சமூகவியலாளர்கள்

ஆதிக்க வகுப்பின் அதிகார வெறியைத் தடுக்க அரசமைப்புச் சட்டம் வகுக்கப்பட வேண்டும்- IX

Ambedkar

ஆதாயம் அதிகாரம் அளிக்கக்கூடிய பதவிகள், தமது வகுப்புக்கு ஒதுக்கப்பட்ட பிறகும் பார்ப்பனர்கள் திருப்தியடையவில்லை. வெறும் ஒதுக்கீடு மட்டும் போதாது என்பதை அவர்கள் அறிவர். தன்னைப் போலவே இந்தப் பதவிகளை வகிப்பதற்கு - முற்றிலும் தகுதி படைத்தவர்கள், பார்ப்பனரல்லாத வகுப்பினரிடமிருந்து தோன்றி, இந்த ஒதுக்கீட்டு முறையையே அவர்கள் தகர்த்தெறிந்து விடாதபடி பார்ப்பனர்கள் தடுத்தாக வேண்டும். எல்லா அரசாங்க நிர்வாகப் பதவிகளும் பார்ப்பனர்களுக்கு ஒதுக்கப்பட்டன. அதுமட்டுமல்ல, கல்வி வசதி பெறுவதை பார்ப்பனர்களின் ஏகபோக உரிமையாக்குவதற்கு வகை செய்யும் ஒரு சட்டம் இயற்றப்பட்டது.

 

நாம் ஏற்கனவே கூறியது போல, இந்த சட்டத்தின் படி, இந்து சமுதாயத்தில் அடிமட்டத்திலுள்ள சூத்திரர்கள் கல்வி கற்பது கடுமையான குற்றமாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தை மீறுபவர்கள் காட்டுமிராண்டித்தனமான, மனிதத் தன்மையற்ற, குரூரமான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்: அவர்களது நாக்குகள் துண்டிக்கப்பட்டன; அவர்களது செவிகளில் காய்ச்சிய ஈயம் ஊற்றப்பட்டது. இத்தகைய சலுகைகள் எல்லாம் இப்போது பார்ப்பனர்களுக்கு இல்லை என்று கூறி, காங்கிரஸ்காரர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த சலுகைகள் இப்போது மறைந்து விட்டாலும், அவற்றின் மூலம் நூற்றாண்டு நூற்றாண்டுகளாக அவர்கள் அனுபவித்து வந்த சலுகைகள், இன்னும் நீடிக்கவே செய்கின்றன என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மிகவும் மோசமான வகுப்புவாத முறைகளைக் கைக்கொண்டுதான் பார்ப்பனர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர் என்பதை முற்றிலும் அறிந்துள்ள காங்கிரஸ்காரர்கள், அடிமை வகுப்பினர் முன்வைக்கும் கோரிக்கையை வகுப்புவாதம் என்று கூறி நிராகரிப்பது நேர்மையாகுமா?

 

மேலும், அடிமை வகுப்பினர் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று இன்று கோரும் நிர்பந்த நிலைக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்றால், அதற்கு என்ன காரணம்? பார்ப்பனர்கள் தாங்கள் அனுபவித்து வரும் சலுகைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, அடிமை வகுப்பினர் கல்வி கற்பதையும், சொத்துகள் வைத்திருப்பதையும் குற்றமாக்கக் கூடிய சட்டங்களை இயற்றியதால்தானே அடிமை வகுப்பினர் தங்களுக்குப் பாதுகாப்புகள் கோரும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை மறுக்க முடியுமா, மறைக்க முடியுமா? தங்களது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்கு பார்ப்பனர்கள் செய்ததுடன் ஒப்பிடும்போது, அடிமை வகுப்பினரின் கோரிக்கைகள் எவ்விதம் நியாயமற்றவையாக இருக்க முடியும்?

 

இதுவரை நாம் கூறியவற்றிலிருந்து ஆதிக்க வகுப்பினரின் தலைமையில் நடைபெறும் சுதந்திரப் போராட்டம் அடிமை வகுப்பினரின் கண்ணோட்டத்தில் ஒரு மோசடிப் போராட்டமாக இல்லாவிட்டாலும், அது ஒரு சுயநலப் போராட்டமாகவே அமைந்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாகும். இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப்பினரின் சுதந்திரப் போராட்டம், அடிமை வகுப்பினரை ஆள்வதற்கான சுதந்திரமேயாகும். அடிமட்டத்திலுள்ள இனத்தை, மேல் மட்டத்திலுள்ள இனம் ஆளும் சுதந்திரத்தையே அது விரும்புகிறது. இது, நலிவுற்றவனை வலிமை மிக்கவன் ஆளும் நாஜி அல்லது நீட்சேயின் சித்தாந்தமே தவிர வேறல்ல.

 

இந்திய அரசியலையும், அது செல்லும் திசைவழியையும் தெரிந்து கொள்ளவும், அதனால் எழக்கூடிய பிரச்சினைக்குத் தீர்வுகாண உதவ விரும்பும் அயல்நாட்டவர், இந்திய அரசியலுக்குப் பின்னாலுள்ள அடிப்படையான அம்சங்களைத் தெரிந்து கொள்வது அவசியம். இவற்றை அவர் முழு அளவுக்கு உள்வாங்கிக் கொள்ளத் தவறினால், கடலில் திக்குத் தெரியாமல் தவிப்பவரைப் போல் ஆகிவிடுவார்; அவரைத் தனது வலைக்குள் வீழ்த்துவோரின் எடுப்பார் கைப்பிள்ளையாகி விடுவார்; ஆட்டுவித்தபடி ஆடும் தலையாட்டி பொம்மையாகி விடுவார்.

 

இந்திய அரசியலின் அடிப்படையான அம்சங்கள் :

 

1. அடிமை வகுப்புகள் சம்பந்தமாக ஆளும் வகுப்பினர் கடைப்பிடிக்கும் சித்தாந்தம் கண்ணோட்டம்


2. ஆளும் வகுப்பினருக்கும் காங்கிரசுக்குமுள்ள உறவு


3. அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்புகள் வேண்டுமென அடிமை வகுப்பினர் முன்வைத்துள்ள அரசியல் கோரிக்கைகளுக்கான மூல காரணங்கள்.

 

முதல் அம்சத்தைப் பொறுத்தவரையில், அயல்நாட்டவர் இது குறித்து தனது சொந்தக் கருத்தை உருவாக்கிக் கொள்ளும் அளவுக்கு போதிய தகவல்கள் ஏற்கனவே தரப்பட்டுள்ளன. அவசியமான தகவல்களுடனும் வாதங்களுடனும் இங்கே நான் முன்வைக்க முயலும் கோட்பாடு, மிக எளிதானது. அது பின்வருமாறு கூறுகிறது: முழு அரசுரிமை படைத்த சுதந்திர இந்தியா, முற்றிலும் வேறுபட்டதொரு புதுமையான இந்தியாவாக, உலகமே வியந்து போற்றும் இந்தியாவாக இருக்க வேண்டுமானால், ஆதிக்க வகுப்பினருக்குத் தொண்டூழியம் புரியும் ஓர் அடிமைத்தனமான வகுப்பினர் இல்லாதிருக்கும் ஒரு புதுமையான இந்தியா பூத்து மலர வேண்டுமானால், ஆதிக்க வகுப்பினர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆற்றலை மட்டுப்படுத்தக் கூடிய, இது சம்பந்தமாக முறையான பாதுகாப்புகளை அளிக்கக்கூடிய, ஆதிக்க வகுப்பினரின் கொள்ளைக்காரத்தனமான அதிகார வெறிக்கு “லகான்’ போடக்கூடிய ஓர் அரசியலமைப்புச் சட்டம் வகுக்கப்பட வேண்டும். இதைத்தான் தீண்டத்தகாதவர்கள் நெடுகிலும் வலியுறுத்தி வந்திருக்கின்றனர்; இதைத்தான் காங்கிரஸ் விடாப்பிடியாக எதிர்த்து வருகிறது.

 

“டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல்
தொகுப்பு’ : 9 பக்கம் : 230
http://ambedkarr.wordpress.com/

நாடாளுமன்ற அவைத் தலைவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட உறுப்பினரைக் கேள்வி கேட்க ஒருவேளை பெருந்தன்மையாக அனுமதித்து விட்டாலும், அது அவைக் குறிப்பில் இடம் பெறுவதற்கு முன்பே காங்கிரஸ் கட்சியின் தலைமைக் கொறடா அந்த உறுப்பினரிடம் பேசி, அக்கேள்வியைத் திரும்பப் பெற வலியுறுத்துவார். அதையும் மீறி ஒருவேளை அந்தக் கேள்வி பதிவாகிவிட்டால், அக்கட்சியின் கொறடா அந்த உறுப்பினரை அன்று மட்டும் ஊரைவிட்டே வெளியேறச் சொல்லி விடுவார். இக்கேள்விக்கான பதில் தேவைப்பட்டாலும், கேள்வி எழுப்பிய உறுப்பினர் இல்லாததால், நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடைபெறாது. இப்பிரச்சினை அத்துடன் முடிவுக்கு வந்துவிடும்.

Ambedkar நாடாளுமன்றத்தில் நிதிநிலை தொடர்பான விவாதங்கள் நடைபெறும்போது, எந்த உறுப்பினர் வேண்டுமானாலும் நிதிநிலை குறித்துப் பேசலாம். தாங்கள் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும், கட்சிக்கும் எத்தகைய சிறப்பு உரிமைகள் வேண்டும் என்று கோரலாம். தேவையற்ற திட்டங்களுக்காக நிதியை வீணடிப்பதற்குப் பதில் முக்கியத் தேவைகளுக்கான கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக் காட்டலாம். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில், ஒரே ஒரு உறுப்பினர்கூட வெட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றியதை நான் பார்த்ததில்லை. இதற்கெல்லாம் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாடுகளே காரணம். கட்சி உறுப்பினர்கள் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் எனில், முன்கூட்டியே அவர்கள் கட்சிக் கொறடாவிடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் காங்கிரசில் உள்ள தாழ்த்தப்பட்ட உறுப்பினர்கள் எவரும் எந்த சட்டவரைவையும் முன்மொழிந்ததில்லை.

 

தீண்டத்தகாத மக்கள், இந்தியக் கிறித்துவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் ஆகியோருக்கான சட்டரீதியான சிறப்புரிமைகளை / அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை அவர்களுடைய எதிரிகள் காங்கிரஸ் மூலம் ஆக்கிரமித்துக் கொண்டால் அவர்கள் எப்படி அதை அனுபவிக்க முடியும்?

 

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்தபோது நம்முடைய சமூகத்திற்கான நலத்திட்டங்களை செயல்படுத்த விரும்பியிருந்தால் செய்திருக்கலாம். ஆனால், அவர்களும் நம்மை ஏமாற்றி விட்டனர். அந்தக் காலம் கடந்து விட்டது. ஆனால், இன்றைய காலகட்டத்திலும் நாம் கவனமாக இல்லாமல், நம் கண்களை மூடிக்கொண்டிருந்தால், நாம் அழிந்து விடுவோம். இனிவரும் தலைமுறையினரும் நம்மைப்போல துன்பப்படக்கூடாது என நினைத்தால், நீங்கள் இப்பொழுது ஏதாவது செய்தாக வேண்டும்.

 

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் இடஒதுக்கீடு இன்னும் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்கும் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இந்தியாவில் தீண்டாமை நீடித்திருக்கும்வரை, இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தியபோது, காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் என்னை எதிர்த்தனர். எனவே, ஒன்றும் இல்லாமல் இருப்பதற்குப் பதில் ஏதாவது கிடைக்கட்டுமே என்ற வகையில், நான் 10 ஆண்டுகளுக்கு இடஒதுக்கீடு என்ற திட்டத்திற்கு ஒப்புக் கொண்டேன். இந்த இடஒதுக்கீடு இரண்டு தேர்தலுக்கு மட்டும்தான் இருக்கப் போகிறது. அதுவரை மட்டுமே காங்கிரஸ் போன்ற கட்சிகள், உங்களிடம் வாக்குகளுக்காகக் கையேந்தி நிற்கும்.

 

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடஒதுக்கீட்டை நீட்டிக்கும்படி உங்களுக்காக யாரும் கேட்கப் போவதில்லை. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அதற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி, நீங்கள் அவர்களின் சார்பில் தேர்தலில் நிற்க வேண்டும் என்று உங்களிடம் வேண்டுகோள் வைக்குமா? கண்டிப்பாக வைக்காது. அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் உங்களைத்தான் முட்டாள்களாக்குவார்கள். எனவே, நீங்கள் இப்பிரச்சினை குறித்து சிந்தித்து, எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்யுங்கள்.

 

ஒவ்வொரு கட்சிக்கும் பணமோ, அதிகாரமோ இருக்க வேண்டும். நம் சமூகத்திடம் பணமோ, அதிகாரமோ இல்லை. ஆதிக்கச் சாதியினரின் கருணையால் நாம் கிராமங்களில் குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பனியாக்கள் மற்றும் மார்வாரி போன்றவர்களிடம் அதிகாரம் இல்லை; ஆனால், அவர்களிடம் பணம் இருக்கிறது. பணத்தால் எதையும் வாங்க முடியும். எனவே, நீங்கள் உங்களுக்காக எதையாவது செய்து தீர வேண்டிய தருணம் இது. நீங்கள் ஒற்றுமையாக இருந்தால், உங்கள் நலன்களைப் பாதுகாக்க நீங்கள் உங்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் அனுப்பலாம். இல்லையெனில் நீங்கள் அழிந்துவிடுவீர்கள். எனவே, நீங்கள் ‘பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின்’ கீழ் ஒன்றிணைந்து, நம் சமூகத்தை குழப்பத்தின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும். ஒவ்வொருவரும் நம்முடைய உண்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க உதவி செய்ய வேண்டும். பல்வேறு கட்சிகளும் உங்களிடம் வந்து ‘எங்களுக்கு வாக்களியுங்கள்’ என்று கேட்பார்கள். ஆனால், அவர்கள் காட்டும் தவறான பாதைக்கு நீங்கள் சென்றுவிடக் கூடாது.

 

தொடரும்

28.10.1951 அன்று, லூதியானாவில் ஆற்றிய உரை

நன்றி:தலித்முரசு

நான் காங்கிரஸ் அரசில் ‘காபினட்’ அமைச்சராகப் பதவி வகிக்க ஒப்புக் கொண்டதால், காங்கிரஸ் கட்சியிலேயே நான் சேர்ந்து விட்டதாகப் பெரும்பாலான மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ‘அம்பேத்கரே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்ட பிறகு, பட்டியல் சாதியினர், இன்னும் ஏன் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பில் இருக்கின்றனர்’ என்று சில விமர்சகர்கள் பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டனர். இத்தகைய விமர்சனங்கள் குறித்து நான் லக்னோவில் தெளிவுபடுத்தினேன். பூமியும் பாறையும் இருவேறு பொருட்கள். அவை இரண்டும் ஒன்று சேராது. பாறை, பாறையாகவும்; பூமி, பூமியாகவுமே இருக்கும். நான் பாறையைப் போன்று உறுதியானவன். நான் யாருடன் இருந்தாலும், என்னுடைய தனித்த அடையாளத்தை ஒருபோதும் இழக்க மாட்டேன்.

Ambedkar எந்தவொரு நற்பணிக்காக, யார் என்னுடைய ஒத்துழைப்பை நல்கினாலும், நான் அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன். என்னுடைய நாட்டுக்காக என்னுடைய ஆற்றலை உண்மையுடன் பங்களிக்க, காங்கிரஸ் அரசுடன் நான்கு ஆண்டுகள் ஒத்துழைத்தேன். ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் நான் காங்கிரஸ் கட்சியில் சங்கமமாகிவிட என்னை அனுமதித்தது இல்லை. சிந்தனையிலும் செயலிலும் என்னுடைய மக்களின் நலன்களுக்கு எதிராக இல்லாத அனைவருடனும் நான் ஒத்துழைத்தேன்.

 

வரவிருக்கும் பொதுத் தேர்தலைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தலை பட்டியல் சாதியினர் வாழ்வா சாவா என்று எண்ணி செயல்பட வேண்டும். நம்டைய வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய, நம்டைய அத்தனை திறமைகளையும் நாம் பயன்படுத்த வேண்டும். ஒரு மனிதனுக்குப் பின்னால் நிற்கும் மக்களின் எண்ணிக்கையை வைத்தும், அவர்கள் கொண்டிருக்கும் வளத்தை வைத்துமே அவன் ஆற்றலைப் பெறுகிறான். நாம் சிறுபான்மையினர், நம்மிடம் பொருள்வளம் இல்லை. நீக்கமற நிறைந்திருக்கும் சாதி இந்து போலிஸ்கள், நாம் முன்வைக்கும் உண்மையான குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால் இதற்கு மாறாக, குற்றம் சுமத்திய ஒரே காரணத்திற்காக நம்மை ஒடுக்குகிறார்கள். வறுமையில் உழலும் நம்மால், அரசு எந்திரத்தை நமக்குச் சாதகமாக செயல்பட வைக்க முடியவில்லை.

 

இருப்பினும், நம்மிடம் ஓர் அதிகாரம் இருக்கிறது. அதுதான் அரசியல் அதிகாரம். இதை நாம் வென்றெடுக்க வேண்டும். இந்த அதிகாரத்தின் உதவியுடன் நாம் நம் மக்களின் நலன்களைப் பாதுகாக்க முடியும். விடுதலை பெற்ற இந்தியாவில், நம்டைய அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்த முடியும் என்று எண்ணுகின்றீர்களா? நம்டைய நாடு விடுதலை பெறுவதை நாம் எப்போதும் எதிர்த்ததில்லை. ஆனால், ஒரே ஒரு கேள்விக்கான நேரடியான பதிலையே நாம் எதிர்பார்த்தோம். விடுதலை பெற்ற இந்தியாவில் நம்டைய நிலை என்ன? காந்தியிடம் நான் இக்கேள்வியைத்தான் முன்வைத்தேன்.

 

சுயராச்சியத்தில் என் மக்களின் நிலை என்னவாக இருக்கும்? நாங்கள் தற்பொழுது இருப்பது போல ‘பாங்கி’களாக, ‘சமார்’களாக நீடித்து இருப்போமா? இப்போது இருப்பது போலவே எங்களுடைய குழந்தைகள், பள்ளிகளில் நுழைய அனுமதி மறுக்கப்படுமா? கிராமங்களில் தற்பொழுது எங்கள் மக்கள் துன்புறுத்துதலுக்கு ஆளாவது தொடர்ந்து நடைபெறுமா? வட்டமேசை மாநாட்டிலும் நான் காந்தியாரிடம் இதே கேள்வியைத்தான் எழுப்பினேன்.

 

முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க ஒப்புக் கொண்டதைப் போல, எங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுமா? ஆனால், பட்டியல் சாதியினருக்குத் தனிவாக்காளர் தொகுதி உரிமைகள் 1932 இல் அளிக்கப்பட்டபோது, இந்த உரிமைகளை திரும்பப் பெறும்வரை, காந்தி சாகும்வரை பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்தார். அந்த நேரத்தில் எங்களிடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், இன்று என்ன நடக்கிறதோ, அது ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட செயல்திட்டத்திற்கு நேர் எதிரானது. பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் எந்த வேட்பாளரும் நிறுத்தப்பட மாட்டார்கள் என்று அவர் அப்போது உறுதியளித்தார்.

 

நம்டைய மக்களை தனித்தொகுதி மூலம் அனுப்ப நாம் விரும்பும்போது, அதற்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போடுகிறது. சுயநலன்களுக்காக செயல்படும் மூடர்களையும், காங்கிரசுக்கு ‘ஆமாம் சாமி’ போடும் நபர்களையும் காங்கிரஸ் தனித்தொகுதியில் வேட்பாளர்களாக்க முயல்கிறது.

 

தற்பொழுது நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் சார்பில், 30 பட்டியல் சாதி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த முப்பது பேரும் அங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? அங்கு அவர்கள் எந்தக் கேள்வியையும் கேட்பதில்லை; எந்தத் தீர்மானத்தையும் முன்மொழிவதில்லை; நாடாளுமன்றத்தின் முன்பு எந்தச் சட்டவரைவையும் முன்வைப்பதில்லை. எனவேதான், நாம் நம்டைய உண்மையான பிரதிநிதியை அனுப்ப விரும்புகிறோம். அவர்கள்தான் சட்டப் பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் நம்டைய கோரிக்கைகளை முன்வைத்து, அதைத் தீர்க்க முயல்வார்கள்.

 

(27.10.1951 அன்று, ஜலந்தரில் ஆற்றிய உரை)

நன்றி:தலித்முரசு

 இந்தியாவில் உள்ள பட்டியல் சாதியினர் போல் கடும் வேதனைக்கு ஆட்படும் மக்கள் உலகில் வேறு எங்கேனும் உள்ளனரா என்று நான் ஆச்சரியத்துடன் நோக்கினேன். வேறு எவரையும் நான் காண முடியவில்லை. இருந்தும் கூட பட்டியல் சாதியினருக்கு உதவிகள் எதுவும் ஏன் வழங்கப்படவில்லை? முஸ்லிம்களைப் பாதுகாப்பது குறித்து அரசு காட்டிவரும் அக்கறையை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். பிரதமரின் முழு நேரமும் கவனமும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எங்கெல்லாம் எவ்வெப்போதெல்லாம் பாதுகாப்பு தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அதனை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற விருப்பத்தில் நான் யாருக்கும், பிரதமருக்கும் கூடப் பின்தங்கியவனில்லை.

ஆனால் நான் அறிந்து கொள்ள விரும்புவது என்னவெனில், பாதுகாப்பு தேவைப்படும் ஒரே பிரிவு மக்கள் முஸ்லிம்கள் மட்டும் தானா? பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இந்தியக் கிறித்துவர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு தேவை இல்லையா? இந்த சமூகங்களைக் காக்க பிரதமர் எத்தகைய அக்கறையைக் காட்டினார்? இதுவரை நான் எதையும் காணவில்லை. உண்மையில் முஸ்லிம்களைவிடக் கூடுதல் அக்கறையும் கவனமும் தேவைப்படும் மக்கள் இவர்களேயாவர்.

அரசாங்கத்தினால் பட்டியல் சாதியினர் புறக்கணிக்கப்படுவது குறித்து எனது கடுஞ்சினத்தை, உள்ளக் கொதிப்பை என் மனதிற்குள்ளேயே அடக்கி வைக்க என்னால் முடியவில்லை. பட்டியல் சாதியினரின் பொதுக்கூட்டம் ஒன்றில் எனது உணர்வுகளை வெளிப்படையாகக் கூறினேன். அவர்களுக்கு 12.5 சதவிகிதப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்த சட்டத்தினால், பட்டியல் சாதியினர் பலனடையவில்லை என்ற எனது குற்றச்சாட்டு உண்மையா என மாண்புமிகு உள்துறை அமைச்சர் கேட்டார். அக்கேள்விக்கான பதிலில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் எனது குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் கூறினார். அதைத் தொடர்ந்து, அரசுப் பணிகளில் அண்மையில் பட்டியல் சாதியினரின் பிரதிநிதிகள் எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்று, இந்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார். அதற்கு பல துறைகள் ‘இல்லை' என்ற பதிலை அனுப்பியது என்று என்னிடம் கூறப்பட்டது.

எனக்குக் கிடைத்த தகவல் சரியாக இருக்குமேயானால், மாண்புமிகு உள்துறை அமைச்சர் கொடுத்த பதில் குறித்து நான் எந்தவிதக் கருத்தையும் கூறத் தேவையில்லை. எந்த மக்களிடையே நான் பிறந்தேனோ அந்த பட்டியல் சாதியினரின் மேம்பட்ட நிலைக்காக, சிறுவயது முதலே நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். என் மனதில் வேறு எந்த உணர்வுகளும் இல்லை என்பதல்ல; எனது சொந்த நலன்களை மட்டும் நான் கருத்தில் கொண்டிருந்திருப்பேனேயானால், நான் விரும்பியதைப் பெற்றிருப்பேன்; காங்கிரசில் நான் சேர்ந்திருந்தால், அந்த அமைப்பின் மிக உயர்ந்த பதவியையும் பெற்றிருப்பேன். ஆனால் நான் கூறியதுபோல, பட்டியல் சாதியினர் மேம்பாட்டிற்காக நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். எந்த நோக்கத்தை அடைய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதில் குறுகிய மனச் சிந்தனையுடன் இருப்பது நல்லது என்ற முதுமொழியை நான் பின்பற்றியிருக்கிறேன். ஆகவே, பட்டியல் சாதி மக்களின் லட்சியம் எவ்வளவு கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்பதைக் காணும்போது, என் மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும்.

எனது உணர்வைத் தூண்டிய மூன்றாவது விஷயம் எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது மட்டுமல்ல; உண்மையில் பெரும் துன்பத்தையும் கவலையையும் கூட அது ஏற்படுத்தியது. நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கையையும் அத்துடன் இந்தியாவின் பால் பிற நாடுகள் கொண்டிருக்கும் அணுகுமுறையையும் தொடர்ந்து கவனித்து வருபவர்கள், நம்மால் அவர்கள் கொண்டுள்ள போக்கில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உணராதிருக்க முடியாது. 1947 ஆகஸ்டு 15 அன்று ஒரு சுதந்திர நாடாக நாம் வாழ்வைத் தொடங்கிய போது, எந்நாடும் நமக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணவில்லை. உலகின் ஒவ்வொரு நாடும் நமது நண்பனாகத் தான் இருந்தது. நான்காண்டுகளுக்குப் பின்னர் இன்றோ நமது நண்பர்கள் அனைவரும் நம்மை கைவிட்டுவிட்டனர். நமக்கென நண்பர்கள் யாரும் இல்லை. நாமும் நம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டோம்; தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருக்கிறோம். அய்க்கிய நாடுகள் அவையில் நமது தீர்மானங்களை ஆதரிக்க எவரும் இல்லை.

நமது வெளியுறவுத் துறை கொள்கையை நினைக்கும் போது பிஸ்மார்க்கும் பெர்னார்ட் ஷாவும் கூறியதை நான் நினைத்துப் பார்க்கிறேன். "அரசியல் என்பது லட்சியத்தை அடைவதற்கான பந்தய ஆட்டமல்ல; மாறாக அரசியல் என்பது சாத்தியக் கூறுகளை எய்தும் பந்தய ஆட்டமாகும்'' என்று பிஸ்மார்க் கூறியுள்ளார். "நல்ல குறிக்கோள்கள் சிறந்தவைதான். ஆனால் அவை மிகவும் நல்லவையாக இருப்பது, பல நேரங்களில் ஆபத்தானவையாக இருக்கும் என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது' என்று அண்மையில் பெர்னார்ட் ஷா கூறினார். உலகின் இரு பெரும் மேதைகள் கூறிய இந்த விவேகமிக்க கருத்துகளுக்கு முற்றிலும் எதிரானவையாக நமதுவெளியுறவுக் கொள்கை உள்ளது.

- தொடரும்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 14(2), பக்கம்: 1320

http://www.keetru.com/dalithmurasu/may08/ambedkar.php

 




ஆட்சி செய்யும் வகுப்பாரின் மனப்பாங்கு என்ன? அதனுடைய மரபு என்ன? அதனுடைய சமுதாயச் சிந்தனை என்ன?

பார்ப்பனர்களை முதலில் எடுத்துக்கொள்ளுங்கள், சரித்திர அடிப்படையில் பார்த்தால் அவர்கள் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் (சூத்திரர்கள்,தீண்டப்படாதவர்கள்) ஜென்ம விரோதிகளாக இருந்து வருபவர்கள். இந்து சமுதாய மக்கள் தொகையில் இந்த இருவரும் 80 சதவிகிதத்தில் உள்ளனர் . இன்று இந்தியாவிலேயே, அடிமைப் படுத்தப்பட்ட வகுப்பைச்சார்ந்த சாதாரண மனிதன் ஒருவன் இவ்வளவு தாழ்த்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கை யோ, அபிலாஷையோ இல்லாது. இருப்பதற்கு முழுமையான காரணம், பார்ப்பனர்களும் அவர்களுடைய சித்தாந்தமுமேயாகும்.

பார்ப்பனியத்தின் தலையாய கொள்கைகள் அய்ந்து

(1) பலதரப்பட்ட வகுப்புகளுக்குள்ளே படிப்படியான சமத்துவமில்லாத உயர்வு தாழ்வு நிலைகள்

(2) சூத்திரர்கள் , தீண்டத்தகாதார்களுடைய மோசமான வலிவற்ற தன்மை

(3) சூத்திரர்களும், தீண்டத்தகாதவர்களும் என்றைக்கும் படிக்கக் கூடாது என்று தடை

(4) சூத்திரர்களும் , தீண்டப் படாதவர்களும் உயர்நிலையோ , ஆற்றலோ பெறுவதற்குத் தடை

(5) சூத்திரர்களும் தீண்டப்படாதவர்களும் பொரும் சேர்ப்பதற்குத் தடை பெண்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துவது .


பார்ப்பனியத்தின் அங்கீகரிக்கப் பட்ட சித்தாந்தம் உயர்வு-தாழ்வு நிலை, கீழ்த் தளத்தில் உள்ள வகுப்புகள் சமத்துவத் தன்மை அடைய விரும்புவதை ஈவு இரக்கமின்றி அழித்து வைப்பதே பார்ப்பனியத்தின் இன்றியமையாத கடமையாகும். ஒரு சிலர் மட்டும் படித்துள்ள நாடுகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும் படித்த வகுப்பார் அதாவது பார்ப்பனர் கள் கல்வியைத் தங்களது ஏக போகமாக்கியுள்ளார்கள் . அது மட்டும் அல்லாது அடித்தளத்தில் உள்ள வகுப்புகள் கல்வியறிவு பெறுவது ஒரு பெரிய குற்றமாக வைத்துள்ளார்கள். அந்தக் குற்றத்திற்குத் தண்டனை நாக்கை வெட்டுவது அல்லது காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது. மக்களை நிர்க்கதியாக்கிப் பிரிட்டிஷார் இந்தியாவை ஆளுகிறார்கள் என்ற காங்கிரஸ் அரசியல்வாதிகள் புகார் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை மட்டும் மறந்து விடுகிறார்கள். சூத்திரர் களையும் , தீண்டத்தகாதவர்களையும் பராரிகளாக கதியற்றவர்களாக இருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் பிரகடனப்படுத்தப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் ஆண்ட ஒரு ஆட்சியை மறந்து விடுகிறார்கள். உண்மையிலேயே சூத்திரர்களும், தீண்டப்படாத வர்களும் வலிமையற்ற நிலையில் இருக்கவேண்டும் என்பதில் பார்ப்பனர்கள் மிகவும் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஏனென்றால் தாங்கள் வலிமையுற்றவர்களாக ஆக வேண்டும் என்றும், தாங்கள் அனுபவிக்கும் சலுகைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் எண்ணிச் சட்டத்தை மாற்றும் பொழுது ஒன்றை மாத்திரம் அவர்கள் மாற்றாது விட்டு விட்டார்கள் . எதை அவர்கள் நிலை குலையாமல் காப்பாற்றினார்கள்? சூத்திரர்கள் , தீண்டப்பாடதவர்களாக, வலிமை யற்றவர்களாகவே இருக்க வேண்டும் என்ற தடையை அவர்கள் நீக்காமல் விட்டு விட்டார்கள். இன்றைக்கு இந்தியாவிலேயே பெரும்பான்மை மக்கள் முற்றிலும் கோழையாக, உணர்ச்சியற்றும் , ஆண்மையற்றும் இருப்பதற்குக் காரணம் என்ன? அவர்கள் வலிமையற்று இருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் நீண்ட நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வந்த தந்திரக் கொம்கையின் பலனேயாகும்.


பார்ப்பனர்கள் ஆதரவு பெறாத சமுதாயக் கெடுதியோ அல்லது சமுதாயக் குற்றமோ இல்லை. ஒரு மனிதனைக் கண்டால் அவனிடத்தில் மனிதத் தன்மையே காட்டக்கூடாது என்பதுதான் பார்ப்பனர்களின் மதம். அதாவது சாதி உணர்ச்சியுடன் பார்க்கக் கூடாது என்பது பார்ப்பனர்களின் மதமாகும். மனிதன் செய்யக்கூடிய தவறுகள் தான் அவனுக்கு மதமாகிறது என்று ஊகிப்பது தவறான அடிப் படையில் அமைந்த எண்ணமாகும். ஏனென்றால் உலகத்தில் எந்த பாகத்திலாவது பெண்கள் மோசமாகக் கொடுமைப்படுத்தப்பட்டு அதனால் அவதியுறுகிறார்கள் என்றால் அந்தக் கொடுமைகளுக்குப் பார்ப்பான் தன்னுடைய ஆதரவைத் தந்திருக்கிறான். விதவைகள் `உடன்கட்டை ஏறுதல்' என்ற பழக்கத்தினால் உயிருடன் கொளுத்தப் பட்டார்கள். `உடன்கட்டை ஏறுதல்' என்ற தீய பழக்கத்திற்குப் பிராமணர்கள் தங்களுடைய முழு ஆதரவையும் தந்திருக்கிறார்கள். விதவைகள் மறுமணம் செய்து கொள்ள அனுமதிக் கப்படவில்லை . இந்தக் கோட்பாட்டிற்கும் பார்ப்பான் தன்னுடைய முழு ஆதரவைத் தந்திருக்கிறான். பெண் 8 வயது அடைவதற்கு முன்னேயே திருமணம் செய்து கொடுத்தாக வேண்டும். கணவன் அந்தப் பெண்ணுடன் அதற்குப் பிறகு பாலுறவு செய்கின்ற உரிமையே பெற்றுள்ளான். அந்தப் பெண் பருவ பக்குவம் அடைந்தாளா இல்லையா என்பது பற்றிப் பொருட்படுத்தவில்லை. அந்தக் கோட்பாட்டுக்கும் பார்ப்பான் தன்னுடைய முழு ஆதரவையும் தந்திருக்கிறான். பார்ப்பனர்கள் , சூத்திரர்களுக்கும், தீண்டப்படாதவர்களுக்கும் சட்டம் இயற்றும் கர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள். இப்படி அவர்கள் சட்டம் இயற்றிய தன்மையையும், உலகத்தில் மற்றப் பாகங்களில் உள்ள படித்த வகுப்பைச் சேர்ந்த மக்கள் சட்டம் இயற்றிய தன்மையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பார்ப்பனர்களுடைய தன்மை மிகமிகக் கொடியதாகும். ஒரு படித்த வகுப்பார், தம்முடைய அறிவுத் திறனை, தம்முடைய நாட்டில் உள்ள கல்வி அறிவு இல்லாத மக்களை எப்பொழுதுமே அறியாமையிலும், வறுமையிலும்,ஆழ்த்தி வைக்க வேண்டும் என்ற கோட்பாடு அமைந்த தத்துவத்தைக் கண்டுபிடிக்கும் முறையில் அறிவை இழிசெயலுக்குப் பயன்படுத்தவில்லை. யாரைப்போல? இந்தியாவில்உள்ள பார்ப்பனர்கள் செய்தது போல் .

தம்முடைய மூதாதைகள் உருவாக்கிய இந்தப் பார்ப்பனீயத் தத்துவத்தை இன்று ஒவ்வொரு பார்ப்பனனும் நம்புகிறான். இந்தச் சமுதாயத்திலேயே அவன் ஒரு அந்நியனாக இருக்கிறான். பார்ப்பானை ஒரு பக்கம் நிறுத்தி மற்றொரு பக்கம் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று கருதுபவர்களையும் நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த இரண்டு பிரிவினரும் அயல் நாட்டினரைப்போல் தான் தோன்றும். ஒரு ஜெர்மானியனுக்கு ஒரு பிரஞ்சுக்காரன் எப்படி அன்னியனோ ஒரு யூதனுக்கு யூதன் அல்லாதவன் எப்படி அன்னியனோ, ஒரு வெள்ளைக் காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ அதுபோலவே பார்ப்பான் சூத்திரர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் அன்னியனாவான்.

தாழ்ந்த வகுப்பில் சூத்திர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும், பார்ப்பனர்களுக்குமிடையே உண்மையிலேயே ஒரு பெருத்த பிளவு இருக்கத்தான் செய்கிறது. பார்ப்பான், சூத்திரர்களுக்கும் தீண்டப் படாதவர்களுக்கும் அன்னியனாக மட்டும் இல்லை. அவர்களுக்கு விரோதியாகவும் இருக்கிறான். இவர்களுடைய தொடர்பை நினைக்கும் பொழுது மனச்சாட்சிக்கோ, நியாயத்திற்குகோ சிறிதும் இடமில்லை.

----------------டாக்டர் அம்பேத்கர் அவர்களால் எழுதப்பட்ட "காந்தியும், காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்ததென்ன?" என்ற நூலிலிருந்து - பக்கம் 215-216) (நூல்: "பெரியாரும் அம்பேத்கரும்" பக்கம் -12-15)

http://thamizhoviya.blogspot.com/2008/09/blog-post_7943.html

மற்ற கட்டுரைகள் …

Load More