Language Selection

புதிய ஜனநாயகம் 2008

நேபாள அரசியலில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. நேபாள மாவோயிசக் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராக அந்நாட்டு நேபாளி காங்கிரசு, நேபாள ஐக்கியக் கம்யூனிச (மார்க்கியலெனினிய) கட்சி மற்றும் நேபாளத்தில் உள்ள தேசிய சிறுபான்மை இனமான மாதேசி மக்களதிகார அரங்கம் ஆகிய பிற்போக்கு, சமரச, இனவாதக் கட்சிகள் ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துக் கொண்டு, குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் அரசியல் நிர்ணய சபைத் தலைவர் ஆகிய பதவிகளைக் கைப்பற்றிக் கொண்டுவிட்டன.

கடலூரில், பெண்களுக்காக இயங்கும் ஒரே கல்லூரியாக, பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி உள்ளது. தொன்மை வாய்ந்த இக்கல்லூரியில் தொடக்கத்தில் 400500 பேராக இருந்த மாணவிகளின் எண்ணிக்கை, தற்போது 2000 பேராக உயர்ந்துள்ளது. இதற்கேற்ப இக்கல்லூரியில் அடிப்படை வசதி மற்றும் போதிய அளவுக்குப் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் இல்லை. இதுபற்றி மாணவிகளும், ஆசிரியர்களும் கல்லூரி முதல்வரிடம் பலமுறை முறையிட்டு, கடந்த நான்கைந்து ஆண்டுகளாக அவ்வப்போது போராடியும் கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இராசஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் கடந்த மே 13 அன்று நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பான விசாரணையானது, சி.பி.ஐ., ரா, ஐ.பி. உள்ளிட்ட அனைத்துப் புலனாய்வு அமைப்புகளும் காவிமயமாகியிருப்பதை மீண்டுமொருமுறை அம்பலப்படுத்திக் காட்டி விட்டன. இக்குண்டு வெடிப்புகள் நடந்த மறுநிமிடமே, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்இதொய்பா, வங்காள தேசத்தைச் சேர்ந்த ஹர்கத் அல்ஜமாத்இஇஸ்லாம், இந்திய முஜாஹிதீன் உள்ளிட்ட சில முசுலீம் தீவிரவாத அமைப்புகள் மீது பழி போடப்பட்டது. குண்டு வைத்த சதிகாரர்கள் என விளம்பரப்படுத்தப்பட்டு, ஓரிரு முசுலீம்களின் உருவப் படங்கள் வெளியிடப்பட்டன. இராசஸ்தான் மாநில போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், 500 முசுலீம்கள் கைது செய்யப்பட்டனர்.

காரிருள் சூழ்ந்தாற்போல எங்கும் புகை மூட்டம்; இந்தியத் தூதரகக் கட்டிடம் சுக்கலாக நொறுங்கியது; தாலிபான்களின் மனிதவெடிகுண்டுத் தாக்குதலால் காபூல் நகரமே அதிர்ந்தது. தெருவெங்கும் சதைக் கோளங்களாக மனித உடல்கள் சிதறிக் கிடந்தன். வாகனங்கள் அப்பளமாக நொறுங்கிச் சிதறின. இதுவரை கண்டிராத மிகக் கொடிய பயங்கரவாதத் தாக்குதல் என்று அலறியது இந்திய அரசு. அமெரிக்காவில் செப்.11., 2001இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நடந்துள்ள மிகப்பெரிய தாக்குதல் இதுதான் என்று பத்திரிகைகள் வர்ணித்தன.

வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக வீரப்போர் புரிந்தவர்களை அந்தமான், மலேயா போன்ற கண்காணாத தீவுகளுக்கு நாடு கடத்தினார்கள், அன்றைய காலனியாதிக்க வாதிகள். அவ்வீரர்களை தாய்நாட்டில் இருந்து நிரந்தரமாய்ப் பெயர வைப்பதன் மூலம் எதிர்ப்புணர்வைக் கருகச் செய்து விடலாம் என்று கணக்குப் போட்டனர். அன்று மட்டுமல்ல, இன்றும் ஆளும் வர்க்கங்கள் உலகெங்கிலும் இதே போன்ற பல ஒடுக்குமுறைகளைத்தான் ஏவி வருகின்றன.

லலித் மேத்தா — 36 வயதான பொறியாளர்; சமூக சேவகர். விகாஸ் சாயோக் கேந்திரா (ஙகுஓ) எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் செயலாளர். கடந்த பத்தாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கான பணிகளில் ஈடுபட்டு வந்தவர். அவரது தன்னார்வக் குழு, ஜார்கந்த் மாநிலத்தின் பாலமாவ் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (Nகீஉஎகு) நடக்கும் ஊழல்மோசடிகளைத் தடுக்க, உண்மை விவரங்களைச் சேகரித்தும் கள ஆய்வுகளை மேற்கொண்டும் அம்பலப்படுத்த முற்பட்டது. இதற்காக டெல்லி மற்றும் வடமாநிலங்களிலிருந்து வந்த இத்தன்னார்வக் குழு ஊழியர்களும் நண்பர்களும் பாலமாவ் மாவட்டத்தின் செயின்பூர், சத்திரப்பூர் வட்டங்களில் கடந்த மே 13ஆம் தேதியன்று விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கினர். மறுநாள், மே 14ஆம் தேதியன்று இப்பகுதியிலுள்ள கந்தரா எனும் காட்டுப் பகுதியில் லலித்மேத்தா கோரமாகக் கொல்லப்பட்டுப் பிணமாகக் கிடந்தார்.

இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகராகக் கருதப்படும் பெங்களூருவின் சிறப்பே அதன் ஏரிகள்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட இந்நகரில் நூற்றுக்கணக்கான ஏரிகள் இருந்தன. ஆனால் அந்நிய தரகு முதலாளிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்த நகரை மொய்க்கத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே, இந்த ஏரிகளின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணும் அளவிற்குச் சுருங்கி விட்டது.

இந்த ஆண்டு மைய அரசின் பட்ஜெட்டில், ''குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வங்கிக்கடனில் 71 ஆயிரம் கோடி ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார். தள்ளுபடி நடைமுறைக்கு வரும் முன்பே பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தி ''விவசாயிகளுக்காக நாடு கடன்பட்டுள்ளது. அந்தக் கடனைத் திருப்பி அடைத்திருக்கிறோம்'' என்றும் ''தவறான கணக்கை எழுதிய பள்ளிக்கூடச் சிறுவனின் சிலேட்டைத் துடைத்து விட்டு, புதுக்கணக்கை எழுத வைத்திருக்கிறோம்'' என்றும் சிதம்பரம் தனக்குத் தானே பாராட்டிக் கொண்டார்.

மன்மோகன் சிங் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றுப் போயிருந்தால், இந்தியாஅமெரிக்கா இடையே கையெழுத்தாகியுள்ள அணுசக்தி ஒப்பந்தத்துக்கு (123 ஒப்பந்தம்) என்ன நேர்ந்திருக்கும்? அவ்வொப்பந்தம் நடைமுறைக்கு வர இன்னும் சில மாதங்கள் கால தாமதம் ஏற்பட்டிருக்குமேயொழிய, அவ்வொப்பந்தம் காலாவதி ஆகிப் போயிருக்காது. ஏனென்றால், பா.ஜ.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற அனுமதிக்கக் கூடாது என்ற அடிப்படையில் காங்கிரசு கூட்டணி அரசுக்கு எதிராக வாக்களிக்கவில்லை.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற உடனேயே மன்மோகன் சிங்கை நாடாளுமன்றத்தில் பலர் கைகுலுக்கிப் பாராட்டித் தள்ளினார்கள். ""டைம்ஸ் நவ்'' ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சி ""சிங் இஸ் கிங்'' என்ற தலைப்புப் பாடலை ஆரவாரத்துடன் ஒளிபரப்பியது. சூழ்நிலையின் தாக்கத்தால், தானே ஒரு மிகப்பெரும் தலைவர் என்ற மாயை கூட மன்மோகன் சிங்கிற்குத் தோன்றியிருக்கலாம். ஆனாலும் அனல் பறக்கும் விவாதம் நடந்த இந்த நாடாளுமன்றக் கூத்துக்களுக்குப் பின்னால், அதன் முக்கியமான சூத்திரதாரிகள் இருவர் புன்னகைத்துக் கொண்டிருப்பது மன்மோகன் சிங்கிற்கும், ஏன் எதிர்க்கட்சிகளுக்கும் கூடத் தெரியும்.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, காங்கிரசு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை "இடதுசாரி' கூட்டணிக் கட்சிகள் விலக்கிக் கொண்டதில் யார் யாருக்கோ நெருக்கடிகள் இருந்தாலும், உண்மையான நெருக்கடி சி.பி.எம். கட்சிக்குள்தான் தற்போது மையம் கொண்டுள்ளது. அக்கட்சியின் சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல, நாடாளுமன்ற அவைத் தலைவரான சோமநாத் சட்டர்ஜியை கட்சியிலிருந்து நீக்கிய விவகாரத்தின் மூலம், அக்கட்சியில் நிலவும் கோஷ்டி சண்டையும் இப்போது சந்தி சிரிக்கத் தொடங்கியுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தோடு, இதுவரை கண்டிராத வகையில் பெட்ரோல்டீசலின் விலைகளும் கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கின்றன. எரி எண்ணெய் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் வர்த்தகத்தில் தலைவிரித்தாடும் ஆன்லைன் சூதாட்டமே இந்த கிடுகிடு விலையேற்றத்துக்குக் காரணம். பகற்கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிதி நிறுவனங்களை விரட்டியடிக்கவும், விலையேற்றத்துக்குக் காரணமான தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தை வீழ்த்தவும் அறைகூவி ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் தாங்கள் செயல்படும் பகுதிகளில் வீச்சான பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன.

பட்டுப் போன நச்சு மரமானாலும், அதிகாரத்திலுள்ள காங்கிரசு கட்சியில் கோஷ்டிச் சண்டைகளுக்கு அளவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தைத் திசைதிருப்பவும், பிழைப்புவாதத்தில் மூழ்கடிக்கவும் சிறுபான்மையினர் பிரிவு, தாழ்த்தப்பட்டோர் பிரிவு என்று சாதிமத அடிப்படையில் கட்சிக்குள்ளேயே தனி அணிகளை உருவாக்கி ஓட்டுப் பொறுக்குகிறது, அக்கட்சி.

முதலாளிய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலம் வாக்காளப் பெருமக்களின் ஞாபக மறதி. வரலாற்று அனுபவங்களைத் தொகுத்து நினைவில் வைத்துக் கொள்வதுதான் அதற்கு மிகப் பெரிய ஆபத்து. அதனால்தான் அப்படி மக்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் பெருங்கதையாடலுக்கு எதிராகப் ''பின் நவீனத்துவம்'' என்ற அரசியல் தத்துவத்தையே முதலாளிய ஏகாதிபத்திய அறிவுஜீவிகள் உருவாக்கியிருக்கிறார்கள். 1980களின் இறுதியில் ஒருநாள் கூடியிருந்த நாடாளுமன்றமே திகைத்துப் போகும் வகையில் தமிழகத்தின் பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் தங்கராசு ஒரு காரியம் செய்தார். திடீரென்று ஒரு பெட்டியைத் திறந்து நான்கு கோடி மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களைக் கத்தை கத்தையாகக் கொட்டினார். எம்.ஜி.ஆர். சாவுக்குப் பிறகு பிளவுபட்டுப் போன அ.இ.அ.தி.மு.க.வின் ஜானகி அணியிலிருந்து ஜெயலலிதா அணிக்குத் தாவுவதற்காக முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு மூலமாக ஜெயலலிதா தனக்குக் கொடுத்த இலஞ்சமென்று புகைப்பட ஆதாரத்தையும் வெளியிட்டார்.

 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும்; பல்வேறுவிதமான பொருளாதாரப் பின்னணி கொண்ட உழைக்கும் மக்களைத் தற்பொழுது அச்சுறுத்தி வரும் பிரச்சினை, விலைவாசி உயர்வு. நாட்டை அச்சுறுத்துவதாகச் சொல்லப்படும் முசுலீம் தீவிரவாதம், நக்சல் பயங்கரவாதம் போன்ற ""பூதங்களை''விட, விலைவாசி உயர்வைத்தான், பொதுமக்கள் அபாயகரமானதாகப் பார்க்கிறார்கள்.

 

 மக்கள் போராட்டங்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறையை ஏவுவதும், முன்னணியாளர்களைப் பழிவாங்குவதும் மக்கள் விரோத ஆட்சியாளர்களின் வாடிக்கை. அதிலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் போராடும் மக்கள் மீதான அடக்குமுறையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஒரிசா, சட்டிஸ்கர் மாநிலங்களே இதற்கு இரத்த சாட்சியங்களாக உள்ளன. உழைக்கும் மக்களின் போராட்ட நிர்பந்தத்தால், தற்காலிகமாக சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்துவதை ஆட்சியாளர்கள் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்படும்போது, போராடிய மக்களை எப்படியெல்லாம் பழிவாங்கி ஒடுக்குவார்கள், போராட்ட ஒற்றுமையை எப்படியெல்லாம் சீர்குலைப்பார்கள் என்பதற்கு தமிழகம் புதிய சாட்சியமாக விளங்குகிறது. கடந்த மே மாதத்தில், மதுரை மாவட்டம் வலையங்குளம்  எலியார் பத்தி முதலான கிராமங்களில் போலீசும் அதிகார வர்க்கமும் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலே இதை நிரூபித்துக் காட்டுகிறது.

 மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்துள்ள உத்தப்புரத்தில் கொடிக்கால் பிள்ளை எனும் சிறுபான்மை ஆதிக்க சாதியினர், ஊருக்குள் தாழ்த்தப்பட்ட சாதியினர் நுழைந்து விடக் கூடாது என்பதற்காகக் கட்டி இருந்த சுவர், கடந்த 18 ஆண்டுகளாக ஆதிக்க சாதித் திமிரின் அடையாளமாய் இருந்து வந்தது. 

 ஒரே மாதத்தில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலைஇழப்பு! குபேரபுரியாகச் சித்தரிக்கப்படும் உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவில், கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து வீதியில் வீசியெறியப்பட்டுள்ளனர். உற்பத்தித் தேக்கம், ஆலை மூடல், ஆட்குறைப்பு ஆகியவற்றால் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் மேலும் 50,000 பேர் வேலையிழந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக பல ஆலைகளில் லேஆஃப் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றிப் பரிதவிக்கின்றனர்.

 கடந்த 13 ஆண்டுகளில் இல்லாதவாறு இந்த ஆண்டு ஜூன் இரண்டாவது வாரம் நாட்டின் பணவீக்கம் 11.05 சதவிகிதத்தை எட்டிவிட்டது. உணவு தானியம் உட்பட விவசாய விளைப்பொருட்கள், இடு பொருட்கள், இரும்பு, சிமெண்ட் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் கிடுகிடுவென ஏறிக் கொண்டே போகின்றன.  இவ்வாறு பணப்புழக்கம் அதிகமாகி அதாவது, பொருட்களின் தேவைகேட்பு மிகமிக அதிகமாகி, அத்தேவைக்கேற்ப உற்பத்தியும், பொருட்களின் வரத்தும் இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டு நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து விடவில்லை. அதாவது, இப்போது மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு தானியங்கள், பருப்பு வகைகள், உணவு எண்ணெய், காய்கறிகள் மற்றும் சர்க்கரை, சிமெண்ட், கட்டுமான இரும்புக் கம்பிகள் போன்றவற்றின் உற்பத்தி குறைந்து, சந்தையில் தட்டுப்பாடும் பற்றாக்குறையும் ஏற்பட்டு அவற்றின் விலைவாசி தாறுமாறாக எகிறிப் போய் விடவில்லை.

 அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தோடு இதுவரை காணாத வகையில் பெட்ரோல்டீசல் விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கின்றன. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே போவதால், இந்த விலையேற்றம் தவிர்க்கவியலாதது என்று கூறி நியாயப்படுத்துகிறது அரசு. தேவையைக் காட்டிலும் 10% உற்பத்தி குறைந்துள்ளது; இப்பற்றாக்குறையின் காரணமாகவே பெட்ரோல்டீசலின் விலை 4 மடங்கு உயர்ந்துவிட்டது என்று கூறுவது கடைந்தெடுத்த பொய். எண்ணெய் வர்த்தகத்தில் தலைவிரித்தாடும் ஆன்லைன் சூதாட்டமே எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணம்.