Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த நவம்பர் 12ஆம் தேதியன்று சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதல், தமிழகத்தில் புரையோடிப் போயுள்ள சாதிதீண்டாமையின் கோரத்தை மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. சட்டக் கல்லூரியில் சாதிவெறியர்களின் கொலைவெறித் தாக்குதலுக்கு எதிராகத் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பதிலடி கொடுத்துள்ளதன் வாயிலாக, இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

 

 தென்மாவட்டங்களைப் போல வெளிப்படையாக இல்லையென்ற போதிலும், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் ஆதிக்க சாதித் திமிர் நீறுபூத்த நெருப்பாகவே நீடித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்க சாதிவெறி அமைப்புகள் சட்டக் கல்லூரியில் வேர்விடத் தொடங்கின. "முக்குலத்தோர் மாணவர் பேரவை'' அதில் ஒன்று. தாழ்த்தப்பட்ட மாணவர்களால் தாக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிகண்ணன், அதன் முக்கிய பிரமுகர்.


 கடந்த 2007ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மாணவர்களிடம் தகராறு செய்து அடிதடியில் இறங்கியவர்தான் பாரதி கண்ணன். ஆறு மாதங்களுக்கு முன்பு கல்லூரியின் பெயரில் இருக்கும் "அம்பேத்கர்'' என்ற வார்த்தையை நீக்கச் சொல்லி பாரதிகண்ணன் தலைமையில் ஆதிக்கசாதி மாணவர் கும்பல் தகராறு செய்தது. "சிங்கங்களே, ஒன்று சேருங்கள்!'' என்று தேவர் சாதி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்து, கல்லூரி வளாகத்திலேயே இக்கும்பல் சுவரொட்டிகளையும் ஒட்டியது. இதற்குத் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, தேவர் சாதிவெறி மாணவர் கும்பல் கொடுவாள்களுடன் வந்து மிரட்டியது. இது பற்றி புகார் தெரிவிக்கப்பட்டு, பாரதிகண்ணனிடமிருந்து மூன்று கொடுவாள்களைப் போலீசார் கைப்பற்றினர். இருப்பினும், அவர் மீதோ, ஆதிக்க சாதிவெறி மாணவர்கள் மீதோ வழக்கோ, நடவடிக்கையோ இல்லை. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது போலீசு வாகனங்கள் மீது கல்லெறிந்தார்கள் எனப் பொய்வழக்கு போடப்பட்டது. சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில், பாரதிகண்ணன் தலைமையிலான ஆதிக்க சாதிவெறி பிடித்த மாணவர்கள் மின்விளக்குகளை அடித்து நொறுக்கியும் தாழ்த்தப்பட்ட மாணவர்களை மிருகத்தனமாகத் தாக்கியும் வெறியாட்டம் போட்டனர். இதுபற்றி கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


 அண்மையில், தேவர்சாதி வெறியர்களின் குலதெய்வமான முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, சுவரொட்டிகளைக் கல்லூரி வளாகத்தில் ஒட்டிய தேவர்சாதி மாணவர்கள், திட்டமிட்டே கல்லூரியின் பெயரில் அம்பேத்கர் பெயரை நீக்கியிருந்தனர். இது பற்றிக் கேட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களை அவமானப்படுத்தி, ஆத்திரமூட்டவும் செய்தனர். நவம்பர் 3ஆம் தேதியிலிருந்து சட்டக்கல்லூரி தேர்வுகள் தொடங்கிய நிலையில், "எந்தவொரு கீழ்ச்சாதிப் பயலும் தேர்வு எழுதக் கூடாது; மீறி எவனாவது தேர்வு எழுத வந்தால் வெட்டிச் சாய்ப்போம்'' என்று எச்சரித்து, பாரதிகண்ணன் தலைமையிலான கும்பல் கத்தி, அரிவாள், இரும்புத்தடிகளுடன் கல்லூரி வளாகத்தில் சுற்றி வந்து அச்சுறுத்தியது. இதனால், "பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதவில்லை'' என்று கல்லூரி நிர்வாகமே அறிவித்தது. ஒருசில தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தேர்வுகள் எழுதியுள்ளதைக் கண்டு ஆத்திரமடைந்த பாரதிகண்ணன், ஆறுமுகம், அய்யாபிள்ளை ஆகியோர் தலைமையிலான கும்பல், நவம்பர் 7ஆம் தேதியன்று அம்மாணவர்களை பாரிமுனை பேருந்து நிலையம் அருகே சுற்றி வளைத்துத் தாக்கியுள்ளது.


 மீண்டும் 12ஆம் தேதியன்று தேர்வு எழுத வந்த தாழ்த்தப்பட்ட மாணவர்களைச் சுற்றி வளைத்துத் தாக்க இச்சாதிவெறிக் கும்பல் திட்டமிட்டுள்ளதை அறிந்து, அவர்கள் கல்லூரி விடுதி மாணவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கிரிக்கெட் மட்டை  கொம்புகளுடன் அணிதிரள்வதைக் கண்ட பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்திறங்கி, சுவரேறிக் குதித்தனர். பாரதிகண்ணன் மதில் சுவரில் தனது கத்தியைக் கூர்தீட்டிக் கொண்டு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது வெறியோடு பாய, அதில் சித்திரைச் செல்வன் என்ற மாணவரது காது துண்டானது. பலர் படுகாயமடைந்தனர். அதன்பிறகு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாரதிகண்ணனைச் சுற்றி வளைத்துத் தாக்கியதை ஊடகங்கள் வாயிலாக உலகமே பார்த்தது.


 இந்த உண்மைகளை, மாணவர்கள் மோதலின் நேரடி சாட்சியங்களான வழக்குரைஞர் ரஜினிகாந்த் மற்றும் குடியுரிமைப் பாதுகாப்புக் குழுவில் செயல்படும் கல்பாக்கம் அணுமின் நிலைய ஓய்வு பெற்ற விஞ்ஞானி கோபால் ஆகியோர் அளித்துள்ள வாக்குமூலங்களும், பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவினர் அளித்துள்ள அறிக்கையும் உறுதிப்படுத்துகின்றன.


 சட்டக் கல்லூரி மாணவர் மோதலுக்கு நேரடி சாட்சியமான வழக்குரைஞர் ரஜினிகாந்த் அளித்த வாக்குமூலத்தில், ""அ.தி.மு.க. தலைவர்களின் ஆதரவு பாரதிகண்ணன் குழுவினருக்கு இருப்பதை உணர முடிந்தது'' என்று கூறியிருப்பதும், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அறையில் இக்குழுவினர் தாக்குதலுக்கு முன் சதித்திட்டம் தீட்டியதாகச் செய்திகள் கசிந்திருப்பதும், சன் டி.வி.ஜெயா டி.வி. களின் ஒளிபரப்புகளும் மிகப் பெரிய சாதிக் கலவரத்துக்கு இக்கட்சிகள் திட்டமிட்டுள்ளதை நிரூபிக்கின்றன. சட்டக் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் நடப்பதற்கு முதல் நாளன்று, புழலில் உள்ள அம்பேத்கர் சிலை அசிங்கப்படுத்தப்பட்டு, சிலையின் நெற்றியில் நாமம் போட்டு, ""ஹே ராம்'' என்று எழுதி விட்டுப் போயுள்ளதும் இதை மெய்ப்பிக்கிறது.


···


"என்னதான் இருந்தாலும் ஒரு மாணவனைப் பத்து பேர் சேர்ந்து கொண்டு நாயை அடிப்பது போல அடிக்கிறார்களே, இது என்ன நியாயம்?'' என்ற உருக்கமான "நடுநிலை' முறையீடும், திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்ட அந்தக் காட்சிகளும், கடையக் கடையத் திரண்டு வரும் நஞ்சைப் போல, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான மிகப் பெரிய வன்முறையாகத் திரண்டு எழுந்து வருகின்றன. ""தாழ்த்தப்பட்டவர்கள் தாக்குகிறார்கள்; நம்மாளு அடிபடுகிறான்; போலீசு வேடிக்கைப் பார்க்கிறது'' என்கிற "பொதுக் கருத்து' கடைசித் "தமிழனின்' மண்டை வரை இறக்கப்பட்டது. திட்டமிட்டபடி, தென்மாவட்டங்களில் மாணவர்களைத் தூண்டி சாதிக் கலவரத்தைப் பற்ற வைக்க ஆதிக்க சாதிவெறியர்கள் முயற்சித்தனர்.


 ஈராயிரம் ஆண்டுகளாக பார்ப்பன  வருணாசிரம வழியில் அடிமைப்படுத்தி தாழ்த்தப்பட்டோர் மீது வன்முறையை ஏவியவர்கள், இன்று அரிதினும் அரிதாக தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஆதிக்க சாதிவெறியர்களுக்குப் பதிலடி கொடுத்ததைக் கண்டு, "ஐயோ! வன்முறை!'' எனறு பெருங்கூச்சல் போடுகிறார்கள். பாப்பாபட்டி  கீரிப்பட்டி, மேலவளவு, திண்ணியம், கயர்லாஞ்சி... என இச்சாதிவெறியர்கள் நடத்தியவையெல்லாம் வன்முறையில்லை என்றால், இதுவும் வன்முறை இல்லைதான்!


 மேலவளவில் தாழ்த்தப்பட்ட ஊராட்சித் தலைவரை வெட்டி எறிந்ததைப் போல, தேவர் ஜெயந்தி சுவரொட்டியில், சட்டக் கல்லூரியின் முன்னால் உள்ள அம்பேத்கர் பெயரையும் வெட்டுவோம் என்று கொக்கரிக்கிறார்கள் ஆதிக்க சாதிவெறியர்கள். ஏற்கெனவே மகாராஷ்டிராவில், மரத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டபோது, அதை நீக்கச் சொல்லி மராத்தா ஆதிக்க சாதிவெறியர்கள் தாழ்த்தப்பட்டோரைப் படுகொலை செய்து வெறியாட்டம் போட்டதற்கும், தற்போது இவர்கள் சென்னை சட்டக் கல்லூரியிலிருந்து அம்பேத்கர் பெயரை நீக்கி சுவரொட்டி வெளியிட்டதற்கும் தொடர்பேதும் இல்லை என்று கருத முடியுமா?


 இவ்வளவுக்குப் பின்னரும், ஆதிக்க சாதிவெறியர்களுக்கு எதிராக எந்தவொரு தாழ்த்தப்பட்ட தலைவரும் வாய்திறக்கவில்லை. ஈழத் தமிழர் படுகொலைக்கெதிராக வீரவசனம் பேசும் எந்தவொரு "தமிழினத் தளபதி'யும், இங்கே ஒடுக்கப்படும் தாழ்த்தப்பட்டவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவுமில்லை.
 "சூத்திர' கருணாநிதி அரசோ, கல்லூரி முதல்வரையும் போலீசு அதிகாரிகளையும் தற்காலிகப் பணிநீக்கம் செய்து, விசாரணைக் கமிஷன் நாடகமாடிக் கொண்டே, சட்டக்கல்லூரி மோதலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் அவர்களது பெற்றோர் உறவினர்களையும் குறிவைத்து கைது செய்து வதைக்கிறது. சாதிவெறி பிடித்து கொலைவெறித் தாக்குதலில் இறங்கிய பாரதிகண்ணன் மீது சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டுள்ள மு.க. அரசின் போலீசு, தாக்குதலுக்கு ஆளான சித்திரைச் செல்வன் மீது கொலை முயற்சி வழக்கு போட்டு, ஆதிக்க சாதிவெறியர்களுக்குத் தனது விசுவாசத்தைக் காட்டியுள்ளது. மறுபுறம், சட்டக் கல்லூரி மாணவர் மோதலைச் சாக்காக வைத்து, மாணவர்கள் அரசியல்  சமூக  பண்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான பெயரளவிலான ஜனநாயக உரிமையையும் பறித்து, சுயநிதிக் கல்லூரிகளைப் போல கொத்தடிமைக் கூடாரங்களாக மாற்றி விடவும், சட்டக் கல்லூரியை ஆளரவமற்ற இடத்திற்கு மாற்றி விடவும் ஆட்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.


 இந்நிலையில், சாதிமதவெறி அமைப்புகளைத் தடைசெய்து, கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட ஆதிக்க சாதிவெறியர்களையும், அவர்களின் புரவலர்களான சாதிவெறித் தலைவர்களையும் கைது செய்து, அவர்களின் வாக்குரிமை, இட ஒதுக்கீடு உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் ரத்து செய்யக் கோரி அனைத்து மாணவர்களும் உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து போராட்டத்தைத் தொடர வேண்டும். இத்தகைய போராட்டங்களைக் கட்டியமைக்காமல், ஆதிக்க சாதிவெறியர்களுடன் கூட்டணி கட்டிக் கொண்டுள்ள அரசையும் ஓட்டுக் கட்சிகளையும் அம்பலப்படுத்தி வீழ்த்தாமல், சாதிதீண்டாமையை ஒழிக்க முடியாது. தமிழகம் சாதிவெறியர்களின் சொர்க்க பூமியாக மாறுவதையும் தடுக்க முடியாது.


· குமார்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது