Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 "கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணமேடையில் வை'' என்பதைப் போல நடந்து கொள்கிறது, அமெரிக்க மேலாதிக்க ஏகாதிபத்தியத்தின் அடிமையான மன்மோகன் சிங் தலைமையிலான மைய அரசு. நாடு மீளமுடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாதவாறு ஜூன் மூன்றாம் வாரம் பணவீக்கம் பதினொரு சதவீதத்துக்கும் மேலே எகிறி விட்டது. இதனால் அடிப்படைத் தேவைகளான உணவு தானியங்கள், விவசாய இடுபொருட்கள் முதல் இரும்பு, சிமெண்ட் மற்றும் பெட்ரோலிய எரிசக்திப் பொருட்கள் வரை அனைத்தின் விலையும் நாளும் எகிறிக் கொண்டே போகிறது.

விவசாயப் பொருளாதார நெருக்கடியும் உணவு நெருக்கடியும் முற்றி, அவற்றின் விளைவாக விவசாயிகளின் எழுச்சியும் உணவுக் கலகங்களும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அடுத்தடுத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் நாடாளுமன்ற இடைத் தேர்தல்களிலும் படுதோல்விகளைக் கண்டு வருகிறது. இன்னும் பத்து மாதங்களில் கிரமமான கால முறைப்படியே தேர்தல்கள் வந்தால் கூட, மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பும் அருகிப் போய்விட்டது.


 அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமலாக்குவதை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் கூட, மன்மோகன் சிங் தலைமையிலான மைய அரசுக்கு தாங்கள் அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம்; ஆட்சி கவிழ்ந்து விடும் என்று "இடதுசாரி'க் கூட்டணிக் கட்சிகள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளன. இருந்தபோதும், ""என்ன ஆனாலும் சரிதான்; பிரதமர் பதவியிலிருந்து விலக நேர்ந்தாலும், ஆட்சியே கவிழும் நிலை ஏற்பட்டாலும் அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டை அமலாக்கியே தீரவேண்டும்'' என்பதில் உறுதியாக இருக்கிறார், மன்மோகன் சிங். முதுகெலும்பே இல்லாத இந்த மண் புழுவுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு துணிச்சல்? உலகையே கட்டி ஆளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிர்  ஆணவத்தோடு அது கொடுக்கும் நிர்பந்தம், அதனிடம் இந்த அடிமை காட்டும் விசுவாசம்  இவற்றின் வெளிப்பாடுதான் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எப்பாடுபட்டாவது நிறைவேற்றியே தீருவோம் என்று மன்மோகன் சிங்  சோனியா கும்பல் அடம்பிடிப்பதன் இரகசியம். இதற்காக அந்தக் கும்பல் அடைந்த ஆதாயம் பற்றிய உண்மை பின்னொரு காலத்தில் அம்பலமாகும். அல்லது அணுசக்தி ஒப்பந்தத்தினால் போர்வெறி பிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பீரங்கி வண்டிச் சக்கரத்தில் பிணைக்கப்பட்டு இந்த நாடு இழுபடும்போது பல உண்மைகள் தெரிய வரும்.


அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நலன்களுக்கு மிகமிக இன்றியமையாதது என்றும், இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலாக்கப்படாவிட்டால் இந்தியா ஒரு உலகப் பொருளாதார வல்லரசாக பாய்ந்து முன்னேறுவது தடைப்பட்டுப் போகும் என்றும் மன்மோகன்  சோனியா கும்பல் மட்டுமல்ல, அதற்கு எதிர்த்தரப்பில் நிற்கும் அரசியல் எதிரிகளான அத்வானி  மோடி கும்பல் கூட வாதிடுகிறது. ஆனால் உண்மையோ வேறுவிதமாக உள்ளது. ""இந்தியா தற்போது மொத்தம் 1,27,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு நிகர உற்பத்தி வளர்ச்சி விகிதப்படி 2016/17 ஆம் ஆண்டு 3,37,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையை எட்டிவிட வேண்டும். இந்த அளவு மின் உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை என்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி (யாருடைய நலனுக்கான பொருளாதார வளர்ச்சி என்பது ஒருபுறம் இருந்த போதிலும்) கடுமையாக பாதிக்கப்படும். கடுமையான எரிசக்தி (மின்சார) பற்றாக்குறை  நெருக்கடி ஏற்படும்; அந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அதாவது நாட்டின் எதிர்கால எரிசக்தித் தேவையை நிறைவேற்றுவதற்கான அவசியத்துக்காகத்தான் அமெரிக்காவுடனான இந்த அணுசக்தி ஒப்பந்தம். இது முழுக்க முழுக்க பொருளாதார ரீதியிலான சிவிலியன் தேவைக்கான ஒப்பந்தம் தான். இராணுவ ரீதியிலானதோ, அரசு தந்திர ரீதியிலானதோ பிற பொருளாதார ரீதியிலானதோ இல்லை. அணு ஆயுதத் தயாரிப்புக்கான சோதனை உட்பட இந்தியாவின் உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளைக் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடியதோ  அல்ல'' என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.


இவர்கள் வாதிடுவதைப் போல அமெரிக்காவுடனான இந்திய அணுசக்தி ஒப்பந்தம் இந்திய நாட்டு நலன்களுக்கானது தான் என்றால், அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்போ, பின்போ நாட்டு மக்கள் முன் பகிரங்கமாக வைத்து, நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் திறந்த, விரிவான வாதங்கள் நடத்துவதற்கு பதில் முற்றிலும் இரகசியமாக  சதித்தனமாக ஒப்பந்தம் போட்டுக் கொண்டது ஏன்? ஜூன் 25க்குள் சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு, பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டே தீரவேண்டும் என்று துடித்த மன்மோகன்  சோனியா கும்பல், அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குக் கூட காட்ட மறுப்பது ஏன்? அந்நிய ஏகாதிபத்திய நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியும் அந்த இரகசிய ஒப்பந்த விவரம் இவர்களுக்கு தெரியக் கூடாதா? ""தேசிய நலன்களுக்கான இரகசிய உடன்பாடுகள் நிறைந்த'' தாகக் கூறப்படும் அந்த ஒப்பந்தம், உண்மையில் ஒரு தேசத் துரோக ஒப்பந்தம் தான். அதனால் மன்மோகன்  சோனியா கும்பல் அதை இரகசியமாக வைப்பதிலும் அமலாக்குவதிலும் இவ்வளவு அக்கறை காட்டுகிறது.


இந்த உண்மை இந்து மதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ்.  பா.ஜ.க. தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் தெரியும். ஆனால், ""இந்திய தேசிய நலன்களுக்கான''தென்று ஏகபோக உரிமை கொண்டாடும் இந்த கும்பல், உண்மையில் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கவில்லை. இதைப் பகிரங்கமாகவே ஒப்புக் கொள்ளும் அக்கும்பல் அந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் ஆதாயத்தில் தனக்கும் ஒரு பங்கு வேண்டும் என்பதில் தான் குறியாக இருக்கிறது. ஒப்பந்தத்துக்குத் தாங்கள் எதிரானவர்கள் அல்ல; தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அணுஆயுதப் பரிசோதனைக்கான இந்தியாவின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் மறுபரிசீலனைக்குப் பிறகு ஒப்பந்தத்தை முடிப்போம் என்கிறது.


இதைப் போலத்தான், நாட்டின் மின் உற்பத்தித் தேவைக்கு மிகவும் இன்றியமையாதது என்று கூறி அமெரிக்காவின் ""என்ரான்'' நிறுவனத்துடன் (ஜனநாயக முற்போக்கு சக்திகளின்)  கடும் எதிர்ப்பையும் மீறி ஒரு துரோகத்தனமான ஒப்பந்தம் போட்டுக் கொண்டது, மகாராட்டிராவிலும் மத்தியிலும் ஆட்சியில் இருந்த காங்கிரசு அரசு. அந்த ஒப்பந்தம் இலஞ்ச ஊழல் நிறைந்த தேச துரோகமென்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. கும்பல் என்ரானுடன் மறுபேரம் பேசி  மறுஒப்பந்தம் போட்டுக் கொண்டது. பின்னர் அந்தத் திட்டமே, இந்திய நாட்டை அமெரிக்க மின்நிறுவனம் பகற்கொள்ளையடிப்பது என்று நிரூபணமாகியது. இதைப்போன்றே துரோகமிழைத்து அமெரிக்காவுடனான மறுபேரம், மறுஒப்பந்தம் போட்டு ஆதாயம் அடையவே இந்து பாசிச ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. கும்பல் துடிக்கிறது. அதனால், தற்போதைய ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக நாடகமாடிக் கொண்டே, ஒப்பந்தத்தை அமலாக்காமல் போனால் மன்மோகன் சிங்கின் நம்பகத்தன்மையும் அதிகாரமும் ஆளுமையும் பறிபோய் விடும் என்று உசுப்பேற்றி வருகிறது.


நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பராமரிப்பதற்கு மின் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்க வேண்டும் என்பது உண்மை தான் என்றபோதும், அதற்கு அணுசக்தி மின்உற்பத்திதான் ஒரே வழி, சிறந்த வழி என்பதும், அதையும் அமெரிக்காவுடனான ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அந்நாட்டிலிருந்து அணு உலைகளையும் அணுசக்திக்கான மூலப் பொருட்களை இறக்குமதி செய்துதான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதும் உண்மையல்ல.


2006ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 3 சதவீதம். அதாவது 3,900 மெகாவாட் மட்டுமே அணு மின்சக்தி ஆகும். இந்திய அமெரிக்க அணுமின்சக்தி ஒப்பந்தம் முழுமையாகவும் சரியாகவும் அமலானால் கூட, 2016ஆம் ஆண்டில் மொத்த மின் உற்பத்தியான 3,36,000 மெகாவாட் என்ற அளவில் 6 சதவீதம் மட்டுமே — அதாவது 20,000 மெகாவாட் தான் அணு மின்சக்தியாக இருக்கும். இதுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகவும் இன்றியமையாததாகவும் இருக்கும் என்று அமெரிக்க தாசர்கள் புளுகித் தள்ளுகிறார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய அணு உலைகள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும். இதனால் அமெரிக்க ஏகபோக முதலாளிகளும் அவர்களின் கூட்டாளிகளான இந்தியத் தரகு முதலாளிகளும் கொழுப்பதற்கான வழிவகை செய்யப்படும்.


அதுமட்டுமல்ல, அணு மின் உற்பத்தி அமெரிக்காவிலேயே இலாபகரமானதாயில்லை என்பதால், கடந்த 30 ஆண்டுகளில் புதிய அணுமின் திட்டங்கள் எதுவும் அங்கு நிறுவப்படவேயில்லை. அங்கேயே காலாவதியாகிப்போன தொழில்நுட்ப அடிப்படையிலான கழித்துக் கட்டப்பட்ட அணுமின் உலைகளை நமது நாட்டின் தலையில் கட்டுவதற்கு அமெரிக்கா எத்தணிக்கிறது. அதோடு, இந்தியாவின் அணுமின் உற்பத்தி, மற்றும் அணுஆயுதச் சோதனை மற்றும் தயாரிப்புக்கான மூலப்பொருளான செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தி ஆகிய அனைத்தையும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது, உலகப் போர் வெறியனான அமெரிக்காவின் உலக மேலாதிக்க யுத்ததந்திரத்தின் சேவகனாக இந்தியாவை மாற்றிக் கொள்வது ஆகிய உள்நோக்கங்களுக்காகவும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈடேற்றிக் கொள்ள முயலுகிறது.


இதற்கு நேர்மாறாக ஒப்பீட்டு ரீதியில் மலிவான செலவில், நாட்டின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையானவாறு நீர்மின் சக்தி, அனல் மின்சக்தி மற்றும் சொந்த தொழில்நுட்ப அடிப்படையிலான அணு மின்சக்தி ஆகியவற்றை நமது நாடு சுயசார்பாகவே வளர்த்துக் கொள்ள முடியும் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அனல்மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி ஆதாரம் நமது நாட்டிலேயே இருக்கும் அதேசமயம், மொத்தம் 1,50,000 மெகாவாட் அளவு நீர்மின் உற்பத்திக்கான வாய்ப்பிருந்த போதும் 33,000 மெகாவாட் அளவே நீர்மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. நேபாளம், பூட்டானுடன் தகுந்த ஒப்பந்தங்கள் அடிப்படையில் 55,000 மெகாவாட் நீர்மின் சக்தியை இறக்குமதி செய்து கொள்ளவும் முடியும். ஈரானுடனான குழாய் வழி பெட்ரோலிய எரிவாயு இறக்குமதி திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதன் மூலம் நாட்டின் எரிசக்தித் தேவையை முற்றிலுமாகச் சமாளித்துவிட முடியும்.


இவ்வளவு இருந்தபோதும், அமெரிக்காவுடனான அடிமைத்தனமான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவது என்று மன்மோகன்  சோனியா மட்டுமல்ல. அத்வானி  மோடி முதலிய துரோகிகளும் உறுதியாக இருக்கின்றனர். யார் அமெரிக்க எஜமானனுடன் விசுவாசமாக நடந்து கொண்டு பேரங்கள் பேசி அதிக ஆதாயம் அடைவது என்பதில்தான் இவ்விரு கும்பல்களுக்கிடையில் வேறுபாடு உள்ளது. ஆனால் மதவாத சக்திகளை எதிர்ப்பதுதான் முதன்மையானது என்று கூறிக் கொண்டு போலி சோசலிச, போலி கம்யூனிச, போலி மார்க்சிச  இடதுசாரிக் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுடன் ஊடலும் கூடலுமான உறவு வைத்துக் கொண்டு, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கும் அதேசமயம், இந்த அரசு கவிழ்ந்து போகவும் விடமாட்டோம் என்று சந்தர்ப்பவாத நாடகமாடுகிறது. ஆரம்பத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதாகத் தொடங்கிய இடதுசாரி கூட்டணி, பிறகு அதன் அமலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், ஒப்பந்தம் குறித்த தமது கவலைகளை  சந்தேகங்களைப் போக்க வேண்டும் என்றும் இறங்கி, இதற்காக ஒப்பந்தத்தையும், அமெரிக்காவின் ""ஹைட்'' சட்டத்தையும் ஆராய்வதற்கான கூட்டுக் கமிட்டி அமைப்பது என்பதை ஏற்றுக் கொண்டது. சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் நிபந்தனைகளை ஏற்கும் ஒப்பந்த நகல் தயாரிப்பதையும் ஏற்றுக் கொண்டது. இப்போது இந்த நகலை இறுதியாக்கி இந்தியா கையொப்பமிட்டு விட்டால் போதும்; அமெரிக்க நாடாளுமன்றம் இந்தியாவுடனான தனது அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றி விடும். அப்புறம் அது அமலுக்கு வந்துவிடும். இப்போது இந்த இறுதி நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தவிடத்தான் இடதுசாரிக் கூட்டணி எத்தணிக்கிறது.


நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் எரிசக்தித் தேவையை எப்படி உத்தரவாதப்படுத்துவது என்ற அமெரிக்கத் தாசர்களின் வாதத்துக்குள் அரசியல் நிர்பந்தம் காரணமாக சிக்கிக் கொண்டு விட்ட இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளுக்கு இந்த விவகாரத்திலும் சமசர சரணடைவு தவிர வேறு வழி கிடையாது. ஆனால், நாட்டுக்குத் தேவையானது எரிசக்தித் தேவையை உத்தரவாதப்படுத்துவதல்ல; எரிசக்தித் துறையின் சுயசார்பும் இறையாண்மையும், மறுகாலனியாதிக்கத்திலிருந்து விடுதலையும்தான்.


· ஆர்.கே.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது