அறிவுக் களஞ்சியம்

உடன் கிண்டி எடுத்த 'பிரஸ்' மரவள்ளிக் கிழங்கை மறக்க முடியுமா? கிராமங்களில் மட்டுமே கிடைக்கக் கூடியது அது. ஏழை மக்களின் நாளாந்த உணவில் தவிர்க்க முடியாதது.

அடைமழை காலத்தில் வெளியே சென்று காய்கறிகள் வாங்க முடியாத வேளையில் பின் வளவில் வளர்ந்து நின்று அவசரத்திற்குக் கை கொடுக்கும்.

"முழுகிவிட்டு வரும் பருவப் பெண்ணின் கூந்தலில் இருந்து நீர் சொட்டுவது போல் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்ற மரவள்ளி இலைகளிலிருந்து மழைத் துளிகள் சொட்டிக் கொண்டிருக்கின்றன."

என ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நீர்வை பொன்னையன் தனது 'சம்பத்து' சிறுகதையில் ஓரிடத்தில் சொல்கிறார். செழித்து வளர்ந்த நீர்வேலி மரவள்ளித் தோட்டங்களை ஆழ்ந்து ரசித்தவரல்லவா?

ஆம்! மரவள்ளிச் செடியின் அழகோ அழகுதான்.

மரவள்ளித் தோட்டங்களைச் சுற்றி ஒழித்து விளையாடிய நாட்கள் மீண்டும் வருமா? வெய்யிலுக்கு இதமான குளிர்மை தரும் மாலைக் காற்றில் ஆடி அசையும் அழகோ சொல்லி மாளாது. மாலைச் சூரியனின் ஒளியில் பசுமையான இலைகள் தங்கமென தகதகக்கும்.

கிழங்கை நெருப்பில் வாட்டி எடுத்துச் சுவைத்தால் சுவைதான். அவித்த கிழங்குடன் காரச் சம்பல் தொட்டுச் சாப்பிட்டால் அப்பபா ஊ ஊ என உறைக்கிறது. இருந்தும் நாக்கு மீண்டும் சுவைக்கத் தூண்டும்.

மரவள்ளி சிப்சின் சுவை அலாதியானது. குழந்தைகளின் ஆசைக்கு உகந்த உணவாகும். உப்பும் மிளகாய்ப் பொடியும் சேரும்போது ஆகா! அற்புதம்.

"போடா போய் குளிச்சிட்டு வா. புள்ளை அந்தப் பழஞ்சோறு, குரக்கன் புட்டு, மரவள்ளிக் கிழங்குக் கறி, தயிர் எல்லாத்தையும் எடுத்து வை. நான் கொண்ணைக்கு குழைச்சு உறுட்டிக் குடுக்க."

என அதே நீர்வை பொன்னையன் 'அழியாச் சுடர்' என்ற சிறுகதையில் விபரிக்கிறார்.

அதன்போது கிராமங்களில் மரவள்ளியின் முக்கியத்துவமும், தாயின் பாசமிகு ஊட்டலும், மரவள்ளிக் கிழங்குக் கறியின் சுவையையும் உணர முடிகிறது அல்லவா?

மரவள்ளியில் புரதச் சத்துக் குறைவு. எனவே புரதம் கூடிய உணவு வகைகளான கச்சான், கடலை, கௌபீ சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. சமபல உணவாக நன்மை தரும்.

ஆவியில் வேக வைத்த மரவள்ளிக் கிழங்கு தாளிதம்


தேவையான பொருட்கள்


1. மரவள்ளிக் கிழங்கு – 1
2. வறுத்த கச்சான் - ¼ கப்
3. தக்காளி – 2
4. வெங்காயம் - 1
5. வறமிளகாய் - 3
6. பூண்டு – 2
7. கறிவேற்பிலை – சிறிதளவு
8. உப்பு – வாய் ருசிக்கு ஏற்ப
9. கடுகு - விரும்பினால்
10. கறுவாத் தூள் ¼ ரீ ஸ்பூன்
11. ஓயில் - 2 ரீ ஸ்பூன்


செய்முறை

மரவெள்ளி வேரை நீக்கி அரை அங்குல அளவுள்ள சிறிய துண்டங்களாக வெட்டி எடுங்கள்.

அதை நீராவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

சிறிதளவு எண்ணெயில் கடுகு, கறிவேற்பிலை, பூண்டு, வறமிளகாய், வெங்காயம், தாளித்து தக்காளி போட்டு வதக்கி உப்பு கறுவாத் தூள் போட்டு, கிழங்குத் துண்டுகளைக் கொட்டிப் பிரட்டி எடுத்து வையுங்கள்.

இத்துடன் வறுத்த கச்சான் தூவி பரிமாறுங்கள்.

:- மாதேவி -:


காய்ச்சலா, தலையிடியா, உடல் உழைவா, மூட்டு வலியா எதுவானாலும் அஸ்பிரின் மருந்துதான். இவ்வாறு அது கைகொடுத்த காலம் ஒன்று இருந்தது. 

ஆம் சர்வரோக நிவாரணி போலப் பயன்பட்டது. ஆனால் வலியைக் குறைக்கவும், காய்ச்சலைத் தணிக்கவும் வீரியம் கூடியதும், பக்க விளைவுகள் குறைந்ததுமான புதிய மருந்துகள் வந்ததும் அதன் பிரபல்யம் மங்கத் தொடங்கியது. 

ஆனால் அதற்கு சென்ற சில ஆண்டுகளாக மீண்டும் மவுசு கூடிவிட்டது. மறுபிறப்பு எடுத்துவிட்டது. 

ஆம்! 'தினமும் அஸ்பிரின் சாப்பிட்டு வாருங்கள்' என வைத்தியர்கள் சிபார்சு செய்பவர்கள் தொகை நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

யாருக்கு இது தேவை? 

மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கும் ஆற்றல் இருப்பதால்தான் மருத்துவர்களால் அதிகம் எழுதப்படும் மருந்தாக அஸ்பிரின் மாறிவிட்டது. 

ஒருவருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்கனவே வந்திருந்தால் அது மீண்டும் வராமல் தடுப்பதற்கு தினமும் அஸ்பிரின் எடுக்க வேண்டியதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் பக்கவாதம் அல்லது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளவர்களுக்கும் தேவைப்படுகிறது. 

இவை வருவதற்கான சாத்தியம் அதிகமுள்ளவர்கள் யார்? 

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், குருதியில் கொலஸ்டரோல் அதிகமுள்ளவர்கள் ஆகியோருக்கு அதற்கான சாத்தியம் மிக மிக அதிகமாகும். 

புகைப்பவர்கள், தினமும் அதிகமாக மது அருந்துபவர்கள், அதீத எடையுள்ளவர்கள், உடலுழைப்பு உடற் பயிற்சி அற்றவர்கள், பரம்பரையில் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளவர்கள் ஆகியோருக்கும் சாத்தியம் அதிகமாகும். 

அஸ்பிரின் எவ்வாறு உதவுகிறது? 

அஸ்பிரின் மருந்தானது குருதியின் உறைதல் (Clotting) தன்மையைக் குறைக்கிறது. உதாரணமாக ஒருவருக்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ளது என வைத்துக் கொள்வோம். உடனடியாக இரத்தம் கசியும் இடத்திற்கு வெண்குருதி சிறுதுணிக்கைகள் (Platelets) வந்து குவியும். இவை திரண்டு, இரத்தத்தை கட்டிப்படுத்தி, கசிந்து கொண்டிருக்கும் இரத்தக் குழாய்களின் வாயிலை அடைத்து மேலும் இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கும். 

ஆனால் இவ்வாறு குருதி உறைந்து கட்டிபடுதல் இரத்தக் குழாய்களுள்ளும் ஏற்படலாம். முக்கியமாக மூளைக்கும், இருதயத்திற்கும் குருதியைக் கொண்டு செல்லும் இரத்தக் குழாய்களுள் ஏற்பட்டால் அது ஆபத்தானது. கொலஸ்டரோல் காரணமாக அவை இரத்தக் குழாய்க்குள் படிந்து அவற்றின் இரத்தம் பாயும் பாதையை ஏற்கனவே ஒடுங்கச் செய்திருந்தால், அங்கு குருதி உறைந்து கட்டிபட்டு இரத்த ஓட்டத்தை தடைப்படுத்தும். 



அவ்வாறு அடைபடும் போதுதான் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியன ஏற்படுகின்றன. அஸ்பிரின் மருந்தானது அவ்வாறு இரத்தம் உறைந்து மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. 

எவ்வளவு அஸ்பிரின் தேவை? 

வழமையான அஸ்பிரின் மாத்திரைகள் 300 மிகி (300 milligrams (mg)அளவுடையவை. ஆனால் மாரடைப்பு பக்கவாதம் ஆகியவற்றைத் தடுப்பதற்கான மாத்திரைகள் 75 மிகி முதல் 100 மிகி வரையானவை மட்டுமே. இது அந்தத் தேவைக்கு போதுமானதாகும். 

இவற்றிலும் வெவ்வேறு வகைகள் உள்ளன. 

இரைப்பையில் கரையாது அப்பால் சென்று உணவுக் குழாயில் கரைவதை Enteric-coated aspirin என்பார்கள். இது முக்கியமாக இரைப்பை புண் உள்ளவரக்ளுக்காகும். இரைப்பையை உறுத்தாது அப்பால் சென்று கரைய வைப்பதன் மூலம் பாதுகாப்பு அளிக்கிறது. ஆயினும் இது சமிபாடடைந்து செயற்படுவதற்கு கூடிய நேரம் எடுக்கிறது. அத்துடன் இரைப்பையை உறுத்தாது என்ற போதும் இரைப்பை புண்ணிலிருந்து இரத்தம் கசிவதைக் குறைக்குமா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. 

வேறு சில வாயில் வைத்துக் கரையவிடக் கூடியனவாக இருக்கின்றன. இவை விரைவில் உறிஞ்சப்பட்டு விடும். 

சத்திர சிகிச்சைகளும், நிறுத்துவதும் 

இவற்றைத் தினமும் உட்கொள்வது அவசியமாகும். தொடர்ந்து உபயோகிப்பவர்கள் இதனைத் திடீரென நிறுத்துவது கூடாது. திடீரென நிறுத்தினால் அது எதிர்விளைவை ஏற்படுத்தி, பக்கவாதம் மாரடைப்பு வருவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கக் கூடும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

வேறு நோய்களுக்காக சத்திரசிகிச்சைக்கு செல்ல வேண்டி நேர்ந்தால் இதனை ஒரு வாரத்திற்கு முன் நிறுத்த வேண்டியிருக்கும். நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனை பெறுங்கள். பாரிய சத்திரசிகிச்சைகளுக்கு மாத்திரமின்றி பல் பிடுங்குவது போன்ற சாதாரண சத்திர சிகிச்சையாக இருந்தாலும் நீங்கள் தினம் அஸ்பிரின் எடுப்பதை மருத்துவரிடம் முற்கூட்டியே சொல்ல மறக்க வேண்டாம். 

பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படாதா? 

தினமும் அஸ்பிரின் சாப்பிடுவதால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படாதா? எல்லோருக்கும் இது உகந்ததா? பெரும்பாலானவர்களுக்கு இதனை உட்கொள்வதில் எத்தகைய பிரச்சனைகளும் ஏற்படாது. ஆயினும் கீழ் கண்டவர்கள் விடயத்தில் அவதானம் தேவை. 

அஸ்பிரின் மருந்திற்கு ஒவ்வாமை (Allergy) உள்ளவர்கள் அதனை எடுக்கக் கூடாது. குடற்புண் உள்ளவர்கள் அதிலும் முக்கியமாக அதிலிருந்து இரத்தக் கசிவு ஏற்பட்டவர்கள் எடுக்கக் கூடாது. பக்க வாதத்தில் இரண்டு வகை உண்டு. முன்னர் கூறியவாறு குருதி உறைதலால் ஏற்படுபவர்களுக்கு இது நல்லது. மாறாக குருதிப் பெருக்கால் பக்கவாதம் ஏற்படுபவர்களுக்கு இது நோயைக் கூட்டக் கூடும். இதனை சி.டி ஸ்கான் போன்ற பரிசோதனைகளாலேயே கண்டு கொள்ள முடியும். 

அத்துடன் குருதி உறைதல் குறைபாடு நோயுள்ளவர்களும் உபயோகிக்கக் கூடாது. அஸ்பிரின் மாத்திரைகளை உட்கொள்பவர்கள் மதுபானம் அருந்துவதை மிகவும் குறைக்க வேண்டும். ஏனெனில் இரண்டும் சேரும்போது மருந்தின் செயற்பாட்டு வீச்சு அதிகரிப்பதுடன் இரைப்பைக்கும் கூடிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். 

மாரடைப்பின்போது 

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதற்கான அறிகுறிகள் திடீரென தோன்றினால் ஒரு சாதாரண அஸ்பிரினை உடனடியாக மென்று விழுங்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். அல்லது மேற் கூறிய குறைந்த வலுவுள்ள அஸ்பிரினில் நான்கு உடனடியாக எடுக்க வேண்டும். 

தினமும் அஸ்பிரின் மாத்திரை எடுப்பவர்களுக்கும் இது பொருந்தும். மென்று விழுங்கும் போது அஸ்பிரின் விரைவில் குடலிலிருந்து உறிஞ்சப்பட்டு உடனடியாகச் செயற்படும் என்பதை நினைவில் வைத்திருங்கள். 

ஆயினும் பக்கவாதம் ஏற்பட்டால் மாரடைப்பிற்கு எடுப்பதுபோல உடனடியாக அஸ்பிரின் எடுக்கக் கூடாது. 

ஏனெனில் எல்லாப் பக்கவாதங்களும் குருதி கட்டிபடுவதால் ஏற்படுவதில்லை. சில சிறுஇரத்தக் குழாய்கள் வெடிப்பதால் ஏற்படுகின்றன. அவ்வாறானவற்றுக்கு அஸ்பிரின் கொடுத்தால் குருதி கசிவது அதிகமாகி நோய் தீவிரமடையும். 

புதிய மருந்து 

இப்பொழுது குருதி உறைதலைக் குறைக்கும் அஸ்பிரின் மருந்திற்கு பதிலாக புதிய வகை மருந்தான குளபிடோகிறில் (clopidogrel)பாவனைக்கு வந்துள்ளது. இது சற்று அதிக விலையானது. அஸ்பிரின் மருந்தால் பக்கவிளைவு ஏற்படுபவர்களுக்கு ஏற்றது. அத்துடன் பல தருணங்களில் அஸ்பிரினுடன் சேர்த்தும் மருத்துவர்கள் கொடுக்கிறார்கள். 

மருத்தவ விஞ்ஞானம் அதீத வளர்ச்சி கண்டுள்ள இன்றைய கால கட்டத்திலும் அஸ்பிரினின் உயிர் காக்கும் ஒளடதமாகக் கைகொடுப்பதுடன், எளிதாகக் கிடைப்பதும், எல்லோருக்கும் கிட்டக் கூடிய விலை குறைந்த மருந்தாக இருப்பதும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய விடயம் என்பதில் சந்தேகம் இல்லை. 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் 
குடும்ப மருத்துவர் 

நன்றி:- வீரகேசரி 04..01.2009 

கல்சியம் மாத்திரைகள் எவ்வளவு? எப்படி? எந்த நேரத்தில்? என மேலதிக கல்சியம் எடுப்பது பற்றிய ஒரு கட்டுரையை அண்மையில் எழுதியிருந்தேன். இணையத்திலும் பத்திரிகைகளிலும் வெளியானபோது பலர் மேலும் ஒரு சில சந்தேகங்களை எழுப்பினர். அதில் முக்கியமானது ஆண்களுக்கும் கல்சியம் தேவையா என்பதாகும்.



ஆண்களுக்கும் ஒஸ்டியோபொரோசிஸ் எனப்படும் எலும்புச் சிதைவு நோய் ஏற்படுவது உண்மையே. வயதான காலத்தில் இடுப்பு எலும்பு முறிவடைவது (Hip Fracture) ஒரு முக்கிய பிரச்சினையாகும். இடுப்பு எலும்பு முறிவுகளை எடுத்தால் அவற்றில் கால் பங்கு (1/4) ஆண்களிலேயே ஏற்படுவதாக தரவுகள் கூறுகின்றன.

அதற்கும் மேலாக முப்பது சதவிகிதமான (30%) வயதான ஆண்களில் வெளிப்படையாகத் தெரியாத மென்வெடிப்புகள் ( Fragility Fractures) ஏற்படுவதாகவும் தெரிகிறது. எனவே, ஆண்களுக்கும் ஒஸ்டியோபொரோசிஸ் என்பது ஒரு பிரச்சினையே என்பது தெளிவாகிறது.


இவ்வாறாக இருந்தபோதும் ஒஸ்டியோபொரோசிஸ் சம்பந்தமான ஆய்வுகள் ஆண்களில் அதிகம் செய்யப்பட்டதில்லை. பெண்களிலேயே பெரும்பாலும் இது சம்பந்தமான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த "பாரபட்சத்தை' நிவர்த்திக்குமுகமாக நியூஸிலாந்தில் ஆண்களில் ஒஸ்டியோபொரோசிஸ் பற்றிய ஆய்வு செய்யப்பட்டது. 24 மாதங்கள் செய்யப்பட்ட ஆய்வின்போது மேலதிக கல்சியம் கொடுக்கப்பட்ட ஆண்களின் எலும்புத் திணிவு குறியஈடு (BMI) அதிகரித்திருப்பது அவதானிக்கப்பட்டது. எனவே, ஆண்களுக்கும் மேலதிக கல்சியம் உதவும் என்பது தெளிவாகிறது.

எவ்வளவு கல்சியம் தேவை. 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு தினமும் 1200 மி.கி. கல்சியம் தேவைப்படுகிறது. அத்துடன், தினமும் 400 முதல் 600 மி.கி. வரையான விற்றமின் "டி'யும் தேவைப்படுகிறது.

அதில் ஓரளவு கல்சியத்தை பால், மற்றும் தயிர், யோக்கட், சீஸ் போன்ற பாற் பொருட்களிலிருந்தும் தினமும் பெற முடியும். ஒரு கப் பால் அல்லது 8 அவுன்ஸ் கொழுப்பு நீக்கிய யோக்கட் உண்பதன் மூலம் எமது தினசரி கல்சியத் தேவையின் அரைவாசி அளவைப் பெற முடியும்.

மிகுதியை கல்சியம் மாத்திரைகளாகக் கொடுக்கலாம். எனவே, வயதான ஆண்களுக்கு தினமும் 600 மி.கி. போதுமானதா அல்லது 600 மி.கி. இரண்டு தடவைகள் கொடுக்க வேண்டுமா என்பது பற்றி அறிய மேலும் ஆய்வுகள் உதவக்கூடும்.

ஆயினும், எலும்பின் உறுதிக்கு இவை மட்டும் போதாது. போதிய உடற்பயிற்சி செய்தால் தான் எலும்புகளும் அதனைச் சுற்றியுள்ள தசைகளும் பலம் பெறும். எனவே, ஓடுவது, வேகமான நடை, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் போன்ற பயிற்சிகளும் அவசியம். இதன்மூலம் வயதான ஆண்களும் தமது எலும்புகளின் உறுதியைப் பேணி விழுகைகளையும் எலும்பு முறிவுகளையும் தடுக்க முடியும்.

-டொக்டர் எம்.கே. முருகானந்தன்-
தினக்குரல் 29.12.2008


தேவையானப்பொருட்கள்:

கேரட் - 2
தக்காளி - 1
காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

கேரட்டை தோல் சீவி நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியையும் நடுத்தர அளவிற்கு வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றைப் போட்டு சிவக்கும் வரை வறுக்கவும். பின் அதில் மிளகாயைப் போட்டு சற்று வறுத்து அத்துடன் இஞ்சி, தக்காளித்துண்டுகள் சேர்த்து சில வினாடிகள் வதக்கவும். பின்னர் அத்துடன் கேரட் துண்டுகளையும் சேர்த்து மீண்டும் சில வினாடிகள் வதக்கி, கீழே இறக்கி வைத்து தேங்காய்த்துருவலைச் சேர்க்கவும். சற்று ஆறியவுடன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

பின்னர் அதில் கடுகு, கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்
http://adupankarai.kamalascorner.com/2008/12/blog-post_27.html

தேனீக்கள் தேன் கூட்டில் கூட்டமாக(சமூதாயமாக) வாழும்.இந்த தேன் கூடு வேளைக்கார தேனீயிடமிருந்து உருவாகும் மெழுகால் கட்டப்படும்.இது (தேன் வதை) இலேசானதும், அறுகோண வடிவமுடைய பல அறைகளாலானது.இவ் அறுகோண அமைப்பு மிகவும் உறுதியானது.இதனாலே தான் ஆகாய விமானங்களில் தேன்வதை போன்ற அமைப்பில் தயாரிக்கப்பட்ட அலுமினிய வலைச்சட்டகம் ஆகாய விமான உடலின் தகடுகளுக்கிடையில் இடப்பட்டுள்ளது.இதனால் ஆகாய விமானங்கள் உறுதியாகவும் இலேசானதாகவும் வெப்பத்தைத் தாங்கக்கூடியதாகவும் உள்ளது.

தேன் வதை தேனீகளின் வசிப்பிடமாக இருப்பதோடு களஞ்சியமாகவும் காணப்படுகின்றது.இங்கு சேமிக்கப்படும் தேன் அவற்றிக்கு உணவாக அமைவதோடு தேன் கூட்டைக் குளிர் நேரதில் வெப்பமாக வைத்திருக்கவும் உதவுகின்றது.

இந்த தேன்கூட்டை பாதுகாப்பதற்கு என சில வேலைக்கார தேனீக்கள் தேன்கூட்டின் மேல் பகுதியில் நியமிக்கப்பட்டிருக்கும்.இவை பிற பூச்சிகளை கூட்டினுள் செல்ல அனுமதிப்பதில்லை.இந்த தேனீக்கள் தங்களது சொந்த உயிரை பணயமாக வைத்தே பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றன.வேலைக்கார தேனீக்கள் தமது ஆயுதமாக கொட்டக் கூடிய கொடுக்கை பயன்படுத்தும். ஆனால் ஒரு முறை கொட்டியதன் பின்னர் திரும்ப வளருவதில்லை.(இராணித் தேனீக்கு கொட்டக் கூடிய கொடுக்குகள் மீண்டும் மீண்டும் வளரக்கூடியதாகும்,அதே நேரம் ஆண் தேனீக்கு கொடுக்கு காணப்படாது.)தேன்கூட்டின் பாதுகாப்பு பணியை வேலைக்கார தேனீக்கள் சுழற்சி முறையில் மாறி மாறி செய்கின்றன.தேன்கூட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் உழைக்காமல் உண்ணும் ஆண் தேனீக்கள் வெளியேற்றப்படும்!

வேலைக்கார தேனீயால் துரத்தப்படும் ஆண்தேனீ ஒன்று

வேலைக்கார தேனீக்களால் பூக்களிலிருந்து அமுதம்(Nector) என்னும் பதார்த்தம் உறிஞ்சப்படுகின்றது.இது தேனீக்களில் இரைப்பையில் பதப்படுத்தப்படுகின்றது.பின் அவை தேன் அடையில் சேமிக்கப்படுகிறது.இதில் நீர் அதிகளவும்,இயற்கையான மதுவங்களும் காணப்படும்.இதனால் தேன் நொதிப்பிற்கு உட்படும்.அதேவேளை தேன் அடை திறந்திருப்பதால் இதிலுள்ள நீர் ஆவியாகத் தொடங்கும்.இதனால் நீர்கொள்ளளவு குறைந்து தேன் செறிவடையும்.ஒரு நிலையில் தேன் நொதிப்பிற்கு போதிய நீரின்மையால் நொதிப்பு தடைப்படும்.இந்த நொதிப்புச் செயற்பாட்டை சரியான இடத்தில் நிறுத்த நீர் ஆவியாதல் உதவுகிறது.தொடர்ந்து நொதிப்பு நடைபெறும் பட்சத்தில் வெல்லங்கள் அற்ககோலாகிவிடும்.இவ்வாறு ஒரு வேலைக்கார தேனீயால் தனது வாழ் நாளில் 45 கிராம் தேனைச் சேகரிக்க முடியும்.ஒரு முழுமையான நல்ல ஆரோக்கியமான கூட்டில் 15 முதல் 23 கிலோ வரை தேன் காணப்படும்.

 

வேலைக்கார தேனீக்கள் (பாகம் III)

 

பூக்களில் மகரந்தசேர்க்கைக்கு பெரிதும் உதவி செய்பவை வேலைக்கார தேனீக்கள் ஆகும்.இராணியைக் கவனிப்பது,முட்டையிலிருந்து வெளியேறும் குடம்பிகளை பாதுகாப்பது,அவற்றிற்கு உணவு கொடுப்பது,சுத்தப்படுத்துவது மற்றும் உணவு தேடுதல் என அனைத்து செயற்பாடுகளும் இந்த வேலைக்கார தேனீக்களால் மேற் கொள்ளப்படுகின்றன.
வேலைக்கார தேனீக்களின் கடமைகளில் ஒன்றான உணவுத் தேடலுக்கு தூர இடங்கள் செல்ல வேண்டி உள்ளது.தேனீக்கள் நிமிடத்திற்கு 11,400 முறை சிறகடிக்கின்றது.இவற்றால் மணிக்கு 15 மைல் என்னும் வேகத்தில் பறக்க முடியும்.தேனீக்கள் ஒரு பவுண்டு தேன் சேகரித்துக் கொண்டுவர ஒரு தேனீ சுமார் 45 000 மைல் தூரம் அலைந்து உழைக்க வேண்டும்.ஒரு கிலோ தேனைச் சேகரிக்க 40 இலட்சம் பூக்களிலிருந்து அமுதம்(Nector) என்னும் பதார்த்தம் உறிஞ்சி எடுக்கின்றன(!).இவ்வாறு ஒரு தேனீ தேன் இருக்குமிடத்தை கண்டு பிடித்துவிட்டால் மற்ற தேனீகளுக்கு உடல் அசைவின் மூலம் தெரிவிக்கின்றது.இந்த அசைவுகளே தேனீக்களின் நடனம் என்றழைக்கப்படுகிறது.

தேனீக்களை பற்றி பல ஆண்டுகள் ஆய்வு நடத்திய பிரெஞ்சு விஞ்ஞானி வான் பிரிச்(von frisch) தேனீக்களின் நடனம் பற்றி இவ்வாறு கூறுகிறார்.தேனீக்கள் உடல் அசைவுகளின் மூலம் தகவல் பரிமற்றம் செய்கின்றன.வேவு பார்க்கும் தேனீக்கள் பூந்தோட்டத்திற்குச் சென்று தேனை பருகியபின் தன் கூட்டருகே சென்று மற்ற தேனீக்களுக்கு நடனத்தின் மூலம் தகவலை தெரியப்படுத்தும்.இந்த நடனம் மூலம் உணவு இருக்குமிடம்,திசை,தூரம் என்பவற்றை தெரிவிக்கின்றன.தேனீக்கள் இரண்டு விதமாக நடனமாடுகின்றன.உணவு 300 அடி தூரத்திற்குள்ளே எனின் வட்ட நடனத்தையும்,300 அடி தூரத்திற்கு வெளியே எனின் வாலாட்டும் நடனத்தையும் ஆடுகின்றன.நடனத்தின் நெளிவு ,விரைவு மாறுபடுவதன் மூலம் உணவு இருக்கும் திசையை காட்டுகின்றது.இதனை புரிந்து கொண்ட மற்ற தேனீக்கள் அவ்விடத்தை நோக்கி படையேடுக்கும்.

தொடரும்...

 

இராணியின் ஆட்சி (பாகம் II )

 

தேனீ கூட்டமாக வாழ்பவை.பலமான, ஆரோக்கியமான கூட்டத்தில் ஒரு இராணித்தேனீ ,சில ஆண் தேனீகள் மற்றும் சும்மார் 50 000 தொடக்கம் 60 000 வரையான வேலைக்கார தேனீகள் வாழும்.இராணித் தேனீயே அக்கூட்டத்தில் பெரிய தோற்றத்தைக் கொண்டிருக்கும்.இராணித்தேனீ இல்லாவிடின் அக்கூட்டமே கட்டுப்போக்கான சேர்ந்து வாழும் பண்புகளை இழக்கின்றன.இராணித்தேனீ இலிங்க முதிர்ச்சி பெற்ற தேனீ ஆகும்.இதன் தொழில் இனவிருத்தி மட்டுமே.இங்கு முக்கிய விடயம் இராணித் தேனீயை உருவாக்கும் சக்தி வேலைக்கார தேனீயிடமே உண்டு.

ஒரு கூட்டில் ஒரு இராணித் தேனீ மட்டுமே இருக்கும்.ஆகவே இராணித்தேனீ முதுமையானதன் பின் அல்லது தேனீகளின் எண்ணிக்கை கூடி தேன் கூடு பெரிதடைந்து விடின் வேலைக்கார தேனீகள் தங்களுக்கான புதிய இராணியை (தலைமையை)உருவாக்கும்.இந்த இராணித்தேனீ உருவாவது பிரத்தியேகமான அறையிலாகும்.இந்த அறை மற்ற அறைகளை விட அளவில் பெரியதாகவும் நிலைக்குத்தாகவும் அமைந்திருக்கும்.வேலைக்கார தேனீக்களின் தலையில் அமைந்துள்ள சுரப்பியொன்றிலிருந்து சுரக்கப்படும் Royal Jelly (அரச உணவு)எனப்படும் பதார்த்தத்தை தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட குடம்பிக்கு உண்பதற்கு வழங்கி அந்த குடம்பியை இராணித்தேனீயாக உருவாக்குகின்றன.
இந்த இராணித்தேனீ அதன் அறையிலிருந்து வெளியேறி பறக்கத் தொடங்கும்போதே ஆண் தேனீயுடன் சேர்க்கைக்குட்படும்.இதன் போது தனது வாழ்க்கைக் காலத்திற்கு தேவையான விந்துக்களை சேர்த்துக்கொண்டு அறைக்குத் திரும்பும்.இராணித்தேனீ ஒரு நாளைக்கு 2 000 முட்டைகளை இடக்கூடியது.இராணித்தேனீ கருக்கட்டப்பட்ட,கருக்கட்டப்படாத முட்டைகள் இரண்டையும் இடும்.அதில் கருக்கட்டப்படாத முட்டையிலிருந்து 24 நாட்களுக்குப் பின் ஆண் தேனீயும்,கருக்கட்டப்பட்ட முட்டையில் இருந்து 21 நாட்களுக்குப் பின் வேலைக்கார தேனீயும் உருவகின்றது.முட்டையில் இருந்து 16 நாட்களுக்குப்பின் உருவாகுவது இராணித்தேனீ ஆகும்.

ஆண் தேனீக்களின் கண்கள் இராணி,மற்றும் வேலைக்கார தேனீக்களின் கண்களை விட இரு மடங்கு பெரியதாகும்.இதன் உடல் வேலைக்கார தேனீக்களின் உடலை விடவும் பெரியது.ஆண் தேனீக்களின் ஆயுள் காலம் 90 நாட்கள் ஆகும்.வேலைக்கார தேனீக்கள் இலிங்க முதிர்ச்சியற்றவை.வேலைக்கார தேனீக்களின் வாழ்நாள் 28 முதல் 35 நாட்கள் ஆகும்.இராணித்தேனீ இரண்டு வருடங்களுக்கு மேல் உயிர் வாழும்.

தொடரும்...

 

தேனீக்கள் (பாகம் I )

 

சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப் படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் விளங்குபவை தேனீக்கள் ஆகும்.தேனீக்கள் ஏப்பிடே ( Apoidea) குடும்பதைச் சேர்ந்த ஒர் பூச்சி வகை ஆகும்.உலகின் அந்தாட்டிக்கா கண்டத்தைத் தவிர எல்லாப் பகுதிகளிலும் வாழும் இந்த தேனீக்கள், ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன.உலகில் கண்டு எடுக்கப்பட்ட தேனீக்களின் உயிர்ச் சுவடுகளில் ஒன்று,தேனீக்கள் உலகில் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்வதை உறுதி செய்கின்றது.

தேனீகளுக்கு இரண்டு சோடி சிறகுகளும் முன்று சோடி கால்களும் உண்டு.முன் கால்கள் பின் கால்களை விட சிறிதாகும்.இதன் தலையில் அதிக உணர்திறன் மிக்க உணர் கொம்பு காணப்படும்.தேனீயின் வாயுறுப்பு பூக்களிலிருந்து தேனை உறிஞ்சுவதற்கு ஏதுவாக நீண்டு தும்பிக்கை போலிருக்கும்.

தேனீக்களில் மிகச்சிறியது Trigona minima என்னும் தேனீ ஆகும்.இது 21mm நீளம் உடையது.

இந்துனோசியாவில் 1859 ஆம் ஆண்டு முதன் முதலில் Alfred Russel Wallace என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட பெண் Megachile pluto தேனீயே உலகின் மிகப்பெரிய தேனீ ஆகும்.இத்தேனீ இனத்தில் பெண் தேனீ 39mm வரையும் ஆண் தேனீ 23mm வரையும் வளரும்.இத்தேனீ இனம் பற்றி பல வருடமாக எந்த தகவலும் இல்லாத நிலையில் இத்தேனீ இனம் அழிவடைந்திருக்கும் என கருத்ப்பட்டது.ஆனால் 120 வருடங்களுக்குப் பின் அதாவது 1981 இல் அமெரிக்காவைச் சேர்ந்த Adam Messer என்பவரால் மீளவும் மிக அரிதாக சில Megachile pluto தேனீக்களும் இதன் ஆறு கூடுகளும் இந்துனோசியாவில் உள்ள இரண்டு தீவுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடரும்..

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More