Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பொதுவாக இடுகாடுகளில் எந்தவொரு கல்லறையுமே, புதைக்கப்பட்டவர்களின் பெயர், பிறந்த தேதி, இறந்த தேதியுடன்தான் காணப்படும்; அல்லது அந்தக் கல்லறையில் புதைக்கப்பட்டிருப்பது யார் என்ற விவரமாவது உறவினர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், ஆயிரக்கணக்கான பிணங்கள் வெறுமனே எண்களை மட்டும் அடையாளமாகக் கொண்டு புதைக்கப்பட்டு வரும் கொடுமை காஷ்மீரில் நடந்து வருகிறது.


 காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் ரெகிபோரா கிராமத்தின் இடுகாட்டில்தான் இவ்வாறு எண்கள் மட்டுமே கல்லறைகளின் அடையாளமாக உள்ளன. கல்லறைகளில் புதைக்கப்பட்டிருப்பது யார் யார் என்பது அந்தக் கிராமத்தில் இருப்பவர்களுக்கோ தெரியாது. "தியாகிகளின் கல்லறை' என்று அழைக்கப்படும் இந்த இடுகாட்டில் ஜூன் 26, 1995 அன்று நான்கு ""எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின்'' பிணங்களைப் போலீசார் புதைக்கக் கொண்டு வந்ததிலிருந்து இது நடைமுறையில் உள்ளது. இன்று வரை ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் "பாகிஸ்தான் பயங்கரவாதிகள்' என்ற பெயரில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டு,  இங்கு புதைக்கப்பட்டிருக்கின்றனர்.

 

 ""துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட பிணங்களே இங்கு வருகின்றன. பெரும்பாலும் அடையாளம் தெரியாதவாறு சிதைந்து போயிருக்கும் அவற்றைப் போலீசு அதிகாரிகளின் ஆணைக்கேற்ப நாங்கள் புதைத்து விடுவோம்'' என்கிறார் இக்கல்லறையை நிர்வகிக்கும் குழுவின் தலைவரான முகமது அக்பர் ஷேக். இக்குழு புதைக்கப்படும் பிணங்களைப் புகைப்படமெடுத்து ஆவணமாக்குவதற்கு முயற்சித்தது. ஆனால், இந்த முயற்சி இராணுவத்தால் தடை செய்யப்பட்டது. இறந்து போனவர்களைப் பற்றிய விவரங்கள் குப்வாராவில் உள்ள காவல் நிலையத்தில் இருக்கின்றன என்று தடைக்கான காரணம் கூறப்பட்டது. ""யாரேனும் காணாமல் போன தனது உறவினரை தேடிக் கொண்டு குப்வாரா காவல் நிலையத்திற்குச் சென்றால், அவர்கள் புகைப்படங்களைக் காட்டுவார்கள். அடையாளம் கண்டு கொண்டால் அவர்களிடம் கல்லறையின் அடையாள எண் தரப்படும். ஆனால் அங்கு புதைக்கப்பட்டிருப்பதோ, பெரும்பாலும் வெளிநாட்டுப் பயங்கரவாதிகள்தான்'' என்கிறார் ஒரு போலீசு  அதிகாரி.


 ஆனால், காஷ்மீரில் காணாமல் போனவர்களின் பெற்றோர்களோ, யூரி மாவட்டத்தைச் சேர்ந்த "மறைக்கப்பட்ட உண்மைகள்' எனும் உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ""இது வடிகட்டிய பொய். அங்கு புதைக்கப்பட்டிருப்பது பயங்கரவாதிகளல்ல. காஷ்மீரில் காணாமல் போனவர்கள்தான்'' என்கிறார்கள். யூரியில் மட்டும் இதைப் போன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத கல்லறைகள் இருப்பதாக உண்மை கண்டறியும் குழு கூறுகிறது. இந்தத் தகவல் வெளியான பிறகு சிறீநகரில், மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள். அவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் போலீசு கலைத்தது.


 சிறீநகரை ஒட்டியுள்ள கந்தர்பால் மாவட்டத்தில் ""வெளிநாட்டுப் பயங்கரவாதிகள்'' எனப் புதைக்கப்பட்ட 5 பேரினுடைய பிணங்களைத் தோண்டி எடுத்து விசாரணை செய்தபோது, அவை போலி மோதல்களில் கொல்லப்பட்ட அப்பாவிகளுடைய பிணங்கள் என்ற உண்மை தெரியவந்தபோதுதான், "அடையாளம் தெரியாதவர்களின் கல்லறைகள்' உலகுக்குத் தெரிய வந்தது. இதனையொட்டி ஒரு போலீசு உயரதிகாரியின் மீதும் அவரது ஐந்து சகாக்களின் மீதும் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.


 காணாமல் போன பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காஷ்மீரிகள், தங்களுடைய உறவினர்கள், உயிரோடிருக்கிறார்களா, சிறையிலிருக்கிறார்களா என்ற தகவல்கள் எதுவுமே தெரியாமல் மனதளவில் அனுபவித்து வரும் வேதனை சொல்லி மாளாது. அவர்களில் ஒருவர்தான் தாகிரா பேகம். 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரமுல்லாவிலுள்ள தனது சொந்த கிராமத்திலிருந்து டில்லிக்கு சென்ற தாகிராவின் கணவர் வீடு திரும்பவேயில்லை. பதறிப் போன தாகிராவின் குடும்பத்தினர், அவரைப் பல இடங்களிலும் தேடியலைந்தனர். காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகக் கூறிய போலீசார், மாநிலம் முழுக்க வெவ்வேறு சிறைகளுக்கு அலைக்கழித்தனர். ஆனால் எந்தச் சிறையிலும் அவர் இல்லை. போலீசு விசாரணையில் எந்தத் தகவலுமே கிடைக்காததால், அவரின் பெயர் காணாமல் போனவர்களின் பட்டியலில் சேர்ந்துவிட்டது.


 தனது கணவர் உயிரோடிருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்பதை அறிய முடியாமல் வாழ்ந்து வரும் பெண்களைக் குறிப்பிடுவதற்காக "அரை விதவை' எனும் வித்தியாசமான சொல் 1990களில் காஷ்மீரில் உருவானது. தாகிராவைப் போன்ற "அரை விதவைகள்' காஷ்மீரில் இன்று ஏராளமாய் உள்ளனர்.


 கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீரில் நடைபெற்று வரும் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் "தீவிரவாதிகள்', "எல்லை தாண்டிய பயங்கரவாதிகள்' என்ற பெயரில் இந்திய இராணுவத்தாலும் போலீசாலும்  தினமும் அங்கு நடத்தப்படும் படுகொலைகள், தேசப் பாதுகாப்பு நடவடிக்கைகளாகச் செய்தித்தாள்களால் சித்தரிக்கப்படுகின்றன. பரிசுப் பணத்திற்காகவும், பாராட்டு, பதவி உயர்வுகளுக்காகவும், பல அப்பாவிப் பொதுமக்களைப் பச்சையாகப் படுகொலை செய்து, அவர்களுக்குத் தீவிரவாத முத்திரை குத்தி வந்த இந்திய இராணுவத்தின் களவாணித்தனங்கள் இதற்கு முன்பே பல சமயங்களில் அம்பலப்பட்டுள்ளன. தொடர்ந்து பச்சைப் படுகொலைகளைச் செய்துவரும் இந்திய இராணுவம், காஷ்மீரையே கல்லறையாக மாற்றிக் கொண்டிருக்கிறது.


· பாவெல்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது