சமூகவியலாளர்கள்

சாதி மதம் போகாமல் மூடப்பழக்க வழக்கங்களில் மாற்றம் செய்யச் சம்மதிக்கவில்லையானால், வேறு எந்த விதத்தில் இந்நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய முடியும்? விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ எப்படி ஏற்படுத்த முடியும்? ‘பிராமணன்', ‘சூத்திரன்', ‘பறையன்', ‘சண்டாளன்' என்கின்ற பெயர்களும், பிரிவுகளும் சாதி காரணம் மாத்திரமல்ல, மதம் காரணமாகவும் நிலவி வருகின்றன. பேத நிலைக்கு மதம் காரணம் மாத்திரமல்லாமல், கடவுள் காரணமாகவும் இருந்து வருவதாக இந்தியா பூராவும் உள்ள இந்து மக்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஜாதி பேத நிலைக்கு இந்து மதமும் மநுதரும சாஸ்திரமும் காரண பூதம் என்றாலும், அதற்கும் மேற்பட்டு கடவுளும் காரணமாய் இருந்து வருகிறது.

கடவுளுடைய முகம், தோள், தொடை, கால் ஆகியவற்றில் இருந்து நான்கு ஜாதிகள் தோன்றின என்பது, இந்து சனாதன மதக்காரர்கள் மாத்திரமன்றி, இந்து ஆஸ்திகக்காரர்கள் பெரும்பாலோரும் நம்புகின்ற கொள்கையாகும். பறையன், சக்கிலி, பள்ளன் முதலிய சூத்திரர்கள் அல்லாத ஜாதியார்கள் எதிலிருந்து பிறந்தார்கள் என்பதும், இந்தியா தவிர மற்ற தேசத்திலுள்ள மக்களான கிறிஸ்தவர், மகம்மதியர், பவுத்தர்கள் முதலிய 180 கோடி மக்கள் எதிலிருந்து, யாரால் பிறப்பிக்கப்பட்டார்கள்? என்ற கேள்விக்கு இடமாய் இருந்தாலும், இந்த நான்கு வர்ணத்தையும் மறுக்க எந்த ஓர் இந்துவும் துணிவதில்லை.

ஏதோ சீர்திருத்தக்காரர்கள் என்று கூறிக்கொண்ட சிலர், சூத்திரர் என்ற அவமானம் பொறுக்க மாட்டாதவர்களாய் நான்கு வர்ணத்தை ஒப்புக் கொள்ளாமல், தன் வரையில் கூறிக் கொண்டிருந்தார்களே தவிர, வெளியில் துணிவாக எதிர்க்கவில்லை. மறுபுறம் அக்கொள்கைக்கு அடிமைகளாகவே இருந்து வருகிறார்கள். எப்படி எனில், ராமாயணக் கதைக்கு வேறு வியாக்கியானம் செய்கின்றவர்களும், நல்லவர்களும்கூட, பாரதக் கதையில் வரும் பாத்திரங்களான ராமனையும், கிருஷ்ணனையும் தெய்வமாகக் கொண்டாடாமல் இருப்பதில்லை. பாரதக் கதையில் ஒரு சமயத்தில் வரும் சிறு சம்பவமான ‘கிருஷ்ணன் சம்பாஷனை' என்னும் கீதையை பிரமாதப்படுத்தி மதிக்கிறார்கள்.

கீதையை மறுக்க, இன்று இந்துக்களில் பதினாயிரத்தில் ஒருவனுக்குக்கூட தைரியம் வருமா என்பது சந்தேகம். கீதையில் கிருஷ்ணன், பேத நிலை உண்டாக்கும் வர்ண தருமத்துக்கு தானே காரணம் என்கிறான். ‘‘நான்கு வர்ணங்களை நான்தான் சிருஷ்டி செய்தேன்'' என்று சொன்னதாக வாசகம் இருக்கிறது. ஆகவே, கீதையை மத ஆதாரமாகக் கொண்டவன், சூத்திரப் பட்டம் ஒழிய வேண்டும் என்றோ, ஜாதிப் பிரிவு ஒழிய வேண்டும் என்றோ எப்படிச் சொல்ல முடியும்?

சாதிப் பிரிவுக்கும், அதனால் ஏற்படும் இழிவுக்கும், தரித்தரத்துக்கும், ஒற்றுமையின்மைக்கும், இந்து மதம், மநுதரும சாஸ்திரம், பாரத ராமாயணப் புராண இதிகாசம் என்பவற்றோடு மட்டுமன்றி ராமன், கிருஷ்ணன் முதலிய கடவுள்களும் காரணம் என்பதை உணருகின்றவன் எவனோ, அவனே வர்ண பேதத்தை பேத நிலையை ஒழிக்க நினைக்கவாவது யோக்கியடையவன் ஆவான். காங்கிரசுக்காரர்களே, பெரும்பாலோர் கீதை பாராயணம் செய்கின்றவர்கள். சாதியை ஆதரிக்கும் புராண நூல்களை நெருப்பிலிடவோ, கிருஷ்ணபகவானை மறுக்கவோ ஒப்புக்கொள்வதில்லை. நான்கு வர்ணம் கூடாது என்கிற ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள்கூட கீதையையும், கிருஷ்ணனையும் ஒழிக்க சம்மதிக்க மாட்டார்கள்.

நமது பிரச்சாரத்தின் பயனாய் ஓர் அளவுக்கு மநு (அ) தருமசாஸ்திரத்தின் மீது பலருக்கு வெறுப்பும், அலட்சியம் ஏற்பட்டிருக்கிறது. கிருஷ்ணன் மீது, கீதை மீது வெறுப்பு அலட்சியம் ஏற்படவில்லை, ஒழிக்கத் தைரியம் வருவதில்லை. இந்நாட்டில் பல ஆயிர வருஷங்களாகவே இந்த இழிவும் முட்டாள்தனமும், அயோக்கியத் தனமும் நிலவி வந்திருக்கிறது. திருவள்ளுவரின் குறளை மெச்சுகிறார்களே ஒழிய, காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகிதமாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர்விரோதமான கீதையைப் போற்றுகிறார்கள். இது, முட்டாள்தனமான காரியக்காரர்களிடம் மாத்திரம் இருப்பதாக நான் சொல்ல வரவில்லை. சைவன்களும், வைணவன்களும் கீதையை, கிருஷ்ணனை, பிரம்மாவை மறுக்கவே மாட்டார்கள்.

ஆனால், தங்களுக்குள் பேதம் இல்லை என்று வாயால் சொல்லுவார்கள். கபிலர் சொன்னவையும், சித்தர்கள் ஞானிகள் சொன்ன வாக்குகளும் பேச்சளவில் மாத்திரம் போற்றப்படுகின்றன. ஆனால், காரியத்தில் சிறிதுகூட லட்சியம் செய்யப்படுவதில்லை. இந்நிலையில் ஜாதி எப்படி ஒழியும்? பேத நிலை எப்படி மாறும் என்பதைச் சிந்தியுங்கள்.

நமக்கு இன்று வேண்டிய சுயாட்சி என்பதானது, ஜாதிக் கொடுமைகளையும், ஜாதிப் பிரிவுகளையும், உயர் ஜாதி சலுகைகளையும் ஒழிப்பதாகவும், அழிப்பதாகவும் இருக்கத்தக்கதாய் இருந்தால்தான் நல்லதாகும். இப்படிப்பட்ட பேத நிலை நீக்கும் ஆட்சியை ஆதரிப்பதற்கு, நமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. மனப்பூர்வமாக வரவேற்கவும் ஆசைப்படுகிறேன்.

'பெரியார் களஞ்சியம்': ஜாதி - தீண்டாமை பாகம் 11; பக்கம்: 35

http://www.keetru.com/rebel/periyar/62.php

தமிழர்கள் (திராவிடர்கள்) ஆகிய நமக்குள்ள ஆதரவற்ற நிலையையும், மானமற்ற நிலையையும், இழிவு நிலையையும் நிரந்தரப்படுத்தி சிறிதும் மாற்றம் அடைய முடியாமல் பாதுகாப்பதற்கு கோயில், மதம், மத நடப்புகளின் நிர்ப்பந்தம் ஆகியவை, எப்படி இருக்கின்றனவோ, அதுபோலவே இன்றைய நிலைமையில் இந்த அய்க்கோர்ட்டுகளும், வக்கீல்களும் இருந்து வருகின்றன. இவை இதுபோல் இருந்து வரும் வரையிலும், நம் நிலை ஒரு சிறிதும் மாறப்போவதில்லை என்பதோடு, நம் இழிநிலை வளர்ந்து கொண்டே வருகிறது! அய்க்கோர்ட் நீதிமன்றங்கள் - வக்கீல்கள் இந்த ஸ்தாபனங்கள் நம் பரம்பரை எதிரிகளான பார்ப்பனர் கையிலும், பார்ப்பனர் ஆதிக்கத்திலும் இருந்து வருவதால் நம்முடைய முயற்சிகள் எதுவும் பலன் தராமலே போகின்றன. ஆகையால் இந்த நிலையை மாற்றவேண்டும். முடியாவிட்டால் அழிக்க வேண்டும்.

சட்டம் நீதிக்கு ஏற்பட்டதல்ல. ஒரு கூட்டத்தின் பாதுகாப்புக்கு ஏற்பட்டது. ஆதலால் அதில் பரிகாரத்துக்கு மார்க்கம் காண முடியாது. நீண்ட நாளாகப் பார்ப்பன ஆதிக்கம், ஏகபோகமாய் எல்லாத் துறைகளிலும் இருந்து வந்ததனால் அவர்களது ஏகபோக உரிமைக்கு ஏற்றபடி சட்டம் செய்துகொண்டு அச்சட்டத்தைக் காட்டி நம்மைப் பார்ப்பனர்கள் இதுவரை அழுத்தியே வந்திருக்கிறார்கள் என்பது மாத்திரமல்லாமல், இன்னமும் அழுத்தவே துணிகிறார்கள் சட்டப்படி.

காலஞ்சென்ற பட்டேல் சொன்னார் “சட்டம் ஒரு கழுதை” என்று. அதாவது முன்னாலே போகிறவன் எப்போதும் தப்பித்துக் கொள்வான். பின்னாலே போகிறவனுக்குத்தான் உதை விழுந்து கொண்டிருக்கும். அதைப் பயன்படுத்தும் முறையிருக்கிறதே அது நமக்கு இன்னமும் கேடு உண்டாகிறத் தன்மையில்தான் உள்ளது.
சட்டத்தை எழுதினவன் பார்ப்பான். அந்த சட்டத்தை அமல் நடத்துகிறவன் பார்ப்பான். நிர்வாகத் துறையில், நீதித்துறையில் பார்ப்பனன் ஆதிக்கமே இருப்பதால் அது நமக்கு மேலும் மேலும் கேட்டையே அளித்து வருகிறது. கேடாகவே இருக்கிறது. அந்த வாய்ப்பால் நம் ஆட்கள் இரண்டொருவர் இருந்தாலும்கூட, அவர்கள் பார்ப்பனர்களுக்கு அடிமையாகவேதான் இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் தங்கள் சுயநல வாழ்வு கெட்டுவிடும். அதனால் நம்மவர்களும் வாலை அடக்கிக்கொண்டு பார்ப்பனர்களுக்கு ஏற்றபடி நடந்து விடுகிறார்கள். அதற்காகத்தான் நாங்கள் பாடுபட வேண்டியிருக்கிறது. இந்த முயற்சியில் நமக்கு என்ன கேடு வருவதானாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் கேட்டை ஒழிக்க நாம் துணிந்து பாடுபட வேண்டியிருக்கிறது.

முதலாவது பார்ப்பானிடத்தில் பார்ப்பன இனக் கட்டுப்பாடு, இன உணர்ச்சி இருக்கிறது. நம்மிடத்திலே அது இல்லை. நம்மில் ஒவ்வொருவனும் அவனவன் குடும்பம், சொத்து, வருமானம், பதவி இதைப் பற்றிக் கவலைகொண்டு அலைவதைத்தவிர, நம் இன நலத்தில் லட்சியம் இல்லாமல் இருக்கிறான். இதை தெரிந்துதான், பார்ப்பான் எது செய்தாலும் கேட்க நாதியில்லை என்று கருதி, நம்மை ஒழித்துக் கட்ட வேண்டுமென்றே கருதிக் கொண்டு துணிந்து வேலை செய்கிறார்கள். அதை எதிர்க்க நம் கழகம் ஒன்றுதான் இருக்கிறது. மற்றவர்களால் இது மாதிரி காரியங்களில் பிரவேசிக்கிறது என்பது ரொம்ப கடினமான காரியமாகும்.

அய்க்கோர்ட் ஜட்ஜு என்றால், ரொம்பப் பெரிய மனுஷர்கள் என்று கருதுவதுண்டு. வெள்ளைக்காரன் இதனால்தான் ஜட்ஜை கடவுளுக்குச் சமமாக்கி (My lord) என்று அழைக்கிறான். நீதிபரிபாலனம் செய்வதில் “கடவுளுக்கு”ச் சமமானவர்கள் என்ற கருத்தில் அவன் வைத்திருந்தான். அந்த மாதிரி இடத்தில் எப்படி இருக்க வேண்டும்? காலித்தனமான கோர்ட்டுக்குத் தேவை இல்லாத வகையில் எல்லாம், ரொம்பக் காலித்தனமாக நடந்து கோர்ட்டின் பெருமையைக் கெடுத்து வருகிறார்கள். கோர்ட்டு இப்படியே இருக்குமானால் நம் கதி என்னாவது?

இந்த மாதிரியான பார்ப்பனர்களிடமல்லவா நம் தலையெழுத்து இருந்து வருகிறது? அதுவும் பார்ப்பானுக்கும் நமக்கும் எல்லாத் துறையிலும் பெரிய போராட்டம் நடக்கிற இந்த நேரத்திலே இப்படி என்றால், நாம் எப்படி இதை சகித்துக் கொள்ள முடியும்? அதிலும் நம்மவர்கள் மந்திரிகளாக வந்து நம் மக்களுக்கு நன்மை செய்து - பொது ஜன செல்வாக்குடன் மக்களிடம் நல்ல மதிப்போடு இருக்கிறார்கள் என்றவுடன், மறுபடியும் எங்கு இவர்கள் பதவிக்கு வந்து விடுவார்களோ என்று கருதி, அதை ஒழித்துக் கட்டுவதற்காக இப்படியெல்லாம் பார்ப்பனர்கள் பார்ப்பன வக்கீல்கள், நீதிபதிகள் செய்கிறார்கள் என்கிறபோது, நம்மை மீறி அடக்க முடியாத ஆத்திரம் வருகிறது. ஆகவேதான் ஆத்திரம் தீரப் பேசிவிட்டு இரண்டிலொன்று பார்த்து விடலாம் என்று தோன்றுகிறது.

கொஞ்ச நாளைக்கு முன்னால் டெல்லியில் ரயில்வே மந்திரி திரு.ஜகஜீவன்ராம் ரெயில்வே இலாகாவில் உத்தியோகத்திற்கு நியமனம் செய்வதில் எப்படித் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி ஒதுக்கப்படுகிறதோ, அதே தன்மையில் அவர்களுக்குப் புரோமோஷன் கொடுப்பதிலும் கூட அதே சலுகை காட்டப்படவேண்டும் என்று, இந்தியா பூராவுக்கும் ஒரு உத்தரவு போட்டார். நம்நாட்டுப் பார்ப்பனர் (திரு.ரெங்காச்சாரி) என்பவர் சென்னை அய்க்கோட்டில் கேசு போடச் செய்து அதை ஒரு பார்ப்பன ஜட்ஜ் விசாரித்து அந்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு எழுதி விட்டார். அதே மாதிரி இந்த ஊரில், கலெக்டராக ரொம்ப நல்ல பேருடன் இருந்த திரு.மலையப்பனைப் பற்றி எப்படி இரண்டு பார்ப்பன நீதிபதிகளும் தாறுமாறாக எழுதி, அவர் வளர்ச்சியைக் கெடுத்துவிட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நேற்று நடை-பெற்ற திரு.அழகிரிசாமி (சர்க்கார் வக்கீல்) கேசிலே திரு.பாலகிருஷ்ணய்யர், திரு.ஜெகதீச அய்யர் தீர்ப்பு எழுதியது பற்றித்தான் இப்போது விவகாரம்.

சாதாரணமாக இந்த ஊரிலே நான் பிள்ளையார் பொம்மையை உடைச்சதுக்காக ஒரு ஆள் என்மீது கேசு போட்டார் அதுமுல்லே மாஜிஸ்திரேட் கோர்ட்டிலே தள்ளுபடியாச்சு, அதற்குப்பிறகு அப்பீலில்! சப்-ஜட்ஜ் கோர்ட்டிலும் தள்ளுபடி ஆச்சு. பிறகு ஜில்லா கோர்ட்டிலும் தள்ளுபடி ஆச்சு. அய்க்கோர்ட்டிலும் இதை விசாரித்த நீதிபதி இதைத் தள்ளிவிட்டார். இதற்கு அப்பீலுக்கும் அனுமதி மறுத்துவிட்டார். கடைசிக் கோர்ட்டான (டெல்லி) சுப்ரீம் கோர்ட்டுக்குப் போச்சு, அங்கே தீர்ப்பு சொல்லும் வாய்ப்பு பார்ப்பானுக்கு இருந்தது. உடனே கீழே 3-4 கோர்ட்டுகள் சொன்ன தீர்ப்புகள் தப்பு என்று சொல்லி, சட்டப்படிக் குற்றம் என்று தீர்ப்பு எழுதிவிட்டானே! சாதாரணமாக கீழே உள்ள கோர்ட்டிலே இப்படி இரண்டு, அப்படி இரண்டு என்று தீர்ப்பு சொல்லியிருந்தாலும் இப்படி சுப்ரீம் கோர்ட்டிலே தீர்ப்புச் சொல்லுவதில் கொஞ்சமாவது நியாயம் இருக்கமுடியும்? கீழே மூணு 4 கோர்ட்டிலே எழுதிய தீர்ப்பு என்னாவது? இந்தத் தீர்ப்பு எதுக்குப் பயன்படும்? நம்மமாதிரி காரியங்களைப் பண்ணுகிறவர்களை அடக்கத்தான் உதவுமே தவிர, பிள்ளையார் பொம்மையை உடைக்கிறவனையோ, சரஸ்வதி படத்தைக் கிழக்கிறவனையோ ஜெயிலில் போடுவதற்காக உதவும்? இப்படி அவன் கிட்டே பலம் இருக்கிறது. அதனால் நீதிமுறைக்கேட்டிற்கு இருக்கிறது காரணம் அமைப்பிலேயே கோளாறு காணப்படுகிறது.

http://www.keetru.com/rebel/periyar/64.php

சாதி ஒழிப்புத் தொடக்கம் - நடப்பு அதை ஒழிக்க வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் அம்பேத்கர் அவர்கள் நல்லவண்ணம் எழுதியிருக்கிறார்கள். முன்பு வடநாட்டின் பஞ்சாபில் சாதி ஒழிக்க ஓர் இயக்கம் ஏற்பாடு செய்தார்கள். அதைச் சாதி ஒழிக்கும் ஸ்தாபனம் என்று சொன்னார்கள். நன்கு வேலை செய்தார்கள். நம் பத்திரிகைகளை வாங்கி மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். நல்ல பகுத்தறிவுடன் கூடிய கார்ட்டூன்களைப் போட்டார்கள்; அதிலே என்னையும் உபதலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். நன்றாக நடந்து கொண்டிருந்தது. பிறகு பணக்காரர்கள் அதை விலைக்கு வாங்கி விட்டார்கள். அதற்கு உதவி செய்வதாகச் சொல்லி வந்தார்கள், விலைக்கு வாங்கினார்கள். இருந்தாலும், அதன் மூலம் சாதி ஒழிப்பு மாநாடு என்று கூட்டி, தலைமை வகிக்க அம்பேத்கரைக் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் சம்மதித்தார்கள்.

அவர்கள் அந்த மாநாட்டில் பேச சொற்பொழிவை எழுதினார்கள். அதைக் கண்டதும் ரொம்பத் திடுக்கிட்டு விட்டார்கள். மதம், சாஸ்திரம் ஒழிந்தால்தான் சாதி ஒழியும்; அதிலே ஒன்று இருந்தால் கூட சாதி ஒழியாது என்று சொல்லி இருக்கிறார். “மநு நீதி, சுருதி, மதம் இவற்றை முதலில் நீங்கள் ஒழித்தாக வேண்டும். அதைச் செய்யாமல் சாதியை ஒழிக்க முடியாது; இதுவே எனது உறுதியான அபிப்பிராயம்’ என்று எழுதியிருக்கிறார்கள். இதைப் பார்த்த உடனே அங்கே சாதியை ஒழிக்க வேண்டுமென்ற ஸ்தாபனத்தை ஏற்படுத்தியவர்கள், மத விரோதமாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு அவரை அணுகியபோது, அவரும் “என்னைத் தலைமை தாங்கப் போடுவதால் என் கருத்தைச் சொன்னேன்’ என்றார். இந்தக் கருத்தை ஜீரணிக்க முடியாது என்று மாநாட்டினர் சொல்ல, “நீங்கள் வேண்டுமென்றால் இது தப்பு என்று தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ளுங்கள்; உங்கள் மாநாட்டிற்குத் தலைமைப் பதவிக்காக என் கருத்துக்கு விரோதமாகப் பேச முடியாது’ என்று சொல்லிவிட்டார். அவர்கள் கெஞ்சியும் முடியவில்லை. அதனால் அவர்கள் அந்த மாநாட்டையே நிறுத்தி விட்டார்கள்.

கிராமங்களில் சாதி ஒழிய வேண்டுமென்றால் கணக்குப் பிள்ளை வேலையைப் பறையனுக்கு கொடுக்க வேண்டும்; மணியம் வேலையைப் பள்ளர், சக்கிலி ஆகியவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கணக்குப் பிள்ளையாகப் பார்ப்பானும் முதலியும், மணியமாகப் பிள்ளையும், கவுண்டனும் இருப்பதால் தான் அங்கே இருந்து சாதி உரிமை தோன்றுகிறது. ஆனதனாலே ஒரு திட்டம் போட வேண்டும். கணக்குப் பிள்ளை, மணியம் வேலைகளை அப்படி ஒதுக்கி வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் எப்படிச் சாதி உணர்ச்சி இருக்கும்? அதேமாதி கான்ஸ்டேபிள், எட்கான்ஸ்டேபிள், சப்இன்ஸ்பெக்டர் வேலைகளையும் பறையனுக்கு, பள்ளனுக்கு, சக்கிலிக்கு கொடுக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால், சமுதாயத்தில் சாதித் திமிர் ஒழிந்துவிடும்.

அப்படிக்கு இல்லாமல் சாதியே ஒழிய வேண்டுமென்று சொல்லும் வார்த்தையில் அர்த்தமில்லை. அவர்களுக்கு இன்று ஜட்ஜ் வேலை கொடுக்க வில்லையா? ஜில்லா கலெக்டர் வேலை கொடுக்க வில்லையா? மந்திரி வேலை கொடுக்கவில்லையா? அதில் எல்லாம் என்ன ஓட்டை கண்டார்கள்? ஏதோ பொறுக்கித் தின்கிற வேலையாக இருந்தாலும், அவர்கள் பொறுக்குவதை இவர்கள் பொறுக்கித் தின்றுவிட்டுப் போகிறார்கள். இதில் என்ன அதிகத் தவறு? சாதி ஒழிய வேண்டுமென்றால் அரசாங்கம் என்ன செய்தால் ஒழியுமோ, அதைத் துணிச்சலோடு செய்ய வேண்டும். கோயில் பூசாரி வேலையைக்கூட பறையனுக்கே கொடுக்க வேண்டும்; எவனாவது சாமி கும்பிட மாட்டேன் என்றால் கும்பிடாமல் போகட்டுமே.

நம் வளர்ச்சியைப் பெருக்க எது வந்தால் ஆகுமோ அதை எடுத்துக் கொள்ள வேண்டும். நம் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் ஒரு மொழி இருக்க வேண்டும். கடவுள் பேசும் மொழி என்று சொன்னால், அதைக் கேட்டு முட்டாளாகவே இருக்கிறானே! இதற்கு என்ன சமாதானம்? நம் உயர்ந்த மேதாவி - புலவன் எல்லாம் இலக்கியப் புராணங்களைப் படித்து முட்டாள்களாகத்தானே இருக்கிறார்கள். ராமாயணப் பிரச்சாரம் செய்கிறார்கள். புலவர்களுக்கு மானம், வெட்கம் கிடையாது. தங்கள் மணிபர்சு நிரம்ப வேண்டும் என்பதுதான். சாதி இருப்புக்குப் புலவர்களே காரணம்.

எந்த இலக்கியத்தை எடுத்துக் கொண்டாலும், கந்தன், ராமன், கிருஷ்ணன் முதலிய கதைகளை எடுத்துக் கொண்டாலும் எதில் சாதி ஒழிந்திருக்கிறது? நாயன்மார்கள், ஆழ்வார்கள், பரமஹம்சர்கள், மகாத்மாக்கள், வெங்காயம் இவர்கள் எல்லாம் இருந்தார்களே! எந்த ஆழ்வார், எந்த நாயன்மார், எந்த மகரிஷி சாதி ஒழிய வேண்டுமென்று சொன்னார்கள்? சாதி ஒழிய வேண்டும் என்று எழுதியதெல்லாம் குப்பைக்குப் போய் விட்டது. சாதி வேண்டும் என்பதெல்லாம் வெளியே தெரிகிறது; பிரச்சாரம் செய்யப்படுகிறது.

ஆகவே, பகுத்தறிவு பலமடைய வேண்டும். ஆராய்ச்சி, அறிவு என்ன சொல்கிறது? அதற்கு என்ன அவசியம்? இந்தத் தலைமுறைக்கு முற்போக்கு அடைவோமா என்று சிந்தித்துப் பார்த்தால், தானாகவே வந்துவிடும். நான் சொன்னதையெல்லாம் நம்பி விடாதீர்கள். இதெல்லாம் ஒரு மனிதனின் கருத்து. இதையெல்லாம் நீங்கள் சிந்திக்க வேண்டும். அறிவுக்குத் தடையில்லாமல் சிந்திக்க வேண்டும். ஏதோ தோன்றியதெல்லாம் சரி என்று சொல்லவில்லை. இதை நீங்கள் சிந்தித்து விஷயங்களை அறிந்து நான் சொல்லியதில் எது சரி? எது தப்பு? என்று ஆராய்ந்து, எது சரியென்று படுகிறதோ அதைப் பற்றிச் சிந்தியுங்கள். அந்த உணர்ச்சி வந்தால்தான் எடுக்கும் காரியம் வெற்றி பெறும்.


வில்லிவாக்கத்தில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில் 11.4.1964ல் ஆற்றிய உரை

 

http://www.keetru.com/rebel/periyar/65.php

எனது 93-வது ஆண்டு பிறந்தநாள் மலருக்கு ஒரு செய்தி வேண்டும் என்று நண்பர் திரு.வீரமணி அவர்கள் கேட்டார். சற்றேறக் குறைய 10 ஆண்டுகளாகவே எனது பிறந்த நாள் மலருக்குச் சேதி கொடுத்துக் கொண்டுதான் வருகிறேன். முதலாவதாக எனது பிறந்த நாள் என்பது எனது பிரச்சாரத்திற்கு ஒரு சாதனமாக - ஒரு ஆதாரமாக விளங்குகிறது என்பது ஒரு கல்லுப் போன்ற செய்தியாகும்.

நான் சமுதாய சமத்துவத்திற்குப் பாடுபடுகின்ற ஒரு தொண்டனாவேன். அதாவது, சாதி அமைப்பை அடியோடு ஒழிக்கப் பாடுபடுபவன். சாதி அமைப்பு என்பது 'கடவுள், மதம்' மற்றும் அவைகள் சம்பந்தமான எதையும் ஒழித்தாக வேண்டும் என்று கருதி அவைகளை ஒழிக்கப் பாடுபடுகிறவன். அதில் எந்த அளவும் மக்களுக்குச் சந்தேகமில்லாமல் நடந்தும் வருகிறேன். மக்களோ பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ஆவார்கள். கடவுள் ஒழிப்பு என்பது மக்களுக்கு ஆத்திரத்தையும் கோபத்தை யும் உண்டாக்கக் கூடியதாகும். இது மாத்திரமல்ல; நம்மைச் சபிக்கவும் கூடியதாகும். ஆகையால், சபிக்கப்பட்டும் வருகின்றேன். சபிக்கும் மக்களோ கடவுளைச் சர்வசக்தி உடையவர் என்று பலமாக நம்புகின்றவர்கள். அவர்கள் சாபம் பலிக்காவிட்டாலும் கடவுள் என்னைச் சும்மா விட்டுக் கொண்டு இருக்கமாட்டார் என்றும் நம்புகிறவர்கள் ஆவார்கள்.

நானோ எனது பிரச்சாரத்தில் கடவுளே இல்லை என்று சொல்லுவதற்காகவே சிறுமைப்படுத்தி, இழிவுபடுத்தி - செய்கையாலும், காட்டிக் கொண்டே, நடந்துகொண்டே வருபவன். இந்த நிலையில் எனது 92-வது வயதில் கடவுள் நம்பிக்கை ஒரு மூடநம்பிக்கையில் பட்டதென்பதை நல்லவண்ணம் மக்களுக்கு விளங்கும்படி, 'கடவுளைச் செருப்பால் அடிக்கும்படி' நான் சொல்லும் அளவுக்கு ஆளாகி இருக்கின்றேன். இந்த நிலையில், எனது 92-வது வாழ்நாள் முடிந்து 93-வது வாழ்நாள் தோன்றிவிட்டது என்றால், கடவுள் இருந்தால் இப்படி நடக்குமா? விட்டுக்கொண்டு இருப்பானா? - என்று எந்த, எப்படிப்பட்ட கடவுள் நம்பிக்கை பக்தனும் நினைத்து - அவனுக்கு ஒரு சிறு அறிவிருந்தாலும், 'கடவுளாவது வெங்காயமாவது' என்று கருதி, ஓரளவுக்காவது தெளிவு பெற முடியும் என்பது எனது கருத்து. அதனாலேயே, எனது 93-வது வருஷப் பிறப்பு என்பது எனது பிரச்சாரத்திற்கு ஆதாரம் என்று கருதுகிறேன்.

சென்ற எனது 92-ஆம் ஆண்டு மலருக்கு நான் எழுதிய எனது பிறந்த நாள் செய்தியில் 'எனது 91-வது ஆண்டு எனக்கு உற்சாகமாகவே கழிந்தது. மனச் சலிப்பு அடைய வேண்டிய அவசியம் இல்லாமல் இருப்பது மாத்திரம் அல்லாமல், இதுபோல் வாழ்நாள் நீண்டால் மேலும் பல முன்னேற்றகரமான காரியம் செய்ய வாய்ப்பு ஏற்படலாம் என்று தோன்றுகிறது. மற்றும், மக்களிடையில் ஒரு மாறுதலைக் காண்கிறேன். அதுவும் தீவிரமான மாறுதலுக்கு இணங்குபவர்கள் போல மக்களைக் காண்கின்றேன்.

கடவுள், மதம், சாதி முதலிய விஷயங்களால், மக்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மாறுதல் அடையப் பக்குவமாய் இருக்கிறார்கள் என்றே காண்கின்றேன். இந்த நிலைதான் எனது உற்சாகத்திற்கும், மேலும் இருந்து தொண்டு செய்யலாம் என்ற நம்பிக்கைக்கும் ஆதரவிற்கும் காரணமாகும்.'

இந்தப்படி எழுதிய நான், முந்திய ஒரு ஆண்டில் எனக்கு மனச் சலிப்பு ஏற்பட்டு 'நான் ஏன் இருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று' என்று எழுதிச் சலிப்படைந்து இருக்கின்றேன். இந்தச் சலிப்பைக் கண்டு காலஞ்சென்ற மாண்புமிகு அறிஞர் அண்ணா அவர்களும் திரு.காமராசர் அவர்களும் எனக்கு ஆறுதல் எழுதி உற்சாகமூட்டினார்கள். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியவர்களது ஆட்சி ஏற்பட்டதற்குப் பிறகு தான் நான் உண்மையிலேயே நம்பிக்கையும் உற்சாகமும் அடைந்தேன்.

உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரமாகத் தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம் தான் சாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீறி இருந்தாலும் சாதி உண்மையிலேயே ஒழிந்ததாக ஆகாது.

ஏன் எனில், சாதி என்பது இந்த நான்கில் இருந்தும் ஆக்கப்பட்டதே ஆகும். இப்போது சொல்லுவேன்; நாகரிகத்திற்காகச் சிலர் சாதி ஒழிய வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால், அவர்கள் மேற்கண்ட நான்கையும் ஒழிக்கத் துணிவு கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களால் நமக்கு ஒரு பயனும் ஏற்படாது. சில சமயங்களில் அவர்கள் நமக்கு எதிரிகளாகவும் ஆகக்கூடும். மனிதனை மடையனாக, அடிமையாக ஆக்கப்பட்ட பின்புதான் சாதி புகுத்தப்பட்டதாகும். சுதந்திர உணர்ச்சியும், அறிவும் ஏற்படாமல் சாதியை ஒழிக்க முடியாது. மடமைக்கும் அடிமைத் தன்மைக்கும் ஆக்கம் அளித்துச் சாதியை நிலை நிறுத்துவது தான், சாதியை ஒழியாமல் பாதுகாப்பதுதான் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் என்பவைகளாகும்.

உண்மையில் சாதி ஒழிய வேண்டும் என்று கருதுபவர்கள், இந்த நான்கு ஒழிப்புக்கும் சம்மதித்தவர்களாகவே தான் இருப்பார்கள். நமது மக்களில் பெரும்பாலோர் இன்று அப்படி ஆகிவிட்டார்கள் என்பதுதான் எனது உற்சாகத்திற்கும் காரணமாகும். எதனால் இப்படிச் சொல்கிறேன் என்றால், சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டையும், அதனை அடுத்து நடந்த நமது தி.மு.க. தேர்தலையும் (பொதுத் தேர்தலையும்) கொண்டுதான் இப்படிச் சொல்லுகின்றேன்.

அதாவது, 'கடவுளைச் செருப்பால் அடித்ததாக' 10 இலட்சக்கணக்கான பத்திரிகைகள், 10 இலட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள், மாணவர்கள், வக்கீல்கள், அதிகாரிகள், சில பெண்கள் மற்றும் காங்கிரஸ் இயக்கம், சுதந்திரா இயக்கம், ஜனசங்க இயக்கம் முதலிய - சாதித் துவேஷமற்ற தமிழ் உணர்ச்சிக்கு மாறான பல இயக்கங்களும் எதிராகப் பாடுபட்டு - 230 இடங்களில் சுமார் 200 இடங்களுக்கு மேல் (தி.மு.க.) வெற்றி பெற நேர்ந்தது என்றால், சென்ற ஆண்டு பிறந்த நாள் செய்திக்கு நான் கொண்ட கருத்து - அதன் அளவுக்குமேல் மெய்யாகி வெற்றிபெற்றது என்பது யாருக்கும் விளங்கும்.

இனி, நமது சாதி ஒழிப்புக்கு மக்களில் யாரும் எதிர்ப்பு இல்லை என்பது உறுதியான செய்தியாகிவிட்டது.
இந்த நிலையில், நான் நமது மக்களை அடி பணிந்து வேண்டிக்கொள்வதெல்லாம் - கோயில்களுக்குப் போகாமல் இருக்கவேண்டும்; உற்சவங்களில் கலவாமல், மதப் பண்டிகைகள் கொண்டாடாமல், நெற்றிக் குறி அணியாமலும் இருக்கவேண்டும் என்பதேயாகும். மற்றும் நான் நினைக்கின்றேன்; அண்மையில் ஒரு மாநாடு கூட்டி, கோயில்களுக்குப் போகிறவர்களை அடிபணிந்து வேண்டிக் கொள்வது மூலம் போகாமல் இருக்கச் செய்யலாமா என்று, யோசனை கேட்டுக் காரியத்தில் தொடரலாமா என்று சிந்திக்கிறேன். இதுதான் எனது 93-வது பிறந்த நாள் விண்ணப்பம்.

93ஆம் பிறந்த நாள் விழா 'விடுதலை' மலர் 17.9.1971

http://www.keetru.com/rebel/periyar/66.php

இந்திய மக்கள் எவ்வித முன்னேற்றமோ, விடுதலையோ, சுதந்திரமோ பெறுவதற்குத் தங்களை அருகர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதற்கு முன்பாக - இந்தியர்கள் ஒரே சமூகத்தார் ஒரே இலட்சியமுடையவர் - என்கிற நிலையை அடையவேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இன்று முற்போக்கோ, சுதந்திரமோ, விடுதலையோ அடைந்திருக்கும் நாட்டார்கள் எல்லாம் முதலில் தங்கள் நாட்டாரெல்லாம் ஒரே சமூகத்தார் என்றும், ஒரே இலட்சியமுடையவர்கள் என்றுமானபிறகு தான் அவர்கள் முன்னேறவும், விடுதலை பெற்றுச் சுதந்திரமடையவும் முடிந்தது.

ஆனால், நமது இந்தியாவைப் பற்றிப் பேசப் புறப்படுவோமானால், இது ஒரு சமூக மக்கள் கொண்ட நாடு என்றோ, ஒரே இலட்சியமுள்ள மக்களைக் கொண்ட நாடு என்றோ யாரும் சொல்ல முடியாது. ஏனெனில், இந்தியாவானது பல மதங்களாய், பல சாதிகளாய் இருப்பதோடு, மொழிகளிலும் நடை, உடை, பாவனைகளிலும் பலப்பல மாறுதல்களைக் கொண்டிருக்கிறது. இந்த வித்தியாசங்கள் என்று தொலைவது? மக்கள் எந்தக் காலம் ஒன்றுபட்டு ஒரு சமூகமாகி, ஒரே இட்சியம் கொள்ளுவது என்பவைகளை நினைத்தால், மனம் ஓடிய வேண்டியிருக்கிறதே தவிர நம்பிக்கைக்கு இடமில்லை. என்றாலும், மக்கள் ஒன்றுபட்ட சாயலை அடைந்து பார்வையிலாவது, - அதாவது மனிதனுக்கு மனிதன் பார்த்தவுடனே ஒரு வேற்றுமை உணர்ச்சி தோன்றுவதற்கில்லாமல் செய்துவிட்டால் - பிறகு ஒவ்வொருவரும் தன்தன் மதம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவைகளைக் காட்டியபின்பு ஒரு சமயம் வேற்றுமை உணர்ச்சி உண்டானாலும், அதை அது முதலில் பார்த்தவுடன் தோன்றிய ஒற்றுமை உணர்ச்சியின் பலத்தால் தலை தூக்காதிருக்கும்படி செய்யலாம்.

ஆதலால், ஒரு நாட்டினருக்குள் இருக்கும் பலவிதமான வேற்றுமைகளை ஒழித்து ஒரு சமூகமாக்க வேண்டுமானால், முதலில் சாயலுக்கும் பிரித்துக் காட்டுவதற்கும் ஆதாரமாய் இருக்கும் உடையை ஒன்றுபடுத்தவேண்டியது முக்கியமானதாகும்.

உதாரணமாக, மற்ற நாட்டினரான சைனாக்காரரையோ, ஜப்பான்காரரையோ எடுத்துக் கொண்டால், அந்த நாட்டாரில் அந்த நாட்டாருக்குள்ளாகவே ஒருவருக்கொருவர் எவ்வித வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியாத சாயலையும் உடையையும் கொண்டிருப்பது யாவருமறியலாம்.

இந்த உண்மையையும் இரகசியத்தையும் கண்டுதான் வீரர் கமால்பாட்சா அவர்கள் எல்லோரும் ஒரே வித உடை அணிந்து ஒரு சாயலாகவே இருக்கவேண்டுமென்று உத்தரவிட்டார். அதன் மூலம், துருக்கி நாடு சிறியதாக இருந்தாலும் அது தன்னையும் ஒரு வல்லரசு என்று மதிக்கும்படி செய்துகொண்டது. இதைப் பின்பற்றியே தான் ஆப்கானிஸ்தானமும் முயல்கின்றது.

நமது நாட்டிற்கும் இப்போது வெகு அவசரமாக உடையும் சாயலும் மாற்றப்பட்டு ஒன்றுபோல் தோன்றும்படி செய்யவேண்டியது அவசியம். இந்த எண்ணம் நமக்கும் நமது நண்பர்களில் பலருக்கும் வெகுநாளாகவே இருந்து வந்தாலும், என்ன மாறுதல் செய்வது என்னும் விஷயத்தில் யோசனையாகவே இருந்து வந்ததால் தாமதப்படுத்தப்பட்டுவிட்டது. அதோடு நாம் சொல்லுவது மற்றவர்களுக்கும் சம்மதப்படும்படியாய் இருக்க வேண்டுமே, உடனே பின்பற்ற வேண்டுமே என்கின்ற யோசனையும் இருந்து வந்தது.

சாயல், உடை, பழக்க உணர்ச்சி ஆகியவைகளில் மேல் நாட்டாரைப் போல் கட்டுப்படுகின்ற வழக்கமோ, கவலையோ நம்மவர்களுக்குச் சிறிதும் கிடையாதாதலினாலும், அவ்வித வித்தியாசங்களே இந்த நாட்டின் பெருமைக்கும், இயற்கை வனப்பிற்கும் அணிகலனாய் இருப்பதாக மக்கள் கருதி வந்ததாலும், இது இப்போது பிரஸ்தாபிக்கக் கூடாததாகக் கூட பலருக்குத் தோன்றினாலும் தோன்றலாம்.

மேல் நாட்டார் கட்டுப்பாட்டுக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், அவர்கள் உடை, முன் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் உள்ள மாறுதலும், அதை ஒரேயடியாய் அய்ரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா முதலிய கண்டங்கள் உடனே பின்பற்றுவதும் - அது போலவே அப்பெண்கள் தலைமயிர் முன் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் உள்ள வித்தியாசமும், அதை எல்லாக் கண்டங்களிலுள்ள வெள்ளைக்காரரும் பின்பற்றுவதையும் பார்த்தாலே போதுமானதாகும்.

அவசியம் என்றோ, கட்டுப்பாடு என்றோ அவர்களுக்குத் தோன்றிவிடுமானால், எந்த மாறுதலானாலும் அதை அரச ஆக்கினைபோல் பாவித்து, எல்லோரும் உடனே கீழ்ப்படியும் வழக்கம் அவர்களுக்குள் உண்டு. கட்டுப்பாட்டிற்கு மற்றொரு உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடுகின்றோம்.

அதாவது, அய்ரோப்பாவில் பெண்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டதில் சில உயர் குடும்பங்கள் என்று சொல்லப்படும் குடும்பப் பெண்கள் தாங்களும் தலை மயிரைக் கத்தரித்துக் கொண்டாலும், ஜார்ஜ் சக்கரவர்த்தியின் மனைவியான மேரி ராணியார் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ளாததில் சற்று அதிருப்தியுடன் கட்டுப்பாட்டிற்குப் பயப்பட வேண்டியவர்களாக இருந்தார்களாம். இதை அரச குடும்பத்தார் அறிந்ததும் இளவரசர் மனை இளவரசியை உடனே தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ளும்படி செய்தார்களாம். இப்போது அது பொது தேசாச்சாரமாய் விட்டது.

ஆனால், நம் நாட்டிலோ எப்பேர்ப்பட் மாறுதலாயிருந்தாலும் அது எவ்வளவு சரியானதாயும், தேவையானதாயும் இருந்தாலும் பயனும் பொருளும் அற்ற பழைய வழக்கம் என்னும் ‘பேய்க்கு’ - அதாவது மூடபயத்திற்கு அடிமையாகி, உடனே அதைக் குற்றம் சொல்லவும், உள் எண்ணம் கற்பிக்கவும், எதிர்ப் பிரச்சாரம் செய்யவும் புறப்பட்டு விடுகிறார்கள். ஆதலால்தான், ஆயிரக்கணக்கான வருஷங்களாக இந்திய மக்கள் மாத்திரம் வேற்றுமைப்பட்டு, பிரிந்து, துவஷேங்கொண்டு, அன்னியருக்கு அடிமைகளாய் இருக்க வேண்டியவர்களாகி விட்டார்கள். இதை ஒரு வழியில் போக்க முயற்சிக்க வேண்டுமென்று கருதி, பல மாறுதல்களுடன் உடை மாறுதல்களைப் பற்றித் துணிந்து தெரிவிக்கிறேன்.

(‘குடி அரசு’ - தலையங்கம், 9-11-1930)
http://www.keetru.com/rebel/periyar/67.php

மற்ற கட்டுரைகள் …

Load More