ஒளிபுகாத
அடர்காட்டின் நடுவில்
அரிவாள்களைக் கூராக்கி
பாதை செய்கிறோம்

 

ஏளனச் சிரிப்புகளும்,
வன்மம் பொங்கும்
ஊளைச் சத்தங்களும்,
முற்றும் அறிந்த
மேதாவித்தனங்களும்,
திரும்பும் திசைகளிலெல்லாம்
எதிரொலிக்கின்றன.

 

 

புதைசேறு அழுத்துகிறது
புரட்ட முடியாத பாறைகளில்
யுகங்கள் கழிகின்றன.
அரவம் நெளிகிறது.
சற்றே கண்ணயர்ந்தாலும்
அட்டைகள் உயிர் குடிக்கின்றன.
சதுப்பு நிலத்தில்
தெறித்து மின்னும்
எங்கள் வியர்வைத் துளிகளின்
வெளிச்சத்தில்தான்
பாதை தொடர்கிறது.

 

பின்னொரு நாளில்
பனிக்கட்டிகள்
சேகரிக்க வரும்போழுது
நீ இதனை நம்ப மறுப்பாய்...
நாங்கள் நம்ப மறுத்ததைப் போல.

 

ஆனால்
நாங்கள்
இப்படித்தான் வாழ்கிறோம்,
வாழ்ந்தோம்.

 

எது தூண்டிற்று
என நீ கேட்பாய்.
உணர்வு என்பேன்.
அதன் பொருளை
அகராதிகளில்
கண்டறிய முடியாது.

 

பனிக்கட்டி மறந்து நீ
பதிலின் விளக்கம் கேட்பாய்.
உரையாடல் தொடர்கையில்
மாலை கவிந்து
நட்சத்திரங்கள்
முளைக்கத் துவங்கும்.