சமூகவியலாளர்கள்

நீர், இலை, நீர்த்துளிகள்

கண்ணாடித் தரையின் மீது
கண்கவர் பச்சைத் தட்டில்
எண்ணாத ஒளிமுத்துக்கள்
இறைந்தது போல்கு ளத்துத்
தண்ணீரி லேப டர்ந்த
தாமரை இலையும், மேலே
தெண்ணீரின் துளியும் கண்டேன்
உவப்போடு வீடு சேர்ந்தேன்.

தாமரையின் சிற்றரும்பு

சிலநாட்கள் சென்ற பின்னர்க்
குளக்கரை சென்றேன்! பச்சை
இலத்தட்டில் சிந்தும் பால்போல்
எழில்நீரும், கரிய பாம்பின்
தலைகள்போல் நிமிர்ந் திருந்த
தாமரைச் சிற்ற ரும்பும்
இலகுதல் காணப் பெற்றேன்;
காட்சியின் இன்பம் பெற்றேன்.

முதிர் அரும்பு

மணிஇருள் அடர்ந்த வீட்டில்
மங்கைமார், செங்கை ஏந்தி,
அணிசெய்த நல்வி ளக்கின்
அழகிய பிழம்பு போலத்
தணிஇலைப் பரப்பி னிற்செந்
தாமரைச் செவ்வ ரும்பு
பிணிபோக்கி என்வி ழிக்குப்
படைத்தது பெருவி ருந்தே!

அவிழ் அரும்பு

விரிகின்ற பச்சைப் பட்டை
மேனிபோர்த் துக் கிடந்து
வரிக்கின்ற பெண்கள், வான
வீதியைப் பார்த்துப் பார்த்துச்
சிரிக்கின்ற இதழ்க்கூட் டத்தால்
மாணிக்கம் சிதறு தல்போல்
இருக்கும்அப் பச்சி லைமேல்
அரும்புகள் இதழ்வி ரிக்கும்!

மலர்களின் தோற்றம்

விண்போன்ற வெள்ளக் காடு,
மேலெலாம் ஒளிசெய் கின்ற
வெண்முத்தங் கள்கொழிக்கும்
பச்சிலைக் காடு, மேலே
மண்ணுளார் மகிழும் செந்தா
மரைமலர்க் காடு, நெஞ்சைக்
கண்ணுளே வைக்கச் சொல்லிக்
கவிதையைக் காணச் சொல்லும்.

ஒப்பு

வாய்போலச் சிலம லர்கள்!
'வா' என்றே அழைக்கும் கைபோல்
தூயவை சிலம லர்கள்!
தோய்ந்துநீ ராடி மேலே
பாயும்நன் முகம்போல் நெஞ்சைப்
பறிப்பன சிலம லர்கள்!
ஆயிரம் பெண்கள் நீரில்
ஆர்ப்பாட்டம் போலும் பூக்கள்!

செவ்விதழ்

ஓரிதழ் குழந்தை கன்னம்!
ஓரிதழ் விழியை ஒக்கும்!
ஓரிதழ் தன்ம ணாளன்
உருவினைக் கண்டு கண்டு
பூரிக்கும் உதடு! மற்றும்
ஓரிதழ் பொல்லார் நெஞ்சம்!
வாரித் தரச்சி வந்த
உள்ளங்கை யாம் மற்றொன்று!

தேன்

மூடிய வாய்தி றந்து
உளமார முன்னா ளெல்லாம்
தேடிய தமிழு ணர்வைத்
தின்னவே பலர்க்கும் தந்தும்
வாடாத புலவர் போலே
அரும்பிப்பின் மலர்ந்த பூக்கள்
வாடாது தேன்கொ டுக்கும்
வண்டுகள் அதைக் குடிக்கும்!

வண்டுகள்

தேனுண்ண, வண்டு பாடும்!
தேனுண்டபின், ஓர் கூட்டம்
தானோர்பால் தாவும்! வேறோர்
தனிக்கூட்டம் களியாட்டத்தை
வானிடை நடத்தும்! ஒன்று
மலர் என்னும் கட்டி லுண்டு
நானுண்டென் றுறக்கம் கொள்ளும்
நறும்பொடி இறைக்கும் ஒன்று.

பாட்டு, மணம்

என்னைநான் இழந்தேன்; இன்ப
உலகத்தில் வாழ லுற்றேன்
பொன்துகள், தென்றற் காற்றுப்,
புதுமணம், வண்டின் பாட்டுப்,
பன்னூறு செழுமா ணிக்கப்
பறவைபோல் கூட்டப் பூக்கள்
இன்றெலாம் பார்த்திட் டாலும்
தெவிட்டாத எழிலின் கூத்தே!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm

நீரற்ற ஆற்றுப்பாதை

இருபக்கம் மண்மே டிட்டும்,
இடைஆழ்ந்தும், நீள மான
ஒருபாதை கண்டேன், அந்தப்
பாதையின் உள்இ டத்தில்
உரித்தநற் றாழம் பூவின்
நறும்பொடி உதிர்த்த தைப்போல்
பெருமணல், அதன்மே லெல்லாம்
கதிரொளிப் பெருக்கம், கண்டேன்!

வழிப் போக்கு

மணல்சுடும்; வழிச்செல் வோர்கள்,
இறங்கியும் ஏறியும் போய்
அணகரை மேட்டின் அண்டை
அடர்மர நிழலில் நின்று
தணலேறும் தம்கால் ஆற்றிச்
சாலைகண் டூரைக் காண்பார்.
அணிநிலம் நடுவில் ஆற்றுப்
பாதை "வான்வில்" போல் தோன்றும்.

வெள்ளம் வருமுன்

வெப்பத்தால் வெதும்பு கின்ற
வெளியெலாம் குளிர்காற் றொன்று
தொப்பென்று குதிக்க, அங்கே
துளிரெலாம் சிலிர்க்கக் கண்டேன்.
எப்பக்கம் இருந்தோ கூட்டப்
பறவைகள் இப்பக் கத்துக்
குப்பத்து மரத்தில் வந்து
குந்திய புதுமை கண்டேன்.

வெள்ளத்தின் தோற்றம்

ஒலிஒன்று கேட்டேன். ஓஓ
புதுப்புனல்! பெரிய வெள்ளம்,
சலசல என்று பாய்ந்து
வரக்கண்டேன் தணல் நிறத்தில்
நிலவொத்த நிறம்க லந்து
நெடுவானின் சுடரும் வாங்கிப்
பொலிந்தது! கோடை யாட்சி
மாற்றிற்றுப் புரட்சி வெள்ளம்.

வெள்ளப் பாய்ச்சல்

பெருஞ்சிங்கம் அரைய வீழும்
யானைபோல் பெருகிப் பாய்ந்து
வரும்வெள்ளம், மோத லாலே
மணற்கரை இடிந்து வீழும் !
மருங்கினில் இருந்த ஆலும்
மல்லாந்து வீழும் ஆற்றில்!
பருந்து, மேற் பறக்கும்! நீரில்,
பட்டாவைச் சுழற்றும் வாளை!

வெள்ளத்தின் வரவறிதல்

கரையோரப் புலத்தில் மேயும்
காலிகள் கடமை எண்ணும்!
தரையினிற் காதை ஊன்றிச்
சரிசரி புதுவெள் ளத்தின்
திரைமோதும் ஒலிதான் என்று
சிறுவர்கள் செங்கை காட்டிப்
பெரியோரைக் கூவு கின்றார்;
பேச்சொன்றே ஒலியோ நீளம்!

வெள்ளத்தின் ஒளி அழகு

இருகரை ததும்பும் வெள்ள
நெளிவினில் எறியும் தங்கச்
சரிவுகள் !நுரையோ முத்துத்
தடுக்குகள்! சுழல்மீன் கொத்தி
மரகத வீச்சு! நீரில்
மிதக்கின்ற மரங்க ளின்மேல்
ஒருநாரை வெண்டா ழம்பூ!
உவப்புக்கோ உவமை இல்லை.

வெள்ளம் எனும் படைக்கு மரங்களின்வாழ்த்து

ஒரேவகை ஆடை பூண்ட
பெரும்படை ஒழுங்காய் நின்று
சரேலெனப் பகைமேற் பாயும்
தன்மைபோல் ஆற்று வெள்ளம்,
இராவெல்லாம் நடத்தல் கண்ட
இருகரை மரங்கள், தோல்வி
வராவண்ணம் நெஞ்சால் வாழ்த்தி
மலர்வீசும் கிளைத்தோள் நீட்டி!

உழவர் முயற்சி

ஆற்றுவெள் ளத்தைக் காணச்
சிற்று஡ரார் அங்கு வந்தார்!
போற்றினார் புதுவெள்ளத்தைப்!
புகன்றனர் வாழ்த்து ரைகள்!
காற்றாகப் பறந்து சென்று
கழனிகள் மடைதி றந்து
மாற்றினார் வாய்க்கால்! மற்றும்
வடிகாலை மறித்தார் நன்றே!

ஆற்று நடை

நோய்தீர்ந்தார்! வறுமை தீர்த்தார்,
நு஡ற்றுக்கு நு஡று பேரும்!
ஓய்வின்றிக் கலப்பை து஡க்கி
உழவுப்பண் பாட லானார்!
சேய்களின் மகிழ்ச்சி கண்டு
சிலம்படி குலுங்க ஆற்றுத்
தாய்நடக் கின்றாள் வையம்
தழைகவே தழைக என்றே!


http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm

மாலை வானும் குன்றமும்

தங்கத்தை உருக்கி விட்ட
வானோடை தன்னிலே ஓர்
செங்கதிர் மாணிக் கத்துச்
செழும்பழம் முழுகும் மாலை,
செங்குத்தாய் உயர்ந்த குன்றின்
மரகதத் திருமே னிக்கு
மங்காத பவழம் போர்த்து
வைத்தது வையம் காண !

ஒளியும் குன்றும்

அருவிகள், வயிரத் தொங்கல் !
அடர்கொடி, பச்சைப் பட்டே !
குருவிகள், தங்கக் கட்டி !
குளிர்மலர், மணியின் குப்பை !
எருதின்மேற் பாயும் வேங்கை,
நிலவுமேல் எழுந்த மின்னல்,
சருகெலாம் ஒளிசேர் தங்கத்
தகடுகள் பார டாநீ.

கிளி எறிதல்

தலைக்கொன்றாய்க் கதிரைக் கொத்தி
தழைபசுஞ் சிறக டித்து
மலைப்புன்னை மரத்தின் பக்கம்
வந்திடும் கிளிக்கூட் டத்தில்,
சிலைப்பெண்ணாள் கவண் எறிந்து,
வீழ்த்தினேன் சிறகை என்றாள்.
குலுக்கென்று சிரித்தொ ருத்தி
"கொழும்புன்னை இலைகள்" என்றாள்!

குறவன் மயக்கம்

பதட்டமாய்க் கிளிஎன் றெண்ணி
ஆதொண்டைப் பழம்பார்த் தானை
உதட்டினைப் பிதுக்கிக் "கோவை"
உன்குறி பிழைஎன் றோதும் !
குதித்தடி மான்மான் என்று
குறுந்தடி து஡க்கு வானைக்
கொதிக்காதே நான் அம்மானே
எனஓர் பெண் கூறி நிற்பாள்!

குன்றச் சாரல், பிற

குன்றத்தின் "சாரல்", குன்றின்
அருவிகள் குதிக்கும் "பொய்கை"
பன்றிகள் மணற்கி ழங்கு
பறித்திடும் "ஊக்கம்" நல்ல
குன்றியின் மணியால், வெண்மைக்
கொம்பினால் அணிகள் பூண்டு
நின்றிடும் குறத்தி யர்கள்
"நிலாமுகம்" பாரடா நீ !

குறத்தியர்

"நிறைதினைக் கதிர்" முதிர்ந்து
நெடுந்தாளும் பழுத்த கொல்லைப்
புறத்தினில் தேர் போல் நீண்ட
புதுப்பரண் அமைத்து, மேலே
குறத்தியர் கவண் எடுத்துக்
குறிப்பார்க்கும் விழி, நீ லப்பூ!
எறியும்கை, செங்காந் தட்பூ!
உடுக்கைதான் எழில்இ டுப்பே !

மங்கிய வானில் குன்றின் காட்சி

மறைகின்றான் பரிதி; குன்ற
மங்கையோ ஒளியிழந்து,
நிறைமூங்கில் இளங்கை நீட்டி
வாராயோ எனஅ ழைப்பாள்!
சிறுபுட்கள் அலறும்! யானை
இருப்பிடம் சேரும்! அங்கோர்
குறுநரி ஊளைச் சங்கால்
இருள் இருள் என்று கூவும்!

நிலவும் குன்றும்

இருந்தஓர் கருந்தி ரைக்குள்
இட்டபொற் குவியல் போலே,
கருந்தமிழ்ச் சொல்லுக் குள்ளே
கருத்துக்கள் இருத்தல் போலே
இருள்மூடிற் றுக்குன் றத்தை!
நாழிகை இரண்டு செல்லத்
திரும்பிற்று நிலவு ; குன்றம்
திகழ்ந்தது முத்துப் போலே!

எழில் பெற்ற குன்றம்

நீலமுக் காட்டுக் காரி
நிலாப்பெண்ணாள், வற்றக் காய்ந்த
பாலிலே உறைமோர் ஊற்றிப்
பருமத்தால் கடைந்து, பானை
மேலுற்ற வெண்ணெய் அள்ளிக்
குன்றின்மேல் வீசி விட்டாள்!
ஏலுமட் டுந்தோ ழாநீ
எடுத்துண்பாய் எழலை எல்லாம்!

முகில் மொய்த்த குன்றம்

ஆனைகள், முதலைக் கூட்டம்,
ஆயிரம் கருங்கு ரங்கு,
வானிலே காட்டி வந்த
வண்முகில் ஒன்று கூடிப்
பானயில் ஊற்று கின்ற
பதநீர்போல் குன்றில் மொய்க்கப்
போனது. அடிமை நெஞ்சம்
புகைதல்போல் தோன்றும் குன்றம்!



http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm

மலைப்பு வழி

நாடினேன்; நடந்தேன்; என்றன்
நகரஓ வியத்தைத் தாண்டித்
தேடினேன்; சிற்று஡ர் தந்த
காட்சியைச் சிதைத்தேன்; சென்றேன்;
பாடினேன்; பறந்தேன்; தேய்ந்த
பாதையை இழந்தேன். அங்கே
மாடிவீ டொன்று மில்லை
மரங்களோ பேசவில்ல!

வழியடையாளம்

மேன் மேலும் நடந்தேன்; அங்கே
'மேற்றிசை வானம்' என்னை
"நான் தம்பி என்னை நோக்கி
நட தம்பி" எனச்சொல் லிற்று!
வான்வரை மேற்குத் திக்கை
மறைத்திட்ட புகைநீ லத்தைத்
தேன்கண்டாற் போலே கண்டேன்,
திகழ் காடு நோக்கிச் சென்றேன்.

காட்டின் அழகு

வன்மை கொள் பருக்கைக் கல்லின்
வழியெல்லாம் பள்ளம், மேடு!
முன்னாக இறங்கி ஏறி
முதலைகள் கிடப்ப தைப்போல்
சின்னதும் பெரிது மான
வெடிப்புக்கள் தாண்டிச் சென்றேன்;
"கன்மாடம்" எனும்பு றாக்கள்
கற்களைப் பொறுக்கக் கண்டேன்.

மயிலின் வரவேற்பு

மகிழ்ந்துநான் ஏகும் போதில்
காடுதன் மயிலை ஏவி
அகவலால் வரவேற் பொன்றை
அனுப்பிற்று கொன்றைக் காய்க்கு
நிகரான வாலை ஆட்டிக்
காரெலி நின்று நின்று
நகர்ந்தது. கூடச் சென்றேன்
நற்பாதை காட்டும் என்றே.

தமிழா நீ வாழ்க

முகத்திலே கொடுவாள் மீசை
வேடன், என் எதிரில் வந்தான்.
அகப்பட்ட பறவை காட்ட,
அவற்றின்பேர் கேட்டேன்! வேடன்
வகைபட்ட பரத்து வாசன்
என்பதை வலியன் என்றான்;
சகோ தரத்தைச் செம்போத் தென்றான்!
தமிழா நீ வாழ்க என்றேன்.

வேடன் வழி கூறினான்

"போம் அங்கே! பாரும் அந்தப்
புன எலு மிச்சை" என்றான்.
" ஆம்" என்றேன்". "அதைத்தான் ஐயா
குருந்தென்றும் அறைவார்" என்றான்
"ஆம்" என்றேன் தெரிந்த வன்போல்!
"அப்பக்கம் நோக்கிச் சென்றால்
மாமரம் இருக்கும் அந்த
வழிச்செல்வீர்" என்றான் சென்றேன்.

காட்டின் உச்சிக்கிளையில் குரங்கு ஊசல்

செருந்தி, யாச்சா, இலந்தை,
தேக்கீந்து கொன்றை யெல்லாம்
பெருங்காட்டின் கூரை! அந்தப்
பெருங்கூரை மேலே நீண்ட
ஒரு முங்கில்; இரு குரங்கு
கண்டேன் பொன் னு஡சல் ஆடல்!
குருந்தடையாளம் கண்டேன்
கோணல்மா மரமும் கண்டேன்!

பாம்பின் வாயில் தாயைப் பறிகொடுத்த
மான்கன்றை நரியடித்தது

ஆனைஒன் றிளம ரத்தை
முறித்திடும்; ஆந்தைக் கூட்டைப்
பூனை ஒன் றணுகும்; அங்கே
புலி ஒன்று தோன்றும்; பாம்பின்
பானைவாய் திறக்கக் கண்டு
யாவுமே பறக்கும்; கன்றோ
மானைக்கா ணாது நிற்கும்!
அதை ஒரு நரிபோய் மாய்க்கும்.

மயிலுக்கு கரடி வாழ்த்து

இழந்தபெட் டையினைக் கண்டே
எழுந்தோடும் சேவல் வாலின்
கொழுந்துபட் டெழுந்த கூட்டக்
கொசுக்களை முகில்தான் என்று
தழைந்ததன் படம்விரிக்கும்
தனிமயிலால், அடைத் "தேன்"
வழிந்திடும்; கரடி வந்து
மயிலுக்கு வாழ்த்துக் கூறும்.

பயன்பல விளைக்கும் காடு

ஆடிய கிளைகள் தோறும்
கொடிதொங்கி, அசையும் ! புட்கள்
பாடிய படியி ருக்கும் !
படைவிலங் கொன்றை யொன்று
தேடிய படியிருக்கும் !
காற்றோடு சருகும் சேர்ந்து
நீடிசை காட்டா நிற்கும் ;
பயன்தந்து நிற்கும் காடே !

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm

மென்காற்றும் வன்காற்றும்

அண்டங்கள் கோடி கோடி
அனைத்தையும் தன்ன கத்தே
கொண்ட ஓர் பெரும் புறத்தில்
கூத்திடு கின்ற காற்றே!
திண்குன்றைத் து஡ள் து஡ளாகச்
செயினும் செய்வாய் நீஓர்
துண்துளி அனிச்சப் பூவும்
நோகாது நுழைந்தும் செல்வாய்!

தென்னாடுபெற்ற செல்வம்

உன்னிடம் அமைந் திருக்கும்
உண்மையின் விரிவில், மக்கள்
சின்னதோர் பகுதி யேனும்
தெரிந்தார்கள் இல்லை; யேனும்
தென்னாடு பெற்ற செல்வத்
தென்றலே உன்இன் பத்தைத்
தென்னாடுக் கல்லால் வேறே
எந்நாட்டில் தெரியச் செய்தாய்?

தென்றலின் நலம்

குளிர்நறுஞ் சந்தனஞ் சார்
பொதிகையில் குளிர்ந்தும், ஆங்கே
ஒளிர்நறு மலரின் ஊடே
மணத்தினை உண்டும், வண்டின்
கிளர்நறும் பண்ணில் நல்ல
கேள்வியை அடைந்தும் நாளும்,
வளர்கின்றாய் தென்ற லேஉன்
வரவினை வாழ்த்தா ருண்டா?

அசைவின் பயன்

உன்அரும் உருவம் காணேன்
ஆயினும் உன்றன் ஒவ்வோர்
சின்னநல் அசைவும் என்னைச்
சிலிர்த்திடச் செய்யும்! பெற்ற
அன்னையைக் கண்டோ ர், அன்னை
அன்பினைக் கண்ணிற் காணார்,
என்னினும் உயிர்க் கூட்டத்தை
இணைத்திடல் அன்பே அன்றோ?

தென்றலின் குறும்பு

உலைத்தீயை ஊது கின்றாய்
உலைத்தீயில் உருகும் கொல்லன்
மலைத்தோளில் உனது தோளும்
மார்பினில் உன்பூ மார்பும்
சலிக்காது தழுவத் தந்து
குளிர்ச்சியைத் தருவாய்! பெண்கள்
விலக்காத உடையை நீபோய்
விலக்கினும், விலக்கார் உன்னை!

குழந்தையும் தென்றலும்

இழந்திட்டால் உயிர்வா ழாத
என்னாசை மலர்மு கத்துக்
குழந்தையின் நெற்றி மீது
குழலினை அசைப்பாய்; அன்பின்
கொழுந்தென்று நினத்துக், கண்ணிற்
குளிர்செய்து, மேனி யெங்கும்
வழிந்தோடிக் கிலு கிலுப்பை
தன்னையு ம் அசைப்பாய் வாழி.

தென்றல் இன்பம்

இருந்தஓர் மனமும், மிக்க
இனியதோர் குளிரும் கொண்டு
விருந்தாய்நீ அடையுந் தோறும்
கோடையின் வெப்பத் திற்கு
மருந்தாகி அயர்வி னுக்கு
மாற்றாகிப் பின்னர் வானிற்
பருந்தாகி இளங்கி ளைமேற்
பறந்தோடிப் பாடு கின்றாய்!

தென்றலின் பயன்

எழுதிக்கொண் டிருந்தேன்; அங்கே
எழுதிய தாளும் கண்டாய்;
வழியோடு வந்த நீயோ
வழக்கம்போல் இன்பம் தந்தாய்;
"எழுதிய தாளை நீ ஏன்
கிளப்பினை" என்று கேட்டேன்,
"புழுதியைத் துடைத்தேன்" என்றாய்;
மீண்டும்நீ புணர்ந்தாய் என்னை!

தென்றலிற்கு நன்றி

கமுகொடு, நெடிய தென்னை,
கமழ்கின்ற சந்த னங்கள்,
சமைகின்ற பொதிகை அன்னை,
உனைத்தந்தாள் தமிழைத் தந்தாள்
தமிழ் எனக்கு அகத்தும், தக்க
தென்றல்நீ புறத்தும், இன்பம்
அமைவுறச் செய்வ தைநான்
கனவிலும் மறவேன் அன்றோ?

தென்றலின் விளையாட்டு

களச்சிறு தும்பி பெற்ற
கண்ணாடிச் சிறகில் மின்னித்,
துளிச்சிறு மலர் இதழ்மேல்
கூத்தாடித் துளிதேன் சிந்தி,
வெளிச்சிறு பிள்ளை யாடும்
பந்தோடு விளயா டிப், போய்க்
கிளிச்சிற காடை பற்றிக்
கிழிக்கின்றாய் தென்ற லேநீ!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm

மற்ற கட்டுரைகள் …

Load More