யூலைப் படுகொலைகள் முடிந்து 30 வருடங்கள் கடந்துவிட்டது. முள்ளிவாய்க்கால் படுகொலை நடத்து 4 வருடங்கள் கடந்துவிட்டது. இதற்குள் இனம் மதம் கடந்த எத்தனையோ படுகொலைகளும், மனித அவலங்களும். நீதி மறுக்கப்பட்ட இனவாத சமூக அமைப்பில், உளவியல் அவலங்களுடன் மனிதன் நடைப்பிணமாகவே வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றான். இன்னமும் இன மத மோதல்கள் அரசால் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றது. இதனால் பேரினவாதத்தால் ஒடுக்கப்படும் இனங்கள் இன ரீதியாக சிந்திப்பதும், செயற்படுவதும் தொடருகின்றது. சிந்தனை செயல் தொடங்கி, வாக்குப் போடுவது வரை, அரசின் இன மத வாதத்திற்கு எதிரான அரசியலாகவே இருக்கின்றது. இதுதான் இன்றைய இலங்கையின் அரசியல் எதார்த்தம்;. புலம்பெயர் சமூகமே, புலிகளின் கனவுலகில் வாழ்ந்தபடி முடிவுகளை இலங்கையில் வாழும் மக்கள் மேல் திணிக்க முனைகின்றது.