புதிய கலாச்சாரம்




தேர்தல் காலங்களில்
சூறாவளிச் சுற்றுப் பயணம்
..
சூறாவளி ஓய்ந்தபின்
வாக்காளர்களின்
பிணங்களின் மீதும்
வாக்குறுதி வழங்க
இன்னொரு பயணம்.
..
உங்கள்
ஒரு சொட்டு கண்ணீர்கூட
வெள்ள அபாயத்தை
அதிகரிக்கக் கூடும்
..
உங்களால் சாவதைவிடவும்
உங்களால் வாழ்வது கொடிது.
..
விதைக்க அகழந்த மண்ணையும்
வேரிலேயே பொத்திவைத்து
வியர்வையில் குளிர்விக்கும்
எங்கள் மேல்
எப்படி வந்தது இயற்கையில் சீற்றம்?
..
மாங்குரோவ் காடுகளை
நீங்கள் மேய்ந்தபோது
அறியவில்லை நாங்கள் -
..
உங்கள் வங்கிக் கணக்கில்
வலுவாக மையம் கொண்டுருக்கும்
மூலதனம்
வங்காள விரிகுடாவிலிருந்து
எங்களைக் காவு கொள்ளும் என்பதை.
..
காற்றுக்கு
உயிர்களை சுவாசிக்கவும்
தண்ணீருக்கு
இரத்தத்தைக் குடிக்கவும்
பயிற்றுவித்தது யார்-
நீங்கள்தானே?
..
புவி ஈர்ப்பு விசைகூடப்
பொதுவாக இல்லாத
நாடு இது - விளங்கிக் கொண்டோம்.
..தண்ணீர் வடிய வடிய
ஊற்றெடுக்கும் பிணங்களின்
விழிகளில் இருக்கிறது
எங்கள் வெள்ளை அறிக்கை.
..எஙக்ள் சாவுக்கு
என்ன விடை?
..
தூரத்திலிருந்து பார்ப்பவர்கள்
முணுமுணுக்கிறார்கள் -
"உலகம் அழியப் போகிறது"
..உண்மைதான்
உஙக்ள் உலகம் அழியத்தான் போகிறது.
..
துரை. சண்முகம்
டிசம்பர் 1999 புதிய கலாச்சாரம்

அலுத்துப் படுத்து
விழித்துப் பார்க்க
கடிகாரமுள் கண்ணைக் குத்தும்.

கருக்கலின் மார்பில்
ஆவின் சுரக்கும்
பெண்ணின் கனவுகள்
நெஞ்சில் வரளும்
தவிக்கும் குழந்தைக்கு
அழுத்திப் பால் கொடுக்க
கிழக்கில் இரத்தம் கட்டும்.

மேலும் படிக்க …

அயல்நாட்டுக் கடனில்
அலங்காரம் செய்கிறாரகள் 'பாரதமாதாவுக்கு'
..
உதட்டு சாயத்திற்கு மட்டும்
உனது இரத்தம்
..
ஒப்பனைகளின் சுமைதாளாமல்
நெளிகிறது தேசியக்கொடி
..
பொட்டுவைப்பதும் இந்து தர்மம்
பொட்டுக் கட்டுவதும் இந்துதர்மம்
..
தயங்கும் தேசத்திற்கு புத்தி சொல்லி
தாராளமாய் விடுகிறார்கள் தூது
..
அப்பன் வருவான் மகன் வருவான்
ஜப்பான் வருவான் , அமெரிக்க வருவான்
தப்பென்று தள்ளாதே
எவன் வந்தாலும் 'இருப்பு' கொள்வாய்
இளைய பாரதமே !
..
காவிரியின் கழிமுகம் காய்ந்தாலென்ன
கருகும் குருத்துக்களை
கடல் நீரால் தலைமுழுகி
பெரும் இலாபமே ஒழுக்கமென்று
கயல்விழி காட்டி வலைகளோடு இணங்குவாய்
வளமான இறால் குஞ்சே!
..
குறிஞ்சி மலைத்தேனை
எவன் கொண்டு போனாலென்ன
வேப்பங்கனிகளையும்
வெளிநாட்டான் கொண்டாலென்ன
'கோக்கோ கோலாவின்' குளிரில் நனைந்தபடி
தேசம் ஒரு தேன் கிண்ணம்
திருமுடுதற்கோர் விலையென்று
உலகத்தரம் நோக்கி
உயர்ந்திடுவாய் பொன் வண்டே !
..வலையோசை எழுப்புதல் போல்
உன் அலையோசை கடல்மேனி
அந்நியனுக்களித்தாலோ அன்னியச் செலவாணி
உள்ளூர்ப் படகுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு
பன்னாட்டு திமிங்கலத்தை
நெஞ்சாரத்ட் தழுவிடுவாய் நெய்தல் நித்திலமே!
..
தமிழனா,இந்தியனா?
தரம்பார்க்க தேவையில்லை
கடின உழைப்பாற்ற கைகள் இருந்தாலும்
இடமில்லையெனச் சொல்லி எறிந்துவிட்டு
'முதல்' கொண்டு வருபவனை
முல்லை மணங்கமழ வரவேற்று
கதவை திறப்பாய் கனிவான பாரதமே!
..
மருதத்தை நெய்தலாக்கி
மண்ணையெல்லாம் பாலையாக்கி
'தூது' தொடர்கிறது
'தூ'...மானம் போகிறது.
..
துரை. சண்முகம்

புதிய கலாச்சாரம் ஆக,செப்,அக் 1994

 


Load More