சமூகவியலாளர்கள்

முக்கு, கண், வால், பசுமை

இலவின்காய் போலும் செக்கச்
செவேலென இருக்கும் மூக்கும்,
இலகிடு மணல் தக்காளி
எழில்ஒளிச் செங்காய்க் கண்ணும்,
நிலைஒளி தழுவும் மாவின்
நெட்டிலை வாலும், கொண்டாய்,
பலர்புகழ் கின்ற பச்சைப்
பசுங்கிளி வாராய் ! வாராய் !

கழுத்து வரி, சொக்குப் பச்சை

நீலவான் தன்னைச் சுற்றும்,
நெடிதான வான வில்லைப்
போலநின் கழுத்தில் ஓடும்
பொன்வரி மின் விரிக்கும்!
ஆல், அல ரிக்கொ ழுந்தில்
அல்லியின் இலையில் உன்றன்
மேலுள சொக்குப் பச்சை
மேனிபோல் சிறிது மில்லை!

அழகுச் சரக்கு

கொள்ளாத பொருள்க ளோடும்,
அழகினிற் சிறிது கூட்டிக்
கொள்ளவே செயும் இயற்கை,
தான்கொண்ட கொள்கை மீறித்
தன்னரும் கை யிருப்பாம்
அழகெனும் தலைச் சரக்கைக்
கிள்ளியமைத் திட்ட கிள்ளாய்
கிட்டவா சும்மா வாநீ!

சொன்னதைச் சொல்லும்

இளித்தவா யர்கள், மற்றும்
ஏமாற்றுக் காரர் கூடி
விளைத்திடும் தொல்லை வாழ்வில்,
மேலோடு நடக்க எண்ணி
உளப்பாங்க றிந்து மக்கள்
உரைத்ததை உரைத்த வண்ணம்
கிளத்திடும் கிளியே என்சொல்
கேட்டுப்போ பறந்து வாராய் !

ஏற்றிய விளக்கு

கிளிச்செல்வ மேநீ அங்குக்
கிடந்திட்ட பச்சிலை மேல்
பளிச்சென எரியும் கோவைப்
பழத்தில்உன் முக்கை ஊன்றி
விளக்கினில் விளக்கை ஏற்றிச்
செல்லல்போல் சென்றாய் ! ஆலின்
கிளைக்கிடை இலையும், காயும்
கிடத்தல்போல் அதில் கிடந்தாய்!

நிறைந்த ஆட்சி

தென்னைதான் ஊஞ்சல் ! விண்தான்
திருவுலா வீதி ! வாரித்
தின்னத்தான் பழம், கொட் டைகள்!
திருநாடு வையம் போலும்!
புன்னைக்காய்த் தலையில் செம்மைப்
புதுமுடி புனைந்தி ருப்பாய்!
உன்னைத்தான் காணு கின்றேன்
கிள்ளாய்நீ ஆட்சி உள்ளாய்!

இருவகைப் பேச்சு

காட்டினில் திரியும் போது
கிரீச்சென்று கழறு கின்றாய்;
கூட்டினில் நாங்கள் பெற்ற
குழந்தைபோல் கொஞ்சு கின்றாய்!
வீட்டிலே தூத்தம் என்பார்
வெளியிலே பிழைப்புக் காக
ஏட்டிலே தண்ணீர் என்பார்
உன்போல்தான் அவரும் கிள்ளாய்!

மக்களை மகிழ்விக்கும்

கொஞ்சுவாய் அழகு தன்னைக்
கொழிப்பாய்நீ, அரசர் வீட்டு
வஞ்சியர் தமையும், மற்ற
வறியவர் தமையும், ஒக்க
நெஞ்சினில் மகிழ்ச்சி வெள்ளம்
நிரப்புவாய், அவர் அளிக்கும்
நைந்தநற் பழத்தை உண்பாய்;
கூழேனும் நன்றே என்பாய்!

கிளிக்குள்ள பெருமை

உனக்கிந்த உலகில் உள்ள
பெருமையை உணர்த்து கின்றேன்;
தினைக்கொல்லைக் குறவன் உன்னைச்
சிறைகொண்டு நாட்டில் வந்து,
மனைதோறும், சென்றே உன்றன்
அழகினை எதிரில் வைப்பான்;
தனக்கான பொருளைச் செல்வர்
தமிழ்க்கீதல் போல ஈவார்!

ஓவியர்க் குதவி

பாவலர் எல்லாம் நாளும்
பணத்துக்கும், பெருமைக்கும் போய்க்
காவியம் செய்வார் நாளும்
கண் கைகள் கருத்தும் நோக!
ஓவியப் புலவ ரெல்லாம்
உநைப்போல எழுதி விட்டால்
தேவைக்குப் பணம் கிடைக்கும்
கீர்த்தியும் கிடைக்கும் நன்றே!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm

கூட்டின் திறப்பு, புறாக்களின் குதிப்பு

வீட்டுக்கு வெளிப் புறத்தில்
வேலன்வந் தேபு றாவின்
கூட்டினைத் திறக்கு முன்பு
"குடுகுடு" எனக்கு தித்தல்
கேட்டது காதில் ! கூட்டைத்
திறந்ததும் கீழ்ச் சரிந்த
கோட்டுப்பூப் போற்பு றாக்கள்
குதித்தன கூட்டி னின்றே !

புறாக்களின் பன்னிறம்

இருநிலா இணைந்து பாடி
இரையுண்ணும் ! செவ் விதழ்கள்
விரியாத தாமரை போல்
ஓர்இணை ! மெல்லி யர்கள்
கருங்கொண்டை ! கட்டி ஈயம்
காயாம்பூக் கொத்து ! மேலும்,
ஒருபக்கம் இருவா ழைப்பூ !
உயிருள்ள அழகின் மேய்ச்சல் !

புறாக்களிடம் ஒத்துண்ணல் உண்டு

இட்டதோர் தாமரைப் பூ
இதழ்விரிந் திருத்தல் போலே
வட்டமாய்ப் புறாக்கள் கூடி
இரையுண்ணும் ; அவற்றின் வாழ்வில்
வெட்டில்லை; குத்து மில்லை;
வேறுவே றிருந்த ருந்தும்
கட்டில்லை ; கீழ்மேல் என்னும்
கண்மூடி வழக்க மில்லை.

நடை அழகு

அகன் றவாய்ச் சட்டி ஒன்றின்
விளிம்பினில் அடிபொருந்தப்
புகும்தலை ; நீர்வாய் மொண்டு
நிமிர்ந்திடும் ; பொன் இமைகள்
நகும்;மணிவிழிநாற் பாங்கும்
நாட்டிடும்; கீழ்இ றங்கி
மகிழ்ச்சியாய் உலவி, வைய
மன்னர்க்கு நடை கற்பிக்கும்!

புறாவின் ஒழுக்கம்

ஒருபெட்டை தன் ஆண் அன்றி
வேறொன்றுக் குடன் படாதாம்;
ஒருபெட்டை மத்தாப் பைப்போல்
ஒளிபுரிந் திட நின்றாலும்
திரும்பியும் பார்ப்ப தில்லை
வேறொரு சேவல்! தம்மில்
ஒருபுறா இறந்திட்டால் தான்
ஒன்றுமற் றொன்றை நாடும்!

புறாக்களுக்கு மனிதர் பாடம்

அவள்தனி; ஒப்ப வில்லை;
அவன், அவள் வருந்தும் வண்ணம்
தவறிழைக் கின்றான். இந்தத்
தகாச்செயல் தன்னை, அன்பு
தவழ்கின்ற புறாக்கள் தம்மில்
ஒரு சில தருதலைகள்,
கவலைசேர் மக்க ளின்பால்
கற்றுக் கொண்டிருத்தல் கூடும்!

புறாக்கள் காதல்

தலைதாழ்த்திக் குடுகு டென்று
தனைச் சுற்றும் ஆண்புறாவைக்
கொலை பாய்ச்சும் கண்ணால், பெண்ணோ
குறுக்கிற் சென்றே திரும்பித்
தலநாட்டித், தரையைக் காட்டி,
"இங்குவா" என அழைக்கும்;
மலைகாட்டி அழைத்தா லுந்தான்
மறுப்பாரோ மையல் உற்றார்?

தாயன்பு தந்தையன்பு

தாய் இரை தின்ற பின்பு
தன்குஞ்சைக் கூட்டிற் கண்டு
வாயினைத் திறக்கும்; குஞ்சு
தாய்வாய்க்குள் வைக்கும் மூக்கைத்;
தாய்அருந் தியதைக் கக்கித்
தன்குஞ்சின் குடல்நி ரப்பும்;
ஓய்ந்ததும் தந்தை ஊட்டும்!
அன்புக்கோர் எடுத்துக் காட்டாம்!

மயிற்புறா ஆடல்

மயில்புறா, படம் விரிக்கும்;
மார்பினை முன் உயர்த்தும்;
நயப்புறு கழுத்தை வாங்கி
நன்றாக நிமிர்ந்து, காலைப்
பயிற்றிடும் ஆடல் நு஡லின்
படி, து஡க்கி அடைவு போடும்;
மயிற்புறா வெண்சங் கொக்கும்;
வால் தந்த விசிறி ஒக்கும் !

அடைபடும் புறாக்கள்

கூட்டமாய்ப் பறந்து போகும்,
சுழற்றிய கூர்வாள் போலே!
கூட்டினில் அடையும் வந்தே
கொத்தடி மைகள் போலே!
கூட்டினை வேலன் வந்து
சாத்தினான், குழைத்து வண்ணம்
தீட்டிய ஒவியத்தைத்
திரையிட்டு மறைத்தல் போலே!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm

அடி, கிளை, காய், இலை, நிழல்

ஆயிரம் கிளைகள் கொண்ட
அடிமரம் பெரிய யானை!
போயின மிலார்கள் வானில் !
பொலிந்தன பவளக் காய்கள் !
காயினை நிழலாற் காக்கும்
இலையெலாம், உள்ளங் கைகள் !
ஆயஊர் அடங்கும் நீழல்,
ஆலிடைக் காண லாகும் !

விழுதும் வேரும்

து஡லம்போல் வளர்கி ளைக்கு
விழுதுகள் தூண்கள்! தூண்கள்
ஆலினைச் சுற்றி நிற்கும்
அருந்திறல் மறவர் ! வேரோ
வாலினைத் தரையில் வீழ்த்தி
மண்டிய பாம்பின் கூட்டம் !
நீலவான் மறைக்கும் ஆல்தான்
ஒற்றைக்கால் நெடிய பந்தல் !

பச்சிலை, இளவிழுது

மேற்கிளை யின்வீழ் தெல்லாம்
மின்னிடும் பொன்னிழைகள் !
வேற்கோல்போல் சிலவீழ் துண்டாம்!
அருவியின் வீழ்ச்சி போலத்
தோற்றஞ்செய் வனவும் உண்டு!
சுடர்வான்கீழ்ப் பச்சிலை வான்
ஏற்பட்ட தென்றால், வீழ்தோ
எழுந்தங்கக் கதிர்கள் என்பேன்.

அடிமரச் சார்பு

அடிமரப் பதிவி லெல்லாம்
அடங்கிடும் காட்டுப் பூனை!
இடையிடை ஏற்பட் டுள்ள
பெருங்கிளைப் பொந்தி லெல்லாம்
படைப்பாம்பின் பெருமூச்சுக்கள் !
பளிங்குக்கண் ஆந்தைச் சீறல் !
தடதடப் பறவைக் கூட்டம் !
தரையெலாம் சருகின் மெத்தை !


வெளவால், பழக்குலை, கோது, குரங்கு, பருந்து

தொலைவுள்ள கிளையில் வெளவால்
தொங்கிடும்; வாய்க்குள் கொண்டு
குலைப்பழம், கிளை, கொ டுக்கும் ;
கோதுகள் மழையாய்ச் சிந்தும் !
தலைக்கொழுப் புக்கு ரங்கு
சாட்டைக்கோல் ஒடிக்கும் ; பின்னால்
இலைச்சந்தில் குரங்கின் வாலை
எலியென்று பருந்தி ழுக்கும் !

கிளிகள்

கொத்தான பழக்கு லைக்குக்
குறுங்கிளை தனில்ஆண் கிள்ளை
தொத்துங்கால் தவறி, அங்கே
துடிக்குந்தன் பெட்டை யண்டைப்
பொத்தென்று வீழும் ; அன்பிற்
பிணைந்திடும் ; அருகில் உள்ள
தித்திக்கும் பழங்கள் அக்கால்
ஆணுக்குக் கசப்பைச் செய்யும் !

சிட்டுக்கள்

வானத்துக் குமிழ்ப றந்து
வையத்தில் வீழ்வ தைப்போல்
தானம்பா டும்சிட் டுக்கள்
தழைகிளை மீது வீழ்ந்து,
பூனைக்கண் போல்ஒ ளிக்கும் ;
புழுக்களைத் தின்று தின்று
தேனிறை முல்லைக் காம்பின்
சிற்றடி தத்திப் பாடும்.

குரங்கின் அச்சம்

கிளையினிற் பாம்பு தொங்க,
விழுதென்று, குரங்கு தொட்டு
"விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதித்த தைப்போல்"
கிளைதோறும் குதித்துத் தாவிக்
கீழுள்ள விழுதை யெல்லாம்
ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்.

பறவை யூஞ்சல்

ஆலினைக் காற்று மோதும் ;
அசைவேனோ எனச்சி ரித்துக்
கோலத்துக் கிளைகு லுங்க
அடிமரக் குன்று நிற்கும் !
தாலாட்ட ஆளில் லாமல்
தவித்திட்ட கிளைப்புள் ளெல்லாம்
கால்வைத்த கிளைகள் ஆடக்
காற்றுக்கு நன்றி கூறும் !

குயில் விருந்து

மழைமுகில் மின்னுக் கஞ்சி
மாங்குயில் பறந்து வந்து
"வழங்குக குடிசை" என்று
வாய்விட்டு வண்ணம் பாடக்
கொழுங்கிளைத் தோள் உயர்த்திக்
குளுரிலைக் கைய மர்த்திப்
பழந்தந்து களிப்பாக் கும்பின்
பசுந்துளிர் வழங்கும் ஆலே.

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm

விண்மீன் நிறைந்த வான்

மண்மீதில் உழைப்பா ரெல்லாம்
வறியராம்! உரிமை கேட்டால்
புண்மீதில் அம்பு பாய்ச்சும்
புலையர்செல் வராம்; இதைத் தன்
கண்மீதில் பகலி லெல்லாம்
கண்டுகண் டந்திக் குப்பின்
விண்மீனாய்க் கொப்ப ளித்த
விரிவானம் பாராய் தம்பி!

நிலாச்சேவல், விண்மீன் குஞ்சுகள், இருட்டுப்பூனை

பாற்புகை முகிலைச் சீய்த்துப்
பளிச்சென்று "திங்கட் சேவல்"
நாற்றிக்கும் குரல் எடுத்து
நல்லொளி பாய்ச்சிப் பெட்டை
ஏற்பாட்டுக் கடங்காப் பொட்டுப்
பொடிவிண்மீன் குஞ்சு கட்கும்
மேற்பார்வை செலுத்திப் "பூனை
இருட்டையும்" வெளுத்துத் தள்ளும்.

பகல் வானில் முகிலோவியங்கள்

பகல்வானிற் கதிரின் வீச்சுப்
பரந்தது! முகிலி னங்கள்
வகைவகை ஓவி யங்கள்
வழங்கின; யானைக் கூட்டம் !
தகதக எனும்மா ணிக்க
அருவிகள் ! நீலச் சாரல் !
புகைக்கூட்டம் ! எரிம லைகள்!
பொன் வேங்கை ! மணிப்பூஞ்சோலை !

இருண்ட வானும் ஏற்றிய விளக்கும்

கிழக்குப்பெண் விட்டெ றிந்த
கிளிச்சிறைப் பரிதிப் பந்து,
செழித்தமேற் றிசைவா னத்தின்
செம்பருத் திப்பூங் காவில்
விழுந்தது ! விரிவிளக்கின்
கொழுந்தினால் மங்கை மார்கள்
இழந்ததைத் தேடிக் கொள்ள
இருள்மாற்றிக் கொடுக்கின் றார்கள் !

காலை வானம்

கோழிகூ விற்று ! வையம்,
கொண்டதோர் இருளைத் தங்க
மேழியால் உழுதான் அந்த
விரிகதிர்ச் செல்வன் ; பின்னர்
ஆழிசூழ் உலகின் காட்சி
அரும்பிற்று ! முனைய விழ்ந்து
வாழிய வைய மென்று
மலர்ந்தது காலை வானம் !

வானவில்

அதிர்ந்தது காற்று! நீளப்
பூங்கிளை அசைந்தா டிற்று!
முதிர்ந்திட்ட முகிலின் சேறு
மூடிற்றுச் ! சேற்றுக் குள்ளே
புதைந்திட்ட கதிரிற் பூத்த
புதுப்புது வண்ண மெல்லாம்
ததம்பிற்றே வான வில்லாய்ப் !
பாரடி அழகின் தன்மை !

மழை வான்

பகல்வான்மேல் கருமு கில்கள்
படையெடுத் தன ! வில்லோடு
துகளற்ற வாளும், வேலும்
சுழன்றன மின்னி மின்னி !
நகைத்தது கலகல வென்று
நல்ல கார்முகில்தான் ! வெற்றி
அகத்துற்ற இயற்கைப் பெண்ணாள்
இறைத்தாள்பூ மழையை அள்ளி !

எரிகின்ற வானம்

தேன்செய்யும் மலரும் தீயும் !
செந்தீயும் நீறாய்ப் போகும் !
கான், செய், ஊர், மலை, கா, ஆறு
கடலெல்லாம் எரிவ தோடு
தான்செய்த தணலில் தானும்
எரிகின்றான் பகலோன்! அங்கு
வான்செய்த வெப்பத் தால்இவ்
வையத்தின் அடியும் வேகும் !

உச்சிப் போதுக்கும் மாலப் போதுக்கும் இடை நேரம்

உச்சியில் இருந்த வெய்யோன்,
ஓரடி மேற்கில் வைத்தான்,
நொச்சியின் நிழல்கி ழக்கில்
சாய்ந்தது ! நுரையும், நீரும்,
பச்சையும், பழுப்பு மான
பலவண்ண முகில்கள் கூடிப்
பொய்ச்சான்று போல, யானை
புகழும்; பின் மலையைக் காட்டும்.

வான் தந்த பாடம்

எத்தனை பெரிய வானம் !
எண்ணிப்பார் உனையும் நீயே ;
இத்தரை, கொய்யாப் பிஞ்சு;
நீஅதில் சிற்றெ றும்பே
அத்தனை பேரும் மெய்யாய்
அப்படித் தானே மானே?
பித்தேறி மேல்கீழ் என்று
மக்கள்தாம் பேசல் என்னே!


http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm

எழுந்த ஞாயிறு

ஒளிப்பொருள் நீ! நீ ஞாலத்
தொருபொருள், வாராய்! நெஞ்சக்
களிப்பினில் கூத்தைச் சேர்க்கும்
கனற் பொரு ளே, ஆழ் நீரில்
வெளிப்பட எழுந்தாய்; ஓகோ
விண்ணெலாம் பொன்னை அள்ளித்
தெளிக்கின்றாய் ; கடலிற் பொங்கும்
திரையெலாம் ஒளியாய்ச் செய்தாய்.

வையத்தின் உணர்ச்சி

எழுந்தன உயிரின் கூட்டம்!
இருள் இல்லை அயர்வும் இல்ல!
எழுந்தன ஒளியே, எங்கும்!
எங்கணும் உணர்ச்சி வெள்ளம்
பொழிந்தநின் கதிர் ஒவ் வொன்றும்
பொலிந் தேறி, மேற்றி சைமேல்
கொழுந்தோடக் கோடி வண்ணம்
கொழித்தது சுடர்க்கோ மானே!

காட்சி ஞாயிறு

பொங்கியும் பொலிந்தும் நீண்ட
புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும்
சிங்கமே! வான வீதி
திகு திகு என எரிக்கும்
மங்காத தணற்பி ழம்பே!
மாணிக்கக் குன்றே! தீர்ந்த
தங்கத்தின் தட்டே! வானத்
தகளியிற் பெருவிளக்கே!

ஒளிசெய்யும் பரிதி

கடலிலே கோடி கோடிக்
கதிர்க்கைகள் ஊன்றுகின்றாய்!
நெடுவானில் கோடி கோடி
நிறைசுடர்க் கைகள் நீட்டி
இடைப்படு மலையோ காடோ
இல்லமோ பொய்கை ஆறோ
அடங்கநின் ஒளிஅ ளவா
அமைந்தனை! பரிதி வாழி!

கதிரும் இருளும்

என்னகாண் புதுமை! தங்க
இழையுடன் நூலை வைத்துப்
பின்னிய ஆடை, காற்றில்
பெயர்ந்தாடி அசைவ தைப்போல்
நன்னீரில் கதிர் கலந்து
நளிர் கடல் நெளிதல் கண்டேன்;
உன் கதிர், இருட்ப லாவை
உரித் தொளிச் சுளையூட் டிற்றே!

கரைபோக்கி எழில் செய்தாய்

இலகிய பனியின் முத்தை
இளங்கதிர்க் கையால் உண்பாய்!
அலை அலையாய் உமிழ்வாய்
அழகின், ஒலியை யெல்லாம்!
இலை தொறும் ஈரம் காத்த
கரை போக்கி இயல்பு காப்பாய்!
மலையெல்லாம் சோலை யெல்லாம்
நனைக்கின்றாய் சுடர்ப்பொன் நீரால்;

எங்கும் அது

தாமரை அரும்பி லெல்லாம்
சரித்தனை இதழ்கள் தம்மை!
மாமரத் தளிர்அ சைவில்
மணிப்பச்சை குலுங்கச் செய்தாய்!
ஆமாமாம் சேவற் கொண்டை
அதிலும் உன் அழகே காண்பேன்!
நீமன்னன்; ஒளியின் செல்வன்;
நிறை மக்கள் வாழ்த்தும் வெய்யோன்.

பரிதியும் செயலும்

இறகினில் உயிரை வைத்தாய்
எழுந்தன புட்கள்! மாதர்
அறஞ்செய்யும் திறஞ்செய் திட்டாய்!
ஆடவர் குன்றத் தோளில்
உறைகின்றாய்! கன்று காலி
உயிர் பெறச் செய்கின் றாய்நீ!
மறத் தமிழ் மக்கள் வாழ்வில்
இன்பத்தை வைத்தாய் நீயே.


பரிதி இன்றேல் நிலாவுக்கு ஒளியில்லை

வாழும் நின் ஒளிதான் இன்றேல்
வானிலே உடுக்கள் எல்லாம்
தாழங்காய், கடுக்காய் கள்போல்
தழைவின்றி அழகி ழக்கும்!
பாழ் என்ற நிலையில் வாழ்வைப்
பயிரிட்ட உழவன் நீ ; பைங்
கூழுக்கு வேரும் நீயே!
குளிருக்குப் போர்வை நீயே!

ஞாயிறு வாழி

விழிப் பார்வை தடுத்து வீழ
விரிகின்ற ஒளியே, சோர்வை
ஒளிக்கின்ற உணர்வே, வையத்
திருளினை ஒதுக்கித் தள்ளித்
தழற் பெரு வெள்ளந் தன்னைச்
சாய்ப் போயே, வெயிலில் ஆடித்
தழைக்கின்றோம் புதுஞா யிற்றுத்
தனிச்சொத்தோ வாழி நன்றே.

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm

மற்ற கட்டுரைகள் …

Load More