எதார்த்தத்தில் இன்று நிலவிவரும் நிலப்பிரபுத்துவக் குடும்பம் மற்றும் ஏகாதிபத்தியக் குடும்பம் மற்றும் அவற்றின் சிதைவுகளையே வரலாற்றின் தொடர்ச்சியாகப் பார்த்தல், விளக்குதல் தொடர்கின்றது. சாதாரண மக்களிடம் இப்படிப்பட்ட விளக்கம் இருந்தால் அதைப் போராட்டத்தினூடாக மாற்ற முடியும். ஆனால் சமூக அக்கறையை வெளியிடுபவர்களும் இதன் பாதிப்பில் நீடிக்கின்றனர். புரட்சிக்காக இயங்கும் புரட்சிகரக் கட்சிகளில் கூட பின்தங்கிய மக்கள் கூட்டங்களுக்குள் வேலை செய்ய செல்கின்றபோது, அங்கு இன்னும் நிலவிவரும் குழுமணங்கள் போன்ற அல்லது அதன் எச்சச் சொச்சத்தை அநாகரிகமாகப் பார்ப்பதும், அதன் நல்ல பண்புகளை ஆணாதிக்கச் சமூகக் கண்ணோட்டத்தில் திருத்த முற்படுவது காணமுடிகின்றது.