சமூகவியலாளர்கள்

நண்பர்களே! தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இதுவரையில் சமூகக் குறைபாடுகளை நீக்குவதற்காகத்தான் போராடினார்கள்; பொருளாதாரக் குறைபாடுகளை நீக்குவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. இந்த மாநாடு தான் பொருளாதாரக் குறைபாடுகளை அலசுவதற்காக முதன்முறையாகக் கூட்டப்பட்டுள்ளது. இதுவரை, பறையர்கள் என்ற அடிப்படையில் தீண்டத்தகாதவர்கள் பிரச்சினைகளை சந்தித்து வந்தனர். இப்போது தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். சமூகக் குறைபாடுகளை வலியுறுத்துவதில் நாம் தீவிரமாக இருந்ததில் எந்தத் தவறும் இல்லை. நமது மனிதமே நசுங்குமளவுக்குப் பெரும் சுமைகளை சுமந்தோம் என்னும் குறைபாடு, நமக்கு இருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை. நமது போராட்டத்தால் எந்தப் பயனும் விளையவில்லை என்று எவரும் சொல்ல முடியாது. அதே நோக்கில் தீண்டாமையை ஒழிப்பதில் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்பதும் உண்மையில்லை.

 

மனிதர்களுக்குத் தேவையான சில அடிப்படைத் தேவைகளைப் பெறுவதில் நாம் இன்னும் வெற்றியடையவில்லை என்பது உண்மைதான். அரசியல் அதிகாரத்தைப் போராட்டத்தின் மூலம் பெற்றிருக்கிறோம் என்பதும் உண்மை. அதிகாரம் இருக்குமானால், விடுதலையும் இருக்கும் என்னும் கூற்றில் உண்மை இருக்கிறது. அதிகாரம் ஒன்றின் மூலம் மட்டுமே விடுதலை பெற முடியும். தடைகளைக் கடந்து தளையிலிருந்து விடுபட முடியும். அரசியல் அதிகாரம் அத்தகைய வீரியம் கொண்டது. மத, பொருளாதார அதிகாரத்தைப் போல் அத்தனை வலிமை அரசியல் அதிகாரத்திற்கு இல்லையென்றாலும், அரசியல் அதிகாரமும் உண்மையில் பலன் தரக் கூடியதாகும்.

 

புதிய அரசமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வென்றெடுத்த அரசியல் அதிகாரம், சிலரால் பறிக்கப்படுவதும் உண்டு, வீணாகப் போவதும் உண்டு. இதற்கு பøகவர்களின் சூழ்ச்சி, நம்முடன் உள்ள சில தான்தோன்றிகளின், சுயநலப் பேராசைக்காரர்களின் சீர்குலைப்பு நடவடிக்கைகளும் ஒரு காரணம். பின்னணியில் ஓர் அமைப்பு இல்லாத அதிகாரமும், பின்னணியில் ஓர் மனசாட்சியில்லாத அதிகாரமும் அதிகாரமே அல்ல. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அமைப்பு ரீதியாகத் திரளும் நாள், தங்கள் அதிகாரத்தை உணரும் நாள், அதை அறிவார்ந்த முறையிலும் திறன் வாய்ந்த முறையிலும் பயன்படுத்தி, சமூக விடுதலையை வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!

 

நம்முடைய முயற்சிகள் திசை தவறிப் போகின் றன என்று சொல்ல நான் தயாராக இல்லை. சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதைப் போல, பொருளாதாரப் பிரச்சனைகள் மீது உரிய கவனம் செலுத்த நீண்ட காலமாக நாம் தவறி விட்டோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். எனவே, தீண்டத்தகாதோர் என்பதைக் காட்டிலும், தொழிலாளர்கள் என்னும் அடிப்படைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நாம் இன்று திரண்டிருக்கிறோம் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இது ஒரு புதிய திருப்பம். ஆனால், சிலர் இந்தத் திருப்பத்திற்கு ஒரு தீய உள்ளர்த்தம் கற்பிக்கிறார்கள். இதில் நான் பங்கேற்பதற்காக என் மீது எதிர்மறை விமர்சனம் செய்தார்கள். தொழிலாளர் தலைவர்கள் அல்லாமல் வேறு இடத்தில் இருந்து இந்த விமர்சனம் வந்திருந்தால், நான் அதை லட்சியம் செய்திருக்க மாட்டேன். இத்தகைய மாநாட்டைக் கூட்டுவதன் மூலம் நாம் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துகிறோம் என்று தொழிலாளர் தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

 

என்னைப் பொறுத்தவரை, இந்நாட்டுத் தொழிலாளர்கள், இரண்டு எதிரிகளோடும் போராட வேண்டியுள்ளது. ஒன்று பார்ப்பனியம்; மற்றொன்று முதலாளித்துவம். தொழிலாளர்கள் பார்ப்பனியம் என்னும் பகைமைச் சக்தியுடனும் போராட வேண்டியுள்ளது என்பதை நமது விமர்சகர்கள் புரிந்து கொள்ளத் தவறுவதால், இத்தகைய விமர்சனங்கள் வருகின்றன. பார்ப்பனியம் என்னும் எதிரியை நாம் சமாளிக்க வேண்டும் என்று சொல்லும்போது, என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பார்ப்பனர்கள் ஒரு வகுப்பினர் என்ற அடிப்படையில் அதிகாரம், உரிமைகள், நலன்கள் ஆகியவற்றைப் பெறுவதை நான் பார்ப்பனியம் என்று சொல்லவில்லை. அந்தப் பொருளில் நான் பார்ப்பனியம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.

 

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளின் எதிர்மறைதான் பார்ப்பனியம் என்று சொல்கிறேன். இந்த எதிர்மறை உணர்வு, எல்லா வகுப்பினரிடையிலும் உண்டு, பார்ப்பனர்களோடு அது நின்று விடவில்லை. பார்ப்பனர்கள் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும், அது எல்லா வகுப்பினரிடையிலும் ஊடுருவி உள்ளது என்பது உண்மை. பார்ப்பனியம் எங்கும் பரவி எல்லா வகுப்பினரின் சிந்தனை, செயல்களில் ஆதிக்கம் செலுத்துவது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பார்ப்பனியம், சில வகுப்புகளுக்கு உரிமை மிகுந்த உயர்வுகளை வழங்குகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. பிற வகுப்புகளுக்கு சம வாய்ப்புகளை மறுக்கிறது என்பதும் உண்மை. பார்ப்பனியம் சேர்ந்துண்ணல், கலப்பு மணம் ஆகிய சமூக உரிமைகளை மறுப்பதோடு நின்று விடுவதில்லை. அப்படி நின்றிருந்தால், யாரும் அதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அது, சிவில் உரிமைகளையும் பதம் பார்க்கிறது.

 

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:175)

நன்றி:தலித்முரசு

இந்த நாட்டில் நிலவும் இத்தகைய சூழல், புத்துணர்வற்ற நிலையை இனி ஆயிரம் ஆண்டு காலத்திற்கு அளித்துவிடும். இந்தச் சூழல் நிலவும் வரை, நம்முடைய முன்னேற்றத்திற்கானப் புத்துணர்வு ஒருபோதும் கிடைக்காது. இந்த மதத்திலிருந்து கொண்டு நாம் இதை எதிர்கொள்ளவே முடியாது. மநுஸ்மிருதியில் சதுர் வர்ணம் இருக்கிறது. சதுர்வர்ண அமைப்பு முறை மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு மாபெரும் ஊறு விளைவிக்கக் கூடியது. சூத்திரர்கள் அனைத்து வகையான இழிவான பணிகளைத்தான் செய்ய வேண்டும் என்று மநுஸ்மிருதி கூறுகிறது. அவர்களுக்கு ஏன் கல்வி அளிக்கப்பட வேண்டும்? பார்ப்பனர்கள்தான் கல்வி கற்க வேண்டும். சத்ரியன் ஆயுதங்களை எடுக்க வேண்டும். வைசியர்கள் வணிகம் செய்ய வேண்டும். ஆனால், சூத்திரர்கள் தொண்டூழியம் செய்ய வேண்டும். இந்த அமைப்பு முறையை யார் அழித்தொழிப்பது? இந்த அமைப்பு முறையில், பார்ப்பனன், சத்ரியன், வைசியன் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகை பயன் இருக்கிறது. ஆனால், சூத்திரர்களுக்கு என்ன இருக்கிறது? இந்த மூன்று வர்ணத்தைத் தவிர, பிற சாதியினருக்குப் புத்துணர்வு எப்படி வரும்? சதுர்வர்ண முறை என்பது ஒரு வழக்கமல்ல. அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே முடியாது, அதுதான் மதம்.

 

இந்து மதத்தில் சமத்துவம் இல்லை. நான் ஒரு முறை காந்தியை சந்தித்தபோது, அவர் சொன்னார், ‘நான் சதுர்வர்ணத்தை நம்புகிறேன்.’ நான் சொன்னேன்: உங்களைப் போன்ற ‘மகாத்மா’க்கள்தான் சதுர்வர்ணத்தை நம்புகிறார்கள். ஆனால், இந்த சதுர்வர்ணம் என்பது என்ன? சதுர்வர்ணம் என்பது மேல் அல்லது கீழ் என்று உள்ளது. அது எங்கு தொடங்கி எங்கு முடிகிறது? இந்தக் கேள்விக்கு காந்தி பதில் சொல்லவில்லை. அவர் என்ன பதில் சொல்ல முடியும்? நம்மை அழித்தவர்களும் இந்த மதத்தால் அழிக்கப்படுவார்கள். நான் தேவையில்லாமல் இந்து மதத்தைக் குற்றம் சொல்லவில்லை. இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது; அந்த மதமே ஓர் அழிவு மதம்.

 

இந்து மதத்தில் படிநிலைப்படுத்தப்பட்ட சாதி முறையில், மேலிருக்கும் வர்ணத்தைச் சார்ந்தவர்கள்தான் பயன் பெற்றார்கள். மற்றவர்களுக்கு என்ன பயன்? ஒரு பார்ப்பனப் பெண் குழந்தை பெற்றால், அவருடைய மனம் ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி பதவி எப்பொழுது காலியாகும் என்பது பற்றி சிந்திக்கிறது. ஆனால், இதற்கு நேர் மாறாக நம்முடைய துப்புரவுத் தொழிலாளர் பெண்மணி குழந்தை பெறும்போது, அரசாங்கத்தில் ஒரு துப்புரவுப் பணி எப்பொழுது காலியாகும் என்று நினைக்கிறார். இந்து மதத்தின் வர்ண அமைப்பு முறை தான் இத்தகைய விந்தையான சமூக அமைப்புக்கு காரணம். இதிலிருந்து என்ன வகையான மேம்பாட்டை நாம் காண முடியும்? பவுத்த மதத்தின் மூலமே நீங்கள் எதையும் சாதிக்க முடியும்.

 

பவுத்த மதத்தில் 75 சதவிகித பிக்குகள் பார்ப்பனர்களாக இருந்தார்கள். 25 சதவிகிதம் சூத்திரர்களும் மற்றவர்களும் இருந்தனர். ஆனால், புத்தர் சொன்னார் ‘பிக்குகளே! நீங்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் பல்வேறு சாதிகளிலிருந்தும் வந்திருக்கிறீர்கள். அந்தந்தப் பகுதிகளில் ஓடும் ஆறுகள் தனித்தனியாகப் பெயரிட்டு அழைக்கப்பட்டாலும், அவை கடலில் சங்கமிக்கும்போது, தங்களின் அடையாளத்தை இழந்து விடுகின்றன. அவை ஒன்றாகக் கலந்து விடுகின்றன. பவுத்த சங்கம் கடலைப் போன்றது. இந்த சங்கத்தில் அனைவரும் சமம். எல்லாரும் கடலில் கலந்த பிறகு கங்கை நதி தண்ணீரையோ, மகாநதி தண்ணீரையோ தனியாக அடையாளப்படுத்திப் பார்க்க முடியாது. அதேபோல, நாம் பவுத்த சங்கத்தில் சேர்ந்த பிறகு நாம் நம்முடைய சாதிகளை இழந்து சமமாகிறோம்.’ இத்தகைய சமத்துவத்திற்கான கொள்கைப் பிரச்சாரத்தை மாமனிதர் புத்தர் மட்டுமே செய்தார்.

 

சிலர் என்னைக் கேட்கிறார்கள்: மதம் மாறுவதற்கு இவ்வளவு நாட்களாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இது ஒரு முக்கியமான கேள்வி. ஒரு மதத்தை வலியுறுத்துவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அது தனி ஒரு மனிதனின் பணியும் அல்ல. மதத்தைப் பற்றி சிந்திக்கும் யாரும் இதைப் புரிந்து கொள்ள முடியும். உலகில் யாரும் சுமக்காத அளவுக்கு நான் பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறேன். நான் நீண்ட நாட்கள் வாழ்ந்தால், நான் திட்டமிட்ட இந்தப் பணியை முடித்தே தீருவேன். ஒரு மகர் பவுத்தராக மாறினால் என்ன நடக்கும் என்று சிலர் கேட்கிறார்கள். நீங்கள் இவ்வாறு கேட்கக் கூடாது. அது ஆபத்தானது. உயர்ந்த வசதியான வகுப்பினருக்கு மதம் தேவையில்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு பெரிய பங்களாக்களும், அவர்களுக்கு வேலை செய்ய வேலையாட்களும், பணமும், சொத்தும், மரியாதையும் கிடைக்கும். இத்தகைய மனிதர்கள் மதத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால், ஏழை மக்களுக்கு மதம் தேவையாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மதம் தேவையாக இருக்கிறது. ஏழை மனிதன் நம்பிக்கையில்தான் வாழ்கிறான். அவனுடைய வாழ்க்கையின் வேரே நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையை அவன் இழக்க நேரிட்டால், அவனுடைய வாழ்க்கை என்னவாகும்? மதம் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் பயப்படாமல் இருக்க, நம்பிக்கையான வாழ்க்கையை அளிக்கிறது. எனவேதான் ஏழை ஒடுக்கப்பட்ட மக்கள், மதத்தின்பால் ஈர்க்கப்படுகிறார்கள்.

நன்றி:தலித்முரசு

முதல் தேர்தல் நடைபெறத் தொடங்கியதிலிருந்தே நாம் காங்கிரசுக்கு எதிராகப் போராடி வருகிறோம். ஏனெனில், அது தேவையின்றி நம்முடைய உரிமைகளில் தலையிடுகிறது. காங்கிரஸ் தலைவர் பண்டித நேருவைப் பாருங்கள். அவர் கடந்த இருபது ஆண்டுகளாக இரண்டாயிரம் கூட்டங்களில் பேசியிருக்கிறார். ஆனால், ஒருமுறைகூட பட்டியல் சாதியினரின் நலன்களுக்காக அவர் பேசியதில்லை. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி, நம் மக்கள் மீது என்ன அக்கறை கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். பண்டித நேரு எப்பொழுதும் முஸ்லிம்களுக்காகவே இருக்கிறார். முஸ்லிம்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று நான் கருதவில்லை. ஆனால், அதிக பாதுகாப்பு தேவைப்படும் பிற சமூகங்களின் நிழலில், முஸ்லிம்கள் அதிக சலுகைகளைப் பெற்றுவிடக்கூடாது.

 

 பண்டித நேருவிடம் பட்டியல் சாதியினருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று சிலர் வேண்டுகோள் விடுத்ததாக நான் அறிகிறேன். அதற்கு நேரு, அந்த மக்களுக்கு எல்லாமே செய்தாகிவிட்டது. அவர்களுக்கென சிறப்பாக எதையும் செய்யத் தேவையில்லை என்று சொன்னாராம். பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் அதிகாரிகள், நம் மக்களை இழிவான வேலைகளை செய்வதற்காக பாகிஸ்தானிலேயே இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினர். நான் பட்டியல் சாதியினரை அங்கிருந்து வெளியேற்ற ஏதாவது செய்ய வேண்டும் என்று நேருவிடம் கேட்டேன். ஆனால், அவர் எதையும் செய்ய முன்வரவில்லை. நான் இருவரை பாகிஸ்தானுக்கு அனுப்பி, நம் மக்களை அழைத்து வரச் செய்தேன். நம்முடைய “மகர்’ படையும் அங்கு சென்று பட்டியல் சாதியினருக்குப் பாதுகாப்பு அளித்தது. காங்கிரஸ் தலைவர் நம் மக்கள் மீது இவ்வளவு “இரக்கமுடன்’ நடந்து கொண்டால், காங்கிரஸ் கட்சி மட்டும் நமக்கு என்ன செய்துவிடும்?

 

தற்பொழுது இந்தியாவின் அரசியல் வரைபடம் மாறிவிட்டது. முதலில் காங்கிரஸ் சுயராச்சியத்திற்காகப் போராடியதால், அனைத்து மக்களும் அதில் இணைந்தனர். காங்கிரசை எதிர்த்தவர்கள் தேச விரோதிகளாகக் கருதப்பட்டனர். ஆனால், தற்பொழுது நிலைமை மாறிவிட்டது. பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் கட்சியினரைப் பாருங்கள். ஒரு காலத்தில் “பார்கவா’ மற்றும் “சச்சார்’ ஆகியோர் சகோதரர்களாக இருந்தனர். ஆனால், தற்பொழுது அவர்கள் எதிரிகளாக மாறிவிட்டனர். இவ்விரு பிரிவினருமே பிரதமர்களாக விரும்புகிறார்கள். பீகாரிலும் இதேநிலைதான் நீடிக்கிறது. பிரிவினையின்போது வலுவாக விளங்கிய காங்கிரஸ் கட்சி, குறுகிய காலத்திலேயே பலவீனமடைந்து விட்டது.

 

இன்று காந்தி தொப்பி அணியும் ஒருவர் நாகரிகமானவராகக் கருதப்படுவதில்லை. மக்கள், “காங்கிரஸ்காரர்’ அல்லது “நாகரிக மனிதர்’ என்றே அழைக்கிறார்கள். இருவரும் ஒரே மனிதராகக் கருதப்படுவதில்லை. இதுதான் காங்கிரசின் தற்போதைய நிலை. காங்கிரசுக்கு வயதாகிவிட்டதால் அதனால் போராட முடியவில்லை. அது விரைவில் இயற்கை மரணத்தை அடைய நேரிடும். எனவே, நீங்கள் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பிற்கு வாக்களித்தால், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் நம்முடைய வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று உறுதியளிக்கிறேன்.

 

பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீடு பத்தாண்டுகளுக்கு மட்டுமே உள்ளது. ஆனால், தீண்டாமை நீடித்திருக்கும் வரை, இடஒதுக்கீடும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், காங்கிரஸ் தலைவர் மறைந்த சர்தார் வல்லபாய் படேல் என்னை எதிர்த்தார். எனவே, நம்முடைய உண்மையான பிரதிநிதிகளை சட்டப் பேரவைகளுக்கு அனுப்பினால்தான், அவர்கள் நம்முடைய உரிமைகளைப் பாதுகாப்பார்கள். அப்பொழுதுதான் இடஒதுக்கீட்டு உரிமைகள் பத்தாண்டுகளுக்குப் பிறகும் பாதுகாக்கப்படும். ஆனால், பிற கட்சிகள் நம்முடைய வாக்குகளையும் நம்முடைய தொகுதிகளையும் கைப்பற்றவே விரும்புகின்றனர்; அவர்கள் நமக்கு ஆதரவு அளிப்பதில்லை.

 

ஒவ்வொரு கட்சிக்கும் சின்னங்களை ஒதுக்கும் போது, நம்முடைய பட்டியல் சாதியினர் கூட்டமைப்பும் ஓர் அகில இந்தியக் கட்சியாகக் கருதப்பட்டது. பிற கட்சிகள் பசு, குதிரை, கழுதை போன்ற சின்னங்களை கேட்டனர். ஆனால், நம்மக்களின் வசதிக்காக நான் யானைச் சின்னத்தைத் தேர்வு செய்தேன். இதன் மூலம் நம்முடைய வேட்பாளர்களை கண்டுபிடிப்பதில் நம் மக்களுக்கு சிக்கல் இருக்காது. பிற விலங்குகளிலிருந்து யானையை எளிதில் அடையாளப்படுத்திவிட முடியும்.

 

தேர்தலில் இம்முறை தனித் தொகுதிகளில் வாக்காளர்கள் இரு வாக்குகளை அளிக்க வேண்டும். ஒன்று, தனித் தொகுதி வேட்பாளருக்கும் மற்றொன்று பொதுத் தொகுதி வேட்பாளருக்கும். நாம் ஒரு வேட்பாளருக்கு இருவாக்குகளை அளிக்க முடியாது. எனவே, நாம் சில கட்சியினருடன் கூட்டணி வைத்தாக வேண்டும்.

 

நம்முடைய கூட்டணிக் கட்சி எது என்பது ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். அவர்களுக்கு நீங்கள் வாக்களித்தால், அதற்குப் பதிலாக அவர்கள் நமது வேட்பாளர்களை ஆதரிப்பார்கள். இவ்வகையில் நமது வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

நன்றி:தலித்முரசு

நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் கீழ் உழைக்கும் வர்க்கங்கள் வாழ நேரிடுமாயின், அதைத் தங்கள் நலன்களுக்குப் பயனளிக்கக் கூடியதாக மாற்றுவதற்கான வழிமுறைகளை அந்த வர்க்கங்கள் வகுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குறிக்கோளை அடைய வேண்டுமானால், இரண்டு செயல்களை அது செய்ய வேண்டும் என்பது என் கருத்து. முதலாவதாக, தொழிற்சங்கங்களை அமைப்பதை மட்டுமே இந்தியாவில் தொழிலாளர்களின் இறுதி லட்சியமாக, குறிக்கோளாகக் கொள்வதைக் கைவிட வேண்டும். அரசாங்கம் தொழிலாளர் கைகளுக்கு வருவதைத் தனது லட்சியமாக அது பிரகடனப்படுத்த வேண்டும். இதன் பொருட்டு, ஒரு தொழிலாளர் கட்சியை ஓர் அரசியல் கட்சியாக உருவாக்க வேண்டும். இத்தகையதொரு கட்சி, தொழிற்சங்கங்களையும் தனது அமைப்புக்குள் கொண்டிருக்கும் என்பதில் அய்யமில்லை.

 

ஆனால், இத்தகைய கட்சி தொழிற்சங்க இயக்கத்தின் குறுகிய கண்ணோட்டத்திலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். ஏனென்றால், பொதுவாக தொழிற்சங்கங்கள் இறுதி நலன்களை விட, உடனடி நலன்களையும், தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த தொழிற்சங்கத் தலைவர்களுக்குள்ள உரிமையையும் வலியுறுத்துபவையாகவுமே இருக்கும். மேலும், தொழிலாளர்களின் இந்தக் கட்சி, இந்து மகாசபை அல்லது காங்கிரஸ் போன்ற வகுப்புவாத அல்லது முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். காங்கிரசோ அல்லது இந்து மகாசபையோ, இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடி வருவதாக உரிமை கொண்டாடிவரும் கட்சிகள் என்பதற்காக, அவற்றில் சேர வேண்டிய அவசியமோ அல்லது அக்கட்சிகளின் கூட்டணியினராக இருக்க வேண்டிய கட்டாயமோ தொழிலாளர்களுக்கு இல்லை.

 

தொழிலாளர்களே தங்களது சொந்த அணிகளைக் கொண்ட ஒரு தனியான அரசியல் அமைப்பாக உருவாகி, இந்த இரு நோக்கங்களுக்காகவும் பாடுபட முடியும். காங்கிரஸ் மற்றும் இந்து மகாசபையின் உடும்புப் பிடிகளிலிருந்து விடுபடுவதன் மூலம் அது இந்தியாவின் விடுதலைக்காக சிறந்த முறையில் போராட முடியும். அதே நேரம், தேசியத்தின் பேரால் தான் ஏமாற்றப்படுவதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். இதை எல்லாம்விட முக்கியமாக, இந்திய அரசியலில் நடைபெற்றுவரும் பகுத்தறிவற்றத் தன்மைகளுக்கு அது முற்றுப் புள்ளி வைக்க முடியும். காங்கிரஸ் அரசியல் ஏமாற்றத்தைத் தவிர, வேறு எதையும் கொண்டுவரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. காங்கிரஸ் அரசியல், பகுத்தறிவுக்கு ஒவ்வாது இருப்பதே இதற்குக் காரணம். அக்கட்சிக்கு சரியான போட்டி இல்லாததாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ஒரு தொழிற்கட்சி ஏற்படுமானால், கடந்த இருபதாண்டுகளாக இந்திய அரசியலில் கோலோச்சி வரும் நிலைக்கு அது முடிவு கட்டும். இந்தியாவிலுள்ள தொழிலாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டாவது செய்தி : அறிவாற்றல் இல்லையேல் அதிகாரம் இல்லை என்பதாகும்.

 

இந்தியாவில் ஒரு தொழிற்கட்சி அமைக்கப்படுமானால், ஆட்சிப் பீடத்தில் தன்னை அமர்த்த வேண்டும் என்ற ஒரு கேள்வி எழும் என்பது உறுதி. மற்ற வர்க்கங்களைவிட தொழிலாளர்கள் மோசமாக ஒன்றும் ஆட்சி செய்ய மாட்டார்கள் அல்லது உள்நாட்டு விவகாரங்களிலோ, அயல்நாட்டு விவகாரங்களிலோ அப்படி ஒன்றும் ஓட்டாண்டிகளாக நடந்து கொள்ள மாட்டார்கள் என்று நொண்டிச் சமாதானம் கூறுவது இக்கேள்விக்குச் சரியான, முறையான, நேரிய பதிலாக இருக்க முடியாது. மாறாக, தொழிலாளர்கள் சிறப்பாக, திறம்பட ஆட்சி செய்ய முடியும் என்பதைத் திட்டவட்டமாக மெய்ப்பித்தாக வேண்டும்.

 

அதேவேளை, பிற வர்க்கங்களின் அரசாங்கப் பாணியைவிட தொழிலாளர்களின் அரசாங்கப் பாணி மிகவும் கடினமானது என்பதையும் மறந்துவிடக் கூடாது. தொழிலாளர்களின் அரசாங்கம் வரைமுறையற்ற, கட்டுப்பாடற்ற அரசாங்கமாக இருக்க முடியாது. அது முக்கியமாகவே ஒரு கட்டுப்பாட்டு முறையில் அமைந்த அரசாங்கமாகவே இருக்கும். ஒரு சிறந்த கட்டுப்பாட்டு முறையை உருவாக்குவதற்கு அதிகளவு அறிவாற்றலும், பயிற்சியும் தேவை. இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள், படிப்பின் முக்கியத்துவத்தை உணரத் தவறிவிட்டது கெடுவாய்ப்பானதாகும். இந்தியாவிலுள்ள தொழிற்சங்கத் தலைவர்கள் செய்திருப்பதெல்லாம் தொழிலதிபர்கள் மீது எப்படி வன்மையோடு, உக்கிரத்தோடு வசைபாட முடியும் என்பதைக் கற்றுக் கொண்டிருப்பதுதான்.

 

ஆகவே, இந்தியத் தொழிலாளர் சங்கம் இந்தக் குறைபாட்டை உணர்ந்து கொண்டிருப்பதையும், தொழிலாளர் வர்க்கங்களுக்காக இந்தப் பயிற்சி முகாம்களைத் தொடங்க முன்வந்திருப்பதையும் அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆட்சி புரிவதற்கு தொழிலாளர்களைத் தகுதியுடையவர்களாக ஆக்க, இந்தப் பயிற்சி முகாம்கள் சிறந்த சாதனங்களாக விளங்கும். ஒரு தொழிற்கட்சியைத் தொடங்க வேண்டிய அவசியத்தை சங்கம் மறந்துவிடாது என்றும் நம்புகிறேன். இது செய்யப்படுமானால், ஆளும் வர்க்கத்தின் நிலைக்குத் தங்களை உயர்த்தியமைக்காக, தொழிலாளர் வர்க்கங்கள் சங்கத்துக்குப் பெரிதும் நன்றிக் கடன் பட்டிருக்கும்.

 

அகில இந்தியத் தொழிற்சங்கத்தின் சார்பில், 1943 செப்டம்பர் 8 முதல் 17 வரை டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், இறுதி நாள் ஆற்றிய உரையிலிருந்து.

நன்றி: தலித்முரசு

Ambedkar முதலில், ஒப்பந்த சுதந்திரம் என்னும் கருத்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாழ்படுத்திவிட்டது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்தக் கருத்து சட்டத்தின் ஒப்புதலைப் பெற்றதோடு, சுதந்திரத்தின் பெயரால் அது நிலைநாட்டவும் செய்தது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நாடாளுமன்ற ஜனநாயகம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல, ஒப்பந்த சுதந்திரத்தின் விளைவாக ஏற்படக்கூடிய சுதந்திரம் வலுமிக்கவர்கள் வலுவற்றவர்களை ஏமாற்றுவதற்கும், வஞ்சிப்பதற்கும் வாய்ப்பளிப்பது பற்றியும் கவலைப்படவில்லை. இதன் விளைவு என்ன? சுதந்திரத்தின் பாதுகாவலனாக இருக்க வேண்டிய நாடாளுமன்ற ஜனநாயகம் ஏழை எளிய மக்களுக்கு, அடிமட்டத்தில் அமிழ்ந்து கிடக்கும் மக்களுக்கு, சொத்துமை பறிக்கப்பட்ட வர்க்கத்துக்கு மென்மேலும் பொருளாதாரத் தீங்குகளை, சீர்கேடுகளை, துயரங்களை இழைத்து வந்தது.

 

நாடாளுமன்ற ஜனநாயகத்தை சின்னாபின்னப்படுத்திய இரண்டாவது சித்தாந்தம்: சமூக, பொருளாதார ஜனநாயகம் இல்லாமல் அரசியல் ஜனநாயகம் வெற்றி பெற முடியாது என்பதை நாடாளுமன்ற ஜனநாயகம் உணரத் தவறியதாகும். இந்தக் கூற்றை சிலர் மறுக்கக்கூடும். இதை மறுப்பவர்களிடம் ஓர் எதிர்க்கேள்வி கேட்க விரும்புகிறேன். இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளில் நாடாளுமன்ற ஜனநாயகம் ஏன் அவ்வளவு எளிதில் வீழ்ச்சி அடைந்தது? அதே நேரம், இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் அது ஏன் அத்தனை எளிதாகத் தகர்ந்து விடவில்லை? என்னைப் பொறுத்தவரை, இதற்கு ஒரு பதில்தான் இருக்கிறது. முதலில் குறிப்பிட்ட நாடுகளைவிட, இரண்டாவதாகக் குறிப்பிட்ட நாடுகளில் பொருளாதார ஜனநாயகமும், சமூக ஜனநாயகமும் அதிக அளவில் இருந்ததே இதற்குக் காரணமாகும்.

 

சமூக ஜனநாயகமும், பொருளாதார ஜனநாயகமும் அரசியல் ஜனநாயகத்தின் நரம்புமும் நாளமும் ஆகும். இந்த நரம்பும் நாளமும் உறுதியாக இருந்தால்தான் உடல் வலுமிக்கதாக, ஆரோக்கியமானதாக இருக்கும். ஜனநாயகம் என்பது, சமத்துவத்திற்கு மற்றொரு பெயர். நாடாளுமன்ற ஜனநாயகம் சுதந்திர தாகத்தை, விழைவைக் கிளர்த்தி விட்டு விட்டது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சமத்துவத்திற்கு ஆதரவாக அது ஒரு போதும் தலையசைத்ததுகூட இல்லை. சமத்துவத்தின் முக்கியத்துவத்தை அது உணரத் தவறிவிட்டது. அதுமட்டுமல்ல, சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும்கூட, அது எத்தகைய முயற்சியையும் எடுத்துக் கொள்ளவில்லை. இதன் விளைவு, சுதந்திரம் சமத்துவத்தை விழுங்கி விட்டது. அதுமட்டுமல்ல, பல்வேறு ஏற்றத் தாழ்வுகள் தோன்றவும் வழிவகுத்து விட்டது.

 

நாடாளுமன்ற ஜனநாயகம் தோல்வியடைந்ததற்குத் தவறான கோட்பாடுகள் ஒரு காரணம் என்ற என் கருத்தை இதுவரை எடுத்துரைத்தேன். ஆனால், அதே நேரம் ஜனநாயகம் தோல்வியடைந்ததற்கு தவறான கோட்பாட்டை விடவும், மோசமான அமைப்பு முறை ஒரு காரணம் என்பதிலும் எனக்கு எள்ளளவும் அய்யமில்லை. எல்லா அரசியல் சமுதாயங்களும் இரண்டு வர்க்கங்களாகப் பிரிந்துள்ளன: ஆளும் வர்க்கம், ஆளப்படும் வர்க்கம் என்பவையே அவை. இது ஒரு தீமையாகும். இந்தத் தீமை இத்துடன் நிற்கவில்லை. இதிலுள்ள மிகவும் கேடான அம்சம் என்னவென்றால், இந்தப் பிரிவினை ஒரே மாதிரியானதாகவும், படிநிலையில் அமைந்திருப்பதுமாகும். இதனால் ஆளுபவர்கள் எப்போதும் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஆளப்படுபவர்கள் ஒருபோதும் ஆளும் வர்க்கமாக மாற முடியாதவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

 

இதன் காரணமாக, மக்கள் தங்களைத் தாங்களே ஆள்வதில்லை; அவர்கள் ஓர் அரசாங்கத்தை அமைத்து, அது தங்களை ஆள்வதற்கு விட்டு விடுகின்றனர். இத்தகைய நிலைமையில், நாடாளுமன்ற ஜனநாயகம் மக்களது அரசாங்கமாகவோ அல்லது மக்களால் நடத்தப்படும் அரசாங்கமாகவோ ஒருபோதும் இருப்பதில்லை. இதன் காரணமாக, அது மக்களுக்கான அரசாங்கமாகவும் எக்காலத்திலும் இருப்பதில்லை. நாடாளுமன்ற ஜனநாயகம் ஒரு மக்கள் அரசாங்கத்துக்குரிய அம்சங்களைக் கொண்டிருந்த போதிலும், உண்மையில் அது வழிவழியாக ஓர் ஆளப்படும் வர்க்கத்தை வாழையடி வாழையாக ஓர் ஆளும் வர்க்கம் ஆளுகின்ற ஓர் அரசாங்கமாகவே எப்போதும் இருந்து வருகிறது.

 

அரசியல் வாழ்க்கை இவ்விதம் நேர்மைக் கேடாக, ஒழுக்கக்கேடாக, நெறிபிறழ்வாக உருவாக்கப்பட்டிருப்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம் இவ்வாறு படுதோல்வி அடைந்திருப்பதற்குக் காரணமாகும். மேலும், இதன் காரணமாகவே, சுதந்திரம், சொத்துரிமை, நல்வாழ்வு ஆகியவற்றை சாமானிய மனிதனுக்கு உறுதி செய்வதாகத் தான் அளித்திருந்த வாக்குறுதியை, நாடாளுமன்ற ஜனநாயகத்தால் நிறைவேற்ற முடியவில்லை.

 

தொடரும்

அகில இந்தியத் தொழிற்சங்கத்தின் சார்பில், 1943 செப்டம்பர் 8 முதல் 17 வரை டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், இறுதி நாள் ஆற்றிய உரையிலிருந்து.

நன்றி:தலித்முரசு

மற்ற கட்டுரைகள் …

Load More