நியூட்டன் மரியநாயகம்

வரலாற்றுப் புரிதலும் நானும்

“இன்று சமூகத்தில் ஆளுமை /ஆதிக்கம் செலுத்தும் கடந்த காலம் பற்றிய கதைகளையும், அது சார்ந்த, ஆதிக்க சக்திகளின் வரலாற்று உருவங்களையும்/ வேடங்களையும்/ பாத்திரங்களையும், கலையின் குரூரமான பக்கங்களையும் அம்பலப்படுத்தி – ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறை வெளிக்கொணர்வதே உண்மையான வரலாற்றுப் பதிவாளனின் கடைமையாகும்…”

இந்த வரிகள் பல வருடங்களுக்கு முன் எங்கோ வாசித்ததாக நினைவு. இந்த வரிகள் வரலாற்றைப் பதிவதை “தொழிலாக” கொண்ட ஒருவரின் கடைமையைப் பற்றியே சொல்லப் படுகிறதென்பதே எனது விளக்கம். இந்த வகையில் நான் தொழில் முறை சார் வரலாற்று ஆய்வாளன் அல்லன்.

ஆனாலும், இந்த வரிகள் சொல்லவரும் உள்ளடக்கம் என்னை கவர்ந்ததற்கான காரணம், ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றை பதிவு செய்ய நினைப்பவர் செய்ய வேண்டியதென்ன என்பதை துல்லியமாக கூறிநிற்கிறது.

வரலாறென்பது; “வென்றவர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களால் வடிவமைக்கப்பட்டு, அவர்களின் நலன்களை முன்நிறுத்துவதற்குத் தகுந்தபடி, அவர்கள் பற்றிய வரலாற்று விம்பங்களை உருவாக்குவது” என்பதே இன்று வரையான வரலாற்றுப் பதிவுகளின் உள்ளடக்கமாக இருந்து வருகிறது. இப்படி வரலாறு பற்றிக் கூறுவது இன்று தேய்வழக்கான ஒரு விடயமென்றும் கூறலாம்.

கடந்த காலனிய காலத்துக்குப் பின்னான காலகட்டத்தில்; அதிகாரத்தால் ஒடுக்கப்பட்டோரும், ஒதுக்கப்பட்டோரும் ஓரளவுக்கேனும் தங்கள் சுய வரலாறைப் பதிவு செய்யும் நிலை உருவாகியுள்ளது. உண்மையான ரோமப்பேரசின் வரலாறு அதன் ஆதிக்கசக்திகளைப் பற்றி மட்டுமல்ல; அதன் கீழ் அடிமைகளாக இருந்தோரின் வரலாறாகவும் தான் இருக்க முடியும். அதேபோலவே, தாச்மஹாலின் முழுமையான வரலாறென்பது அதை கட்டிய அடிமைகள் பற்றியதும் தான்.

ஆதிக்கம்-அதிகாரம் சாராத மக்கள்; ஒடுக்குமுறைக்கு ஆளான சமூகக்குழுக்கள் தமது வரலாறைப் பெரும்பாலும் பதிவிடுவதில்லை என்ற விடையம், இயல்பானதொரு அறிவு.
இப்போ, அவர்கள் தமது வரலாறையும் பதியமுனையும் போது, அவர்களுக்கு அதிகாரத்தில் உள்ள கட்டமைப்புகள் மற்றும் அதன் நிறுவனங்களால் பாரிய தடைகள் முன்னெழும். இதெல்லாவற்றையும் உடைத்து; மேலே கூறியது போல ஆதிக்க சக்திகளின் வரலாறுகளை அம்பலப்படுத்தியே ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறு எழுதப்பட முடியும்.

அதேவேளை, வரலாறென்பது 100 வீதம் அப்பட்டமான விஞ்ஞானமுமல்ல. அத்துடன், வரலாறு கூறுபவரின் அகநிலை சார்ந்தும்; அவரின் சமுக, பொருளாதார, கலாச்சார , புவியியல் ரீதியான இருத்தல் சார்ந்தும் வரலாற்றுப் பதிவின் தன்மை வெளிப்படும. இதுவே எனக்கு தெரிந்த வரலாற்று பதிவுகள் பற்றிய அறிவின் சாரமும்; எனது நிலைப்பாடும்.

” 1950 – 80 முற்பகுதி வரையான நாட்களில் சாதிக் கொடுமைக்கு எதிரான பல போராட்டங்கள் தீவுப்பகுதியில் நடந்தன. எனக்குத் தெரிந்த தகவல்கள் – நேரடி அனுபவத்தின்படி; தீவுபகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களே தமது பிரச்சனைகளுக்காகச் சுயமாகப் போராட்டங்களை முன்னெடுத்தார்கள். இடதுசாரிய இயக்கங்களின் -கட்சிகளின் சாதி எதிர்ப்பு போராட்டங்கள் போல, தீவக ஒடுக்கபட்ட மக்களின் போராட்ட வரலாறுகள் எழுதப்படவுமில்லை. பதியப்படவுமில்லை. வாய்வழியாக கூறிவந்த சாதியத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட வரலாறுகள்; 80-களின் தேசியப்போராட்ட எழுற்சியுடன் மறக்கடிக்கபட்டன.

தீவகத்திலிருந்து 90-களின் இடப்பெயர்வு, போர், அது கொடுத்த அவலங்கள், இறப்புகள் அந்த வரலாறுகளை கிட்டத் தட்ட முற்று முழுதாக அழித்து விட்டதென்றே கூறலாம். இன்று அந்த வரலாறுகள் சார்ந்து கூறப்படுபவை பேசப்படுபவை அதிகாரத்தின் பக்கமாக சாய்ந்து நின்றோர் பார்வையில், அனுபவத்தில் கூறப்படும் வரலாறுகளாகும். மற்றயது, ஒடுக்கப்ட்ட மக்களுடன் சேர்ந்து நின்ற ஒடுக்கும் சாதிகளை சேர்ந்த “முற்போக்கானவர்களின்” பார்வையில் கூறப்படும் வரலாறாகும். இந்த இரு பகுதியினரும் அந்த காலத்திலே பத்திரிகை, மற்றும் அன்றிருந்த தொடர்பு சாதனங்கள், சாதியத்துக்கு எதிராகத் தீவகத்துக்கு வெளியில் போராடிய கட்சிகள்- இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தார்கள். சமூக நிறுவனகளுடன் தொடர்பில் இருந்தார்கள். ஆதலினால், இவர்களின் வரலாறுகள் – அவர்களின் சுய பார்வையில் -கண்ணோட்டத்தில் -கோட்ப்பாடுகள் சார்ந்து பதியப்பட்டுள்ளது.

நீங்கள் ஒடுக்குவீர்கள், நீங்கள் தான் அதற்கெதிராக போராடுவீர்கள், நீங்கள் தான் எங்களை விடுவிக்க உயிர் கொடுத்த தியாகிகள்… இது உங்கள் வரலாற்றுப் பார்வை….. அப்போ, ….. நாங்கள் யார்?

இன்று, மேற்க்கூறிய இரு பகுதியினரின் போராட்டக் கதைகளே வரலாறாக கூறப்படுகிறது. சாதிய ஒடுக்குமுறைக்கு ஆதரவாக நின்றோர் இன்று தமிழ் தேசிய ஆதரவாளர்களாக, 80-களின் பின் உருவெடுத்தார்கள். குறிப்பாக அன்று தமிழரசுக் கட்சி, பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்களாக, உறுப்பினர்களாக அவர்கள் இருந்ததனால் அது அவர்களுக்கு சுலபமாகியது. ஒடுக்கும் சாதிகளைச் சேர்ந்த “முற்போக்கானவர்களின்” வரலாறு; அவர்களை ஒடுக்கப்பட்ட மக்களின் மேய்ப்பர்களாக, தியாகிகளாக , சிந்தனையாளர்களாக, விடுதலையாளர்களாகக் கட்டமைப்பதில் இன்று வந்து நிற்கிறது. இவ்வாறு கட்டமைக்கும் நிலையில் ஒடுக்கப்பட்ட நாம் மந்தைகளாக, அடிமைகளாக, சிந்தனையற்ற மூடர்களாக, உணர்ச்சியற்ற சடலங்களாக இந்த சமூகத்தில் நடமாடியதா எங்கள் வரலாற்றுப் பாத்திரம்?!!!

தளையசிங்கமும் தண்ணீர் கிணறும்

எனது இந்த இணையப் பதிவீயில் 19.03.2021 அன்று நான் வெளியிட்ட “கிணற்றுக் கதையும், சாதிய எதிர்ப்பு போராளி தளையசிங்கமும்” என்ற சிறு பதிவு https://raseriart.wordpress.com/2021/03/18/கிணற்றுக்-கதையும்-சாதிய/ தமிழ் இலக்கியப் பரப்பை சேர்ந்த சிலரால் விமர்சிக்கப்படுகிறது. நன்று. ஆதாரம் கோரபடுகிறது. என்னைப் பற்றிய அவறூறுகளும், தவறான கருத்துக்களும் பரப்பபடுகிறது. மன்னிப்புக் கோரி- கட்டுரையை அகற்றும் படியும் சில இடைத் தரகர்கள் மூலம் கோரப்பட்டுள்ளது. இல்லையேல், இன்னும் சில நாட்களில் வீடியோ- ஆடியோ ஆதாரங்களும் வெளியிட்டு என்னை “அம்பலபடுத்த” போவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

என்னைக் கட்டுரை சார்ந்து விமர்சிப்போர்; ஏதோ அவர்களிடமிருந்து நான் அவர்களுக்கு விரும்பியதொன்றை பறித்து விட்டதுபோல பதிவிடுகின்றார்கள். பலருக்கு சுந்தர ராமசாமி எழுதிய சில வரியிலான தளையசிங்கத்தின் வாழ்கை வரலாறு – பின் விக்கிப்பீடியாவில் மேலும் குறுக்கிப் பதியப்பட்ட வரலாறே என்மீதான விமர்சனத்தின் அடிப்படையாக உள்ளது. மிகச் சிலர் தங்களுக்குத் தனிப்பட்ட முறையில் சு. வில்வரத்தினம் சில தகவல்களை கூறியதாகவும் பதிவிடுகின்றனர்.

//புங்குடுதீவில் பல ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டு ஆன்மீக வகுப்புகள் நடத்தினார். 1968ல் சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்தார். 1969ல் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். 1970ல் ‘சத்தியம்’ பத்திரிகையை வெளியிட்டார். தேர்தலில் சர்வோதய அரசியல் முன்னணியை உருவாக்கினார். 1971ல் புங்குடுதீவு கண்ணகியம்மன் கோவிலில் நன்நீர்க் கிணறுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடம் அளிக்கும்படி போராட, போலீசாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். 1972ல் ‘மெய்யுள்’ என்ற புதிய இலக்கிய உருவம் போடப்பட்டது. 1973ல் இரண்டு மாதம் நோய்வாய்ப்பட்டு ஏப்ரல் 2 ஆம் தேதி மறைந்தார். // – மு. தளையசிங்கம் – ஒரு அறிமுகம் (1984)

மேலே உள்ள சுந்தர ராமசாமியின் வரிகளுடன் எனது கட்டுரை பெரிதும் முரண்படவில்லை. எனது கட்டுரையில் அடிநாதமே “உண்மையாகவே போராடியவர்கள்- போராடிய மக்களின் பங்களிப்பை இருட்டடிப்புச் செய்வது முறையான காரியமல்ல. நல்லதண்ணீர்க் கிணற்றுப் போராட்டத்தின் “நாயகன்” தளையசிங்கமும் அல்ல. போராடிய மக்களே” என்பதாகும் . அதேவேளை, அவரைச் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய போராளியாக தளையசிங்கத்தை சித்தரித்து, சாதிய, சமூக விடுதலைக்காக வாழ்வையே அர்பணித்தவர்களை சிறுமைப் படுத்துவதையே விமர்சனத்துக்கு உட்படுத்துகிறேன்.

இதனை முன்நிறுத்தியே எனது கட்டுரையில் கூடுமான அளவுக்கு அந்த நல்லதண்ணீர்க் கிணற்றுப் போராட்ட காலத்தின் அரசியல், சமுகப் பின்னணியையும், அதுசார்ந்த வரலாறையும் பதிவிட்டேன். சுந்தர ராமசாமி மற்றும் விக்கிப்பீடியாவை விட விரிவானதே எனது பதிவு. அதில், எந்த இடத்திலும் தளையசிங்கம் அந்த போராட்டத்தில் பங்கு கொள்ளவில்லை என்று நான் மறுக்கவில்லை. அவர் பொலிஸாரினால் தாக்கபட்டார் என்பதையும் மறுக்கவில்லை.

எங்களின் மீட்பர்கள் நீங்கள் என்று கூறுகிறீர்கள்…. அதை நான் மறுக்கிறேன்…. !

எனது கட்டுரையை விமர்சிப்போரின் அடிப்படைப் பிரச்சனை என்னவெனில் நான்; அவர்கள் இவ்வளவு காலமும் தளையசிங்கம் பற்றி வைத்திருந்த “சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி – தன் உயிரையே தியாகம் செய்த தியாகி” என்ற- இவர்கள் பலர் சுந்தர ராமசாமியின் வரிகளை வாசித்து கட்டமைத்த விம்பத்தை விமர்சித்ததேயாகும்.

எனது ஒடுக்கப்பட்ட சகோதர சமுகத்தின் போராட்ட வரலாற்றை; உங்களுக்கு தகுந்தாற்போல எழுதுவீர்கள். உங்களை கதாநாயகர்களாக விம்பப்படுத்தி- எங்களை உங்களின் பின்னால் உலவிய மந்தைகளாக சித்தரிப்பீர்கள், அதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கவேண்டுமோ?? என்னிடம் ஆதாரம் தா எனக் கேட்க்கும் நீங்கள்; எந்த ஆதாரத்தைக் கொண்டு எனது மக்களின் போராட்டத்தை உங்கள் தலைமையில் – உங்கள் வழிகாட்டலில் நடந்ததாக கூறுகிறீர்கள் ????

சுந்தர ராமசாமியின் வரிகளை முன்னிறுத்தி; எங்கள் போராட்டங்களுக்கு நீங்கள் தான் தலைவர்கள் எனக் கூறுவீர்கள். தவித்த விடாய்க்கு தண்ணீர் மறுக்கும் போது போராடக்கூட சுரணையில்லாத மக்கள் நாம் என சித்தரிப்பீர்கள். விலாசமில்லாத எங்கள் சமுகத் தலைவர்களை மேலும் மேலும் இருட்டடிப்பு செய்து, உங்களை மேன்மைப் படுத்துவீர்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள கொள்ள வேண்டும்?? அப்படித்தானே??!நாங்கள் உங்கள் பங்கை மறுக்கவில்லை. ஆனால், எங்கள் போராட்ட குணத்தை கொச்சைப்படுத்தாதீர்கள். எங்கள் வரலாறை நாங்களே எழுத விடுங்கள். எங்கள் வரலாற்றை நாம் எழுதும்போது உங்கள் விம்பங்கள் உடையத்தான் செய்யும். அதற்காக நாங்கள் பேசாதிருந்து விட முடியுமோ????

தளையசிங்கம் அவர்களின் வரலாற்றுப் பாத்திரம் எதுவோ, அதை ஒருவராலும் குறைத்து விட முடியாது. அவர் உண்மையிலே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடினார் என்றால் அதை வரலாறு என்றும் மறந்தோ- மறுத்தோ விடப்போவதில்லை. அதேவேளை, எங்கள் வரலாறை எழுதும் எமது உரிமையையும் நான் விட்டுத்தரப் போவதில்லை. திகதிகள், ஆண்டு, எப்படி இறந்தார் என்ற விடையங்களை நீங்கள் யாரவது துல்லியமாக முன்வைத்தால்; அதை என் பதிவிலிருந்து மாற்றுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

அதேவேளை, மறுபடியும் கூறுகிறேன்! எனது ஒடுக்கப்பட்ட சகோதர சமுகத்தின் போராட்ட வரலாற்றை; உங்களுக்கு தக்கது போல எழுதுவதையும், உங்களை கதாநாயகர்களாக விம்பப்படுத்தி- எங்களை உங்களின் பின்னால் உலவிய மந்தைகளாக சித்தரிப்பதையும் விமர்சிக்கும் பகுதியை நான் நீக்கப்போவதில்லை.

வீடியோ பதிவுகளாயோ, தனிமனிதர்க்களின் சாட்சியங்களோ எனது பதிவுக்கு எதிராக முன்னிறுத்துவது உங்கள் உரிமை. இதற்கு மேல் இவ் விடையம் பற்றி கூற மேலதிகமாக ஒன்றுமில்லை என்னிடம்.

நிறைவாக;

எனது பதிவின் உள்ளடக்கத்தை – நோக்கத்தை சரியாக கணித்த நிர்மலா ராஜசிங்கம் அவர்களின் முகபுத்தக பதிவு .

//தளையசிங்கம் சாதிப்பிரச்சினை சம்பவம் ஒன்றில் போலிசிடம் அடி வாங்கியது பற்றி யாரும் மறுக்கவில்லை. ஆனால் அவர் மாத்திரமல்ல. அவ்விடத்தில் நினற இளைஞரான வில்வரத்தினமும் குறிப்பாக தலித் மக்களூம் தான் அடிக்கப்பட்டனர் என்ற விடயம் இப்பொழுது தான் எனக்கு தெரிந்தது. போலிஸ் தலித் மக்களுக்கு எவ்வளவு அடித்திருப்பார்கள்? இதை ஒரு பொருட்டாக யாருமே பேசுவதில்லை. தளையசிஙகம் அடி விழுந்தபிறகு இரண்டு வருடங்களாக மரணப்படுக்கையிலிருந்து அதன் காரணமாக இறந்து போனார், என்பதையே நான் சிலர் சொல்லி கேள்விப்பட்டுள்ளேன். அவரைச் சுற்றி ஒரு ஹேலோ ஒளிவட்டம் பிரகாசித்துக் கொண்டிருந்த மாதிரி அதாவது தனது வாழ்க்கையை சாதீயத்துக்கெதிராகப் போராடி, மாய்த்துக் கொண்டவர் மாதிரியும் ஒரு பிம்பம் வளர்க்கப்ட்டிருந்தது.

ஆனால் நண்பர் ஒருவர் தளையசிங்கம் சாவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பும் பத்திரிகை நடத்திக்கொண்டும் கொழும்பில் தன்னோடு ஒரு மேடையில் பேசியதாகவும் அண்மையில் எனக்கு கூறியிருந்தார். ஜீவமுரளி தளையசிங்கத்தின் எழுத்திலிருந்து எடுத்துக்காட்டிய பகுதி நான் நினைத்திருந்ததை விட மிக மோசமான சாதீய மனோ பாவத்திலிருந்துள்ளார் என்பதைக் காட்டுகின்றது. இது ஒன்றும் வரலாறெழுதும் முனைவு கிடையாது. இது நேரடி ஆதாரம், அவரின் எழுத்திலிருந்தே வருகிறது. அத்துடன் நியூட்டன் மரிய நாயகம் எழுதிய கட்டுரையில் இது ஒரு சம்பவம் தான். தீவுப்படுதியில் தலித் மக்கள் எத்தனையோ தரம் ப கிளர்ந்தெழுந்து போராடியிருக்கிறார்கள் எனக் கூறுகிறார். அது நம்பக் கூடியதாகவிருக்கின்றது, காரணம் அது உலக வரலாற்று நியதி.

உலகமுழுவதும் வறிய நிலமற்ற விவசாயிக்ள் மில்லெனியா காலமாக கிளர்ந்தெழுந்த்திருக்கிறார்கள். கடைசி நூறு வருடமாக இயங்கும் கம்மியுனிஸ்ட் கட்சிகள் தாம் தாம் இந்தப் போராட்டங்களை வழி நடாத்தியவர்கள் எனககூறி அந்த வரலாற்றெல்லாவற்றுக்கும் குத்தகை எடுக்கமுடியாது. அத்துடன் தளைய‌சிங்கம் கைலாசபதி பற்றி அவர் ஒரு ‘பேய்’ போனறு ஆட்டிப்படைத்தார் என்று கூறியதை மேற்கோள் காட்டி இந்த நிகழ்வுக்கு பப்ளிசிட்டி செய்திருந்ததை நான் பார்த்தேன். கைலாசபதி நவீன தமிழிலக்கிய வரலாற்றில் முக்கிய ஆய்வாளரும் கோட் பாட்டாளர் விமர்சகர். மிக மதிப்பும் அன்பும் அவருக்கிருந்தது, இத்தகைய ஒருவர் பற்றி இடதுசாரி இயக்கத்திள்ளேயே காத்திரமான விமார்சனமும் இருந்துள்ளது. ஆனால் தளையசிங்கத்தின் இந்த வாசகங்கள் அவர் கைலாசபதியின் பிம்பத்தினால் ஏற்பட்ட ஒரு காழ்ப்புணர்விலேற்பட்டது மாதிரியும் அவர் தான் இதனால் ஆட்டிப்படைக்கப் பட்ட மாதிரியும் தெரிகின்றது, இவற்றையெல்லாம் ஒன்று சேர வைத்தே மதிப்பீடுகள் செய்ய வேண்டும். அத்துடன் ‘திண்ணை’ போன்ற ‘கொஸிப்’ பதிவுகளை ஆதாரமாக எடுத்தால் பிழையான முடிவுகளில் தான் தான் கொண்டு போய்விடும். சும்மா ‘அவன் சொன்னான்’ ‘இவன் சொன்னான்’ என்ற அளவில் தான் அத்தகைய தகவல்கள் உள்ளன.// 19.03.2021


தமயந்தியின் பதிவொன்று


வாழத்தான் போராடினோம்
பட்டோலை
எழுதி வைக்கவல்ல…
=================

ஒடுக்கியவர் யார்?
ஒருக்கப் பட்டவர் யார்?
ஒடுக்குமுறைக்கு எதிராகப்
போராடவேண்டிய தேவை யாருக்கு?

போராட்ட வரலாறுகளையெல்லாம்
எழுத வேண்டியது யார்?
எழுதிக் கொண்டிருப்பவர்கள் யார்?

எங்கள் எலும்புகளை
நீங்களே உடைப்பீர்கள்,
நீங்களே எங்களை ஒடுக்குவீர்கள்,
நீங்களே எங்களை
விடுதலையும் செய்வீர்கள்.
நீங்களே எங்கள்
வரலாறுகளையும்
உங்களுக்கு உகந்ததாக
எழுதுவீர்கள்.

வரலாற்றை
எழுதி வைக்கவென்றா
திரண்டெழுந்து போராடினோம்?
வாழத்தான் போராடினோம்.

எங்கள்
கலைகளின் வரலாறுகளையும்,
போராட்ட வரலாறுகளையும்
நீங்கள்தானே எழுதி வருகிறீர்கள்….?

வாழப் போராடியதை
குறித்து வைக்கத்தானும்
கல்வி கற்க விட்டீர்களா எம்மை?

ஒரு சமூக, பொருளாதார,
பண்பாட்டு வரலாற்று ஆய்வுகளைச்
செய்வது எப்படி என்ற
அடிப்படை அறிவுகூட
வேண்டாமோ உமக்கு?

ஓம்,
நீங்கள் அருகில் வந்து
எட்டிப் பார்த்தீர்கள்தான்,
எங்களுக்கு விழுந்த அடிகளில்
ஒன்றிரண்டு
உங்கள் முதுகிலும் விழுந்ததுதான்.
யார் மறுத்தார்?

அதற்காக…?
நீங்களே எங்கள்
மீட்பர்களாக இருந்து
மாய்ந்தீர்கள் என்பதை
எங்கள் வாய்களுக்குள் திணிப்பதில்
என்ன நியாயம்?

ஒடுக்கப்படும் உழைக்கும் மக்கள்
ஒரு கட்டத்தில் தங்களை
மீட்கவெனத் தன்னெழுச்சியாக
எழுவார்கள் என்ற
சர்வசாதாரண அறிவுகூடவா
இல்லாமற் போயிற்று.

தீயை முதல் கண்டவனென்ன
தீட்டி வைத்துவிட்டா போனான்
யாழ்ப்பாணத்துப் பனைவடலியில்?

யார் நீ என நீங்கள் என்னை
விசாரிப்பது கேட்கிறது.
காலகாலமாகத் தண்ணிக்காகவும்,
கல்விக்காகவும்,
உழைப்புக்குரிய கூலிக்காகவும்,
சாமிக்காகவும் போராடிய
கூட்டத்தாரிலிருந்து
வந்தவன் தான் நான்.

நாங்கள் ஒடுக்கப் பட்டதையும்,
நாங்கள் போராடியதையும்
நாங்கள்தானே சொல்ல முடியும்?
எங்களை ஒடுக்கியவர்களை
சாட்சிகளென
பல்லக்கில் தூக்கிவைத்து
வருவதென்ன நீங்கள்?

அவர்களை வைத்து
நீங்களே கோயில்கள் கட்டுங்கள்,
திருவிழாக்கள் நடாத்துங்கள்,
கடைகள் பரத்துங்கள்,
இலாபத்தைக் காணுங்கள்.
கும்பிடச் சொல்லி
எங்களை கூப்பிடுவதென்ன?

புழுகுவதும் புரட்டுவதும் ?
காற்றில் கயிறு திரிப்பதுவும் யார்?
காலகாலமாக நீங்கள்தானே…..
இது உங்களுக்குத் தெரியாதா என்ன?

வாருங்கள்
செத்துப்போனவர்கள் போக
மிச்சப்பேர்
இன்னும் இருக்கிறார்கள்
• தமயந்தி .

தொடர்புடைய கட்டுரைகள்

கிணற்றுக் கதையும் “சாதிய எதிர்ப்பு ” போராளி மு .தளையசிங்கமும்