Language Selection

பி.இரயாகரன் - சமர்

டொக்டர் அர்ச்சுனாவுக்கு எதிராக வரிஞ்சுகட்டிப் பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்திச் செயற்படுகின்றனரா? அர்ச்சுனாவுக்குப் பதில், இந்த யாழ்ப்பாணிகள் யாருக்கு வாக்களிக்கக் கோருகின்றனர்? இந்தக் கேள்விக்கான தேடுதலிலும், பதிலிலுமே, அர்ச்சுனாவுக்கு எதிரான தரப்பின் உண்மை முகங்களை இனம்காண முடியும்.

முக மூடிபோட்ட இந்த வெள்ளை வேட்டிக்காரர்களின் நோக்கம், அர்ச்சுனாவின் நடத்தைகளை விடக் கேவலமானது. அர்ச்சுனாவின் நடத்தையென்பது மூடிமறைக்காத, யாழ்ப்பாணியக் குணாம்சங்களே. இவை தான், மருத்துவ மாபியாக்களுடன் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக மோதவைத்தது. இதிலுள்ள நேர்மையை, அவரின் நடத்தைகளைக் கொண்டு கேலிக்குரியதாக்க முடியாது. ஊழலும், மாபியாத்தனமும்..  பொது உண்மையாகும்.

இனவாத மதவாத.. அரசியல் மூலம் கடந்தகாலங்களில் ஆட்சியதிகாரங்களுக்கு வந்த கும்பல்கள், மீண்டும் தங்கள் இருப்பைத் தக்கவைக்க மறுபடியும் பித்தலாட்டங்களுடன் அரசியலில் களமிறங்கியுள்ளனர்.

மாற்றம் வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தொடர்ந்து களமிறங்கியவர்கள், தங்கள் இனவாதத்தை, மதவாதத்தைக்  கைவிடவில்லை. இளைஞர்கள், படித்ததவர்கள், பெண்கள் … என்று புதிய கோசத்தைப் போட்டுக்கொண்டு, புதிய வேசத்தை மாற்றிக் கொண்டு, பழைய அதே அரசியலில் படுத்துப் புரளுகின்றனர்.    

உதய கம்மன்பில, ஈஸ்ரர் தாக்குதல் பற்றிய புதிய விசாரணை நாட்டுக்கு எதிரான சதியென்றும், "வளமான நாடு அழகான வாழ்க்கை" என்ற தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம் பக்கம் 230 இல் மதச்சார்பற்ற நாடு என்று இருப்பதாகக் கூறி, இது பவுத்தத்துக்கு எதிரானது என்று கூறி பழைய மதவாத அரசியலை முன்வைக்கின்றனர்.

அரசமைப்பில் மதத்தின் தலையீடு தொடங்கி, காலில் விழவைக்கும் அடிமைத்தனம் வரை காணப்படுகின்றது. இப்படி இருக்க, இதன் மீதான தேசிய மக்கள் சக்தியின் கொள்கையென்பது, சந்தர்ப்பவாத அரசியலாக இருக்கின்றது. "வளமான நாடு அழகான வாழ்க்கை" என்று மக்களுக்கு வாக்குறுதியளிக்கும் கொள்கையறிக்கையானது, முரணற்ற முதலாளித்துவ ஜனநாயகத்தையே மறுதலிக்கும் வண்ணம், தங்களைத் தாங்களே மூடிமறைக்கின்றனர்.
அரசு, அரசு தலைவர்கள்.. தங்கள் மத நம்பிக்கையை முன்னிறுத்திப் பொதுவெளியில் செயற்பட முடியுமா? என்ற கேள்விக்கு தேசிய மக்கள் சக்தியின் பதிலென்ன?

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை யாருக்கானது என்பதை, அனுரவின் கூற்று அம்பலமாக்குகின்றது. "செழுமையுடையவர் மேலும் செழுமையடைவதில் எமக்குப் பிரச்சனையில்லை, ஆனால் ஏழ்மையாக இருப்பவர் மேலும் ஏழ்மையாவதை விரும்பவில்லை" என்கின்றார். அனுரவின் தேசிய மக்கள் சக்தியின் இந்த அரசியலானது, முதலாளித்துவ பொருளாதாரத்தின் பொது விதியாகும்.

முதலாளித்துவத்தில் நுகர்வோரில்லாமல் சுரண்டலென்பது கற்பனை. நுகர்வோர் ஏழ்மையாவதென்பது, சுரண்டல் நின்று போவதற்கான பொது விதியாகும்.

முதலாளித்துவத்தில் சந்தையென்பது நுகர்வோரை அடிப்படையாகக் கொண்டது. நுகர்வோர் ஏழ்மையானால், அதாவது  வாங்கும் சக்தியை இழந்தால் சந்தை தேங்கிவிடும். அதாவது இலாபத்துக்கான முதலாளித்துவ உற்பத்திமுறை தேங்கிவிடும்.

முதலாளித்துவப் பொருளாதாரத்தில் "செழுமையுடையவர்கள் தொடர்ந்து செழுமையடைய", ஏழைகள்  வாங்கும் சக்தியைத் தொடர்ந்து தக்கவைக்க வேண்டும். இந்த விடயத்தில் அரசும், அரசின் பொருளாதாரக் கொள்கைகள் முன்வைக்கப்படுகின்றது. முதலாளித்துவத்தில் அரசென்பது, பொருள் உற்பத்தில் ஈடுபடும் அமைப்பல்ல. முதலாளித்துவத்தில் சுரண்டல் மூலம் "செழுமையடைபவர்கள் தொடர்ந்து செழுமையடையும்" கொள்கையைப் பாதுகாக்கும் இடத்தில் அரசு இருப்பதுடன், சுரண்டலைத் தொடர்வதற்கு ஏற்ப "ஏழ்மையாக இருப்பவர் மேலும் ஏழ்மையாவதைத்" தடுக்கின்றனர். இதையே அனுரவின் தேசிய மக்கள் சக்தி,  மக்களைச் சார்ந்த கொள்கையாக முன்மொழிகின்றது.

வெளித் தோற்றத்தில், வெளியடுக்குகளில், வெளிப் பூச்சுகளில்.. காணப்படும் ஊழல், இலஞ்சம், அதிகாரத் துஸ்பிரயோகம், வீண் விரயம், பழிவாங்கல்கள், கொலைகள் தொடங்கி அரசியல் சட்டத்தை மதிக்காத எல்லாவிதமான மனிதவிரோத அசிங்கங்களையும் கொண்ட அரசில் 

1.சமூகத்தின் அடிநிலையிலுள்ள மக்கள் அரசை அணுகுவதென்பதை சாத்தியமற்றதாக்கியது. ஒடுக்கப்பட்ட மக்கள் அரசிடமிருந்து அசிங்கங்களையும், அவமானங்களையும் எதிர்கள்ளும் அதேநேரம், பாலியல் இலஞ்சத்தைக் கோருமளவுக்கு அரசமைப்பு சீரழிந்தது. மத்தியதர வர்க்கத்துக்குக் கீழ் வாழுகின்ற, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலையிது. 

2.அரசு மற்றும் அதிகார வர்க்கமோ அதி சொகுசு வாழ்க்கைக்குள் தன்னை தகவமைத்துக் கொண்டு, திமிராக அடாத்தாக எதையும் மதிக்காது வாழ்ந்து வருகின்றது.   

3.அன்னிய நிதி மூலதனமோ மக்களின் வரிப்பணத்தின் பெரும் பகுதியைச் சூறையாடிச் செல்லுகின்றது.

அரசியல்வாதிகள் நாட்டைச் சூறையாடுவதை எதிர்க்கும் தேசிய மக்கள் சக்தி, செல்வந்தர்களும், அன்னியர்களும்.. இலங்கை மக்களைச் சூறையாடுவதைப் பாதுகாக்கவும், ஆதரிக்கவும் செய்கின்றது.  

இந்த அரசியலிலிருந்து தான் "மக்கள் பொருட்களின் விலையைக் குறைக்கக் கேட்கவில்லை" என்கின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு "ஊழல், மோசடி, வீண் விரயமே" காரணம் என்கின்றனர்.
 
மாற்றத்துக்காக மக்களின் வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி, மாற்றமாக முன்வைப்பது ஆட்சியிலுள்ள ஆட்களை மாற்றுவதே. புதிய நபர்களைக் கொண்ட ஆட்சி அதிகாரம் மூலம், சட்டத்தின் ஆட்சியை நிறுவி பொருளாதார அமைப்பு (சிஸ்ரத்தை) முறையைப் பாதுகாப்பதே. 

இந்த மாற்றம் மக்களின் வாழ்வில் மாற்றத்தையும், மகிழ்ச்சியையும் தருமா!? உலகில் சட்டத்தின் ஆட்சிகள், மக்களுக்கான மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றதா எனின் இல்லையென்பது, எங்குமான பொது உண்மை.     

தேசிய மக்கள் சக்தி பாதுகாக்க விரும்பும் சட்டத்தின் ஆட்சி, நிலவும் பொருளாதார அமைப்பைப் (சிஸ்ரத்தை) பாதுகாப்பதே. இந்தப் பொருளாதார அமைப்பானது (சிஸ்ரமானது), ஏகாதிபத்தியப் பொருளாதார அமைப்பு முறையேயொழிய. தேசியப் பொருளாதார அமைப்புமுறையல்ல. 

"யாருக்கு வாக்களிக்க வேண்டும் - பகுதி ஒன்று" கட்டுரைக்குப் பதிலளித்த தோழர் ஒருவர், கள்ளரை வெளியேற்ற அனுரவுக்கு வாக்களிக்க வேண்டுமென்று ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்.

அதில் "நான் வெளிப்படை. நான் குமார் குணரத்தினத்தின் கொள்கைகள் கருத்தை விரும்பும் ஆள். ஆனால் அவர்களால் இப்பொழுது வெல்ல முடியாது. ஆனால் இந்தக் கள்ளரை வெளியேற்ற அனுரவுக்கு ஆதரவு. ஆனால் எனக்கு வோட்டுரிமை இல்லை" இந்தத் தர்க்கமானது, அரசியல் ரீதியாக சரியானதாவெனின், இல்லை.


பொதுப்புத்தியில் கூறுவதையும், நம்புவதையும்.. முன்வைத்து, புரட்சிகர அரசியல் நடைமுறையை  முன்னிறுத்த முடியாது. குறிப்பாக புரட்சிகர மக்கள் அரசியலை முன்வைத்து வழிநடத்த வேண்டிய இடத்தில் இருக்கும் தோழர்கள், பொது அலையில் இழுபட்டு, வால்பிடித்து செல்ல முடியாது. மாறாக மக்களை அரசியல்ரீதியாக கற்றுக் கொடுக்கும் வண்ணம் வழிநடத்திச் செல்ல வேண்டும்.

வாக்களிக்கும் போது யாரை வெல்ல வைக்கவேண்டும் என்பதைச் சரியான இலக்காகக் கொள்வது அவசியம், அதேநேரம் வெல்ல முடியாவிட்டால், அவர்கள் குறைந்தது எதிர்கட்சியாகத்தன்னும் இருக்கவேண்டும். எதிர்க்கட்சியில் பழைய ஊழல்வாதிகளை, இனவாதிகளை, பிரதேசவாதிகளை, ஆணாதிக்கவாதிகளை, சாதியவாதிகளை விட்டுவிடுவது என்பது, ஆட்சியாளர்களின் மக்கள்விரோத அரசியலுக்குத் துணைபோவதாகும்.

இந்த வகையில் வாக்களிக்க முன், யார் உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்கின்றனர் என்ற கேள்விக்குப் பதில் தெரிந்தாக வேண்டுமென்றால், இலங்கையில் யார் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதற்கான, பதில் தெரிந்தாக வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களில் நீங்கள் அடங்கவில்லையா என்பதற்கான, உங்கள் கேள்வியும் - பதிலும் - தெளிவும் மிகமிக அடிப்படையானது.

யார் ஒடுக்கப்பட்ட மக்கள் என்றால் யாரெல்லாம் சமூகத்தின் அடிநிலையிலிருக்கின்றனரோ, யாரெல்லாம் அன்றாடம் உழைத்து வாழக்கூடிய (நாட்கூலி, மாதச் சம்பளம் பெறுகின்ற) மக்களோ, அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்.

இந்த வகையில் மக்கள், ஏதோ ஒரு வகையில் உழைக்கும் மக்களான இவர்கள் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகின்;றனர். வறுமையிலோ, மாதாந்த சம்பளத்தில் வாழ முடியாதவர்களாகவோ, மருத்துவ வசதிகளின்றியோ, கல்வி கற்ற முடியாதவர்களாகவோ, சாதி இனம் பிரதேசம் மதம் பால் போன்ற சமூகக் காரணங்களால் தனிமைப்படுத்தப்படுகின்றவர்களாகவோ, சமூகம் சார்ந்து பல்வேறு உளவியல் நெருக்கடிகளால் மகிழ்ச்சியை இழந்து காணப்படுகின்ற மக்களே, ஒடுக்கப்பட்ட மக்கள். இதில் நீங்கள்  அடங்கவில்லையா?

ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தியானது மக்கள் விரும்பும் சமூகப் பொருளாதார மாற்றத்தைத் தருமா!? இந்தக் கேள்வி மிகமிக அடிப்படையானது. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அதுவென்ன? 

ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தி செய்ய விரும்புவது என்னவெனில், நெருக்கடியற்ற வகையில் அந்நிய நிதிமூலதனங்களின் கடன்களையும் வட்டிகளையும் தடையின்றிக் கொடுப்பதுதான். அதற்கான தடைகளை, சமூகத்திலிருந்து அகற்றுவது தான். இதுவா மக்கள் விரும்பும் மாற்றம்!? 

தடையற்ற வகையில் மக்களின் வரிப்பணத்தை அந்நிய நிதிமூலதனம் எடுத்துச் செல்ல தடையாக இருக்கும், ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகளை ஒடுக்கி, ஏற்றுமதிக்கான உற்பத்திகளை அதிகரித்துக் கொள்வதுதான் ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தி முன்வைக்கும் மாற்றம். இதன் மூலம், முதலாளித்துவ அமைப்புமுறையை மாற்றமின்றி பாதுகாப்பதே ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தியின் அடிப்படைக் கொள்கையாகும்.       

ஜே.வி.பியின் இந்த முதலாளித்துவக் கொள்கையை எதிர்த்து 2012 களில் ஜே.வி.பி யிலிருந்து பிரிந்த முன்னிலை சோசலிசக் கட்சி, மக்களை முன்னிறுத்தி வர்க்க அரசியலை முன்வைத்தது. முன்னிலை சோசலிசக் கட்சி மக்கள் போராட்ட முன்னணி என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. முதலாளித்துவ முறைமைக்கு எதிராக, உழைக்கும் மக்கள் அதிகாரத்தை முன்வைத்து, உணமையான மாற்றத்தை முன்மொழிந்தது. 

மாற்றம் குறித்து இரண்டு அரசியல் முன்வைக்கப்படுகின்றது. 

1.முதலாளித்துவ சீர்திருத்தம் மூலம் மக்களைச் சுரண்டும் முதலாளித்துவத்தை பாதுகாக்கும் மாற்றம்.

2.முதலாளித்துவத்துக்கு எதிராக மக்களை அதிகாரத்துக்கு கொண்டு வந்து, மக்களைச் சுரண்டும் முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டும் மாற்றம் 

எதற்குப் பொலிஸ் அதிகாரம்? எதைப் பாதுகாக்க? எதை மூடிமறைக்க? யாரை ஒடுக்க? 

தமிழினவாதத்துக்குள், மதவாதத்துக்குள், பிரதேசவாதத்துக்குள், சாதியவாதத்துக்குள் … மூழ்கிக் கிடந்த தமிழ் சமூகம், ஜனாதிபதி தேர்தலின் பின்பாக சமூக அதிர்வுக்குள்ளாகியுள்ளது. இடதுசாரிய அரசியல் மீதான பொது நாட்டம் அதிகரித்துள்ளது. தமிழினத்தின் பெயரால் ஊழலும், சுயநலமும்… புளுத்துப் புரண்டு படுத்துக் கிடந்ததையும், மக்களை வறுமையிலும் அறியாமையிலும்.. தள்ளிவிட்டு அனுபவித்த அரசியலை, மக்கள் உணர்ந்து வருகின்றனர்.         

இன, மத, சாதி, பிரதேசவாத.. மூலம் மக்களை கூறுபோட்டு, தமிழ்மக்களை முற்றாக போதைக்குள் மூழ்கடிக்கும் தமிழ் அரசியல், அம்மணமாக மேடையேறி இருக்கின்றது.    

சாராயக் கடைகள் மூலம் தமிழனுக்கு விடிவைக் காட்டும் தமிழ் தேசியமும், தாங்கள் அப்படியல்ல என்று கும்பிடு போடும் குறுங்குழுவாதிகளும் சாராயக்கடை அரசியலில் தாங்கள் பங்கு கொண்டவர்கள் அல்ல என்பதன் மூலமும் தப்பிக்க முனைகின்றனர். இந்த வகையில் 

1.    சாராயக்கடை எனது பெயரிலில்லை என்று கூறும் சிறிதரன்

2.    சாராயக்கடைக்கு எதிராக வழக்கு போட்டிருக்கின்றேன் என்று கூறும் சுமந்திரன்

3.    நாங்கள் சாராயக்கடை நாங்கள் பெறவில்லை என்று கூறும் பிள்ளையான் 

இப்படிக் கூறும் அரசியல் பித்தலாட்டங்கள் அரங்குக்கு வருகின்றன. ஜனாதிபதி தேர்தலின் பின் தமிழ் முஸ்லிம் மலையக மக்கள் இன, மத, பிரதேசவாதம் கடந்து ஐக்கியத்தை விரும்பும் ஒரு மாற்றத்தை தெரிவாகக் கொண்டிருக்க, மக்களின் ஜக்கியத்தை விரும்பாத அரசியல,; சாராயக்கடையை வைத்து மக்களைப் பிரித்து வாக்குப் பெற முனைகின்றது. 

ஜே.வி.பி. எதைச் செய்யவிவில்லை என்ற பொதுக் கண்காணிப்பு மூலம், மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். செய்ததைக் கொண்டு மக்களைச் செயலற்றவர்களாக்காதீர்கள்.   

இலஞ்சம், ஊழல், அதிகார துஸ்பிரயோகங்களுக்கு.. எதிரான மக்களின் கோபமானது, அரசியல் மாற்றத்துக்கான வாக்குகளாக மாறியது. இது ஜே.வி.பி.யின் வெற்றிக்கு அடித்தளமிட்டது. ஜனாதிபதியின் வெற்றியின் பின்பாக ஜே.வி.பி.யின் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகள், மக்களால் கொண்டாடப்படும் அளவுக்கு ஆதரவு அலையாக மாறிவருகின்றது. பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகவும், மூன்;றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என்பது சாத்தியமானது என்ற அளவுக்கு அரசியற் சூழல் மாறி வருகின்றது. ஜே.வி.பி.யின் அடுத்தகட்டப் பிரச்சாரங்கள், கோசங்கள்.. இந்த வெற்றியை உறுதி செய்யும் நோக்கிலேயே அமையும்.

கடந்தகால ஊழல் என்பது பல பில்லியனைக் கொண்டது. ஒவ்வொரு ஆட்சியும், அதை சுற்றி அபிவிருத்தி என்ற பெயரில் உருவாக்கப்படும் திட்டங்கள் ஊழலுக்கானவையே ஒழிய மக்களுக்கானதல்ல. வாங்கிய கடன்கள் ஊழலுக்காக விரையமாக்கப்பட்டது. மக்களுக்கு பயன்படாத வகையில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களுக்கான பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில், அவை அன்னிய நாடுகளுக்கு தாரைவார்க்கப்பட்டதுடன், நாட்டில் சுயாதீனமாக சுதந்திரத்தை இழந்துள்ளது. 

அரசியல்ரீதியாக புதிய ஊழல்கள் தடுத்து நிறுத்தப்படுவதன் மூலமும், பழைய ஊழல் பணத்தை மீளப்பெறுவதன் மூலமும், வரிப் பாக்கிகளை அறவிடுவதன் மூலமும் மக்களுக்கு உடனடி நிவாரணமளிக்க முடியும். இந்த வகையில் வழங்கப்படும் சம்பள உயர்வுகள், விவசாய-மீனவர் மானியங்கள், எரிபொருள்-மின்சாரக் கட்டணக் குறைப்புகள், அத்தியாவசியமான பொருள்களுக்கான மானியத்தை … வழங்க முடியும். பொருளாதாரரீதியான பொது நெருக்கடியை அதிகமாக்காது. இதுவே ஜ.எம்.எப். ஊழலுக்கு எதிரான கொள்கையும் கூட. இந்த அடிப்படையில் ஜே.வி.பி. பயணிக்கின்றது. 

இந்த வகையில் ஜே.வி.பி. முன்னெடுக்கும் முதலாளித்துவ சீர்திருத்தம் அரசியல்ரீதியான புதிய அத்தியாயத்தை உருவாக்குவதுடன், அரசியல் விழிப்புணர்வையும் – மக்கள் சார்ந்த சமூக பண்பாட்டையும் மக்களிடையே தோற்றுவிக்கும்.

இனவாதத்தை, மதவாதத்தை, பிரதேசவாதத்தை, சாதியவாதத்தை, ஆணாதிக்கவாதத்தை.. முன்வைக்காத அரசியல், பொருளாதார தளத்தில் ஏற்படுத்தும் மாற்றம், கடந்த இலங்கை அரசியல் வரலாற்றுக்கு முரணானது. இதை உறுதி செய்யும் வண்ணம், ஜே.வி.பி.க்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். இது தான் புரட்சிகர அரசியல்.                         

இலஞ்சம், ஊழல், அதிகார துஸ்பிரயோகங்களுக்கு.. எதிரான ஜே.வி.பி.யின் வெற்றியை நோக்கி மக்கள் உணர்வும், அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றுமளவுக்கான வெற்றியை நோக்கி தெளிவான அரசியலும் அவசியமானது. அந்த வகையில் பழைய ஊழல்வாதிகள் தொடங்கி ஊழலுடன் பயணித்த அரசியல்வாதிகள் வரை, அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும்.


மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE