இருக்கும்.

 

கந்துவட்டிக் கடனில் மூழ்கிப் போன விவசாயிகளின் எண்ணிக்கையில், தமிழகம், இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. வேளாண் விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலை கிடைக்காமல் இருப்பதனால்தான், விவசாயிகள் கடன் சுமையில் இருந்து மீள முடியாமல் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போகிறார்கள். தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த நெல் விவசாயிகள், குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ. 1,000/ தர வேண்டும் எனக் கோருவதையும், அதற்காகத் தமிழக விவசாயிகள் போராடுவதையும் இந்தச் சூழ்நிலையில் இருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், மைய அரசின் வேளாண்துறை அமைச்சர் சரத்பவாருக்கோ, தமிழக நெல் விவசாயத்தின் அரிச்சுவடி கூடத் தெரியவில்லை.

 

""நெல்லுக்கு மைய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை பஞ்சாப் விவசாயிகள் வரவேற்றுள்ளனர்'' எனத் தமிழக விவசாயிகளிடம் கூறி தமிழகத்தையும், பஞ்சாபையும் எதிரெதிராக நிறுத்தியிருக்கிறார், சரத்பவார். அதற்குத் தமிழக விவசாயிகள், ""பஞ்சாபில் கோதுமை, நெல் என இரண்டு பயிர்கள். ஒன்று இல்லாவிட்டாலும், ஒன்றில் கிடைப்பதால் மகிழ்ச்சியாக உள்ளார்கள்'' எனப் பதிலடி கொடுத்துள்ளனர்.

 

""தமிழ்நாட்டில் மூன்று போகம் நெல் சாகுபடி நடப்பதாக''க் கூறித் தனது முட்டாள்தனத்தை வெளிக்காட்டிக் கொண்ட சரத்பவார், ""விவசாயத் துணைத் தொழில்களான கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டால், நல்ல வருமானம் கிடைக்கும்'' என்ற "அரிய' ஆலோசனையை எடுத்துக் கூறி பிரச்சினையை திசை திருப்பியிருக்கிறார்.

 

""மீன் வளர்க்க மின்சாரத்துக்கு எங்கு போவது? யூனிட் 6 ரூபாய் வசூலிக்கிறார்கள். இலவசமாக மின்சாரம் கிடைக்குமா?'' என விவசாயிகள் கேட்டதில் மூக்குடைந்து போன அமைச்சர், ""நீங்கள் இப்படிக் கூடுதல் விலை கேட்டால், குறைந்த விலைக்கு எப்படி அரிசி கொடுக்க முடியும்?'' எனக் கேட்டு, விவசாயிகளைப் பொதுமக்களின் வில்லனாகக் காட்ட முயலுகிறார்.

 

ஒரு குவிண்டால் நெல்லுக்கு 250 ரூபாய் கூடுதலாகக் கொடுப்பதை மறுப்பதற்கு ஆயிரத்தெட்டு காரணங்களை அடுக்கும் சரத்பவார், புளுத்துப் போன கோதுமையை, அந்நிய நாடுகளில் இருந்து அநியாய விலைக்கு இறக்குமதி செய்வதற்கு எவ்விதத் தயக்கமும் காட்டியதில்லை. இந்த இறக்குமதியை எதிர்த்து வந்த கோதுமை விவசாயிகளின் கோபத்தைத் தணிப்பதற்காகத்தான், கோதுமையின் ஆதரவு விலையை ரூ. 1000/ என மைய அரசு அறிவித்திருக்கிறது.

 

""நெல்லுக்கு ஆதரவு விலை ரூ.1000/ கொடுத்தால், மக்களுக்குக் குறைந்த விலையில் எப்படி அரிசி கொடுக்க முடியும்?'' எனக் கேட்கிறார் சரத்பவார். ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கோ, ""மக்களுக்குக் குறைந்த விலையில் அரிசியையும், கோதுமையையும் ஏன் வழங்க வேண்டும்?'' எனக் கேட்கிறார். ""மைய அரசு மக்கள் நலத் திட்டங்களுக்காக ரூ. 1 இலட்சம் கோடி ரூபாய் மானியமாக வழங்குவதாகவும்; இம்மானியம் முழுமையாக மக்களைச் சென்றடையவில்லை என்பதால், இம்மானியங்களை விரைவில் ஒழித்துவிட வேண்டும்'' என்ற அரிய ஆலோசனையை சமீபத்தில் கூறியிருக்கிறார், மன்மோகன் சிங்.

 

மூட்டை பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தச் சொல்லும் முட்டாள்தனம்தான் இது. பொது மக்களுக்கு ரேசன் கடைகளின் மூலம் மானிய விலையில் அரிசியும், கோதுமையும் வழங்கத் தேவையில்லை என்றால், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுத்து, நெல்லையும், கோதுமையையும் மைய அரசு வாங்க வேண்டியதில்லை என்பதுதான் பொருள்.

 

""மானியங்களை அடியோடு ஒழிக்க வேண்டும்'' என்ற பொருளாதாரக் கொள்கை ஆட்சியில் இருக்கும்வரை, கோதுமைக்கு ரூ.1,000/ கிடைத்துவிட்டது எனக் கோதுமை விவசாயிகள் நிம்மதியடைந்து விடவும் முடியாது; இன்றில்லாவிட்டால் நாளை, நெல்லுக்கும் 1,000 கிடைத்துவிடும் என நெல் விவசாயிகள் காத்துக் கிடக்கவும் முடியாது.

 

தாராளமயம் விவசாயிகளின் கழுத்துக்குக் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு நடத்தி வந்த நெல் கொள்முதலை முந்தைய அ.தி.மு.க. ஆட்சி கைவிட்டதற்கும்; தற்போதைய தி.மு.க. ஆட்சி அதனை மீண்டும் கொண்டுவர மறுப்பதற்கும் தாராளமயம்தான் காரணம்.

 

தமிழகத்தில் முன்பு 70 இலட்சம் ஏக்கரில் நடந்துவந்த நெல் சாகுபடி தற்பொழுது 55 இலட்சம் ஏக்கராகச் சுருங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. நெல்லுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலை கிடைக்கவில்லை என்றால், நெல் சாகுபடி பரப்பு மேலும் சரிந்து வீழ்வதைத் தடுக்க முடியாது. தமிழக மக்களின் ஆதார உணவுப் பயிரான நெல் சாகுபடியைப் பாதுகாக்க வேண்டும் என்றால், அந்நிய மூலதனத்திற்காக பாரம்பரிய உணவுப் பயிர் விவசாயத்தைக் புறக்கணிக்கும் தாராளமயத்தை எதிர்த்துப் போராடுவது தவிர்க்க முடியாதது!


·ரஹீம்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது