அரபு நாடுகளில் ஜனநாயகத்திற்காக நடைபெற்று வரும் போராட்டங்கள், அல்காய்தா போன்ற முசுலீம் தீவிரவாத அமைப்புகள் அம்மக்களிடம் செல்வாக்கு செலுத்தவில்லை என நிரூபித்து வரும் வேளையில், அல்காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க ஏகாதிபத்தியம் சுட்டுக் கொன்றுள்ளது. போர்க் குற்றமாகக் கருதத்தக்க இப்படுகொலையை, ஏதோ வரலாற்றுச் சாதனையைப் போலப் பீற்றி வருகிறது, அமெரிக்கா. மேலும், அல்காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனைச் சுட்டுக் கொன்றதன் மூலம், அமெரிக்காவில் செப்.11,2001 அன்று நடந்த தாக்குதல்களுக்கு நீதி கிடைத்துவிட்டதாகக் கூறி வருகிறார், அமெரிக்க அதிபர் ஒபாமா. பின்லேடன் நிராயுதபாணியாக இருந்த நிலையில், அவரை அமெரிக்கக் கப்பற்படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் சட்டவிரோதமாகச் சுட்டுக் கொன்றதைப் பற்றியோ, இத்தாக்குதலின் பொழுது பாகிஸ்தானின் இறையாண்மை மீறப்பட்டிருப்பது பற்றியோ கேள்வி எழுப்பாத முதலாளித்துவப் பத்திரிகைகள், அமெரிக்க ஆளும் கும்பலைப் போலவே இப்படுகொலையைக் கொண்டாடி வருகின்றன.