மீனவர் பிரச்சினை தொடர்பான ஊடக அறிக்கை – பு.ஜ. மா. லெ. கட்சி
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் சுட்டுக் கொல்லப்படுவதோ அன்றி தாக்கி துன்புறுத்தப்படுவதோ எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. சாதாரண உழைக்கும் தொழிலாளர்களான மீனவர்களைத் தொடர்ந்து துன்புறுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். அத்தகைய சம்பவங்கள் உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதேவேளை இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்தியப் பெரும் படகுகள் அத்துமீறிப் பிரவேசித்து குறிப்பாக வடபுலத்து மீன் வளங்களை வாரி அள்ளிச் செல்வதை எவ்வகையிலும் அனுமதிக்கவும் முடியாது. மேற்படி சம்பவங்களால் இரு நாடுகளினதும் சாதாரண உழைப்பாளர்களான மீனவர்களே கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். ஆதலால் தொடரும் இரு நாட்டு மீனவர் பிரச்சினைகளுக்கு இலங்கை இந்திய அரசாங்கங்கள் உரிய பேச்சு வார்த்தையை எவ்வித உள்நோக்கங்கள் இன்றியும் முன்னெடுத்து தீர்வு காண முன்வரல் வேண்டும் என எமது புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி வற்புறுத்துகிறது.
இவ்வாறு இலங்கை இந்திய மீனவர்களிடையே உச்சமடைந்துள்ள பிரச்சினை பற்றி புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.