Language Selection

ப.வி.ஸ்ரீரங்கன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கபாலம் சிதறக்
குருதி நிலம் நோக்கும்
துடிப்பு மெல்ல விலகி
நெடில் மூக்கைத் துளைக்க
கடுமுழைப்பில் களைத்த மூளை புழுதியுளுறையும்

 

 

ஒரு விரலசைவில்
ஒழிந்த மனிதக் கனவு
உண்மையின் முகத்தில்
துளிர்த்துக் கொள்ளும்

 

 

உறுவுகளின்
மௌனித்திருக்கும்
மனம்
ஒரு
நொடியினில் துயில் கலைத்து
குருதி நெடில் கலைவதற்குள் மலர்களின் புன்னகையில்
இதயத்தை உரசிக்கொள்ளும்

 

வார்த்தையின்றி
எரிந்து கொண்ட மெழுகுவர்த்தியோ
கணப்பொழுதில் கரைந்தவுணர்வில் கரையொதுங்கும்

 

தீட்டுப்பட்ட
மனிதவுடல் தீக்காக
வெளுத்துக் கிடக்கிறது
மீள் நோக்கா வீரவணக்கமோ
மீட்டுவதற்கு முந்திக் கொண்ட
உணர்வுக் கிடங்கில் உருக்குலைந்தது
புகழ் பாடிய வலைப் பூக்களைப்போல்

 

ஒளியைவிட
மரணங்கள் விலகிக்கொள்ள
அள்ளியெடுத்த வாய்க்கரிசி எதற்கென்றறியா
காலமும்,
சில துளிக் கண்ணீருமாய் உறவுக்கோலமும்
சாய்ந்த மெய்யருகே
சென்று திரும்பும்!

 

வினைமுற்றிய
விருப்புறுதி
மீளவும்
முண்டு கொடுப்பதற்கான உடல்களை
துணிவு
தீரர்
வீரர்
அறிஞர்
விற்பனர்
சொற்பனர் என்று தேடிக்கொள்ளும்!

 

ஏனென்ற கேள்வியறியா
கனவுக் குடங்களுக்கு
எழுதிவைத்து இடித்துரைத்தால்
இதயம் முளைக்கும்?

 

02.05.2005
ப:வி.ஸ்ரீரங்கன்