Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக வீரப்போர் புரிந்தவர்களை அந்தமான், மலேயா போன்ற கண்காணாத தீவுகளுக்கு நாடு கடத்தினார்கள், அன்றைய காலனியாதிக்க வாதிகள். அவ்வீரர்களை தாய்நாட்டில் இருந்து நிரந்தரமாய்ப் பெயர வைப்பதன் மூலம் எதிர்ப்புணர்வைக் கருகச் செய்து விடலாம் என்று கணக்குப் போட்டனர். அன்று மட்டுமல்ல, இன்றும் ஆளும் வர்க்கங்கள் உலகெங்கிலும் இதே போன்ற பல ஒடுக்குமுறைகளைத்தான் ஏவி வருகின்றன.


பெரு நாட்டில் ''ஒளிரும் பாதை'' என்றழைக்கப்படும் மாவோயிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அபமேல் கன்சலாவ் மீது அந்நாட்டின் ஆளும் வர்க்கம் சதிக்குற்றம் சுமத்தி, அவரை நாடு கடத்திச் சான் லாரன்சோ தீவில் சிறை வைத்துள்ளது.


பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று அறிவித்து 2001 முதல் தான் நடத்தி வரும் நரவேட்டையில், உயிருடன் பிடிபட்டவர்களை எல்லாம் கொண்டு வந்து கியூபா எல்லையை ஒட்டிய குவாண்டனாமோ சிறையில் அடைத்து, அமெரிக்க அரசு சித்திரவதை செய்து வருகிறது. அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கும் ஈராக்கியர்களை அபுகிரைப் சிறைச்சாலையில் அடைத்து வக்கிரமான வழிகளில் சித்திரவதை செய்து வருகின்றது.


குவாண்டனாமோ மற்றும் அபு–கிரைப் சித்திரவதைகள் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கி அமெரிக்க பயங்கரவாதம் உலகெங்கும் அம்பலமானவுடன், அது புது வடிவில் தனது அடக்குமுறையைக் கையாளத் தொடங்கியுள்ளது. அதுதான், மிதக்கும் சிறைச்சாலை!


அல்காய்தா, தாலிபான் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்டோ, அல்லது பயங்கரவாதி என்ற சந்தேகத்தின் பேரிலோ கைது செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் அமெரிக்கச் சிறைகளில் அடைக்கப்படுவதில்லை. நீதிமன்றத்திலும் முன்னிறுத்தப்படுவதில்லை. யு.எஸ்.எஸ். பெலிலை, யு.எஸ்.எஸ். பட்டான் உள்ளிட்ட 17 அமெரிக்கப் போர்க்கப்பல்களில் அவர்கள் அடைக்கப்பட்டு பெருங்கடல்கள் நெடுக அலைய விடப்படுகின்றனர். அக்கப்பல்களில் நடத்தப்படும் வன்கொடுமைகளால் குற்றுயிராக்கப்பட்டு, அவர்களில் தாக்குப்பிடித்தவர்கள் மட்டும் அமெரிக்க விசுவாச நாடுகளின் கரைகளில் இருக்கும் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர். கைதானவர்களின் எண்ணிக்கையை மறைக்கவும், கைதானவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை மறைக்கவும் இந்தப் புது உத்தியை மேற்கொண்டு வருகிறது, பயங்கரவாத அமெரிக்கா.


ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இயங்கிவரும் ''ரிப்ரீவ்'' எனும் மனித உரிமை அமைப்பால் மிதக்கும் சிறைகள் பற்றிய நெஞ்சை உறையச் செய்யும் பல கொடுமைகள் அண்மையில் வெளிவரத் தொடங்கி உள்ளன. அமெரிக்க அரசு முதலில் இச்செய்திகளை வதந்திகள் என மறுத்தது. ஆனால், அமெரிக்க இராணுவத்தின் இரகசிய அறிக்கைகள், ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுக்களின் அறிக்கைகள் மற்றும் கைதிகளின் வாக்குமூலங்கள் ஆகியன மிதக்கும்சிறைகள் இருப்பதை உறுதி செய்கின்றன.


அமெரிக்க கடற்படை செய்தி தொடர்பாளரான கமான்டர் ஜெப்ரீ கார்டன், ''அமெரிக்க போர்க்கப்பல் எவற்றிலும் சிறை வசதி ஏதுமில்லை'' என்றார். அவரே ''அவ்வாறு கைதிகளை அடைப்பது கைதானவுடன் சில நாட்களுக்கு மட்டும்தான்'' என்றும் ''சில நேரங்களில் கப்பல்களில் கொண்டு செல்லப்படுவர்'' என்றும் பூசி மெழுகி இருக்கிறார்.


அமெரிக்க அதிபர் புஷ் 2006இல் ''இரகசியச் சிறைகள் எல்லாமே காலியாகத்தான் உள்ளது'' என்றும், ''மிதக்கும் சிறைக்கொடுமை கைவிடப்பட்டு விட்டது'' என்றும் சொல்லியபோதிலும், 2006க்குப் பிறகு மட்டும் 200 முறை அவ்வாக்குறுதி மீறப்பட்டு சிறைக்கொடுமைகள் தொடர்கின்றன என்று மனித உரிமை அமைப்புகள் அம்பலப்படுத்துகின்றன.


குவாண்டனாமோ சிறையில் இருக்கும் ஒரு கைதி தனது சக கைதியைப் பற்றி சாட்சியம் சொல்லும்போது, ''கப்பல் மூலம் அழைத்து வரப்பட்ட அவருடன் சேர்த்து 50 பேர்கள் அடுத்த கொட்டடியில் இருந்தனர்'' என்றும் ''அவர்களைக் கப்பலின் கீழ்த்தளத்தில் அடைத்துப் பூட்டி இருந்தனர்'' என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர்களைக் கப்பல் சிறைகளில், குவான்டனாமோவை விடக் கொடுமையாக அடித்து உதைத்துச் சித்திரவதை செய்துள்ளனர்.


கப்பல்களில் அடைக்கப்பட்ட கைதிகள் கண்காணாத இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு வதைக்கப்பட்டு வருகின்றனர். யு.எஸ்.எஸ். ஆஷ்லான்ட் எனும் கப்பல் சோமாலியா நாட்டின் கடற்கரையில் 2007இல் ரோந்தில் ஈடுபட்டது. அல்காய்தாவினரைப் பிடிக்கும் நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்த அக்காலக்கட்டத்தில், சோமாலியா, கென்யா, எத்தியோப்பியா படையினரால் அல்காய்தா என சந்தேகத்தின்பேரில் பிடிபட்டவர்கள் அமெரிக்க உளவமைப்புகளான சி.ஐ.ஏ., எஃப்.பி.ஐ.யின ரால் பிடித்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர். இந்நாடுகளின் சிறையில் இருந்து அப்போது காணாமல் போனவர்கள் மட்டும் 100 பேர். அப்போது ஏடன் வளைகுடாவில் ரோந்து வந்த கப்பல்களிலும், ஆஷ்லாண்டு கப்பலிலும் வைத்து இவர்கள் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என்கிறது ரிப்ரீவ்–வின் அறிக்கை.


இந்தியப் பெருங்கடலில் 25 சதுர மைல் பரப்பில் அமைந்திருக்கும் டிகோ கார்சியா தீவு, பிரிட்டிஷ் – அமெரிக்க இராணுவத்தளமாகும். 15 கப்பல்கள், இராணுவ வீரர்களைத் தவிர மனித நடமாட்டமே இல்லாத இத்தீவைச் சுற்றிப் போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டு, அவற்றில் அமெரிக்காவால் வேட்டையாடப்பட்ட விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.


அமெரிக்க கடற்படை செய்தி தொடர்பாளரான கமான்டர் ஜெப்ரீ கார்டன், ''அத்தீவுக்கருகில் நிலைகொண்டிருக்கும் சிறைக்கப்பல்கள் குறித்து ஏதும் சொல்ல முடியாது'' என்று கூறிவிட்டார். ஆனால், பயங்கரவாதம் குறித்த ஐ.நா.வின் சிறப்புப் பிரிவின் தலைவரான மான்பிரெட் நோவாக், ''இத் தகைய சித்திரவதைக் கப்பல்கள் டிகோ கார்சியா தீவுக்கருகில் உள்ளன'' என்று 2005 ஜூனிலேயே சொல்லி இருக்கிறார்.


அத்தீவில் அமெரிக்கப் போர் விமானங்கள் விசாரணைக் கைதிகளுடன் இரண்டு முறை தரையிறங்கிய விசயம் வெளியே தெரிய வந்துள்ளது. தற்போது அமெரிக்க அயலுறவு அமைச்சகம் அவ்வாறு தரையிறங்கிய விமானங்கள், அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் ஆகியவற்றின் பட்டியலைத் தயாரிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது.


அமெரிக்காவில் அல்காய்தா எனக் குற்றம் சாட்டப்பட்ட ஜான் வாக்கர் லிந்த், 2001 இறுதியில் கைது செய்யப்பட்டு யு.எஸ்.எஸ். பலிலியம் கப்பலில் அடைக்கப்பட்டு, பின்னர் 2002 ஜனவரியில் பட்டான் கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பதும் அம்பலமாகியுள்ளது.


டிகோ கார்சியா தீவைத் தவிர சி.ஐ.ஏ.வின் இரகசிய சித்திரவதைக் கூடங்கள் தாய்லாந்து, ஆப்கான், போலந்து, ருமேனியா நாடுகளில் இயங்கி வருகின்றன. மேலும் சிரியா, மொராக்கோ, ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளிலும் கைதிகள் இரகசிய இடங்களில் அடைக்கப்பட்டு, அமெரிக்கப் படையினரால் வதைக்கப்பட்டு வருகின்றனர். தொழிலும் வர்த்தகமும் சுரண்டலும் அடிமைத்தனமும் மட்டுமல்ல; பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் சிறைசித்திரவதைக் கொடுமைகளையும் உலகமயமாக்கியுள்ளது அமெரிக்க ஏகாதிபத்தியம்.


இன்றுவரை நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படாத 26 ஆயிரம் பேர் இரகசியச் சிறையில் இருப்பதாய் அமெரிக்க அரசு சொல்லி இருப்பினும், 2001 முதல் கைது செய்யப்பட்டவர்கள் 80 ஆயிரம் என்கிறது மனித உரிமை அமைப்புகளின் அறிக்கை. அந்த 80 ஆயிரம் பேரும் எங்கே உள்ளனர்? அவர்களின் கதி என்ன? என்பதை அமெரிக்கா முழுமையாகத் தெரிவிக்க வேண்டும் எனும் குரல் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி யுள்ளது. உலகின் கொடூரமான பயங்கரவாதி அமெரிக்காதான் எனும் உண்மையும் பலருக்குப் புரியத் தொடங்கி யுள்ளது.


· இளநம்பி

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது