Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை ஒட்டியுள்ள ஜம்போ பேக் என்ற தனியார் ஆலையில் பணியாற்றும் தற்காலிகத் தொழிலாளர்கள், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிளையை இவ்வாலையில் தொடங்கியதிலிருந்து நிர்வாகத்தின் பல்வேறு அடக்குமுறைக்கும் பணிநீக்கத்துக்கும் ஆளாகி வருகின்றனர். தொழிலாளர் துறையிடமும் தொழிற்சாலை ஆய்வாளரிடமும் நிர்வாகத்தின் சட்டவிரோதச் செயல்களை தொழிற்சங்கத்தின் மூலம் புகாராகக் கொடுத்து விளக்கியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பல ஆலைகளிலும் இதேபோல முதலாளிகளின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது.

 

 குமுறிக் கொண்டிருக்கும் இவ்வட்டாரத் தொழிலாளர்களை அமைப்பாக்கி அணிதிரட்டிய பு.ஜ.தொ.மு. கடந்த 27.6.08 அன்று திருவொற்றியூர் துணைத் தலைமை தொழிற்சாலை ஆய்வாளர் அலுவலகம் முன்பாக திடீர் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. செங்கொடி ஏந்தி செஞ்சட்டையுடன் 200 பேருக்கு மேல் அணிதிரண்டு விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தைக் கண்டு அரண்டு போன போலீசும் அதிகார வர்க்கமும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறின.


       முதலாளிகளின் ஏவலாட்களாகச் செயல்படும் அரசு அதிகாரிகளின் யோக்கியதையை இப்பகுதியெங்கும் திரைகிழித்துக் காட்டி, உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்ற இத்திடீர் ஆர்ப்பாட்டம், தொழிலாளர்களின் போராட்ட உணர்வுக்குப் புதுரத்தம் பாய்ச்சியுள்ளது.


—  பு.ஜ.தொ.மு.,
திருவள்ளூர் மாவட்டம்.