Language Selection

நூல்கள் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இது சிறைக் கொட்டடியில்லை; பம்பாய், கல்கத்தாவின் குடிசைப் பகுதியில்லை – நியூயார்க்.

மண்ணுலக சொர்க்கமான அமெரிக்காவின் மாபெரும் நகரம். 100 மாடி 150 மாடிக் கட்டிடங்கள் நிரம்பிய அந்த கான்கிரீட் காட்டின் ஏதோ ஒரு கட்டிடத்தில் இது ஒரு பொந்து.

இந்தப் பொந்தில் வசிப்பவர்கள் காலை 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். காலைக் கடன்களை முடித்துக் கொண்டு 7 மணிக்கு வேலை செய்யத்துவங்க வேண்டும்.

வேலை செய்யும் தொழிற்கூடமோ பக்கத்து அறைதான். 15 அடிக்கு 18 அடி அளவுள்ள அறைக்கு 15 தையல் எந்திரங்கள். ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை. வாரத்தில் ஏழு நாட்களும் வேலை.

இந்தச் சித்திரவதைக் கூடங்களுக்கு அமெரிக்கப் பத்திரிகைகள் சூட்டியிருக்கும் பெயர் வியர்வைக் கடைகள். நியூயார்க், லாஸ் எஞ்செல்ஸ் போன்ற அமெரிக்காவின் பெருநகரங்கள் அனைத்திலும் நிரம்பியுள்ள இத்தகைய ‘வியர்வைக்கடை’களில் பணியாற்றும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைவரும் தாய்லாந்து, சீனா போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் – கொத்தடிமைகள்.

துபாய்க்கும் சிங்கப்பூருக்கும் வேலை தேடிச் சென்று ஏமாந்து கொத்தடிமைகளாகும் நம்மூர் மக்களின் கதையைக் காட்டிலும் கொடியது இவர்களது கதை.

”லாஸ் எஞ்செல்ஸ் நகரிலுள்ள அதி நவீன தையற்கூடம் ஒன்றின் புகைப்படத்தை எங்களுக்குக் காட்டினார்கள். பார்ப்பதற்கே மிகவும் கவர்ச்சிகரமாய் இருந்தது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை; வாரத்தில் 5 நாட்கள் வேலை. மாதம் 2400 டாலர் சம்பளம். விடுமுறை நாட்களில் டிஸ்னிலாந்து போன்ற இடங்களுக்குக் கூட்டிச் செல்வோம் என்று ஆசை காட்டினார்கள்; நம்பி வந்தோம்.”

“லாஸ் ஏஞ்செல்ஸ் விமான நிலையத்திலிருந்து நேரே இந்தப் பொந்துக்குத்தான் கொண்டு வந்தார்கள். எங்களிடமிருந்து பாஸ்போர்ட், பணம் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டார்கள். அதிகம் பேசாதே – கேள்வி கேட்காதே – யாரோடும் நட்பு சேராதே – என்ற எச்சரிக்கையுடன் இங்கே அடைக்கப்பட்டோம்”.

”தாய்லாந்தில் 8 மணி நேரம் உழைத்துச் சம்பாதித்ததை இங்கே 16 மணிநேரம் உழைத்துச் சம்பாதிக்கிறோம்.”

இது லே போதாங் என்ற தாய்லாந்துப் பெண்ணின் கதறல்.

யூலி என்ற சீனப்பெண்ணின் கதை இன்னும் கொடூரமானது.

”அமெரிக்காவில் வேலை வாங்கித் தருகிறோம், அங்கே சம்பாதித்து எங்கள் கடனைக் கொடுத்தால் போதும்” என்று சொன்ன ஏஜெண்டுகளின் பேச்சை நம்பி, தன் கணவனை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தாள் யூலி.

1991-இல் அமெரிக்கா போன கணவனிடமிருந்து பணம் வரவில்லை; கடிதமும் இல்லை; ஆளையும் காணவில்லை. அனுப்பி வைத்த ஏஜென்டுகளைக் கேட்டால் ”இன்னும் கடன் அடையவில்லை” என்றார்கள். தன்னந்தனியாக 3 குழந்தைகளை வைத்துக் கொண்டு 5 ஆண்டுகளாக வாழ்வதற்குப் போராடி வந்த யூலி ஒரு முடிவுக்கு வந்தாள்.

மிச்சமிருந்த எல்லா உடைமைகளையும் விற்றுத் தன் கணவன் வாங்கிய கடனை அடைத்தாள். ”என்னையும் என் பிள்ளைகள் மூன்று பேரையும் என் கணவனுடன் நியூயார்க்கில் சேர்த்துவிடுங்கள்” என்று ஏஜென்டுகளிடம மன்றாடினாள்.

அதற்கு 1,32,000 டாலர் செலவாகும்; நீங்கள் வேலை செய்து அடைக்க வேண்டும் என்றார்கள் ஏஜெண்டுகள். யூலி ஒப்புக் கொண்டாள்.

இப்போது யூ லியும் 3 பிள்ளைகளும் நியூயார்க் நகரில். மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. கணவனைப் பார்த்துவிட்டாள். ஆனால் குடும்பம் சேர்ந்து வாழமுடியவில்லை. ஆளுக்கோரிடத்தில் வேலை. சேர்ந்து வாழவேண்டும் என்ற கனவுக்காகத் தனித்தனியாக உழைக்கிறார்கள்.

ஐந்து பேரும் ஒரு நாளைக்கு 17 மணிநேரம் உழைக்கிறார்கள். மாதந்தோறும் 3000 டாலர் கடன் கட்டுகிறார்கள்: ஆனால் கடன் அடையவில்லை; அடையப் போவதுமில்லை.

படிக்க வேண்டிய பிள்ளைகளைக் கொத்தடிமையாக்கி விட்டதற்காக வருந்தி அழுகிறாள் யூலி.

கண்ணீர்க் கதைகளுக்குப் பஞ்சமில்லை.

இந்தத் தொழிலாளர்களெல்லாம் ஆசிய நாடுகளிலிருந்து மாஃபியாக் கும்பல்களால் கொண்டுவரப் பட்டவர்கள். முறையான கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இருந்தால் அதை இத்தொழிலாளர்களிடமிருந்து பறித்து வைத்துக் கொள்கின்றன இந்த மாஃபியா கும்பல்கள். ஆனால் பெரும்பாலான தொழிலாளர்கள் கள்ளத் தோணியில் கொண்டுவரப்பட்டவர்கள்.

ஒவ்வொர் ஆண்டும் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாகத் குடியேறும் சீனர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்கிறது அமெரிக்க உளவு நிறுவனம். தாய்லாந்திலிருந்தோ 24,000 பேர். சட்ட பூர்வமாகவே தாய்லாந்திலிருந்து அமெரிக்காவில் குடியேறுவோர் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர். இந்தச் சட்டவிரோதக் குடியேற்றங்களை அமெரிக்க அரசு ஏன் தடுத்து நிறுத்த வில்லை என்று கேட்டால், அந்தக் கேள்விக்கான விடைகளில் ஒன்றுதான் இந்த வியர்வைக் கடைகள். பலமாடிக் கட்டிடங்களின் இடுக்குகளிலும், காற்றுப் புகாத பரண்களிலும், நிலவறைகளிலும் இயங்கும் இத்தகைய வியர்வைக் கடைகள். நியூயார்க் நகரில் மட்டும் 400.

”வேலை நிலைமைகளைப் பற்றியோ, கூலியைப் பற்றியோ யாராவது புகார் செய்தால் மறுகணமே அவர்கள் அமெரிக்காவை விட்டுத் துரத்தப்படுவார்கள். எனவே யாரும் வாய்திறக்கவே அஞ்சுகிறார்கள்” என்கிறார் சீனத்தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் விங்லாம்.

அமெரிக்காவை விட்டு ஓடத் தயாராக இருப்பவர்களையும் அப்படி ஓடிவிடுவதற்கு அனுமதிப்பதில்லை மாஃபியா கும்பல்கள். ”எங்களுக்குச் சேரவேண்டிய தொகையை கொள்ளையடித்தாவது கொடுத்துவிட்டுப் போ” என்று மிரட்டுகிறார்கள். கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறார்கள். கொத்தடிமையாக நீடிப்பதா, கிரிமினலாக மாறுவதா என்ற கேள்வி வந்தால் முதலாவதைத்தான் தெரிவு செய்கிறார்கள் அந்த ஏழைத்தொழிலாளர்கள்.

நியூயார்க் நகரின் தொழிலாளர் சடப்படி ஒரு மணி நேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் 5.15 டாலர். இந்தக் கொத்தடிமைகளுக்குக் கொடுக்கப்படுவதோ ஒரு டாலர். அந்தச் சம்பளமும் ஒழுங்காகக் கொடுக்கப்படுவதில்லை. இரண்டு மாதச் சம்பளத்தைப் பிடித்து வைத்துக் கொள்வதென்பது மிகவும் சகஜம். அமெரிக்காவின் காவல்துறை, குடியேற்றத் துறை, தொழிலாளர்துறை ஆகிய மூன்றுமே இந்த இரகசிய உலகத்தைக் கண்டு கொள்வதில்லை.

மே தினப் போராட்டத்தின் மூலம் உலகத்தொழிலாளர்களுக்கு ”8 மணி நேர வேலை” எனும் அடிப்படை உரிமையைப் பெற்றுத்தந்த நாட்டில், மே தினப் போராட்டத்திற்கு முன்னால், சென்ற நூற்றாண்டில் நிலவியதைக் காட்டிலும் கொடூரமான சுரண்டலும் ஒடுக்கு முறையும் தொடர்கிறதே இதற்குக் காரணம் என்ன?

வியர்வைக் கடைகள் குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கும் அமெரிக்காவின் ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகை இதற்குப் பதில் சொல்கிறது. ”அவர்கள் தங்கள் சொந்த நாட்டினராலேயே இரக்கமில்லாமல் சுரண்டப் படுகிறார்கள்.” உண்மைதான், தமது சொந்த நாட்டைச் சேர்ந்த மாஃபியாக் கும்பல்களால்தான் அவர்கள் கடத்தப்படுகிறார்கள்; அவர்களால்தான் துன்புறுத்தப்படுகிறார்கள். ஆனால் யாருக்காக? அந்த வியர்வைக் கடைகளின் பொந்துகளிலிருந்து அவர்கள் உற்பத்தி செய்யும் காற்றோட்டமான சட்டைகளை அணிபவர்கள் யார்? அவற்றை விற்று ஆதாயம் அடைவர்கள் யார்? அமெரிக்காவின் மிகப்பிரபலமான ஆயத்த ஆடை விற்பனை நிறுவனங்களும், ஏற்றுமதி நிறுவனங்களும்தான் இந்த வியர்வைக் கடைகளின் சரக்கைக் கொள்முதல் செய்பவர்கள்.

இந்தியாவிலிருந்தும் பிற ஏழை நாடுகளிலிருந்தும் ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்யும் அமெரிக நிறுவனங்களின் பிரதிநிதிகள், நேரடியாக சென்னைக்கும், பம்பாய்க்கும் வந்திறங்கி, தங்களது ஆடைகள் எங்கே தைக்கப்படுகின்றன, எப்படித் தைக்கப்படுகின்றன என்று சோதனை செய்கிறார்களே – துணை ஒப்பந்தத்தில் வேலை செய்யும் சிறிய முதலாளிகளின் தையலகங்களைக் கூட அவர்கள் விட்டுவைப்பதில்லையே – அத்தகைய அமெரிக்க முதலாளிகள் தங்கள் நாட்டின் வியர்வைக் கடைகளை மட்டும் பார்வையிடாதது ஏன்?

”கலிஃபோர்னியாவில் இத்தகைய வியர்வைக் கடையொன்றை தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது அங்கே உற்பத்தியாகும் ஆடைகளெல்லாம் அமெரிக்காவின் மிகப்பெரும் ஆடை விற்பனையகங்களுக்குச் சொந்தமானவை எனத் தெரியவந்தது” என்கிறது ரீடர்ஸ் டைஜஸ்ட்.

நியூயார்க்கின் மிகப்பெரும் நிறுவனங்களான வால் மார்ட், கே மார்ட் ஆகியோரது ஆடை விற்பனையில் பாதி நியூயார்க் கொத்தடிமைகளின் தயாரிப்புதான் என்கிறது – டைம் வார ஏடு. வால் – மார்ட், கே – மார்ட் ஆடைகள் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றுக்கும் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.

சதாம் உசேனின் கழிப்பறையில் இரசாயன ஆயுதத்தின் நெடி வீசுவதை வானத்திலிருந்தே மோப்பம் பிடிக்கத் தெரிந்த கிளிண்டனின் நாசியில் வால் மார்ட் சட்டைகளில் வீசும் வியர்வையின் நெடி ஏறாதது ஏன்?

இது ஒரு வர்த்தகத் தந்திரம். மலிவான உழைப்புச் சந்தை என்ற ஒரே காரணத்தினால்தான் இந்தியா போன்ற ஏழை நாடுகளிலிருந்து ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்கிறார்கள் அமெரிக்க முதலாளிகள். இந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலில் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் உள்ள பல லட்சம் தொழிலாளர்களின் தலைவிதி பிணைக்கப்பட்டு விட்டது. மலிவு விலையில் உழைப்பை இறக்குமதி செய்த அமெரிக்கா, இப்போது உழைப்பாளிகளையே மலிவு விலையில் இறக்குமதி செய்கிறது.

அன்று ஆப்பிரிக்கக் கறுப்பின மக்களை விலங்குகளைப் போல வலைவீசிப் பிடித்து, தாயை கரும்புத் தோட்டத்திலும், பிள்ளையை நிலக்கரிச் சுரங்கத்திலும் பிரித்துப் போட்டு, அவர்களின் ரத்தத்தை உறிஞ்சி அமெரிக்க சொர்க்க பூமியை உருவாக்கிக் கொண்டார்கள். இன்று அந்தச் சொர்க்கத்தின் நியான் விளக்குகளில் சொக்கி விழும் விட்டில் பூச்சிகளான யூலி போன்றோரைக் கள்ளத்தோணியின் மூலம் கவர்ந்திழுக்கிறார்கள்.

இது ஒரு ராஜ தந்திரம். தமக்கு ஆடை ஏற்றுமதி செய்யும் இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகள் கிளின்டனின் அரசியல் ஆணைக்குப் பணிய மறுத்தால், ஆடை இறக்குமதி நிறுத்தப்படும். ஒரே நொடியில் இந்நாடுகளின் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தெருவில் வீசப்படுவார்கள்.  ஆசியாவின் ஆடை இறக்குமதியாகாத அத்தகைய தருணங்களில் ஆசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்தக் கொத்தடிமைகள் அமெரிக்காவின் நிர்வாணத்தை மறைத்து நாகரிகப் படுத்துவார்கள். ஆசியத் தொழிலாளிக்கெதிராக ஆசியத் தொழிலாளிகள்!

இது ஒரு வர்க்கத் துவேசம்! மருத்துவர்களையும், பொறியியலாளர்களையும் கணினி வல்லுநர்களையும் குடியுரிமை தந்து இறக்குமதி செய்து கொள்ளும் அமெரிக்கா இந்த உழைப்பாளிகளுக்கும் குடியுரிமை தரலாமே! சட்டப்படி குடியுரிமை தந்தால், சட்டப்படி ஊதியம் கேட்பார்கள். அவர்களைக் கள்ளத் தோணிகளாகவே வைத்திருந்தால்தான், தேவை முடிந்தபின், அவர்களது இளமை முடிந்தபின், அவர்களைக் கந்தல் துணியைப் போலக் கடலில் வீச முடியும். வீசிவிட்டுக் கள்ளத் தோணியைத் தடுக்கத் தவறியதாக அந்த நாட்டைக் குற்றம் சாட்டி மிரட்டவும் முடியும்.

இதுதான் சுதந்திர வர்த்தகம்! தேசங்கடந்து அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து வரும் மூலதனத்திற்கு இங்கே ரத்தினக் கம்பளம்; மாலை மரியாதைகள். தேசங்கடந்து செல்லும் நம் உழைப்புக்கு அங்கே கொத்தடிமைத் தனம்! குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பை எதிர்க்கிறது பென்டகன். ஏனென்றால் அமெரிக்க ராணுவத்தின் சீருடைகள் ஆசியக் குழந்தைகளால் தைக்கப்படுகின்றன. பிள்ளைக்கறி தின்னும் இந்த நாயன்மார்கள்தான் தாங்கள் சுத்த சைவமென்றும், பரீதாபாத்திலிருந்து (டில்லி) அனுப்பப்படும் கம்பளங்களில் ”இது குழந்தைகளால் நெய்யப்பட்டதல்ல” என்று முத்திரை குத்தி அனுப்ப வேண்டுமென்றும் கோருகிறார்கள். இந்த நாயன்மார்களிடம் எச்சில் பிரசாதம் வாங்கும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் ”சிவகாசி மத்தாப்பூ கொளுத்தமாட்டோம்” என்று நாளைய அமெரிக்கக் குடி மக்களான பத்மா சேஷாத்ரி, சர்ச் பார்க் கான்வென்டு பிள்ளைகளை வைத்து மனிதச் சங்கிலி நடத்துகிறார்கள்.

அப்படியா

அப்படி ஓர் இடம் இருக்கிறதா?

ஒன்றுமே தெரியாதது போல

பாசாங்கு செய்கிறார்கள்

ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.

அப்படியொரு ரகசிய உலகம்

இருக்கிறது என்பதை.

சகமனிதர்கள் உழிழும் கழிவிலும்

குப்பை கூளத்திலும்தான் – அங்கே

சிலர் வாழ்கிறார்கள் என்பதை

ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.

-என்று அமெரிக்காவில் கறுப்பின மக்கள் வாழும் சேரிகளைப் பற்றி மனம் குமுறிப் பாடினார் கறுப்பினப் பாடகி டிரேஸி சாப்மன்.

விண்ணை முட்டும் 150 மாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்று கொண்டு, கியூபா முதல் சீனம் வரை, உலக மக்கள் அனைவருக்கும் ஜனநாயகமும் மனித உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று முழங்குகிறார் கிளின்டன்.

அந்தக் கட்டிடத்தின் நிலவறையில் புதைந்திருக்கும் வியர்வைக் கடையிலிருந்து ஒரு குரல் கேட்கிறது. ” நாங்கள் நாய்களைப் போலத் தின்கிறோம்; பன்றிகளைப் போல வாழ்கிறோம்” என்கிறார் 66 வயதான சோன் லீ என்ற சீனத் தொழிலாளி.

வால் – மார்ட் சட்டை அணிந்து, கென்டகி சிக்கன் தின்று, கோக் குடித்து ஏப்பம் விட்ட பாமரேனியன்களும், சீமைப் பன்றிகளும் ”மனித உரிமை வாழ்க” என்று கைதட்டுகின்றன.

_________________________________________

புதிய கலாச்சாரம், அக்டோபர் 1999.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது