Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 மகாராஷ்டிராவின் மலேகான் நகரிலுள்ள பிகூ சதுக்கத்தில் அமைந்துள்ள மசூதி அருகே கடந்த செப்டம்பர் 29ஆம் நாளன்று ஆர்.டி.எக்ஸ். வகைப்பட்ட குண்டுவெடித்து 5 பேர் கொல்லப்பட்டனர்; 80 பேர் படுகாயமடைந்தனர். அதேநாளில் குஜராத்திலுள்ள பனாஸ்கந்தா மாவட்டத்தின் மோடசா நகரின் சுகாபஜாரில் குண்டு வெடித்து ஒரு சிறுவன் கொல்லப்பட்டான்; 10 பேர் படுகாயமடைந்தனர்.


 மலேகான் நகரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஒரு வெள்ளி நிற மோட்டார் சைக்கிள் சிதிலமடைந்து கிடந்தது. இரண்டு மர்ம நபர்கள் ஒரு பையை அந்த மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டுச் சென்றனர் என்றும் அவர்கள்தான் பயங்கரவாதிகள் என்றும் போலீசார் தமது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டனர். ரம்ஜான் பண்டிகைக்கு இரு நாட்கள் முன்னதாக மசூதி அருகே இக்குண்டு வெடிப்பு நடந்ததால், முஸ்லீம்கள் ஆத்திரமடைந்து தங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, போலீசார் மீது கல்லெறிந்து தாக்கவும் செய்தனர்.


 ஏற்கெனவே மலேகான் நகரில் 2006ஆம் ஆண்டில் முஸ்லீம்கள் மீது இந்துவெறியர்கள் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியுள்ளதால், மீண்டும் அதுபோன்ற தாக்குதல்கள் நிகழாமலிருக்க சிறுபான்மை முஸ்லீம்கள் பயம் கலந்த எச்சரிக்கை உணர்வுடனேயே வாழ்ந்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் 29 அன்று, மசூதி அருகே வெற்றிலைபாக்கு கடையை நடத்தி வரும் அன்சாரி என்ற முதியவர், தனது கடை எதிரே அனாதையாக ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டு, அக்கம்பக்கக் கடைக்காரர்களிடம் விசாரித்துப் பார்த்து யாரும் அதற்கு உரிமை கொண்டாடாத நிலையில், சந்தேகத்திற்கிடமான அந்த மோட்டார் சைக்கிள் பற்றி போலீசாருக்குத் தொலைபேசியில் தகவல் கொடுத்தார். ஆனால் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து ஐந்து பேர் கோரமாகக் கொல்லப்பட்டனர். இக்குண்டு வெடிப்பில் அன்சாரியும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


 பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் இந்திய கைக்கூலிகள் இக்குண்டுவெடிப்பை நடத்தியிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக போலீசார் வழக்கம்போலவே கதை பரப்பினர். பார்ப்பன தேசிய பத்திரிகைகளோ இதற்கு கண்ணும் காதும் வைத்து இந்திய முஜாகிதீன் குழு, ""சிமி'' எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் முதலான பாக். ஆதரவு பயங்கரவாதிகளே இக்குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளனர் என்றும், சிறுபான்மை முஸ்லிம்களை அச்சுறுத்தி தமது தலைமையை ஏற்கச் செய்வதற்காகவே இப்பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் திரைக்கதை எழுதின.


 மலேகான் குண்டு வெடிப்பு பற்றி புலன் விசாரணை செய்துவந்த மகாராஷ்டிராவின் பயங்கரவாத எதிர்ப்பு அதிரடிப் படை போலீசார், நீண்ட முயற்சிக்குப் பிறகு, தற்போது மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளோ, பாக். உளவாளிகளோ அல்ல. காவியுடை தரித்த பெண் சன்னியாசியும் அவரது கூட்டாளிகளான ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுமான இந்து வெறியர்கள்தான் அவர்கள்!


 கைது செய்யப்பட்டுள்ள பெண் சன்னியாசியான சாத்வி பிரக்யாசிங், சிவ் நாராயண் கோபால்சிங் கல்சங்ரா, ஷ்யாம் பவார்லால் சாகு ஆகிய மூவரும் தான் மலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்திய பயங்கரவாதிகள் என்பது போலீசாரின் ஆரம்ப விசாரணையிலேயே நிரூபணமாகியுள்ளது. குண்டு வைக்கப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் சாத்வி பிரக்யாவினுடையது. குண்டு வெடிப்புக்குப் பிறகு அம்மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் பெயரை மாற்ற அவர் இரகசியமாக முயற்சித்துள்ளார். அதன் பதிவு எண் போலியானது. என்ஜின், சேசிஸ் எண்கள் தெரியாத வண்ணம் அதை அவர் சிதைத்துள்ளார்.


 குண்டு வெடிப்புக்குப் பிறகு குஜராத்திலுள்ள சூரத் நகருக்குச் சென்ற இந்த பெண் சன்னியாசி, அங்கு பக்திநெறிப்படி வாழும் சன்னியாசியாக நாடகமாடியுள்ளார். 38 வயதாகும் இப்பெண் துறவி, "ஜெய் வந்தேமாதரம் ஜன் கல்யாண் சமிதி'' என்ற அமைப்பை நடத்தி வருவதாகக் காட்டிக் கொண்டு இரகசியமாகப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.


 கைது செய்யப்பட்ட மற்ற இருவரும் இந்திய இராணுவத்தில் ""மேஜர்'' பதவி வகித்து, ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரிகள். இவர்கள் இந்துவெறி பயங்கரவாத  ஆர்.எஸ்.எஸ்.இன் முன்னாள் இராணுவத்தினர் அணியைச் சேர்ந்தவர்கள். ஆர்.டி.எக்ஸ் வகை குண்டு தயாரிப்பதிலும் தொலைக்கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் குண்டுகளை வெடிக்கச் செய்வதிலும் இவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள்.


 மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இம்மூவரும் கூட்டுச் சேர்ந்து ""ராஷ்டிரிய ஜக்ரான் மன்ச்'' என்ற இந்துத்துவ அமைப்பை நிறுவிச் செயல்படுவதாகக் காட்டிக் கொண்டு, நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இரகசிய வலைப்பின்னலைக் கொண்டு இயங்கிவந்த இப்பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் பற்றியும் இவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களுக்கும் உள்ள உறவைப் பற்றியும் மகாராஷ்டிரா பயங்கர எதிர்ப்பு அதிரடிப் படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 மலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்திய இந்துவெறி பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதும், பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு, "இவர்களுக்கும் இந்துத்துவ அமைப்புகளுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை; அப்படி ஏதேனும் தொடர்பிருப்பதாக விசாரணைக்குப் பின் நிரூபணமானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்'' என்று யோக்கிய சிகாமணியைப் போல பேசுகிறார். பா.ஜ.கவிலிருந்து பிரிந்து சென்று பாரதீய ஜனசக்தி கட்சியைத் தொடங்கியுள்ள உமாபாரதியோ, "சன்னியாசியாகிய சாத்வி பிரக்யா வன்முறையில் ஈடுபட எந்த அடிப்படையும் இல்லை; இது, இந்துத்துவ சக்திகளை இழிவுபடுத்தி அவமானப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள சதி'' என்று குதிக்கிறார்.


 மலேகான் குண்டு வெடிப்பு மட்டுமல்ல; நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் குண்டு வெடிப்புகள் பலவற்றை இந்துவெறி பயங்கரவாதிகளே திட்டமிட்டு நடத்தியுள்ளனர் என்ற உண்மைகள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள் குண்டர்கள் கையிலே தடியும் திரிசூலமும் வைத்திருப்பதால் மட்டும் அவர்களைப் பயங்கரவாதிகள் என்று கருதுவதாக சிலர் நினைக்கலாம். இந்த ஆயுதங்கள் தனிநபர்களை தாக்கிப் படுகொலை செய்வதற்குத்தான் பயன்படும். ஆனால், இந்துவெறி பயங்கரவாதிகள், பெருந்திரளான கொலைவெறியாட்டம் போடவும் பயங்கரவாதப் படுகொலைகளை நிகழ்த்தவும் கையெறி குண்டுகள், நேரங் குறித்து வெடிக்கும் குண்டுகள் முதல் குண்டு வீசித் தாக்கும் ஏவுகணைகள் வரை அதிநவீன ஆயுதங்களைத் தயாரிக்கவும் கையாளவும் கற்றுத் தரும் பயிற்சி முகாம்களை இரகசியமாக நடத்துமளவுக்கு முன்னேறியுள்ளார்கள்.


 இந்துத்துவ அமைப்புகளோடு தொடர்பில்லாததைப்போல காட்டிக் கொள்ள பல்வேறு பினாமி பெயர்களில் புதிய அமைப்புகளை நிறுவி, இரகசிய வலைப்பின்னலைக் கட்டியமைத்து இயக்கி வருகின்றனர். மும்பை, குஜராத்தில் நடந்த இந்துவெறி பயங்கரவாதப் படுகொலைகளிலும், அதன்பிறகு நடந்த பல்வேறு குண்டு வெடிப்புகளிலும் இவை நிரூபணமாகியுள்ளன.


 இந்து பார்ப்பன பயங்கரவாதிகள் "தெகல்கா'' வார ஏட்டுக்கு தமது சொந்த வார்த்தைகளில் அளித்த வாக்குமூலங்களே இவற்றுக்குச் சாட்சியமாக உள்ளன. மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தின் நாண்டெட் நகரில் ஏப்ரல் 2006 மற்றும் ஆகஸ்ட் 2007இல் நடந்த குண்டு வெடிப்புகளை பஜ்ரங் தள் குண்டர்களே நிகழ்த்தியுள்ளனர் என்பதை அம்மாநிலப் போலீசே ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது.


 இவ்வாண்டு ஆகஸ்டு 24ஆம் தேதியன்று கான்பூரிலுள்ள ஒரு தனியார் விடுதியில் இரகசியமாக குண்டு தயாரித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் இருவர் மாண்டு போயினர். கான்பூர் நகர பஜ்ரங் தள் தலைவனான புபிந்தர் சிங்கும் அவனது கூட்டாளியுமே அவர்கள். இது பற்றி போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்த போது, விசாரணையைத் திசைதிருப்பும் நோக்கத்தோடு இந்துவெறியர்கள் ஒரு பீதியைக் கிளப்பினர்.


 அதன்படி, தமிழக முதல்வர் கருணாநிதியின் தலையை வெட்டச் சொன்ன விசுவ இந்து பரிசத்தின் தலைவனும் முன்னாள் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் விலாஸ் வேதாந்தி, தனக்கு "சிமி'' மற்றும் அல்கய்தா பயங்கரவாதிகளிடமிருந்து தொலைபேசி மூலம் கொலைமிரட்டல் வந்துள்ளதாக அறிவித்தான். போலீசார் அத்தொலைபேசி எங்கிருந்து வந்துள்ளது என்பதை தொலைபேசித் துறையின் உதவியுடன் கண்டறிந்தனர். கத்ரா நகர பஜ்ரங் தள் தலைவன் ரமேஷ் திவாரி மற்றும் அவனது கூட்டாளிகளே இக்கொலை மிரட்டலை இஸ்லாமிய அமைப்புகளின் பெயரில் விடுத்துள்ளனர் என்பதைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்துள்ளனர். கான்பூர் குண்டு வெடிப்பு விசாரணையைத் திசைதிருப்பவும், வேதாந்திக்குக் கூடுதல் பாதுகாப்பு தரவும் இப்படிச் செய்யுமாறு மேலிடத் தலைவர்கள் தமக்குக் கட்டளையிட்டதாக அவர்கள் விசாரணையில் உண்மையைக் கக்கியுள்ளனர்.


 பயங்கரவாதிகளால் நாட்டுக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளது என்று ஓயாமல் அலறுகிறது இந்திய அரசு. ஆம்; பேராபத்து ஏற்பட்டுள்ளது! அதுவும் காவியுடை தரித்த இந்துவெறி பயங்கரவாதிகளால் ஏற்பட்டுள்ளது என்பதையே அடுத்தடுத்து அம்பலமாகும் உண்மைகள் உணர்த்துகின்றன.
· இரணியன்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது